Thursday, June 9, 2022

YAKSHA PRASNAM.

 யக்ஷ ப்ரஸ்னம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN


தான் கேட்ட  கேள்விகளுக்கு இதுவரை  அற்புதமாக  யுதிஷ்டிரன் பதிலளித்தது யக்ஷனுக்கு மகிழ்வூட்டுகிறது.     இப்படியா ஒருவன் தனது சட்டென்ற கேள்விக்கு பட்டென்று பதில் சொல்வான் !!

யுதிஷ்டிரா, மேலும் கேட்கிறேன் சொல்  என்று ஆரம்பிக்கிறான்  யக்ஷன்.

31   உலகில் உயிர் பெற்று  பிறந்தது எதுவும்  நகர்கிறது, அசைகிறதே, ஏதாவது நகராமல் அசைவற்று இருப்பதுண்டா?
ஆஹா இருக்கவே இருக்கிறதே  முட்டைகள் ,  தாயிடமிருந்து தான் பிறக்கிறது, ஆனால் அசைவோ சப்தமோ, நகர்வோ வெகுநாட்கள் இல்லையே.

32. அடேடே,  அப்படி யென்றால் இதைச் சொல்? இதயம் இல்லாதது எதாவது ஒரு வஸ்து  இருக்கிறதா?
கல்  பல கோடி ஆண்டுகள்  பாறையாக  இருக்கிறதே, அதற்கு  இதயம் இல்லையே.  யாராவது இரக்கம்  கருணை,  தயை இல்லாமலிருந்தால்  உன் நெஞ்சு இதயம் என்ன கல்லோ?  என்கிறோமே.

33.சரி  எது வேகத்தோடு வளர்வது?
யக்ஷா  நீயும் நானும்  நிற்பதே ஒரு  ஜலத்தில். நதி பிரவாகம் எடுத்து வெள்ளம் பெருக்கெடுத்து மேலும் மேலும் வளர்ந்து சிறிய  ஓடையாக இருந்தது வேகத்தில் விரிந்து பறந்து ஆறாக, நதியாக வளர்வது உனக்கு தெரியுமல்லவா?

34 வெளிநாட்டுக்கு  ஒருவன் செல்கிறான். அப்போது அப்படிச் செல்பவனின் நண்பன் யார் ?
பணமோ, சொந்த பதமோ, நண்பனோ உதவாது.   ஒருவன் வெளிநாட்டில் சென்று இருக்கும்போது  அவனுக்கு உதவி அவன் கற்றுத் தேர்ந்த கல்வி ஒன்றே. அவன் அறிவு அவனுக்கு  வேலை வாங்கி கொடுக்கும், சாப்பாடு போடும். சுபிக்ஷமாக  வாழ  வழி வகுக்கும்.

35. அது சரி,  அப்படியென்றால்  வீட்டிலேயே கிடப்பவனுக்கு யார்  உதவி கிடைக்கும்?
வீட்டுக்கு இல் என்று பெயர்.  வீட்டுக்காரி,  (வீடு ஓனர் இல்லை). இல்லாள்,அது தான் மனைவி ஒருவள்  போதுமே. எல்லா உதவியும் செய்வாளே !

36. ஒருவன் நோய்வாய்ப்பட்டு அவஸ்தைப்படும்போது அவனுக்கு உற்ற நண்பன் யார்?
அவனது வைத்தியன்  தான் உண்மையிலே அவன் கஷ்டம் துன்பம் அறிந்து அதிலிருந்து அவனை விடுவிக்க முயல்பவன் அவனே உற்ற நண்பன். காசு இங்கே பெரிதில்லை. கூர்ந்து கவனித்து அவன்  உடல் சீரடைய  தக்க  மருத்துவ உதவி செய்பவன் தான் உயிர் நண்பன்.

பாவம், தண்ணீர் குடிக்க வந்தவனை இவ்வளவு கேள்விகளா கேட்பது? பரவாயில்லை.  யக்ஷன் கேட்டும் தர்மன் பொறுமையாக தம்பிகளின் சடலங்களை அருகில் வைத்துக்கொண்டு பொறுமையாக பதில் சொல்கிறானே.

37. இது ஒரு சாதுர்யமான கேள்வி. சாகப்போகிறவனின் நண்பன் யார்?
அவன் கட்டிய  பங்களா, கார், பேங்க் கணக்கில் உள்ள பணம், பேர்  அந்தஸ்து, சமூகத்தில் மேன்மை  பெற்ற பெண்ணோ பிள்ளை  மனைவி எதுவும்  அவனுக்கு உதவமுடியாது.  கடைசியில் அவனுக்கு உதவுவது அவன்  அவன் செய்த தான தர்மம்.

38 யுதிஷ்டிரா, எது  எல்லோரும் தேவை என கருதும்  வஸ்து?
அக்னி ஒன்றே தான்.  தீ இல்லையேல் ஒருவராலும் வாழ இயலாதே. ஆதி மனிதன் கூட  கல்லை ஒன்றோடு ஒன்று உரசி தீயைக் கண்டுபிடித்து தான்  வாழ்ந்தான்.  அதற்கு சிக்கி முக்கி கல் என்று பெயர்.  அக்னி தான் பாதுகாப்பு, உணவு தருவது. ஞானம் தருவது.

39. எதை செய்தால் சாஸ்வதம் என்று நீ  நினைக்கிறாய்  சொல் ?
எது ஒருவனை அது நற்கதிக்கு கொண்டு செல்கிறதோ அந்த செயல், செய்கை. தனக்கும் பிறருக்கும் உதவும் அச்செயல் தான் சாஸ்வதமாக அவனை நிலை நிறுத்தும்.

40. எது அம்ருதமாகும்?
சுத்தமான பசும் பால் அம்ருதத்துக்கு சமானம். சோமம் என்பதும் அதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...