Monday, June 6, 2022

GURUVAYURAPPAN


 குருவாயூரப்பன் -   நங்கநல்லூர்  J K  SIVAN 


குரு தக்ஷிணை 

குருவாயூரப்பன் ஆலயத்தில் நுழையும்போதே  சொல்லமுடியாத ஒரு ஆனந்தம் நமக்குள் ஏற்படுகிறது.
அதற்கு காரணம்  அதி பலம் வாய்ந்த தெய்வ சாந்நித்யம்.  ஆமாம்,  குருவாயூரப்பன் கண்கண்ட தெய்வம். வரப்பிரஸாதி.  பக்த வத்ஸலன்.  அவனை  அனுபவிக்க  மனப்பூர்வ  பக்தி அவசியம்.
  
குருவாயூரப்பன்  சந்நிதிக்கு  இடது பக்க திண்ணையில் ஒரு தாமிரப்  பட்டயம் கண்ணில் படும்.   அதில் கொட்டையாக  மலையாளத்திலும், தமிழிலும்,   'இங்கே  தான் நாராயண பட்டத்ரி உட்கார்ந்து நாராயணியம் எழுதினார்''  என்று  எழுதியிருக்கும்.   
பட்டத்ரி நூறு நாட்கள் அங்கே அமர்ந்து  குருவாயூரப்பன் கேட்டு மகிழ  குருவாயூரப்பனின் பெருமையை,  நாராயணியம்  என்று  1000 ஸ்லோகங்களாக  பாடி  எழுதினார்.  நாரயணீய ஸ்லோகங்கள் பூரா  அர்த்தத்தோடு எழுதி  பதிவு இட்டிருந்தேனே  ஞாபகம் இருக்கிறதா?

நாராயண பட்டத்ரி 1560ல்   பாரதப்புழா  நதியின்  வடகரையில் மேல்புத்தூர்  கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில்  அப்பா மாத்ருதத்தர் தான் குரு.  பிறகு மாதவாச்சாரியார் எனும்  குரு  ரிக்வேதம் கற்பித்தார். தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடம்  கற்றார். அவருக்கு  வ்யாகரணத்தை  அச்சுத பிஷாரடி சொல்லிக்கொடுத்தார்.  

''எனக்கு குரு தக்ஷிணையாக  நீ  கற்ற பாடத்தை எல்லோருக்கும் கற்பி'' என்கிறார் பிஷாரடி. இப்படி ஒரு குருவை இந்த காலத்தில் பார்க்க முடியுமா? 

''அது போதாது குருவுக்கு  தக்க  வகையில்  ஏதாவது குரு சம்பாவனையாக செய்யவேண்டும் என்ற வேகம் மனதில் இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு:

அச்சுத பிஷாரடி வாத ரோகத்தில்  கை கால்களை அசைக்க முடியாமல் அவஸ்தை பட்டவர்.  அதை லக்ஷியம் பண்ணாமல் சிஷ்யர்களுக்கு  கற்பித்தவர்.  சிஷ்யர்கள் தான்  அவரை தூக்கி , குளிப்பாட்டி  உட்கார்த்தி வைத்து   உணவு ஊட்டி  கண்காணித்தார்கள்.  

இதனால் நாராயண பட்டத்ரிக்கு ஒரு விநோத எண்ணம் மனதில் தோன்றியது.  குரு தக்ஷிணையாக  நான் ஏன் இவரது வாத நோயை வாங்கிக்கொண்டு அவரை  நோயிலிருந்து விடுவிக்கக்கூடாது?

''குருவே,  எனக்கு  உங்கள் வாத நோயை  ஆவாஹனம் பண்ணுங்கோ.  வாத ரோக நிவாரணம்  என்ற குருதக்ஷணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன்.  சந்தோஷத்துடன் நான்  உங்களிடம் கல்வி முடிந்து இந்த குருகுலத்தை விட்டுச் செல்வேன்.  நான் கேட்டபடி வாத ரோகத்தை எனக்கு  தத்தம் செய்யுங்கள்.நீங்கள் சித்த புருஷர்.  உங்கள் கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் நான் கேட்டபடி  உங்கள் ரோகத்தை எனக்கு தத்தம் செய்ய  முடியும் 

''அப்பனே, என்ன மனஸுடா  உனக்கு!  குரு சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும், சாஸ்திரங்களையும், சகல வித்தைகளையும், கடவுள் பக்தியையும், புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டபடி தனது வியாதியை தரக் கூடாது. குருவுக்கு சிஷ்யர்கள் பெற்ற  பிள்ளைகள். எந்த அப்பாவாவது தனது நோயை பிள்ளளைக்கு தருவானா? அப்படி  தந்தால்  ஊர்  என்ன பேசும்? நீ இங்கிருந்து கிளம்பு''
 
''குருநாதா, நான் இளையவன். என்னால் இந்த  ரோகத்தைத் தாங்க முடியும்.  நீங்கள்  ஆசார ஸ்ரேஷ்டர். எந்த டாக்டரிடமும் போகாதவர். மருந்து மாத்திரை, கஷாயம் தொடாதவர்.  நான் சிறந்த வைத்தியரிடம் சென்று நோயை போக்கிக் கொள்வேன்.  நோயில் நீண்ட காலம் அவஸ்தைப்பட மாட்டேன். ஆகவே உங்கள் நோயை என்னிடம் தந்து ஆசீர்வதியுங்கள்''

பிஷாரடி  கண்மூடி தியானித்தார்.  இறைவனின் சங்கல்பம் புரிந்தது.  எல்லாம் குருவாயூரப்பனின் நாடகம்.  மனக்கண் முன் கிருஷ்ணன்  மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி,  குழலூதி நின்றான்.  சிரித்தான்.    பக்தனுக்காக மாதவன் எதைவேண்டுமானாலும் செய்பவன் அல்லவா? 

பஞ்ச பாத்ர த்தில் உத்ரணியில் ஜலம் எடுத்து  இந்தா  பிடி  என் வாத ரோகத்தை என்று  நாராயண பட்டத்ரிக்கு   தத்தம் செய்து கொடுத்தார். அடுத்த நிமிஷமே  குரு பட்டத்ரிமாதிரியும், பட்டத்ரி பிஷாரடி மாதிரி  உடல் ரீதியில்  மாறிவிட்டார்கள்.  மற்ற சிஷ்யர்கள் பட்டத்ரியை தூக்கிக்கொண்டுபோய் அவர் வீட்டில் விட்டார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...