Saturday, June 11, 2022

YAKSHAPRASNAM

 #யக்ஷ_ ப்ரஸ்னம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN


தர்மபுத்ரன் என்ற பெயர் பெற்ற யுதிஷ்டிரன் சற்றும் சளைக்காமல் தர்மதேவதை யக்ஷனாக வந்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறான். நாம் தான் பல நாட்களாக இந்த கேள்வி பதிலை இழுத்து பறித்துக்   கொண்டு நீளமாக எழுதுகிறோம் படிக்கிறோம். யுதிஷ்டிரனுக்கு யக்ஷன் அவ்வளவு அவகாசம் கொடுக்க வில்லை. மேலே மேலே கேட்டுக் கொண்டே போகிறான். பதிலும் வந்து கொண்டே இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும். தாகம் தீர யுதிஷ்டிரன் இன்னும் தண்ணீர் குடிக்கவில்லை.  பாவம்  தாகத்தில் தவித்துக்கொண்டு  பேசுகிறான்.

50.யுதிஷ்டிரா,  மனிதன் ஒருவனுடைய  ஆன்மா என்று யாரைச் சொல்லலாம் ?
ஒவ்வொரு மனிதனுக்கும்  அவனுடைய  புத்ரன் தான் ஆன்மா.

51 எதை  சாதுர்யம் , திறமை ,என்கிறோம்?
அவனவன் செய்கிற  தர்மம்,  அங்கங்களாலும், மனதாலும் அவன் திறம்பட செய்யும் செயல்கள்,
அவனது சாதுர்யத்தை திறமையை விளக்குகிறது.

52. கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் தந்த  சரியான  துணை யார்?
மனைவி  என்ற  ஸ்தானத்தில் அவனை நிர்வகிக்கும்  சக்தி வாய்ந்த ஸ்த்ரீ ( இது யுதிஷ்டிரன் சொன்னது . நானல்ல )

53. உயிர் வாழ அத்தியாவசியம் எது ?
இந்த உலகமே  ஜீவிப்பது  மழை ஒன்றினால் தான் 

54. ஒருவன் வாழ்க்கை முடிவை நிர்ணயிப்பது எது?
அவனதுவாழ்நாளில் அவன் புரிந்த  தான தர்ம பலன் மட்டுமே  அவன் முடிவை  நிர்ணயிக்கிறது.  அவனை சுகம் அனுபவிக்க ச்டய்வதும் அவனது நற்செயல்கள் தான்.

55. ஒருவனுக்கு செல்வம் சேர்வது எதனால் ?
அயராது உழைப்பு ஒன்றே அவன்  விரும்பியதைப் பெற உதவும்.

56. உலகத்தில் ஒருவன் தேடிப்பெறும் வஸ்துக்களில் மிகச் சிறப்பானது எது?
கற்றோரிடமும், அறிவாளிகளிடமும் ஒருவன் பெரும் ஞானம் அவனது மேன்மையை வளர்க்கும்.

57. ஒருவனுக்கு உலகில் கிடைக்கும் மிகச்சிறந்த ஆசி என்ன?
"நோய் நொடியின்றி ஆரோக்யமாக வாழ்வாயாக" என்ற ஆசி.  எவ்வளவு தான் அந்தஸ்து, பெருமை, பணம்  சொத்து  உறவு இருந்தாலும் நோயை அவன் தான் அனுபவிக்க வேண்டும். அது அவனை வாட்டுவதை தாங்க வேண்டும், உப்பு புளி  சர்க்கரை, நீர், மோர், தயிர் பால், வெண்ணை, நெய்  எதுவும் தொடாதே, என்று உடம்பு முழுதும் ஊசி துலக்கும்போது தான் தெரியும் அவன் தேகத்தை எப்படி  பாதுகாக்க வேண்டும் என்று.  அது ஆத்மாவின் குடியிருப்பு அல்லவா?  பகவான் உறைவிடம் அல்லவா?

58. ஒருவனின் சந்தோஷத்தில் மிகச்சிறந்தது யாது?
"திருப்தி அடைவது" ஒன்று தான் ஒருவனை மிகவும் மகிழ்விக்கும்.  திருப்தி அடையாதவன் தனது தலையில் தானே கொள்ளிக்கட்டையை செருகிக் கொள்பவன்.

59 . ஒருவன் செய்யும் செய்கையிலே மிக பாராட்டக்கூடிய செயல்.
அஹிம்சை நிரம்பிய மென்மையான செயல். எல்லா  தர்மங்களிலும் மிகவும் உயர்ந்தது அஹிம்ஸா  என்பதை அஹிம்ஸா  பரமோதர்மா  என்று வேதம் சொல்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...