Friday, June 10, 2022

life lesson

 #மனதில்_பதியட்டும்  -21 -  நங்கநல்லூர்  J  K  SIVAN


பிறருக்கு  மனமுவந்து இலவசமாக  செய்யும்  உதவி ஒரு சிறந்த  தானம்.  பசிக்கு  வயிறார  உண்பதற்கு தந்த  அன்னம்  போல. சொல்லிலும்  செயலிலும்  நிதானம்  ஒரு வகையில் தானம் தான்.  ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!  கல்யாணங்களில்   அப்பா  தன்  பெண்ணை   வேறொரு குடும்ப
த்தில்  கோத்திரத்தில் பிறந்த  ஆணுக்கு தானமாக  அளித்து அவனிடம் ஒப்படைப்பது தான் கன்யாதானம்/கன்னிகாதானம்.   ''உன் வம்சவிருத்திக்காக என்  குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன்''  -- என்று அப்பா செய்யும்  தானம் இது.    உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும்   மிக  உயர்ந்தது  கன்னிகாதானம். அப்போது சொல்கிற  சங்கல்பமும், மந்திரமும்  இது:

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' ...............மந்திரம் நீளும். 

அர்த்தம்: கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆக  மொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரை  சேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன்'' .  பெண்கள்  அநேகர்  இப்போது கன்யா தானம் செய்து கொடுக்க அப்பாவுக்கு  சான்ஸ்  கொடுப்பதில்லை எனது வருத்தமளிக்கிறது.

ஆக, பெண்ணைப்  பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது....

 உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

 இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி  திருமண்  நாமம்  இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவும்  காரியங்கள்.

 நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே.   பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.  ஊரறிந்த, உலகமறிந்த ஒன்றுக்கு தனியாக அடையாளம் தேவையில்லை.

நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளே எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம்  மொத்தத்தில்  அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமான்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன்   காமேஸ்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேஸ்வரியாக அனுக்ரஹிக்கிறாள்.   பரமேஸ்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே   இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கிரந்தங்கள்   கொண்டவை.   மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம்.    பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (''சிவ'' என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.  மஹா பெரியவா அடிக்கடி  ''சிவ சிவா''  என்று சொல்லிக்கொண்டே இரு  என்பார். 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...