Saturday, June 25, 2022

THE TWO FRIENDS


இரு நண்பர்கள்    -   நங்கநல்லூர்  J K  SIVAN 

வசுதேவர் யது வம்ச மன்னன்.  போஜ மன்னன் குலத்தில் பெண்ணெடுத்து கல்யாணம் ஆனா அன்றே  ஊர்வலத்தில் மனைவியின் சகோதரன் அசரீரி ஒன்றை கேட்க அதன் விளைவாக  சிறைப்பட்டு  மணவாழ்வு தேவகியோடு தொடங்கியவன்.  பிறந்த குழந்தைகள் அனைத்தையும் கம்சன் வாளுக்கு பலி கொடுத்த தகப்பன்.

எட்டாவதாக கடவுளே பிள்ளையாக வந்து பிறந்தும் அவன் பிறந்த நாளை கொண்டாட முடியாமல் அவனை இரவோடு இரவாக  கோகுலத்தில் நண்பன் நந்தகோப மஹாராஜா வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவன் விட்டுவிட்டு அவன்   பெண்குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்படியான ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டது  வசுதேவருக்கு. இதுவும் பிள்ளையாக  பிறந்த அந்த தெய்வமே சொல்லியபடி செய்தது தான். 

வசுதேவருக்கும்  சேர்த்து  கோகுலத்தில் நந்தகோப மஹாராஜா தனக்கு பிள்ளை பிறந்ததை விமரிசையாக கொண்டாடினார். 

வேத கோஷங்கள் முழங்கின. பிரதான ஜோசியர்களை கூப்பிட்டு ஜாதகம் கணிக்க சொன்னார்.   எல்லோரும் குளித்து புத்தாடைகள் உடுத்து பலவித உணவு பண்டங்கள் பரிசுகள் அனைவருக்கும்  விநியோகித்து ஆர்வமாக ஜோசியர் என்ன சொல்லப்போகிறார் ஜாதகம் கணித்து என்று ஆவலோடு காத்திருந்தார்கள்.

ஏராளமான பிராமணர்கள்  தானம் பெற காத்திருந்தார்கள். ரெண்டு லக்ஷம் பசுக்களை அலங்கரித்து தங்க வெள்ளி நகைகள் பூட்டி  தானம் பண்ணினார்  நந்த மஹாராஜா.
பித்ருக்கள், தேவதைகள் எல்லோருக்கும் திருப்தியாக  மரியாதை பண்ணினார்.
மலை மலையாக  எங்கும்  தானியங்கள், நவமணிகள். எல்லோருக்கும்  வழங்கினார்கள். . 
மேல தாள வாத்தியங்கள் முழங்கின.  கம கமவென  பன்னீர்கலந்த சந்தனம் அள்ளி அள்ளி வாரி தெளித்தார்கள். 

தெருவெல்லாம் அழகிய மாக்கோலம் வண்ண வண்ண கண்கவரும்  ஓவியங்கள். எங்கும் பூக்கள், மாவிலை தோரணங்கள்.  பசுக்கள், கன்றுகள் காளைகள் எல்லாம் குளித்து கொம்புகளில் வண்ணம் பூசிக்கொண்டு கழுத்தில் மாலைகளோடு நடந்தன. கோகுலம்
கிராமம்  பூரா எல்லோர் இல்லத்திலும்  விழா கோலம்.

ஊரே  திரண்டு நந்த மஹாராஜா வீட்டில் தான் காணப்பட்டது.  எல்லோரும்  கண்ணனைப்
பார்த்துவிட்டு  ''செல்வமே  நீ நீடூழி வாழ்ந்து எங்களையெல்லாம் ரக்ஷிக்க வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டார்கள்.

ஒருவர் மேல் ஒருவர் வெண்ணையை கட்டி கட்டியாக  வீசி விளையாடி மகிழ்ந்தார்கள்.
எங்கும் சங்கீத வித்துவான்கள்  சுகம் சங்கீத்.  வாத்தியங்கள் விதவிதமாக ஒலித்தன.
நாட்டிய பெண்கள் நர்த்தனமாடினார்கள். 

''நாராயணா மஹா விஷ்ணு, என் குழந்தைக்கு தீர்க்காயுசு கொடுத்து காப்பாற்றப்பா''என்று நந்தகோபன் வேண்டிக்கொண்டபோது மஹாவிஷ்ணு, நாராயணன் தான் தனது மகன் கிருஷ்ணன் என்று  அவருக்கு  தெரியாதே.

வசுதேவன் மனைவி ரோகிணியும் அங்கே இருந்தாள்.  கண்ணன் பிறந்ததை அவளும் கொண்டாடினாள் . அவள் மகன்  பலராமனும் அவளோடு குட்டி தம்பியை பார்த்து மகிழ்ந்தான்.

குழந்தை பிறந்தநாள் கொண்டாடிய பிறகு நந்தகோபன் பேரரசன் மதுரா ராஜ்ய கம்சனுக்கு கப்பம் கட்ட  புறப்பட்டார் . 
ஒரு விஷயம்:
எட்டாவது குழந்தை ஒரு பெண் என்று தெரிந்தும் அவளைக் கொல்ல  முயற்சித்து அவள் தப்பித்து ''முட்டாள் கம்சா உன் யமன் எங்கோ வளர்கிறான். அனாவசியமாக  உன் சகோதரி யை வதைக்காதே'' என்று  எட்டு கரங்களோடு  யோகமாயை காட்சி தந்து  எச்சரித்த போது
கம்சன் ஆடிப்போய்விட்டான். வசுதேவரையும் தேவகியையும்   சிறையிலிருந்து விடுவித்து  அவர்கள் வீட்டுக்கு அனுப்பினான்.
 
நண்பன்  நந்தகோபன்  மதுராவுக்கு  வந்ததை அறிந்து நண்பனை சந்திக்க வசுதேவர் நந்தகோபன் தங்கியிருந்த இடம் சென்றார். நந்தகோபன் அவரைக்  கட்டி அணைத்தார் .  வசுதேவரின் இரு மகன்களும்  (பலராமனும் கிருஷ்ணனும்) நந்தகோபன் வீட்டில் வளர் கிறார்கள். அவர்களை பற்றி அறிய ஆவல். ஆனால் நேரடியாக கிருஷ்ணனைப் பற்றி கேட்க முடியாதே. பரம ரஹஸ்யம் அல்லவா?   ஊரில் எல்லோரும் சுகமா, வீட்டில் எல்லோரும் சுகமா.  நாட்டு மக்கள் நலமா என்று சுற்றி வளைத்து கேட்டார்.  எல்லோரும் சுகம் என்று அறிந்து மகிழ்ந்தார்.

''நண்பா வசுதேவா ,  பாவம்  நீயும்  தேவகியும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நான் அறிவேன்.ஊரில் எல்லோரும்  பேசுகிறார்களே.  பிறந்த பிள்ளைகள் அனைவரையும்  கொடியவன் கம்சனுக்கு இரையாக கொடுத்த பெற்றோர் களாச்சே . எட்டாவது கடைசி குழந்தை பெண்  என்றும் பார்க்காமல் கொல்ல  முயன்றானாம். அது காளி அம்சமாம். அவன் கையிலிருந்து நழுவி வானில் பறந்ததாம். நமது கர்ம வினைகள் தாம் நம் வாழ்வை இப்படி சிதறடிக்கிறது. இதை எல்லாம் உணர்ந்த ஞானி நீ. அதனால்  வந்த துன்பம் அனைத்தும்  ஏற்றுக்கொண்டு  எங்கள் ஊரிலிருக்கும் அனைவரின் நலம் பற்றி  அன்போடு  ஆர்வமாக  விசாரிக்கிறாய்.. நாங்கள் யாவரும் நலம், என் வீட்டில் என் குழந்தைகள் சந்தோஷமாக வளர்கிறார்கள். ஊரில் யாருக்கும் எந்த துன்பமும் இல்லை'' என்கிறார் நந்தகோபர்.

''ரொம்ப  நன்றி நந்தகோபா,  கம்சனை சந்தித்து  கப்பம் கட்டியாகிவிட்டது  என்றால் உடனே  ஊர்  திரும்பு.  எனக்கு  என்னவோ  கோகுலம் நீ உடனே திரும்பவேண்டும் என்று தோன்றுகிறது.  அங்கே  நீ இல்லாத நேரம்  ஏதோ சில அசம்பாவிதங்கள் நேரலாம் என்று மனதில் படுகிறது. 
உடனே போ''

வசுதேவர் வீடு திரும்பினார்.  நந்தகோபனும்  கோகுலம் திரும்பினார். கம்சன் அனுப்பிய பூதகி ஏற்கனவே  வீட்டில் இருப்பது அவருக்கு  வீட்டில் நுழைந்தபோது தான் தெரிந்தது.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...