Tuesday, June 28, 2022

SHEERDI BABA

மனிதருள் ஒரு தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஷீர்டி ஸாய்பாபா 

13   பக்கிரி பாபாவானார்.

மஹான்கள்  ஒருவரா இருவரா !!  எண்ணற்றவர்  அவ்வப்போது தோன்றி நம்மை நல்வழிப் படுத்த இறைவன் ஒவ்வொருவராக அனுப்புகிறான். நாம்  அவர்களால்  பயன் பெறாமல் அவஸ்தைப்பட்டால் அது நம் அறியாமை, அறிவீனம் தவறு.  
அப்படி நம்மிடையே தோன்றி

அருள்பாலித்தவர்  ஷீர்டி ஸாய்பாபா .

அவரைப்பற்றி வெகு அற்புதமாக  ஹேமத் பந்த் தபோல்கர்  எழுதிய புத்தகம் தான்  ஸ்ரீ ஸாய் ஸத்  சரித்திரம்   பல மொழிகளில் வெளிவந்துள்ளது.   ஆங்கிலத்தில் என்னிடம் இருந்த சில பிரதிகளை கெட்டவர்களுக்கெல்லாம் கொடுத்தேன்  இன்னும் ஐந்தோ பத்தோ இருக்கிறது. நேரில் நங்கநல்லூர் வந்து  என்னிடம் பெறலாம். அனுப்ப இயலாது.  அதில் இருந்து சில விஷயங்கள்.

சந்து பாய் என்பவர்  தனது  மருமாள் கல்யாணத்தை  ஷீர்டி கிராமத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார் . இதற்காக  சந்துபாய் ஷீர்டிக்கு முன்னதாகவே சென்று எல்லா காரியங்களிலும் கலந்து கொள்ள ஆயத்தமானார். அவருக்கு பழக்கமாகி விட்ட அந்த இளம் பக்கிரியையும் '' என் கூட வா'' என்று அழைத்தார். காளை பூட்டிய வில்வண்டிகள் ஷீர்டிக்கு புறப்பட்டன. ஷீர்டி யில் மஹல்ஸா பதி வாசலில் காத்திருந்து வந்தவர்கள் அனைவரையும் தக்க மரியாதையோடு வரவேற்றார்.

மஹல்சாபதி  கண்ணில் வண்டியிலிருந்து ஒரு இளம் பக்கிரி இறங்குவது தென்பட்டது. விடு விடு வென்று அந்த வண்டி அருகே சென்றார். இரு கைகளை கூப்பி ''ஆயியே ஸாய்'' (வாங்கோ அப்பா) என்று உள்ளன்போடு வரவேற்றார். அதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. யாரும்  அந்த இளம் பக்கிரியை இதுவரை அப்படி கூப்பிட்டது மில்லை. அன்றிலிருந்து அந்த இளம் பக்கிரி  ஸாயிபாபா ஆகிவிட்டார்.    எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், காலம், தக்க கருவி வேண்டாமா?

ஒரு  விசித்திர சம்பவம்  சொல்கிறேன் கேளுங்கள்;
 பாபா ஒரு கிரிமினல் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஒரு பணக்காரன் வீட்டில் கொள்ளையடித்த திருடர் கும்பல் மேல் வழக்கு. திருடர்களை பிடித்த போலீஸ் விசாரணையில் அவர்கள் தாங்கள் திருடவில்லை, அந்த பொருள்களை பக்கிரி தான் கொடுத்தார் என்று வாக்கு மூலம் அளிக்க போலீஸ் சாய் பாபாவை தேடி வந்தது.  பாபா எங்கும் ஓடி ஒளிபவரில்லையே. எளிதில் அவரை வெள்ளைக்கார அரசாங்க போலீஸ் பிடித்தது. விசாரணை நடந்த அழகு இது:

''ஏ பக்கிரி, நீ தான் திருடப்பட்ட பொருள்களை இந்த திருடர்களுக்கு கொடுத்தவனா?'' 
''ஆமாம்.''''
''எங்கிருந்து அந்த திருட்டு பொருள்கள் உனக்கு கிடைத்தது. உண்மையை ச் சொல்''
"இதில் என்ன பொய் . எங்கிருந்து எல்லாம் கிடைக்குமோ அங்கிருந்து கிடைத்தது'
''பூடகமாக பேசாதே. ஒழுங்காக பதில் சொல். பக்கிரி. யார் இதெல்லாம் உன்னிடம் கொடுத்தது விவரம் எல்லாம் சொல் '
"ஓ. எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்''

''போலீசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
''நான் தானே எல்லாம் கொடுப்பவன். என்னுடைய அனுமதி இல்லாமல் யார் எதைப் பெற முடியும்?'' என்று 
மேற்கொண்டு விளக்கினார் பாபா.

போலீஸ் இனி மேல் பேசி பிரயோஜனமில்லை என்று அவர் மேல் திருடன் என்று ஒரு குற்றச் சாட்டு பத்திரிக்கை தயார் செய்தது. வெள்ளைக்கார மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பி விட்டான். நீதிமன்றத்தில் உண்மையை கூறவேண்டும்.

பாபாவை ஷீர்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து போனார்கள். நீதிபதி கேள்விகள் கேட்டான்.
''உன் தந்தை பெயர் என்ன ?''
''பாபா (அப்பா)''
உனக்கு எது மதம்?'
'''கடவுள் மதம் '''
'நீ எங்கிருந்து வந்தவன் ? "
ஆத்மாவிலிருந்து''
"நீ என்னய்யா ஜாதி ?''
"தெய்வீக ஜாதி''
மாஜிஸ்திரேட் விழித்தான்.
''சரி நீ போகலாம்''

இதற்குள் பிடிபட்ட  திருடர்களுக்கு  போலீஸ்  சரியான ''விருந்து'' கொடுத்ததும் திருடர்கள் உண்மையைக் கக்கி விட்டார்கள். எங்கிருந்து எடுத்தார்கள் எப்படி என்ற விவரம் எல்லாம் போலீஸ் அறிந்து கொண்டுவிட்டது. ஸாய் பாபா வந்தவழியே சென்றார்.

ஒரு மார்கழி பஞ்சமி திதி. தத்தாத்ரேயர் ஜெயந்தி கொண்டாடினார்கள். ஷிர்டியில் நல்ல கும்பல். பல்வந்த் கைஜாக் என்ற ஒரு பணக்கார கல்விமான் மசூதி பக்கம் நடந்து கொண்டிருந் தார். பாபா கையில் ஒரு கம்புடன் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.
''சைத்தான், சைத்தான்'' என்று சொல்லி சிலருக்கு அடியும் விழுந்தது. ஏன் பாபா இப்படி பைத்தியம் பிடித்தவன் போல் நடந்துகொள்கிறார்?? என்று அநேகருக்கு வியப்பு.

''எனக்கு பிரசவ வலி . எல்லோரும் தூர போய்விடுங்கள்.'
அப்போதெல்லாம் பாபா ரொம்ப இப்படியெல்லாம் கத்துவார். கொம்பால் சிலரை  விரட்டியும் அடித்தும் இருக்கிறார். கொம்பை வீசி எறிவதும் உண்டு. அவரைக்கண்டு பயந்து ஓடி விடுவார்கள்.
சற்று நேரம் கழித்து ''பல்வந்த் கைஜாக், வாருங்கள் '' என்று பாபா அழைத்ததும் கைஜாக் வந்தார்.மசூதிக்குள் சென்றார்கள். பாபாவோடு உள்ளே சென்ற கைஜாக்  அருகில் இருந்த  பாபாவை தேடுகிறான்.  பாபாவைக்  காணோம். எங்கே போனார். எப்படி மாயமானார்?

கைஜாக்  அங்கே ஒரு அதிசயத்தை பார்க்கிறார்.  தரையில் மூன்று தலை குழந்தை ஒன்று. ''எனக்கு பிரசவ வலி''   என்று பாபா'' சொன்னதன் அர்த்தமா இது? மூன்று தலை இருந்ததால் தத்தாத்ரேயரோ ? அன்று அவர் ஜெயந்தி யாயிற்றே ? பிறந்து விட்டாரோ? சின்ன கை குழந்தை. நிறைய கைகள். தத்தாத்ரேயர்,  பாபா தான்  தத்தாத்ரேயரோ?

பல்வந்த் கைஜாக் வெளியே ஓடி ''எல்லோரும் வாருங்கள் இங்கே'' என்று உரக்க கூவினார். அதிசய குழந்தையை கண்ட எல்லோரும் கண்மூடி தத்தாத்ரேயரை வணங்கினார்கள். அடுத்த 
 கணமே அங்கே பாபா நின்றார்.  அந்த அதிசய குழந்தையைக்  காணோம்.

அந்த நிமிஷம் முதல் பாபாவை எல்லோரும் தத்தாத்ரேயராக வணங்க ஆரம்பித்தனர். 
தூங்கிக்கொண்டிருந்த  ஷீர்டி கிராமம்  விழித்துக் கொண்டது. ஜேஜே என்று எண்ணற்ற பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வரத்  துவங்கினார்கள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...