Sunday, May 24, 2020

NOSTALGIA

சின்ன வயதினிலே செய்த குரும்பை எல்லாம்.....J K SIVAN
கொடுக்காப்புளிக்காய் என்று ஒரு ருசியான காய் சாப்பிட்டவர்களுக்கு அதன் அனுபவம் தெரியும். நன்றாக பழுத்த கொடுக்காப்புளி பழம் முழுதும் கிடைப்பது துர்லபம். முக்கால்வாசி அணில் சாப்பிட்டிருக்கும். வளைந்து வளையல் போல் மேல் தோல் பிங்க் கலரில் இருக்கும். சிலது . மொச்சை மாதிரி பச்சை. அதன் உள்ளே குண்டு குண்டாக கொடுக்காப்பளி காயா அல்லது பழமா? வெள்ளை வெளேரென்று இருக்கும். அதனுள் கருப்பாக புளியங்கொட்டை மாதிரி விதை. அந்த வெள்ளை காய் இனிப்பாக தேவாம்ருதம் தான். வெள்ளைக்கு நடுவே பச்சையாக தோல் இருந்தால் அதனுள் விதை சின்னதாக இருக்கும். வெள்ளை பாகம் அவ்வளவு இனிப்பாக இல்லாவிட்டாலும் ருசியாக இருக்கும். எங்கள் வீட்டுக்கு பின் புறம் கொடுக்காப்புளி மரம் ரெண்டு மூன்று பெரிதாக இருந்தது. அதிலிருந்து கீழே விழுந்ததை நாங்கள் எடுத்து ருசிப்போம். சில சமயம் ரஹீம் என்கிற பையன் மரத்தில் ஏறி பறிப்பான். அவனுக்கு ஷேர் ஜாஸ்தி. அங்கேயே அமர்ந்து வேண்டியதை பறித்து சாப்பிட்டுவிட்டு மீதியை நிஜார் பாக்கெட்டில் நிரப்பிக்கொண்டு வருவான். அதில் தான் அவன் ஷேர் கணக்கு ம் வரும். அரை நெல்லிக்காய் சாப்பிட்டதுண்டா? பச்சையாக குலை குலையாக காய்க்கும். எங்கள் வீட்டின் பின் புறம் பெரிய தோட்டம். அதில் ஒரு குட்டை அரைநெல்லி மரம் இருந்தது. அதில் கொஞ்சம் மஞ்சள் நிறம் கொண்ட சற்று பெரிய காய்கள் புளிப்பும் இனிப்பும் கலந்ததாக இருக்கும். வெறும் பச்சையாக இருப்பவை புளிப்பாக மட்டுமே இருக்கும். ஒரு குலையில் குறைந்தது 20-25 காய்கள் இருக்கும். நிறைய சாப்பிட்டு ''கப்'' பென்று தொண்டை கட்டிக்கொண்டு அவஸ்தைப் பட்டதும் உண்டு. இந்த அரை நெல்லிக்காயை பள்ளிக்கூடம் செல்லும்போது பயில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு போய், மற்ற மாணவர்களிடம் பண்டம் மாற்றும் பொருளாகவும் உபயோகித் திருக்கிறேன்.
பலராமன் என்கிற பையன் சூளைமேட்டில் பாச்சா சாஹிப் தெருவில் இருந்து வருவான். 6 அரை நெல்லிக்காய்க்கு ரெண்டு மேச்சஸ் ( தீப்பெட்டி மேட்ச் பாக்ஸ் லேபல்) கொடுப்பான். அவனுக்காகவே பள்ளிக்கூடத்திற்கு அரை நெல்லிக்காய் போகும். ஜெகதீசன் என்கிற பையன் பஜனை கோவில் தெருக்காரன். அவனிடம் தான் அதிகம் . எண்ணி 415 மேச்செஸ் ஒரு நோட்டு புத்தகம் தைத்து (எழுதிய பழைய வருஷ நோட்டுகள்) அதில் ஒட்டி வைத்திருப்பான். அதை வெகு ஆவாலாக பார்ப்பேன். நாம் பார்க்கும்போது கண் குத்தி பாம்பாக யாரும் எதையும் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பான். நோட் புக்கை பார்ப்பதற்கு லேசில் கொடுக்க மாட்டான். அவனிடம் இல்லாத மேச்செஸ் கொடுத்தால் பலப்பம் கொடுப்பான். ப
லப்பம் என்பது ஸ்லேட்டில் எழுத உதவும் கருவி. மாவு பல்பம், அச்சு கொட்டும் பல்பம் என்று பல உன்னத ஜாதிகள் அவனிடம் உண்டு. சில சமயம் பலப்பத்துக்கு பதிலாக சிகப்பாக உருண்டை உருண்டையான ஒரே மாதிரியான சின்ன மிட்டாய்கள் தனது பெரிய காக்கி நிற புஸ்தக நோட்டு பையில் வைத்திருப்பான். அதில் ஒன்று ரெண்டு கொடுப்பான். எங்களிடம் மேச்சஸ் டபுள்ஸ் இருந்தால் இப்படி தான் மாற்றிக்கொள்வோம்.
பென்சிலின் பின்னால் ஓட்டை காலணா எட்டாம் ஜார்ஜ் உருவம் போட்டது, செருகி வைத்திருப்பது எங்கள் வகுப்பில் எல்லோருக்குமே பழக்கம். ரப்பர் வெள்ளையாக தேய்த்து துடைத்து வைத்திருப்போம். ரப்பரின் ன் வெள்ளை வயிற்று பாகத்தை தலையில் தேய்த்து கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவி புத்தகத்தில் இருக்கும் கருப்பு வெளுப்பு படம் நிறைய இருக்குமே அதில் ஏதாவது ஒன்றின் மேல் நன்றாக அழுத்தி வைத்து எடுத்து பார்த்தால் ரப்பரில் அந்த படம் தெரியும். இது ஒரு பெரிய கேளிக்கை. முத்து கிருஷ்ணனிடம் பெரிய ரப்பர் இருந்தது. அவன் மாமா வீட்டில் கிருஷ்ணாபுரத்தில் வசிப்பவன். அதற்குத் தேவையான தேங்காய் எண்ணெயும் அவன் தலையில் உண்டு. அரைக்குடுமி அவனுக்கு. அவன் எடுக்கும் ரப்பர் பட நகல்களை பார்க்க நாங்கள் கெஞ்சுவோம். காட்டுவதற்கு பிகு பண்ணிக்கொள்வான். அவனிடமிருந்த மற்றொரு சிறந்த கைத்திறன், நோட்டுப் புத்தக பேப்பரை கிழித்து துப்பாக்கி, ஏரோப்ளேன், ராஜா ராணி கப்பல், ரெட்டைக்கப்பல், கத்திக்கப்பல், செய்வது. இஷ்டமிருந்தால் அவைகளை செய்முறை சொல்லித் தருவான். அதற்காகவே அவனிடம் நெருங்கிய நண்பனாக பழகி இருக்கிறேன். ராஜாமணி சிரிக்கவே மாட்டான். வெகுகாலம் அவனுக்கு அம்மா கிடையாது. அக்கா வீட்டில் அடிப்பவள் என்று தெரியாது. தினமும் தயிர் சாதத்திற்கு மோர் மிளகாய் வறுத்து ஒரு பொட்டலம் கொண்டுவருவான். அவனோடு சேர்ந்து சாப்பிட்டால் சின்னதாக ஒன்றோ இரண்டோ துண்டாக்கி மோர் மொளகா கொடுப்பான். ராஜாமணியின் அண்ணா ராகவன் எங்கள் வகுப்பில் தான் படித்தான். அவன் திறமை என்னவென்றால். காகிதத்தை மடித்து வால் நீண்ட ரெண்டு பகுதிகளாக செய்து ஒன்றில் ஒன்றை செருகி மடித்து வைத்திருப்பான். அந்த மடித்த பகுதியில் ஏதாவது கோரமாக ஒரு முகம் படம் வரைந்திருப்பான்.
''உன்னை போட்டோ எடுக்கட்டா?'' என்பான். முகத்தின் எதிரில் அந்த ரெண்டாக மடித்த நீண்ட காகிதத்தின் முதலாவதின் பின்னே இருக்கும் வாலை இழுப்பான். அது மேலே எழும்பி உள்ளே காட்டும் கோர முகம் தான் என் போட்டோ. எல்லோரும் சிரிப்பார்கள். இப்படி நிறைய பேரை போட்டோ பிடிப்பான். கோரமுகம் ஒன்று வரைந்து உள்ளே வைத்திருப்பது முதலில் நமக்கு தெரியாது. நான் சொன்ன மேற்கண்டவை நிகழ்வது எல்லாமே சுப்ரமணிய அய்யரோ, ஷண்முகம் வாத்யாரோ வகுப்பில் இல்லாத போது மட்டும் என்று நினைவில் கொள்ளவேண்டும். கணக்கு வாத்யார் நாராயணய்யர் கடு கடு வென்று இருப்பார். அவர் பயன் சோமாஸ்கந்தன் என் பெஞ்சில் தான் உட்கார்ந்து இருப்பான். அவர் கரும்பலகையில் BOARD ல் கணக்கு போட்டுக்கொண்டே திடீரென்று திரும்பி பையன்களை நோட்டம் விடுவார். பிறகு சாதுவாக நகர்வார். பெஞ்சுகளுக்கு இடையே வந்து எதாவது ஒரு பையன் பின்னால் சென்று அவன் முதுகில் பேயாக அறைவார் . பேசிக் கொண்டிருந்த பையனுக்கு தனக்கு இப்படி ஒரு தண்டனை வரும் என்று தெரியாது. எப்போடா நாராயண ஐயர் கணக்கு பீரியட் முடியும்? என்று ஆவலாக தூங்கு மூஞ்சி மரக்கிளையில் தொங்கும் தண்டவாள துண்டில் அப்பாதுரை மணி அடிக்க காத்திருப்போம். அப்பாதுரை பள்ளிக்கூடத்தில் ஆல் இந்த ஆல் ஆள். மணிக்கு ஒரு தடவை தண்டவாளத்தை அடித்து சப்தம் எழுப்புவான்.
விஜயராகவன் சார் சயின்ஸ் வாத்தியார் அமிலங்கள், கண்டகம், பாதரசம், போன்றவற்றை விளக்கிக்கொண்டே சில நாள் வகுப்பில் நாற்காலியில் அமர்ந்தவாறே தூங்கிப்போவார். அவர் எப்போதும் ஒரே நிற பிரவுன் கோட் போட்டுக்கொண்டு தான் வருவார். சாது. யாரையும் திட்ட மாட்டார். ஸயன்ஸில் எல்லோருமே குறைச்சல் மார்க் தான் வாங்குவோம்.
பி எஸ் ஆர் என்று ஒரு வாத்தியார் குள்ளமான அரைக்குடுமி பச்சைமிளகாய். பி எஸ் ராகவன் என்றால் எல்லோருக்கும் பயம். நிறைய பேசுவார். எல்லோரையும் சகட்டுமேனிக்கு (இதற்கு யாருக்காவது அர்த்தம் தெரியுமா?) திட்டுவார், பஞ்சகச்சம், மேல் துண்டு, ஜிப்பா, அல்லது முழுக்கை சட்டை. பளிச்சென்று காதில் கடுக்கன். பெரிய நெற்றியில் ஒரே அளவில் மூன்று பட்டைகள் நடுவே குங்குமம். PSR ஆங்கில வாத்தியார். தன்னை ஒரு வெள்ளைக்காரன் என்று நினைத்துக்கொண்டு எங்களை அவர் மாதிரியே ஆங்கிலம் பேசவேண்டும் என்று எதிர் பாவம் TB நோயாளி மாதிரி சிரிப்பார். சரோஜினி டீச்சர் சரித்திர ஆசிரியர். வேடிக்கையாக கதைகள் சொல்வாள். அலெக்ஷாண்டரும் புருஷோத்தமனும் பேசுவது போல் தானே ரெண்டு பேருமாக பாவித்து டயலாக் அழகாக சொல்லும்போது சுவாரஸ்யமாக ரசித்திருக்கிறேன். இன்னொரு வேடிக்கை. அலெக்ஸாண்டர் பேசும்போது ஒரு பக்கம். புரு பேசும்போது நகர்ந்து எதிர்பக்கம் வந்து தனக்கு தானே பேசுவது வேடிக்கை யாக இருக்கும். இன்னும் சொல்லமாட்டாளா என்று இருக்கும். வாசலில் காகிதப்பூ மரத்தின் அடியில் துரைசாமி என்று எழுதிய பச்சை நிற நாலு சக்கர வண்டியில் அடியில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் இருக்கும். மேலே வாழைக்காய் சீவுகிறமாதிரி ஒரு மரத்தால் ஆன தேய்க்கும் கிற மெஷின். அதன் அருகே வாயாகல அலுமினியம் டேக்ஸா (இது என்ன மொழி?) வில் ஒரு கோணி சுற்றி அது தொப்பலாக ஈரமாக தாராளமாக தண்ணீர் சொட்ட சொட்ட ஒரு பெரிய ஐஸ் கட்டி. அதில் கொஞ்சம் ஒரு உளியால் பெயர்த்து கையில் அந்த வாழைக்காய் சிப்ஸ் தேய்க்கும் மெஷின் மாதிரி ஒன்றில் வைத்து தேய்ப்பான். ஐஸ் பூ பூவாக அடியில் ஒரு தட்டில் நிரம்பும். வாய் ஓயாமல் ''ஐஸ் க்ரீம், ஐஸ் ப்ரூட்'' என்று கத்திக்கொண்டே இருப்பான். தேய்த்த ஐஸ் தூளை இடது கை நிரம்ப அமுக்கி ஒரு பிடி பிடித்து அதன் நடுவே தடியாக ஒரு ஈர்க்குச்சி செருகி இன்று அமுக்கு அமுக்குவான். வரிசையாக சில பாட்டில்களில் சிகப்பு, பச்சை, மஞ்சள் ஆரஞ்ச் என்று கலர் கலராக நீர்க்க ஏதோ வைத்திருப்பான். அதில் ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம். அந்த ஐஸ் பிடி கொழுக்கட்டை மேல் தெளித்து கையில் கொடுப்பான். ஓரணா கூசாமல் கறாராக கேட்பான். அது தான் இதன் விலை. கலர் கொஞ்சம் கசப்பாகவும் இனிப்பாகவும் ஆனால் சில்லென்று இருக்கும். இதை வாங்க நிறைய பேர் வண்டியைச் சூழ்ந்து நிற்போம்.
குண்டாக ஒரு அம்மாள் தரையில் கோணி, கித்தான், அல்லது ஈச்சம் பாயையோ பரப்பி அதில் கமர்கட், மாங்காய் துண்டுகள், மிளகாய்ப்பொடி தனியாக, சிகப்பு நீல கோலி மிட்டாய்கள் சின்ன ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டு வியாபாரம் பண்ணுவாள். ஒழிந்த நேரத்தில் அவித்த வேர்க்கடலையை முட்டையிலிருந்து எடுத்து உரித்து ஒரு ஜாடியில் போட்டுக்கொண்டிருப்பாள். எதிரே ஒரு சின்ன கூடையில் வேர்கடலை, பொட்டுகடலை, பட்டாணி, பிரவுன் தோளோடு உடைச்ச கடலை விற்பாள். அவளிடம் ஒரு கும்பல் நிற்கும். நாங்கள் வாடிக்கையாளர்கள். சிலரிடம் காசு உண்டு. அவர்களை சுற்றுவோம். துரைசாமி அவளை வண்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கச் செய்ய முடியுமோ அவ்வளவு தள்ளி போக கத்துவான். வியாபர போட்டி அல்லவா? கொஞ்சம் நேரம் கிடைத்தால் எங்களில் சிலர் பள்ளிக்கு அருகே இருந்த மைதானத்தில் ஒரு கவர் பால் (ரப்பர் பந்து ) வைத்துக்கொண்டு பக்கத்துக்கு 10 பேராக கால் பந்து விளையாடுவோம். வெயிலை நாங்கள் லட்சியம் செய்ததில்லை. வியர்த்து கொட்டும். பள்ளிக்கூடத்தில் ஒரு தண்ணீர் தொட்டி அதிலிருந்து நீர் பிடித்து பானையில் நிரப்பி ஒவ்வொரு வகுப்பு வாசலிலும் வைத்திருக்கும். அதன் மண் மூடியின் மேல் ஒரு அலுமினியம் டம்பளர் வைத்திருப்பார்கள். லோட்டா லோட்டாவாக நீர் குடித்து களைப்பை போக்கிக் கொள்வோம். எங்களுக்கு வியாதி எதுவும் வரவில்லை அப்போது. கொரோனா எல்லாம் யாருக்குமே தெரியாது. கொய்னா மாத்திரை தான் அறிமுகம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...