Thursday, May 28, 2020

RASA NISHYANDHINI


ரஸ  நிஷ்யந்தினி    J K  SIVAN  


                           
                     அற்புத  ராமாயண பாத்திரங்கள்  

ராமாயணத்தில்  கண்ணில் படாத ஒரு பெயர்  ஊர்மிளை.  லட்சுமணனின் மனைவி.  ராமனோடு தான் லக்ஷ்மணனும்   சீதையின்  தங்கை  ஊர்மிளை யை  கல்யாணம் செய்து கொண்டான்.  ஊர்மிளை  ஜனகரின்  இரண்டாவது பெண். சீதையோடு நெருக்கமானவள்.  பாசமிக்கவள்.  சீதையை உலகம் அறிந்த அளவில் கோடியில் ஒரு பங்கு கூட அவள் தங்கை ஊர்மிளை அறியப்படவில்லை. ஆச்சர்யமானவள் அவள் செய்த தியாகத்திற்கு ஈடே இல்லை. 

சீதை  வனவாசம் கணவனோடு சென்றாள் .  அவள் கணவன் ராமன் 14 வருஷம்  வனவாசம் செய்யவேண்டும் என்று தந்தையிடம் சிற்றன்னை பெற்ற  வரத்தால் செல்ல வேண்டிய நிர்பந்தம்.  லக்ஷ்மணன் தானாகவே  14 வருஷம் ராமனோடு வனவாசம் அனுபவித்தான்.  

 ''நானும்  அக்கா  சீதாவோடு உங்களோடு வனவாசம் வரலாமா?''

''கூடாது  ஊர்மிளா.  நீ  இங்கே இருந்து  என் வயதான  தாய் தந்தைக்கு  ஒரு குறைவுமில்லாமல்  பணிவிடை செய்து கொண்டு இரு '' என்றான் லக்ஷ்மணன். 

காரணம் இல்லாமல் அவன் மனைவி  ஊர்மிளை   கணவன் சொல் தட்டாது,  14 வருஷம் கணவனை பிரிந்து '
 என்ற லக்ஷ்மணன் வாக்கை தெய்வ வாக்காக கொண்டு சேவை புரிந்தாள். லக்ஷக்கணக்கான ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தில் ஒரு வார்த்தை கூட ஊர்மிளை  பேசியதாக  காணோம். 

அவளைப்  பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம். 

வனவாசம் 14 வருஷத்தில் ஒரு நாள் /இரவு கூட  லக்ஷ்மணன் தூங்கவே இல்லை.  ராமனை, சீதையை  ஜாக்கிரதையாக காவல் காத்து  பணிவிடை செய்தான்.  இப்படி  உறக்கம் இன்றி செயல்படுவதை கவனித்த  நித்ரா தேவி  (தூக்கத்துக்கு கடவுள்)  லக்ஷ்மணன் முன் தோன்றினாள் .

''லக்ஷ்மணா, இரவு பகல் கண்ணுறங்காமல் நீ  சீதா ராமர் இருவருக்கும் தொண்டு செய்வது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.  உன் பக்தியை மெச்சி உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல்?''

''நித்ரா தேவி.  எனக்கு ராமர் சீதைக்கு  சேவை செய்வது ஒன்றே லக்ஷியம்.  என் சேவையை பாராட்டி நீங்கள் எனக்கு ஏதாவது வரம்  கொடுத்து நான் பெற்றுக்கொண்டால்  என் சுயநலத்துக்கு உழைத்ததாக ஆகும். என் சேவைக்கு பரிசு பெற்றதாக இருக்கும். வேண்டவே வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள், அப்படி எனக்கு உதவ நினைத்தால்,  இரவும் பகலும்  என் பிரபுவுக்கும் தாய்க்கும்  நான்  தூக்கமின்றி பணிவிடை செய்ய அருள்புரியுங்கள்.

''லக்ஷ்மணா,  அற்புதமானவன் நீ.  உனக்கு தூக்கமின்மையால்  எந்த  துன்பமும், களைப்பும் வராமல் இருக்க  அருள் புரிகிறேன்''.  உனக்கு  ஏதேனும் வரம் கொடுக்காமல் என்னால் இங்கிருந்து அகல முடியாது. ஏதேனும் கேள்?''

''நித்ராதேவி  தாயே,  என் பிரபு ராமன், தாய்  சீதைக்கு  பணிவிடை செய்ய  அவன் அருள் புரிவான்.  என் மனைவி ஊர்மிளா   அயோத்தியில் என்னை பிரிந்து என் பெற்றோருக்கு   தனியாக, பணிவிடை செய்து   கொண்டிருக்கிறாள். அவளுக்கு கஷ்டமில்லாமல் அருளுங்கள்''    

பரவாயில்லையே  லட்சுமணனுக்கு  மனைவி ஊர்மிளா ஞாபகம் இருக்கிறதே.

நித்ரா தேவி  அயோத்தி சென்று ஊர்மிளா முன் தோன்றுகிறாள்.   

'' ஊர்மிளா, உன் கணவன் லக்ஷ்மணனை சந்தித்தேன். உனக்கு அருள் புரிய என்னை கேட்டுக்கொண்டான்.  என்ன வரம் வேண்டும் கேள்'' என்றாள்  நித்ரா தேவி.

''தாயே  நித்ரா தேவி, எனக்கு நீங்கள் கேட்டது பெருமையாக இருக்கிறது.  எனக்கு களைப்பு, துன்பம் எதுவும் இல்லை.   என்  கணவனின் கட்டளை  சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறேன்.   ஒரே  ஒரு வேண்டுகோள். என் கணவன் என்னை பற்றி கவலைப்பட்டு  எனக்கு ஏதேனும் உதவ  உங்களை இங்கே அனுப்பினார் .  அவருக்கு பாவம் என் மேல் கவலை இருப்பதால் அங்கே அவருக்கு  ராமர் சீதை இருவருக்கும் முழு மனதாக பணிவிடை செய்ய இயலாதோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. இந்த பதினாலு வருஷமும் என்னைப்பற்றி எண்ணமோ, கவலையோ,  அவர் மனதில் எழாமல் நீங்கள் அருளவேண்டும்''

 லக்ஷ்மணன் ஏகாக்ர  சிந்தையோடு ராமர் சீதை இருவருக்கும்  பணிவிடை செய்ய   ஊர்மிளையின் இந்த வேண்டுகோளால்  நித்ரா தேவி அருளிய  வரம் உதவியது.  

++ 

 விஸ்வாமித்ரர் இதுவரை அறுபது காரணங்கள் காட்டி ராமனின்  தெய்வீக தன்மையை  தசரதனுக்கு உணர்த்துவதை பார்த்தோம். 
விஸ்வாமித்ரர் சற்று நிறுத்தினார். சிறிது நீர் பருகினார். எல்லோரையும் ஒரு தரம் பார்த்தார். அனைவரும் கண்ணாலேயே ''மகரிஷி இன்னும் சொல்லுங்கள்'' என்று கெஞ்சுவது போல் தெரிந்தது. தசரதர் அவர் கால்கள் அருகிலேயே அமர்ந்தார்.

தசரதன் கைகளால் வாய் பொத்தி விஸ்வாமித்ரரிடம் மெதுவாக சொல்கிறான்:
''மகரிஷி என் மகன் ராமன் என்ற நினைப்பு இப்போது புதிய பரிமாணம் பெற்றுவிட்டது . ராமனைப் பற்றிய மஹத்வம் நீங்கள் கூறும்போது என் செவிகளில் இன்பத் தேனாக பாய்கிறது. மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்கிற ஆசை அதிகரிக்கிறது.''

''தசரதா , கேட்கும் உனக்கு மட்டும் அல்ல, சொல்லும் எனக்கும் அவனைப்பற்றி நினைக்க நினைக்க புது தெம்பு, உற்சாகம், சந்தோஷம் ஆறாக பெருகுகிறது. சொல்கிறேன் கேள்''

பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற மனித உருவத்தில் மகரிஷி விஸ்வாமித்ரர் ஸமஸ்க்ரிதத்தில் மேற்கொண்டு ஆடிமாஸ காவேரியாக ப்ரவாஹிக்கிறார். 
  ரஸ   நிஷ்யந்தினியில் மற்றும் ஐந்து ஸ்லோகங்களை  ரசிப்போம்.  61-65. 

61. अयमन्य इति त्वम् अयमात्मेत्यहम् ।
அயமன்ய இதித்வம் அயமாத்மேத்யஹம்.

 '' ராமன் நம்மைப் போல ஒருவன் என்று நினைக்காதே. முற்றிலும் மாறுபட்டவன். நம்முடைய ஆத்மா, அங்கம் அவன்''

62. एष प्रज्ञावानिति त्वम्; अयं 'प्रज्ञानं ब्रह्म इत्यहम् ।
ஏஷ  பிரஞாவாநிதித்வம்; அயம் பிரஞ்ஞான் ப்ரம்ம இத்யஹம்

''தசரதா , நன்றாக கல்வி கற்றவன் ராமன் என்று சொன்னால் அது  போதுமா? உலகத்தில், இந்த பிரபஞ்சத்தில் ஞானம் என்ற உருவமற்ற ஒன்று ஒரு உருவம் எடுத்தால் அது தான் ராமன். இதை நான் அறிவேன், நீ அறியாய்.''

63. एनं स एषोऽयमिति त्वम्; एनं तत्त्वमसि इत्यहम् ।
ஏனம் ச யேஷோ அயமிதித்வம் ;  ஏனம்  தத்வமஸி இத்யஹம்
ராமன் எங்கே என்றால் ''இதோ என்னருகே நிற்பவன், என்னெதிரில் உட்கார்ந்திருப்பவன்'' என்று சுட்டிக்காட்டி சொல்கிறாயே. தசரதா , உனக்கு  உண்மையில்   ராமன் யார் என்று  தெரியுமா? ஒவ்வொரு ஜீவராசியிலும் இருந்து அதனின்றும் வேறுபடாதவன்.''

64. एनमयमिति त्वम् एनमहमित्यहम् ।
யேனமயமிதி த்வம் ஏன மஹமித்யஹம்
''தசரதா,   ''ராமா, '' வா, போ, நில், உட்கார்'' என்று இதுவரை நீ அவனை வேறு ஒரு மனித உருவமாக எண்ணி பழகுகிறாய்.   என்னைப் பொறுத்தவரையில் ராமனை நான் ''நானாகவே'' பார்க்கிறேன்.ஏன்  தெரியுமா?   . அவனில் நம் போல் எண்ணற்றவர்கள்  அடக்கம்.  நம்முள் அவனும்  அடக்கம். ''

65. एष आसीनश्चेन्न दूरं गच्छेत्; शयानश्चेत् न सर्वतो यातीति त्वम्। 'अयमासीनो दूरं व्रजति शयानो याति सर्वत' इत्यहम् ।
ஏஷ ஆஸினஸ்சேன்ன  தூரம் கச்சேது;  சாயனஸ்சேது ன சர்வதோ யாதீதி த்வம்;  அயமாசினோ தூரம்  வ்ரஜதி  ஸயானோ  யாதி சர்வத இத்யஹம் .

 ''தசரதா ,  ராமன் படுக்கையில் படுத்திருந்தால் வேறெங்கும் அதே சமயத்தில் இருக்கமுடியாமல், நம்மைப் போல் அந்த படுக்கை அறையில் மட்டும் இருப்பவனா ? எங்கேயாவது உற்கார்ந்திருந்தால் அதே சமயத்தில் வேறே எங்கேயாவது தூரத்தில் போகமுடியாமல் அங்கேயே நம்மைப்போல் உட்கார்ந்திருப்பவனா? ராமன் ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுபவன் .   ஒரு இடத்தில் படுத்திருந்தாலும் பல இடத்தில் காணப் படுபவன் ராமன் என்று எனக்கு தெரியும்''  

மேலே ராமனை அனுபவிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...