Friday, May 15, 2020

FATHER



       
 ' அப்பாவை பற்றிய ஒரு சிந்தனை ''    J.K. SIVAN
 ஒவ்வொரு பெண்ணும்  அம்மா  ஆவது போல்,  ஆண்  அப்பா ஆகிறான்.   ஒவ்வொரு அப்பாவும்  தியாகத்தின் உருவம். 

ரெண்டு பெண்கள் பேசுவதை கேட்போம்.  

நீண்ட  மண்  பாதை, ரெண்டு பக்கமும் மரங்கள்.  அகலமில்லாத  கிராம சாலை . குதிரை, மாட்டு வண்டி போய் ரெண்டு பள்ளங்கள் நடுவே மேடு  போன்ற  கிழக்கு மேற்கு  பாதை.  வடக்கே  சற்று தூரத்தில் கார்பொரேஷன் இலவச பள்ளி.  அதில் தான் நானும் படித்தவன். கூரைக்கட்டு கட்டிடம். மண் சுவர். தரை. ஜன்னல் கதவு இல்லாத வகுப்பறை. கைப்பிடி சுவர் ஒன்று தான் இருக்கும். குட்டி பெஞ்ச்  சில.  பெண்கள் ஒரு புறம்  ஆண்கள் ஒரு புறம்.  அருமையான  டீச்சர்கள்.  வகுப்பில்  ஆண்களை விட பெண்கள் அதிகம்.  பையன்களுக்கு படிப்பில் அக்கறை இல்லை.   

மாணவிகள், நண்பிகள்,   சரசாவும்  பிரேமாவும்  என்ன பேசிக்கொண்டே  வீடு நோக்கி நடக்கிறார்கள்?,  எதிர் எதிர் வீடுகளில் வசிப்பவர்கள். .

''சரசா,  காமாட்சி டீச்சர் சொன்னாளே , நிஜமாகவே  பேய் பிசாசு எல்லாம் இருக்குமா?''

''இருக்காதுன்னு  தான்  தோண்றது . அதெல்லாம்  கெட்டது .

''ஆமாம் டீ   நல்லது தான் இருக்கணும் .  கிறிஸ்மஸ் சமயத்தில்  பரிசு எல்லாம் கொடுக்க வருமே  சாண்டா க்ளாஸ், அது மாதிரி, ஏன்   உங்கப்பா மாதிரி''
"ஆமாண்டி பிரேமா, எங்கப்பாவை மாதிரி ஒருத்தரை பார்க்க முடியாது. எனக்கு கடவுள் அவர்தான். கடவுள் கொடுத்த பரிசு தான் எங்கப்பா ''

''எங்கப்பா  தான்  எனக்கும் தெய்வம், சரசா,      ஊறுகா பாட்டிலே  திறக்கமுடியாம ஒவ்வொருத்தரா என்னன்னவோ பண்ணி முடியாமல் அவருகிட்ட தான்  அது  கடைசியிலே போகும்.  எப்படியோ சண்டை போட்டு பாட்டில் மூடி திறந்து தருவார்.  இருட்டா இருக்கிற  அண்டர் கிரௌண்ட்  அறைக்கு போகவே  பயப்படுவோம். பல்லி  தேள் இருக்கும், பாம்பு கூட இருக்கலாம்.  ஆனால் ராத்திரி வேளையிலே கூட அவர்  தனியாவே போய்  கண்டா முண்டான் சாமான் எல்லாம்   அதிலே  போடறதுக்கு,  எடுக்கறதுக்கு,  போவார். 

அவர் முக  க்ஷவரம் பண்ணிக்கொள்ளும்போது அவரது கையை திடீரென்று   அசைப்பேன்,  வெட்டுக்காயம் ரத்தம் வரும் ஒண்ணுமே சொல்லமாட்டார்.  கோபமே வராது. என்னை அணைச்சு அடிக்கடி முத்தம் நிறைய கொடுத்திருக்கார். நான் தான் பிடிச்சு தள்ளி இருக்கேன். முகத்திலே மீசை தாடி குத்துது அப்பா ன்னு.  கோவம் எனக்கு தான் வரும். அவருக்கு வராது.   சிரிப்பார்.  ஒரு நாள் கூட நான் அவருக்கு முத்தமே கொடுத்ததில்லேடி. 

வெளியே போகணும்னு அவசரப்படுத்துவோம்.  கொட்டற மழையிலே ஓடிப்போய்  தெருவிலே நிறுத்தி இருக்கிற  காரை திறந்து கிளப்பி எங்கள் வீட்டு வாசல்  கிட்டே வந்து நிறுத்தி நாங்க மழையிலே நனையாம  வண்டியிலே  ஏத்திக்குவாரு.  நடுராத்திரி ஆனாலும் கூட  எங்களுக்கு யாருக்காவது உடம்பு சரியில்லே னா  முகத்திலே கவலை ஏறிடும். கதவை தட்டி  டாக்டர்  டிஸ்பென்சரி, மருந்துக்கடை எங்கேயோ போய்  மருந்து மாத்திரை வாங்கி  மூணுவேளை மறக்காம சோம்பலில்லாம  எங்களுக்கு கொடுப்பாரு.

எங்கப்பா கூட அப்படிப்பட்டவர் தான் பிரேமா.  வீட்டிலே நிறைய ஆல்பம் ஆல்பமாக எங்க போட்டோ  ஆனா ஒண்ணுலே கூட அவரைக்காணோம்.  அவர் தானே போட்டோ  எல்லாம் எடுத்தது. அவர் எப்படி  போட்டோலே  இருப்பாரு?.   அவரு உலகமே நாங்க தான்.

நான்  எவ்வளவு பேரை பார்த்தாலும்    யாருமே  எங்கப்பா போல் ஒருத்தரும் இல்லைன்னு தான் தோணும். வேறே யாரையும் நான் அப்படி, அவ்வளவு பாசமா,  நேசிச்சது இல்லை பிரேமா.

''நான்கூட  எங்கப்பாவோடு  நிறைய நடந்திருக்கேன். வழியெல்லாம்  எனக்கு  நல்ல நண்பனா,எனக்கு எது தேவை எது தெரியணும்னு எடுத்து சொல்லி, எனக்கு எல்லாம் வாங்கி கொடுத்து, எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்ததே எங்கப்பா தான் சரசா. என்  ஸ்கூல்  யூனிபார்ம்  தோச்சு   அயர்ன் பண்ணி 
கொடுக் கறது
  எங்கப்பா தான் . புஸ்தகத்துக்கு பிரவுன் அட்டை போட்டு கொடுக்கறது. டிபன் பாக்ஸ் அலம்பி துடைச்ச்சு, சாப்பாடு அடைச்சு, மறக்காமல் கூடவே ஒரு ஸ்பூன் வைச்ச  அப்பா.      வாழ்க்கையிலே அவர் தான் எனக்கு கண்ணை திறந்து விட்டவர்னு நிச்சயமா சொல்வேன். அப்படி ஒரு அப்பா எனக்கு . எத்தனையோ நாள்  சைக்கிளில் டயரில் காத்து இல்லைன்னு என்னை மட்டும் உட்காரவைச்சு ஸ்கூல் வரை தள்ளிண்டு போவார். புஸ்தக  பை  கனமாக இருக்குன்னு தன்  தோளிலே மாட்டிண்டு ஸ்கூல் வாசல்லே வந்து  கொடுப்பார்.

''ம்ம். ஆமாம்   பிரேமா,   வாழ்க்கையை ஒரு பாடமா எனக்கு சொல்லிக் கொடுத்தவர் எங்கப்பா.  ''நீ தான் செல்லம் எனக்கு இந்த உலகத்திலே அழகானவள், எனக்கு கிடைச்ச  அபூர்வ புதையல் என்பார்.   வாய்க்கு வாய் வாடா  போடா  என்று ஆம்பள மாதிரி என்னை ட்ரீட் பண்ணுவார் ''

"கரெக்ட்  டீ .  சரசா,    எங்க வீட்டிலும்  இதே மாதிரி தான்.  இவளவு வயசிலும் என்னிக்கும் நான் அவருக்கு குட்டிம்மா  தான்,   நான் கோவிச்சுக்குவேன். அப்படி எல்லாம் கூப்பிட்டு என்னை  நாலு பேர் முன்னாலே அவமானப்படுத் தாதீங்கன்னு  சொல்வேன்.  சரி ம்பாரு , ஆனா மறுபடியும் குட்டிமா  தான்.  ரொம்ப தடவை  ஸ்கூல்  எக்ஸ்கர்ஷன்  போக பணம் கேட்டா  எப்படியோ சமாளிச்சு கட்டிடுவார். கடன் வாங்கி கட்டறது  அப்பறம் தான் எனக்கு தெரியும்.

''அப்பான்னு ஒரு ஜீவன் எவ்வளவோ  உசத்தியானது என்று தெரியுது பார்த்தியா.?   நூறு வாத்யார் கிட்டே பள்ளிக்கூடத்தில்  படிக்கிறது ஒரு அப்பா கிட்டே தெரிஞ்சுக்கலாம் என்கிறது ரொம்ப சரி பிரேமா'

அப்பாக்கும்  அம்மாக்கும்  வித்யாசம் இருக்கு  சரசா, .  அம்மாக்கள்   மாதிரி பிறக்கவில்லை அப்பாக்கள்.   எண்ணற்ற தியாகம், பொறுமை, கடமை,  உண்மையான பாசம், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத தன்மை,  குறைந்த பேச்சு. இதெல்லாம்  தான்  அப்பாவுடைய  சாமுத்திரிகா லக்ஷணம் என்று  காமாக்ஷி டீச்சர் ஒருநாள் சொன்னாங்களே அது ரொம்ப கரெக்ட்.

" நாம்ப  இந்த மாதிரி அப்பாவுக்கு எல்லாம்  பெண்ணோ பிள்ளையாகவோ  இருக்க பெருமைப்பட்டா மட்டும் போதாது.  அவரைப்போல் நடந்துக்கணும்.  அப்ப தான் நாம அப்பாவுக்கு குடுக்கிற அந்த பட்டத்தை நம்முடைய  குழந்தைகள், வாரிசுகளிடமிருந்து  நாம் பெற முடியும்.   என்ன சொல்றே  சரசா?

''எங்கேயோ படிச்சேன் பிரேமா,  ஒவ்வொரு பெண்ணும் முதலில் பார்க்கிற பழகிய ஆண்  அப்பா தான். அவரை பார்த்து தான்  ஆம்பளைங்க  என்றால் என்ன, அவங்க  எப்படி நடந்துப்பாங்க  என்று பெண்கள் புரிந்து கொள்ள  முடியும். '  

அப்பாவை முகத்துக்கு நேரே நாம் புகழறது இல்லே.  அப்பா  ரொம்ப பேசாத  வர்க்கம்.  அம்மா அளவுக்கு அப்பாவிடம்  நமக்கு  நெருக்கம் இல்லை. பயமா, மதிப்பா?  தெரியவில்லை.   ஆனால்   நாம் வளர்றதுக்கு, வளர்ந்ததுக்கு  குழந்தைப்பருவத்தில்  முக்கிய காரணம் அப்பாக்கள் தான். அப்பாக்களுக்கு  அவர்கள் சேவை தரும் ப்ரோமோஷன் தான்  தாத்தா  உத்யோகம்''

வயதான காலத்தில் அப்பா அம்மாவை பிரித்து  நீ அண்ணன்  வீட்டில் ,  அம்மா என் வீட்டில்,  என்று கூறு போடாதீர்கள். குட்டி போட்ட பூனைபோல்  அம்மா அப்பாவை வீடு வீடாக  ஷட்டில்  அடிக்கவிடாதீர்கள்.  ஒவ்வொரு வீட்டிலும் சௌகர்யங்கள் அசௌகரியங்கள் எத்தனையோ.    எளிதில் பிடிபடாமல் மெளனமாக  கஷ்டப்படுவார்கள். 

ஒவ்வொரு  பெண்ணும்  ஆணும் சொல்லவேண்டிய  மந்திரம்: 

"என் அப்பா, என் நண்பா, என்னை  வழிநடத்திய  என் ஆசானே,   குருவே, உன் ஆசிகள் எப்போதும் எனக்கு தேவை''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...