Sunday, May 24, 2020

ANANDHA RAMAYANAM




ஆனந்த ராமாயணம்     J K SIVAN
7.  தசரதா  நீ  யார் தெரியுமா?
வாலமீகி முனிவர் எழுதிய  ஆனந்த ராமாய ணம்  முதல் காண்டமாகிய  சாரகாண்டத்தில்  ஐந்தாவது சங்கத்தில் நுழைகிறோம்.
இதோ தர்மதத்தன் தன்னை ராக்ஷஸியாக விழுங்க வந்த பெண்ணை சாதாரணமானவள்  ஆக்கி அவள் சரித்திரம் கேட்டு, அவள் ''நீங்கள் தான் என்னை ரக்ஷிக்க வேண்டும்'' என்றபோது என்ன பதில் சொன்னான்?
''இதோ பார் அம்மா. நீ செய்த பாபங்கள் மூன்று ஜென்மம் எடுத்தும் தொலையாதவை. உனக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும்.? நீ தான் உனது முயற்சியில் கடைத்தேறவேண்டும். .   நான் பிறந்ததுமுதல் கார்த்திகை விரதம் அனுஷ்டித்தவன்.   அந்த  சிறந்த விரத   பு
ண்யத்தில் பாதி உனக்கு அளிக்கிறேன்...  தர்மதத்தன்,   வாசுதேவ மந்திரத்தை அவள் செவியில் உபதேசித்து  துளசி தீர்த்தத்தால் அவளை ப்ரோக்ஷிக்கிறான். அவளை விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்து அழைத்துப் போகிறது. அதிலிருந்த தேவர்கள்
'' உங்களுடைய  புண்ய பலன், வாசுதேவமந்திர சக்தி, துளசி ஜல ப்ரோக்ஷணம்  இவள் பாபங்களையெல்லாம் கரைத்து இவள் உங்களால் தேவலோகம் செல்கிறாள். ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுவிட்டாள்'' என்கிறார்கள். தர்மதத்தன் விண்ணவர்களை வணங்குகிறான்.
''தர்மதத்தா, நீ விடாமல் விஷ்ணு பூஜை செய்பவன். இவள் பாபங்களையும்  அழியச்  செய்தவன். உனக்கும் விஷ்ணுலோக வைகுண்ட பதவி காத்திருக்கிறது.   எண்ணா யிர வருஷம் வைகுண்ட வாசியாக விஷ்ணு வை  பூஜித்து வணங்கி பிறகு பூமியில்  சூரியவம்சத்தில்  தசரதன் என்ற ராஜாவாக  பிறப்பாய்.  இந்த கலகை  என்ற பெண் உன் மூன்றாம் மனைவியாக  கேகய ராஜ புத்ரியாக  கைகேயி என்ற பெயரில் உன் மனைவி ஆவாள்.  மஹா விஷ்ணுவே உனக்கு மகனாக பிறப்பார். ராமர் என்ற பெயரில் அவரை வளர்த்து அவர்  இலங்கையில் ராவணாதி ராக்ஷஸர்களை அழித்து தர்ம பரிபாலனம் செய்வார்.
''நீ  தர்மமறிந்தவன். விஷ்ணு விரதங்களை விடாமல் அனுஷ்டித்து வா.  ஏகாதசி விரதம் விடாதே, துளசி பூஜை  செய்''  என்று தேவர்கள் தர்மதத்தனுக்கு அறிவுரை கூறி சென்றார்கள். காலம் சென்றது.'
மகரிஷி  முத்கலர்  இவ்வாறு  தசரதனுக்கு அவன் தான் முற்பிறவியில் தர்மதத்தன் என்று விளக்குகிறார்.
''பார்வதி,  ராமன் கதை எவ்வாறு செல்கிறது?'' என கேட்கிறார் பரேஸ்வரன்.
' எவ்வளவு விஷயங்கள்.   ஆஹா  அற்புதம்.  நாதா மேலே  சொல்லுங்கள் '' என்று  உமை பரமேஸ்வரனை கேட்கிறாள். நாமும் ஆனந்த ராமாயணம் தொடர்வோம்.
தசரதர் ஓடிச்சென்று ராம லக்ஷ்மணர்களை இருகக்  கட்டி  ஆலிங்கனம் செய்கிறார்.  தசரதரும்  மற்றவர்களும் அயோத்தி திரும்பு கிறார்கள். வழியெல்லாம் கோலாகல வரவேற்பு. பெண்கள்  ஆரத்தி எடுக்கிறார்கள். சிலர்  ராமர் சீதை மற்றோருக்கு திருஷ்டி  கழித்து சுற்றி போடுகிறார்கள்.  எங்கும் வண்ண வண்ண கோலங்கள். தோரணங்கள்.
ராமர்  காலை மாலை  ஸந்த்யாகாலத்தில் சரயு நதியில் ஸ்னானம் செய்து நித்யானுஷ்டா னங்கள் பூஜைகள் முதலிய ரிஷிகளோடு சேர்ந்து செய்து முடித்து, முடிவில்  தினமும்  தான தர்மங்கள் அநேகருக்கு அளிப்பார்.   சரயு நதியில் ராமர் ஸ்னானம் செய்த இடம் ராம தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது. ராம சகோதரர்கள்  அயோத்யா  அரண்மனையில் இவ்வாறு ஆனந்தமாக காலம் கழித்தனர்.
தசரதருக்கு தனது மகன் ராமன்  மஹா விஷ்ணு என்று தெரிந்துவிட்டதால்  மகனை வணங்கி உபதேசம் கேட்கிறார்.   ராமர்  தந்தை தசரதருக்கும்  தாய் கௌசல்யாவுக்கும் சேர்த்து ஆத்மஞானம் போதிக்கிறார். அஞ்ஞான பந்த நிவாரண மார்கத்தை உபதேசித்து இதை வெளியே சொல்லவேண்டாம் என அறிவுரை சொல்கிறார். தசரதர் ராமரை வணங்கும் போது,   எனக்கு வந்தனம் செய்யவேண்டாம். நான் உலக ரீதியாக உங்கள் மகன். மனதில் பக்தி நாராயணன் மீது இருந்தால் போதும்.  அவ்வாறே  மகனாக என்னை நடத்துங்கள் என்று ஞாபகப் படுத்துகிறார்.
ராமனை தரிசிக்க  எண்ணற்ற ரிஷிகள், பக்தர்கள் வருகிறார்கள். வருஷம் பன்னிரண்டு ஓடிவிட்டது. கைகேயியின்  சகோதரன்  யுதாஜித் ஒருநாள் விருந்தினனாக வந்தான். சில நாள் தங்கி இருந்து  விடைபெறுகிறேன். போகும்போது  தனது மருமகன்களாகிய  பரத  சத்ருக்னர்கள் இருவரையும்  தசரதர் அனுமதியோடு  கேகய நாட்டுக்கு கூட்டி செல்கிறான்.
''பார்வதி இனி உனக்கு  சார  காண்டத்தின் ஆறாவது ஸர்க்கம் விளக்குகிறேன்'' என்று பரமேஸ்வரன் ஆனந்த ராமாயணத்தை துவங்கப்போகிறார். நாமும் கேட்போமே!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...