Sunday, May 24, 2020

DOCTOR ATTENDANCE





பிரார்த்தனை நிறைவேறியது   J K SIVAN

 டாக்டர்  வைத்தீஸ்வரன் சிறந்த  புற்று நோய்  நிபுணராவதற்கு காரணம் ப்ரணதார்த்தி. அவன் மாமா. பிள்ளையில்லாத அவர்க்கு வைத்தி தான் ஸத்புத்ரன் எனலாம். அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அப்பா அம்மா இல்லாத பையன் என்று தனி பாசம் அவன் மேல்.   ப்ரணதார்த்தி ஒரு பள்ளிக்கூட வாத்யார். வைத்தி நன்றாக படித்தான். மெடிக்கல் காலேஜில் இடம் கிடைத்தது. கட்டுவதற்கு பணம் இல்லை. எப்படியோ வீட்டை அடகு வைத்து பணம் கட்டினார்.   வைத்தியின் குடும்பமே என்ன பாபம் பண்ணியதோ அனைவரும் புற்றுநோயால் அகால மரணம் அடைந்தவர்கள்.மாமாவுக்கும் ஆரம்பித்தது. அதோடு போராடிக்கொண்டே  வைத்தியை ஒரு பெரிய  புற்றுநோய் டாக்டராக பேர் வாங்க வைத்தார்.  அவன் புகழை பார்க்க நேரம் கொடுக்காமல் புற்று நோய் மாமாவை விழுங்கிவிட்டது.
இதெல்லாம் அடிக்கடி டாக்டர் வைத்தீஸ்வரனுக்கு ஞாபகம் வந்து இன்னும் உற்சாகமாக  புற்று  நோயாளிகளை உயிர் பிழைக்க வைத்தார். 
ஒரு டெலிபோன் கால், அடுத்து  இன்விடேஷன் . உடனே  அடுத்த ரெண்டுநாளில்  வேறு ஒரு ஊருக்கு வைத்தி செல்லவேண்டும்.  பெரிய மருத்துவ மாநாட்டில்  விசேஷ  விருந்தினர் அவர்.  காரில்விமான நிலயத்துக்கு பறக்க வேண்டும். . அந்த மாநாட்டில்  புற்று நோய்க்கு ஒரு புதிய மருந்து கண்டுபிடித்ததை  அறிவிக்கப்  போகிறார். இனி புற்றுநோய்க்கு பயப்படவேண்டாம்..... அவருக்கு மேதாவி பட்டம் கொடுக்கப்போகிறார்கள். 
இன்னும்  27 மணி நேரம் உலகம் வியக்கப்போகிறது  டாக்டர் வைத்தீஸ்வரன் கண்டுபிடிப்பை கேள்விப்பட்டு.  போட்டோக்கள், செயதிகள் உலகம் முழுதும் பரவப்போகிறது.  அவர் உடனே  மாநாட்டுக்கு  கிளம்ப வேண்டும்.

''நான் எவ்வளவு உழைத்து பெறுகிறேன் இந்த பட்டம்! மாமா  இதை உனக்கே சமர்ப்பிக்கிறேன் '' ப்ரணதார்த்தி படத்திற்கு  பெரிய மாலை சூட்டி கண்களில் நீரோடு  வணங்கினார்  வைத்தீஸ்வரன்.  அருகில் கிருஷ்ணன் படத்துக்கும் இன்னொரு பூமாலை.   வைத்தி கிருஷ்ண பக்தர்.
விமானம் ஏதோ காரணமாக  ரெண்டு மணி நேரம் லேட்.   நகத்தைக்   கடித்துக் கொண்டு   தான் பேசவேண்டிய  குறிப்புகளை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டிருந்தார்.   துரதிர்ஷ்டம் யாரை விட்டது.  விமானம்  பறந்த  சில மணி நேரத்திலே  அதில் கோளாறு.

''விமானத்தில் சிறு கோளாறு.  சற்று நிமிஷத்தில் ஓரிடத்தில்   குஜராத்தில் ஒரு  விமான தளத்தில்  தரை இறங்கப்போகிறது.   பயப்படவேண்டாம்.  ஜாக்கிரதையாக இறங்குவீர்கள்'.  ஒலிபெருக்கி  அலறியது.

கையில் பெட்டியோடு முகத்தில்  கவலையோடு அந்த   தற்காலிக விமான அதிகாரியை போய் பார்த்தார்  வைத்தீஸ்வரன்.
''சார், நான் ஒரு முக்யமான   வைத்தியர்கள்  மாநாத்தில்  பங்கு கொள்ள  பூனா  போகவேண்டுமே . இப்படி நடுவில் இறங்க வேண்டியதாகி விட்டதே. எப்படி குறித்த நேரத்தில்   இன்னும்  பத்து மணி நேரத்துக்குள் அங்கே போய் சேர்வது. வேறு ஏதாவது இங்கிருந்து விமானம் செல்ல வழி உண்டா?

''அப்படி எதுவும் இல்லையே டாக்டர். ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள். இங்கே ஒரு வாடகை கார்  கிடைக்கும். அதில் ஒரு மூன்று நாலு மணி நேரம் பிரயாணம் செயது அடுத்து ஒரு பட்டணம் போனால் அங்கிருந்து சில  வாடகை ஹெலிகாப்டர்கள் குறித்த இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.''

 வைத்தீஸ்வரன் அந்த ஊரிலிருந்து  காரில் பறந்தார். அடாடா   ஒரு பெரும் புயல் எங்கிருந்தோ வந்து குறுக்கிட்டது.

இரவு நேரம்.  போகும் பாதையிலிருந்து வேறு பாதையில் தவறாக கார் பறந்தது.  அடாடா இன்னும் ரெண்டு மணி நேரம்  ஓடி விட்டதே. சரி அவ்வளவு தான் என் அதிர்ஷ்டம்.  எனக்காவது எல்லோர் எதிரிலும் மரியாதை பட்டமாவது ?'' அதற்கெல்லாம் எனக்கு கொடுப்பினை அல்ல மாமா ''  முனகினார்.

புயலைத்  தொடர்ந்து விடாத மழை. வானம் பொத்துக் கொண்டது. முன் பின் அறியாத ஏதோ ஒரு தெருவில் கார் மெதுவாக நுழைந்தது. தெரு  வெல்லாம் தொப்பம்.  பசி எங்கும் ஒரு வீடு கூட காணோம்.
வைத்தீஸ்வரன்  ட்ரைவரை கேட்டார்   ''எங்கேப்பா இருக்கிறோம். பூனாவுக்கு  35   மைல்  தூரம் இருக்குதுங்க. எப்படியும் காலை  8 மணிக்குள் கொண்டு சேர்க்கிறேன். பத்து மணிக்கு தானே  மீட்டிங்கு ''
வைத்திக்கு  பசி,  களைப்பு. மயக்கம் வரும்போல் இருந்தது.   கார் புஸ் என்று நின்றது.   பின்பக்கம்  டயர்  பஞ்சர்.   இரவு பதினொண்றரை மணி.  எங்கும் அமைதி, மழை, இருட்டு. கிராமம் ஏதோ பேர் தெரியாத ஒன்று. 
''அப்பாடா  ஒரு  தொத்தல் பழைய வீடு தெரிகிறது.'' உள்ளே விளக்கு ஒளி தெரிந்ததும் மூச்சு வந்தது. கொஞ்சம் தண்ணீராவது கேட்கலாம்.

 வைத்தீஸ்வரன் காரிலிருந்து  இறங்கி   எதிரே இருந்த அந்த பழைய வீட்டு கதவைத்  தட்ட ஒரு கிழவி கதவை திறந்தாள்.

'' அம்மா  மன்னியுங்கள் . ரொம்ப அவசரம்.  உங்கள் வீட்டில் போன்  இருக்கிறதா  அர்ஜண்டாக போன் பேசவேண்டும் அம்மா .''

''எங்கிட்ட அந்த வசதி எல்லாம் இல்லையே. உள்ளே வாருங்கள். கொஞ்சம் சூடாக ஆகாரம் இருக்கிறது தருகிறேன். இளைப்பாருங்கள்.'' 
சூடாக  கோதுமை கஞ்சி  திக்காக   கொடுத்தாள் . வயிற்றுக்குள்   இதமாக இறங்கியது.  பசிக்கு தேவாம்ருதம். இங்கிருந்து பூனா போக  எவ்வளவு  நேரமாகும். 
''காரிலா?  ஆறு ஏழு மணி நேரம்.'' 

போகவேண்டிய  இடத்துக்கு  வழி சொன்னாள். நீங்கள் சாப்பிடுங்கள். நான் கொஞ்சம் பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என்றாள்  கிழவி.

 பசி ஆறியது. ட்ரைவர் காரை ரெடி செய்து கொண்டிருந்தான். சீக்கிரம் சரியாகிவிடும் என்றான்.டாக்டர் வைத்தி அந்த கிழவியின் வீட்டை சுற்றி முற்றி பார்த்தார்.  தன்னைப்பற்றி ஒரு டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். 
கிழவி அவரை  வணங்கினாள்.  அறையில் அவள் எதிரே  ஒரு  கட்டில்  அசையாமல் அதில் ஒரு  பையன்  படுத்துக்  கொண்டிருந்தான். சுவற்றில் புல்லாங்குழல் கிருஷ்ணன்  குறும்புத்தனமான டாக்டர் வைத்தீஸ் வரனை பார்த்து சிரித்தான். 
முகத்தில் கவலையோடு அந்த கிழவி தொடர்ந்து ப்ரார்த்தித்துக்கொண்டு இருந்தாள் .'
'என்னம்மா  கவலை உங்களுக்கு?''

''என் பிரார்த்தனையை கிருஷ்ணன் நிறைவேற்றுவான் என்று நம்புகிறேன்''
'
'என்ன துன்பம் என்று சொல்லுங்கள் என்னால் முடிந்தால் உதவுகிறேன்'' டாக்டர் வைத்தி  மனம் திறந்து நன்றியில்  சொன்னார். 
''கிருஷ்ணன் என் பிரார்த்தனை எல்லாம் நிறைவேற்றி விட்டான். இன்னும் ஒன்று தான் பாக்கி. ஏன் அதை மட்டும் இன்னும்  நிறைவேற்றவில்லை என்று தெரியவில்லை'' --  கிழவி.

''அது என்ன என்று என்னிடம் சொல்லலாமா'  

''இந்த  கட்டிலில் அசையாமல் இருப்பவன் என் பேர  குழந்தை கோபாலன். அவன் தாய் தந்தை இருவருமே ஒரு  கார் விபத்தில் நிமிஷத்தில் மறைந்து விட்டார்கள். ஏதோ ஒரு புற்றுநோய் இந்த குழந்தைக்கு  என்று  போன மாதம்  சொன்னார்கள்.  எல்லா டாக்டர்களும் கைவிட்டு விட்டார்கள்.  யாரோ ஒரு  டாக்டர் எங்கோ இருக்கிறாராம். அவர் தான் கடைசி நம்பிக்கை. அவர் தான் இந்த நோயை குணப்படுத்துவதில் நிபுணராம் . புதிதாக ஏதோ வைத்தியம் அவரிடம் இருக்கிறதாம்.  அவ்வளவு பிரபல  வைத்யரை பார்க்க, பணம் கொடுக்க,  என்னைப்போன்ற ஏழைக்கு  எப்படி  முடியும்?  என் குடும்ப  ஒரே வாரிசு இந்த உயிரை  எப்படி காப்பாற்றுவேன்?
எனக்கு எல்லாமே  கிருஷ்ணன்தான். அவன்  வழி காட்டுவான் என்ற நம்பிக்கை இன்னும் போகவில்லை.  விடாமல் அவனை தொழுது வேண்டிக்கொண்டு இந்த பேரக்குழந்தையை காப்பாற்ற சரணடைந்து கொண்டே இருக்கிறேன்.''   அழுது கொண்டே  கிழவி சொன்னாள் .

வைத்தி சிலையாக நின்றார். கண்ணில் மழை.   பையனின் மெடிக்கல் ரிப்போர்ட்கள்  படங்கள் எல்லாம் பார்த்தார். முழுதும் அதில் ஆழ்ந்தார்.   ரொம்ப பெரிய அவரால் குணப்படுத்த முடியாத நிலை அல்ல என்று  நம்பிக்கை வளர்ந்தது.  இந்த பையனுக்கு உண்டான வியாதி சம்பந்தமான புது கோளாறுக்கு தான் அவர்  சிகிச்சை ஆராய்ச்சி செய்து அதற்கான விளக்கம் நாளை அந்த மாநாட்டில் பிரகடனப்படுத்த போகிறார்.
''ஆஹா, நான்  புற்றுநோய் நிபுணன்.  எனக்கு மேதாவி பட்டம். கிளம்பினேன். விமானம் கோளாறு. போக முடியவில்லை. அப்படியும் தொடர்ந்து முயன்றேன். புயல், மழை, இரவில் பாதை மாறியது தெரியாது. வெகு தூரம் இங்கே வந்துவிட்டேன்.
காரணம் ?
கிழவியின் பிரார்த்தனை.
''அம்மா கவலை படாதீர்கள்.  உங்கள் குழந்தையை காப்பாற்ற நான் முயல்வேன் . நான் தான் நீங்கள் தேடிய அந்த டாக்டர் வைத்தீஸ்வரன். நான் காரில்  உங்களையும் இந்த பையனையும் என்னோடு அழைத்துக்கொண்டு பூனா செல்வோம்.  அங்கே பெரிய  ஆஸ்பத்திரியில் இவனை நானே அனுமதித்து குணப்படுத்த முயல்கிறேன். இவன் என் மாமா வின் அவதாரமாக  ஏற்கிறேன். என்னைப்  பொறுத்தவரை இவன் பெயர் ப்ரணதார்த்தி ஹரன் 
கிழவியின் இரு கரங்கள் சிரத்துக்கு சென்றன'   கிருஷ்ணா... நீ  இத்தனை நேரமாக  என் பாக்கி ஒரு பிரார்த்தனையையா  நிறைவேற்றிக்கொண்டிருந்தாய். நான் புரிந்து கொள்ளவே இல்லையே.
சுபம் மங்களம் சொல்வதற்கு முன்னால் ரெண்டு வார்த்தைகள்.  மறுநாள் பூனாவில் பையன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர் தான் கண்டுபிடித்த மருந்தை முதலில் அந்த பையனுக்கு அளித்து  அவன் குணமானான். உலகம் அவரை  புகழ்ந்தது. கிருஷ்ணன் சிரித்தான். அவனுக்கு தான் என்ன நடக்கப்போகிறது என்று ஏற்கனவே தெரியுமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...