Thursday, May 14, 2020

RETTAI PULAVARGAL



 
                   

 சொக்கலிங்கம் தருவான்    J K  SIVAN

உடன் பிறந்த சகோதரர்களே, சகோதரிகளே, ஒற்றுமையாக ஒரே கூரையின் கீழ் வாழ இயலாத இந்த வித்யாச காலத்தில்  கூட்டு குடும்பம் என்பது ஒரு கதையாக  மட்டுமே  இருக்கிறது. ஆனால்  முன்பெல்லாம் எல்லோரும் ஒன்றாக  தான் வாழ்ந்தார்கள்.   கூட்டுக்குடும்பம் இல்லாத ஒரு குடும்பம் வினோதம், விசித்திரம்.  அப்படி இருக்கும்போது எங்கோ இரு  சகோதரர்கள்  ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள். இருவருமே  சிறந்த  தமிழ் பண்டிதர்கள்.  அவர்களை தமிழுலகம் இன்றும்  ரெட்டை புலவர்கள் என்று வாழ்த்தி வணங்குகிறது.

கி.பி14ம் நூற்றாண்டு. ஒரு வேளாள குடும்பத்தில்  இரட்டை  குழந்தைகள் பிறந்தன.  ஒன்றுக்கு பார்வை இல்லை, மற்றொன்று  முடம்.

ஒரு ஞானி  பெற்றோருக்கு ஆறுதல் அளித்து  “  ஏன் வருத்தம்.  இந்த ரெட்டை குழந்தைகள்  ஊனத்தை லக்ஷியம் பண்ணாமல்  ஞானம் அடைந்து, ஞாயிறு (சூரியன்) போல் உலா வருவார்கள்” என  ஆசிர்வதித்தார்.
ரெட்டையரில் ஒருவர் அதனால்  முது சூரியர், அடுத்தவர்   இளஞ்சூரியர் என பெயர் பெற்றார்கள்.
 (இருவரும் ஒன்றாகப் பிறந்தவர்கள் அல்ல, ஒன்றாக வாழ்ந்ததாலேயே இரட்டையர்கள் என்றும் சொல்கிறார்கள்).  வயதானபின்  நடக்க இயலாதவரை, பார்வையற்றவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ள, அவரது வழிகாட்டலின் பேரில் பார்வையற்றவர் நடந்து செல்ல, தமிழகம் முழுவதும் பல ஊர்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தும், தமிழ்ப் பற்று மிக்க வள்ளல்களைப் பாடி பரிசு பெற்றார்கள்.  ஒரு விசேஷம்
வேடிக்கை    பாடலின்  முதல் இரண்டு அடிகளை ஒருவர் பாட, அடுத்த இரண்டு அடிகளை மற்றவர் பாடுவார். அற்புதமாக பாடல்  அமையும்.

புலமைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு. அவையும் ரெட்டை குழந்தைகள்.  லட்சுமி சரஸ்வதி படம் வேண்டுமானால் சேர்ந்து ஒரே இடத்தில் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். லட்சுமி இருக்கும் இடத்தில் சரஸ்வதியை காணோம்.    அவள் இருக்கும் இடத்தில் இவள் இல்லை.

எங்கோ இருவரும் இப்படி குருடர்  தோள் மேல்முடவராக நடந்து ரொம்ப தூரம் பயணம். பசி   அந்த ஊர்  ஆங்கூர். அதில் ஓரு சிவன் கோவில் கண்ணில்  பட்டது.  அதை நோக்கி நடந்தார்.  பூஜை நைவேத்ய நேரம்  மணி அடிப்பது காதில் கேட்டது.  ஆஹா  சிவன் படியளப்பான்  இன்றைக்கு  என்று போனார்கள். அவர்கள் துரதிர்ஷ்டம் என்று சொல்லலாமா?  அந்த சிவன் கோவில்  வருமானமே இல்லாமல் நைவேத்திய ப்ரசாதத்துக்கோ, பூஜைக்கோ, வஸ்திரத்துக்கோ கூட வழியில்லாமல்  அர்ச்சகர் ஒரு விசித்திர பழக்கத்தை வைத்துக்கொண்டிருந்தார்.

அருகிலே இருந்த செங்கல்லை விளக்கில் உள்ள தீபத்தில் சூடேற்றி, அதை சுடசுட ஒரு தட்டில் வைத்து அதன் மீது ஈரத்துணியை போர்த்தி அந்த ஆவியை நைவேத்தியம் செய்வார் . ஆத்மநாதர் போல இருக்கிறது.

ரெட்டையர்களுக்கு   இந்த ஆவியைப் பார்த்தது சுட சுட  பொங்கல் தான் ஆவி பறக்க நைவேத்தியம் ஆகிறதோ என்ற எண்ணம். நைவேத்தியம் ஆகியது. மணி சங்கு எல்லாம் முழங்கியது. பூஜை முடிந்தது. குருடருக்கு நடந்தது எதுவும் தெரியாதே. முடவர் மேலே பார்த்துவிட்டார்.  அடடா  சுட சுட  செங்கல்லா  பொங்கலில்லையா ?  மேலே இருந்த முடவர் சிவன் மேல் பாட ஆரம்பித்தார்.

''தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்க ஞாயமா? -போங்காணும்   --  இது  குருடர் .
கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளியார்? சொல்!                                      --    இது மேலே  முடவர்.

''அடே நீ பரமே சிவனா,  பரம ஏழை சிவனா, தெரியவில்லையே? , நீயே இங்கே உன் உணவிற்கு ததிங்கிணத்தோம் போடுகிறாய்.  சோறு நேரத்தில் உனக்கு தோல் முரசு சத்தம் மணி சப்தம் ஒன்று தான் உனக்கு உணவு. ஆகவே வெறும் சத்தத்தைக்கேட்டு உணவாக அதை கொண்ட மூளி நீயா, அதை கேட்டு வெறும் வயிற்றோடு   நிற்கும் நாங்களா,  நியாயம் எது  சொல் ?

-இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன. முடிந்தவரை  ஆலயங்களுக்கு  சேவை செய்வோம். விளக்கு ஏற்றுவோம். எண்ணெய்  கொடுப்போம். பிரசாதங்கள் தர வழி செய்வோம்.  பெரிய கோவிலுக்கு செய்வதை  நிறுத்தி  பள்ளிக்கூடத்துக்கு செய் என்று சொல்வது தான் அபத்தம்.  ரெண்டுக்கும் செய்யுங்கோ முடிந்தவரை  என்று சொல்வது விவேகம்.

-அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.-புலவர்களுடன் வறுமையும், அத்துடன் நகைச்சுவை உணர்வும் சேர்ந்தே இருந்திருக்கிறது.

இன்னொரு சம்பவம் .

 ரெட்டைப்புலவர்கள் மதுரை சொக்கநாதனை தரிசனம் செய்து விட்டு பொற்றாமரைக்குளத்தில் தங்களது வஸ்திரங்களக் கசக்கி துவைக்க எண்ணம் கொண்டார்கள். குருடர்   குளத்துப்படியில் அமர்ந்து துணியை கசக்கி அடித்து துவைக்க, அது அவர் அவர் கையிலிருந்து நழுவி,  குளத்திற்குள் ஆழத்துக்கு சென்றுவிட்டது. அதைப் பார்க்க அவரால் முடியாதே.  கைகளால் துணியைத் தேடித் துழாவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடக்க இயலாதவர், நீரில் இறங்கி தண்ணீரில் தேட முடியாதே.  இருவரும் தம்  விதியை நொந்தபோது கவிதை பிறந்தது. அவர்களால் முடிந்தது அது தானே. '' ''வேட்டி போச்சு பாட்டு வந்தது டும் டும்'' என்று நாம் பாட வழி கிடைத்தது.

முடவர் முதல் ரெண்டடி வழக்கம் போல் பாடினார்: மீதி ரெண்டடியை குருடர் பாடுகிறார்.முழுப்பாட்டும் இது தான். :

''அப்பிலே தோய்த்திட் டடுத்தடுத்து நாமதைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ? - செப்பக் கேள்
‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ’

இந்த அற்புதமான பாடல் புரிகிறதா?


அப்பு – தண்ணீர். தண்ணீரில் தினம் தினம் நாம் துணியினை  ''தப்பினால்'' – தோய்த்தால், நம்மிடமிருந்து அந்தத் துணி தப்பியோட நினைக்காதோ என்கின்றார்).  துணி அடித்து துவைப்பதை ''தப்புவது'' என்று சொல்பவர்கள் இன்னும் உண்டு.

''அடே தம்பி துணியை நிறைய தண்ணீரில் தோய்த்து துணியை தப்பினால் அதற்கு கோபம் வராதா. எப்போது சிவனிடமிருந்து தப்புவது என்று தருணம் பார்த்து உன்னிடமிருந்து தப்பிவிட்டது''. என்று சிரித்தார் முடவர். குருடர் பலே புலவர் அல்லவா. பட்டென்று பதிலாக மீதி ரெண்டடி பாடுகிறார்.

''என்னடா இதில் பெரிய நஷ்டம் அண்ணா  பயலே,    நமக்கு ஏற்கனவே கந்தல் துணி . நக்ஷத்திர பங்களா. ஆயிரம் கிழிசல். போனால் போகட்டுமே, சனி விட்டது. இனிமே கஷ்டம் எல்லாம் தீரும்'' என்கிறார் குருடர்.

முடவர் விடுவாரா? என்னய்யா பேசுகிறீர். இருக்கிற ஒரே துணியும் போய்விட்டது. எதை மேலே போர்த்திக்கொண்டு குளிரில், கொசுவிடமிருந்து, இனிமேல் தப்புவது? என்று கவலையோடு ரெண்டடி பாட குருடர், முடவரைத் தேற்றுவது போல அடுத்த கடைசி ரெண்டடி பாடுகிறார். .அதில், ''உனக்கு எதற்கு வேண்டாத இந்த கவலை? அந்த வருகிறது. கலிங்கம் என்றால் துணி. இந்த கலிங்கம்போனால் ஏகலிங்கமாக விளங்கும் இந்த ஊர் மதுரை சொக்கலிங்கம் நமக்கு வேறே தந்து உதவுவானே '' என்கிறார். அதற்குள் யாரோ ஒருவன் நீரில் துணியை தேடித்  தருகிறான். வேறொருவன் வஸ்திரம் இருவருக்கும் கொண்டு வந்து தருகிறான். இது தான் சொக்கலிங்கம் தந்த கலிங்கம்.

'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?'
'எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'

(அந்தத் துணி கந்தலாகிவிட்டது. கிழிந்து விட்டது. கிழிந்த துணியிலும் ஆயிரம் ஓட்டைகள். துணி போனால் துயர் போனது என்று எடுத்துக்கொள்வோம்). ஆனாலும் இந்தப் பதிலில் திருப்தி அடைவில்லை முதுசூரியர். மறு கேள்வி கேட்கின்றார்.

'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?'
எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'

(கந்தலாகிய துணி என்றாலும் குளிர் தாங்குமாறு உபயோகப் படுத்தலாமே?) இதற்கு இப்படிப் பதில் சொல்கின்றார் இளஞ்சூரியர்:
(கலிங்கம் – துணி. இந்தத் துணி போனால் என்ன, லிங்க ஸ்வரூபமாக விளங்கும் மதுரையில் உறையும் சொக்கநாதரே துணை) என்று பக்தியுடன் பாடுகின்றார்.  இங்கேயும் பக்தியுடன் சேர்ந்து அவர்கள் பெற்றிருந்த நகைச்சுவை உணர்வும் வெளிப்படுகிறது.

இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து பின் மரணமடைந்ததுகூட ஒரே நாளில் என்று படித்த ஞாபகம். (ஒருவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியிலேயேகூட மற்றவர் இறந்த செயதிகள் நிறைய  பத்திரிகையில் படிக்கிறோமே . வாஸ்தவமாக யிருக்கலாம். 

அன்றைய காலத்தின் வாழ்க்கைச் சூழலையும், இன்றிருக்கும் வாழ்க்கை முறையையும் மனதில் சற்று ஓட்டிப் பார்த்தால் எத்தனை விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதையும், எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதையும்   ஒரே சமயத்தில்  உணர முடிகிறதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...