Tuesday, May 12, 2020

HANUMAN



ஹனுமத் தரிசனம். J K SIVAN ''கருடா, எங்கே உன்னை வெகுநாளாக காணோம், எங்கே போய்விட்டு வருகிறாய்?''
துவாரகையில் சத்யபாமா அரண்மனையில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்த கருடன் ''ஒரு அற்புத அனுபவம் ப்ரபோ'' அதனை சொல்லத்தான் வந்தேன்'' என்றான். .
' சொல்லேன் கேட்கிறேன்''
'' வரும் வழியில் ராமேஸ்வரம் சென்றேன். அங்கே ராமர் சிலை முன் வயதான ஒருவரை பார்த்தேன். கண்களில் தாரை தாரையாக கண்ணீர். ''ராமா ராமா'' என்று மூச்சு விடாமல் தியானம். அருகே சென்ற பிறகு தான் தெரிந்தது. ஹனுமான் என்று . அருகே சென்று அமர்ந்தேன்.
''ஆஞ்சநேயரே , எதற்கு அழுகிறீர். வைகுண்டம் வா என்று ராமர் கூப்பிட்டபோது கூடவே போய் இருக்கலாமே. சாதுக்களோடு இங்கேயே ராம தியானத்தில் ஜெபத்தில், சங்கீர்த்தனத்தில் ஈடுபடுகிறேன் என்று சொல்லி விட்டு இப்போது அழுகிறீரே.''
''கருடா, இது அழுகையல்ல. உனக்கு அனுபவமில்லை. என் ராமனை நினைத்தால் என்னை அறியாமலேயே கண்கள் குளமாகிவிடும்''
''நினைப்பானேன், நேரிலேயே காணலாமே, என்னோடு துவாரகை வாரும். ஸ்ரீ கிருஷ்ணனை தரிசியும்''
''என் ராமனைத்தவிர வேறு யாரையும் நினைக்க முடியாதே''. நீ போய் வா''
கருடன் திரும்பி கிருஷ்ணனிடம் விஷயம் சொன்னான்.
''கருடா, ராமன் அழைக்கிறார் என்று ஹனுமனை நீ இங்கே அழைத்து வந்திருக்கலாமே.'' என்கிறார் கிருஷ்ணன்.
''அழைப்பதெதற்கு. லோகமே அறிந்த விஷயம் தானே?. ஸ்ரீமன் நாராயணனே, ராமனாக இருந்து இப்போது ஸ்ரீ கிருஷ்ணன் என துவாரகையில் இருப்பதை அறிந்தும் ஆஞ்சநேயர் தானே ஓடிவரவேண்டியது தானே. ''
''சத்யபாமா'' ஆஞ்சநேயன் ராமனைத் தவிர வேறு யாராகவும் என்னை அங்கீகரிக்கமாட்டான் என எனக்கு தெரியும். அவனுக்கு நான் தான் ராமன் என்று காட்டினால் தான் நம்புவான்.
சத்யபாமா சிரித்தாள். ''ராமன் ஏகபத்னி விரதன். நீங்களோ ஏகப்பட்ட பட்டமகிஷிகள் உடையவர். . எத்தனையோ பேருடன் ராஸக்ரீடை. ஆஞ்சநேயன் ராமனாக உங்களை ஏற்க மாட்டான்'' நான் மட்டும் உங்களோடு சீதையாக நிற்கிறேன். நீங்கள் ராமனாக காட்சி அளியுங்கள் ஆஞ்சநேயனுக்கு''
''கருடா, மீண்டும் போய் ஆஞ்சநேயனை இங்கே அழைத்து வா''
ராமேஸ்வரத்தில் எவர் கண்ணிலும் படாமல் ஹனுமான் ராமன் முன் நின்று த்யானம் பண்ணிக்கொண்டிருந்தான்.
''ஹனுமா...
''யார்? ''கருடன்?'' வாருங்கள் என்னோடு துவாரகையில் கிருஷ்ணனாக ராமரைக் காணலாம்.
''கிருஷ்ணனா? யார் அது.?
தேவகி நந்தன், யசோதை மைந்தன், நந்தகுமாரன், வசுதேவ புத்ரன். ''
எத்தனை அம்மா, எத்தனை அப்பா.... என்ன இது?
ஹனுமான், தேவகி வசுதேவர் பிள்ளையாக பிறந்து யசோதா நந்த கோபன் மைந்தனாக வளர்ந்தவன். எட்டு பட்டமகிஷிகளோடு துவாரகை மஹாராஜா கிருஷ்ணனாக இருக்கிறான்.வாருங்கள் போகலாம்''
''காதைப் பொத்திக்கொண்டே... இதெல்லாம் வேண்டாம்... என் ராமனே போதும் எனக்கு...நான் வரவில்லை.
கருடன் சொன்ன விஷயங்கள் கேட்ட கிருஷ்ணன். ''கருடா. நான் தான் சொன்னேனே. ராமர் அழைக்கிறார் வா என்று கூட்டிவா என்றேன் . நீ ஏன் கிருஷ்ணனை பார்க்க வா என்று ஹநுமானிடம் சொன்னாய்? திரும்பப் போய் ராமன் கூப்பிடுகிறான் என்று சொல்லி அழைத்துவா ''
தியானத்திலிருந்து கண்விழித்த ஆஞ்சநேயன் எதிரே கருடன் மீண்டும் நிற்பதை பார்த்து ''எதற்கு கருடா, வந்திருக்கிறாய் மறுபடியும்'' என்றான்.
''ஸ்ரீ ராமபிரான் உங்களை வரச்சொன்னார்?'' என்னுடன் வாருங்கள்.
''என் ராமன் எதற்கு உன்னை அனுப்பினான்? எனக்கு வயது அதிகமாகிவிட்டது உம்மோடு வருவதற்கில்லை''
கருடனுக்கு புரிந்துவிட்டது. தனது கர்வம், பெரியவன் என்கிற அகந்தை ஹநுமானிடம் இல்லை. எனது அலட்சியத்தை பெருமாள் சோதனை செய்கிறார். ஹனுமான் பக்கத்தில் அமர்ந்து அவரோடு சேர்ந்து பத்து பதினைந்து ராம நாமம் சொன்னதிலேயே கருடனுக்கு புத்தி வந்துவிட்டது.
''ராமர் காத்திருக்கிறார் போகலாமா?''
''கருடா என்னை கொஞ்சம் தூக்கி விடப்பா '' ரொம்ப கஷ்டப்பட்டு ஹனுமான் கீழே நசுங்கி மூக்கு உடைந்து ரத்தம் சொட்ட கருடன் ஹநுமானை தூக்கி நிறுத்தினான்.
'' கருடா நட போவோம். ''
''ராமேஸ்வரத்திலிருந்து துவாரகைக்கு நடந்தா.....? என்மீது ஏறிக்கொள்ளுங்கள். கொண்டு விடுகிறேன் . ஆபத்துக்கு தோஷமில்லை. ''
இல்லை. என்னப்பன் உட்காரும் இடத்தில் நானா?. என்னய்யன் ராமனைக்காண செல்லும்போது என்ன ஆபத்து. தொப்பென்று கீழே உட்கார்ந்தான் ஹனுமான். கொஞ்சம் கை தூக்கி நிற்கவை கருடா''
கருடன் மேலும் நசுங்கினானே தவிர ஹநுமானை அசைக்க முடியவில்லை. கருடனுக்கு தலை சுற்றியது. ஹனுமான் எழுந்தான். கருடனை தூக்கிக்கொண்டு பாய்ந்தான். கண் விழித்த கருடன் ஹநுமானோடு துவாரகையில் கோமதி நதிக்கரையில் நிற்பதை கண்டான்.
''கருடா, ராமனிடம் போய் சொல் . ஸ்னானம் செய்துவிட்டு வருகிறேன்''.
''என்ன கருடா வந்ததும் வராததுமாக என் காலில் விழுகிறாய். ''
''பிரபு என் கண்ணை திறந்தீர்கள். எதற்கு ஹநுமானிடம் அனுப்பினீர்கள் என புரிந்தது. என் கர்வம் ஒடுங்கியது. இதோ ஹனுமான் வருகிறார்.
சத்யபாமா உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன் அலங்கரித்து மஹா லட்சுமி போல், சீதையாக நிற்க, ராமனாக பஞ்சகச்சம் அணிந்து, வில்லுடன் கிருஷ்ணன் அருகில் நின்றார். எதிரே மாடத்தில் ருக்மணி துளசி பூஜை பண்ணிவிட்டு எளிமையாக தியானத்தில் நின்றது தான் ஹனுமான் கண்ணில் பட்டது.
' அம்மா என் ஜானகி தேவி'' என்று அவள் காலடியில் விழுந்து வணங்கினார் ஹனுமான். ராமனாக கிருஷ்ணன் அவள் அருகில் நின்றார்.
ஹனுமான் சத்யபாமாவை பார் மஹாலக்ஷ்மியைப் போல் நிற்கிறாள்.
''அம்மா என் தாயே, எனக்கு உன்னை தான் தெரியும். மஹா லக்ஷ்மியோடு நான் பழகியதில்லை. ''
ராமனாக நின்ற கிருஷ்ணனை சுற்றி வந்து நமஸ்கரித்தார் ஹனுமான்.
இனி நீ இங்கேயே இரு ஹனுமான். ''
''என் ராமன் அவனுடைய பக்தர்கள் புரியும் ராம நாம சங்கீர்த்தன, பஜனத்தில் திளைத்து நிறைந் திருக்கிறான் என் மனம் அங்கேயே செல்கிறது'' என்று தாவிச் சென்றார் ஹனுமான். சத்யபாமாவும் கர்வம் விட்டகல புதுமை பெற்றாள் . கிருஷ்ணன் தனக்குள் சிரித்துக் கொண்டு ஹனுமான் சென்ற திசையை பாசத்தோடு நோக்கினார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...