Saturday, November 2, 2019

THIRUKOLOOR




திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்   J K  SIVAN 


     
 



                  ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்

சில வருஷங்களுக்கு முன்பு தான் திருநெல்வேலி ஜில்லாவில்  நவ திருப்பதிகளை தரிசிக்கும் பாக்யம் அருள் எனக்கு கிட்டியது.  என் மகனின் நண்பனின்  தந்தை ஸ்ரீ சடகோப  ராமானுஜம்  மிக்க அன்போடு  ஆர்வத்தோடு, ன்னை அந்த திவ்ய க்ஷேத்ரங்களை தரிசிக்க அழைத்து சென்றதை மறக்கவே முடியாது.

''அடுத்தது  எங்கே கூட்டிச்செல்லப்போகிறீர்கள்?''

ஸ்ரீ சடகோப ராமானுஜம் பதில் சொன்னார்:   '' இதோ  ''திருக்குருகூர் இதோ வந்துவிட்டதே. இங்கே இருக்கும் திருக்கோளூர் அழகிய பெருமாள் ஆலயத்தை பார்த்து விட்டு செல்வோம் என்றதும் அந்த ஊருக்குள் கார் நுழைந்தது.

திருநெல்வேலி ஜில்லாவில், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியில் இருந்து ரெண்டு மைல் தூரத்தில் கிழக்கே இருக்கும் வைணவஸ்தலம் தான் திருக்கோளூர். 108 வைணவத் திருப்பதிகளுள் ஒரு திவ்ய தேசம். தாமிரபரணிப் படுகையில் உள்ள நவ திருப்பதிகளிலும் ஒன்று. சயன கோலத்தில் திருக்கோளூர் நாச்சியார், குமுதவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள். '

திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள். அவ்வளவு புண்ய ஸ்தலம். எங்கிருந்தெல்லாமோ ஒரு முறையாவது அந்த ஊருக்கு வருவோமா என்று பக்தி பரவசத்தோடு பக்தர்கள் நாடி  வரும் ஊர்.

ஆழ்வார் திருநகரியில் இருந்து ரெண்டு மைல் தூரத்தில் கிழக்கே இருக்கும் வைணவஸ்தலம் தான் திருக்கோளூர். ஒரு திவ்ய தேசம். சயன கோலத்தில் திருக்கோளூர் நாச்சியார், குமுதவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள். ''திரு' என்றால் செல்வம் கோளூர் என்றால் கொள்ளிடம்.  கொள்ளிடத்தில் அபரிமிதமாக ஜலத்தை சேமிப்பது போல, இங்கே குபேர பட்டணமாக  அவ்வளவு மாபெரும் நிதி வைத்துள்ள வைத்த மா நிதி பெருமாள்.'

திருக்கோளூர் பற்றி  எப்போதோ கொஞ்சம் படித்தது ஞாபகம் வந்தது. 


நாம்  இப்போது சௌகர்யமாக  காரில் சுகமாக செல்கிறோமோ.  ஸ்ரீ ராமானுஜர் வெறும் காலுடன்  வயது முதிர்ந்தவராக  நடந்தே சென்று  திவ்யதேசங்கள் எல்லாம் தரிசித்து வரும்போது நம்மாழ்வார் அவதரித்த திருநகரி வந்து சேர்ந்தார். பரம சந்தோஷத்தோடு ஆதிநாதனை சேவித்து வெயில் சுட சுட வெறுங்காலோடு மரங்களின் நிழலை துணை கொண்டு  இந்த திருக்கோளூருக்கு  வந்து சேர்ந்தார்.

 ''நம்மாழ்வார் போற்றிய வைத்தமாநிதி பெருமாள் இங்கே தானே இருக்கிறார். உடனே ஓடி சென்று அவரை சேவிக்க வேண்டும்'' என்ற தாகம்  ராமானுஜருக்கு  மேலிட  ''சிஷ்யர்களே கொஞ்சம் வேகமாக வாருங்கள். சீக்கிரம் சென்று தரிசிப்போம்'' என்று விடுவென்று நடந்தார்  அந்த  முதிய வைணவ துறவி.

ராமானுஜருக்கு  இரட்டிப்பு சந்தோஷம். ஏன் என்றால் இந்த திருக்கோளூரில் தான் இன்னொரு ஆழ்வாரான மதுரகவி ஆழ்வார் அவதரித்தார். புண்ய க்ஷேத்ரம் அல்லவா?

ஆச்சார்யர் உவகை மேலிட உரக்க பாடினார். அருகிலிருந்த  சீடர்களும் சேர்ந்து கொண்டார்கள். கோவிலில் எதிரொலித்தது அவர்களது குரல்.

''உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றக் கால் கண் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே –6-7-1

நாம்  சரியான பாதையில் போகிறோமோ? இது தானே  திருக்கோளூர்.

ராமானுஜர் இப்படி சந்தோஷமாக திருக்கோளூர் அடைந்து  கிராமத்தில் நுழையும்போது, எதிரே வரும்  ஒருவளை காண்கிறார்,

அவளோ  ஒரு கிருஷ்ண பைத்தியம். அவளுக்கு அன்னம் வேண்டாம், ஆகாரம் வேண்டாம், குடிக்க நீர் வேண்டாம், மெல்வ தற்கு வெற்றிலை வேண்டாம். சதா சர்வகாலமும் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஒன்றே ஸ்மரணம். கண்ணன் எனும் மன்னன் பெயரைச் சொல்ல சொல்ல கண்களில் பிரவாகமாக ஆனந்த பாஷ்பம் சொட்டுமா கொட்டுமா? அதுவே மேற்சொன்ன எல்லாவற்றையும் சாப்பிட்டது போல் வயிற்றை நிரப்பும். அந்த பெண் போலவே ராமானுஜரும் கேட்கிறார். நான் சரியான பாதையில் போகிறேனா? இப்படித்தானே அந்த அருமையான திருக்கோளூர் செல்லவேண்டும்?    அவளைப்பார்த்தால் ஊரை விட்டே வெளியே கிளம்பினவளாக காண்கிறதே.  அவள்  ராமானுஜர் குரலை கேட்கவில்லை...எங்கோ ஒரு உலகத்தில்  லயித்து இருக்கிறாள்.

''அம்மா கொஞ்சம் நில். இது தானே திருக்கோளூர் ?
''ஆமாம் சுவாமி''
''இந்த ஊரைப் பற்றி தானே நம்மாழ்வார் ஸ்வாமிகள் வெகு ஸ்ரேஷ்டமாக பாடியிருக்கிறார்
''கேள்விப்பட்டிருக்கிறேன் சுவாமி''
''ஏனம்மா, எனக்கு ஒரு சந்தேகம்.  கொஞ்சம் அதை தீர்த்து வைக்கிறாயா?''
'சுவாமி  உங்களைப்பார்த்தால்  ஒரு மஹானைப் போல் இருக்கிறது.  நானாவது உங்கள் சந்தேகம் தீர்ப்பதாவது. கேளுங்கள் தெரிந்தால் சொல்கிறேன்.
''நம்மாழ்வார்  வாக்குப் படி எங்கிருந்தெல்லாமோ மக்கள்  திருக்கோளூருக்கு  ஓடி வருவார்களாம் இந்த ஊரில் குடியிருக்க, நீ எதற்கு அப்படிப்பட்ட எம்பெருமான் வைத்த மாநிதி பெருமாள் அருள்பாலிக்கும் உன்னதமான இந்த திருக்கோளூரை விட்டு மூட்டை முடிச்சோடு  வெளியே செல்கிறாய்?''
''ஐயா, என்ன சொன்னீர்கள்?
''அடுத்த வேளை சோறில்லாவிட்டாலும் கூட, கட்ட துணி இல்லாவிட்டாலும் கூட ஒருவர் துணியை கிழித்து ஏழுபேர் உடுத்தியவாறு இங்கே வந்து சேர்வார்களாமே. நீ எதற்காக குழந்தாய் இந்த பெருமாள் அருளும் வள நாட்டை விட்டு செல்கிறாய் என்று கேட்டேன்?''
''சுவாமி,   நீங்கள் கேள்வி கேட்டுவிட்டீர்கள். நான் பதில் சொல்லவேண்டாமா?''

மூட்டையை இறக்கி கீழே வைத்தாள் அந்த பெண். அற்புதமான சொற்கள், அமிர்தமாக,   ஒன்றல்ல ரெண்டல்ல 81 வார்த்தைகள், அத்தனையும் இதிகாச, புராண சம்பந்தத்தோடு இணைந்தவை. மிக அழகான வார்த்தைகள் சொல்கிறாள் அந்த பெண்.

''ஐயா  நான்  இதில் சேர்த்திக்கை.   எனக்கு தெரிந்த  சில  பெயர்களைச்  சொல்கிறேன். அவர்களில்  எவராவது ஒருத்தர்  போல் இருந்தாலும்  நான்  பாக்கியசாலி.  நான்  பாபி அப்படி இல்லையே.   அப்படியிருந்தால் இங்கே இருக்க எனக்கு யோக்கியதாம்சம் உண்டு.அப்படி துளியும் இல்லாத பொது எனக்கு இங்கே  என்ன வேலை...பூமிக்கு பாரமாக

ஒரு  பெரிய லிஸ்ட் தருகிறாள் அந்த பெண்  ராமானுஜருக்கு.  அவளைத் தான் திருக்கோளூர் பெண்பிள்ளை என்போம். அவள் வார்த்தைகள் ''பெண்பிள்ளை ரஹஸ்யம்'' என்ற ஆழமான அர்த்தம் கொண்டவை. அதைப் பற்றி நிறைய சொல்லவேண்டும்.

ராமானுஜர் அந்த பெண்பிள்ளையின் வார்த்தைகளை கேட்டு அசந்து போனார். அவள் ஊரை விட்டு செல்வதன் காரணம் தெளிவாக அல்லவோ சொல்லிவிட்டாள் .அந்த  81 வார்த்தைகள் தான்  திருக்கோளூர்  பெண்பிள்ளை ரஹஸ்யம்... அவற்றை பார்ப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...