Monday, November 4, 2019

THIRUKKOLOOR





திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்    J K   SIVAN 


                                                                            
     2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே
       
மஹா பாரதத்தின்  நாயகன் யார்  என்ற கேள்வி  யாருக்கு எழுந்தாலும்  அவர்கள் அடிமனதில் அந்த  யுத்தத்தில் பங்கேற்காமலேயே  காயை சரியான நேரத்தில், தக்கபடி  நகர்த்தி பூரணமாக  அதை நடத்தியவன்   ஸ்ரீ கிருஷ்ணன் தான் என்று எல்லோருக்கும் தெரியும். யாருக்கும் தெரியாவிட்டாலும் கிருஷ்ணனுக்கு நிச்சயம் தெரியும். 

பாரதப்போரில் நான்  பங்கேற்க மாட்டேன்.  கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருமே எனக்கு நெருக்கமாக வேண்டியவர்கள்.  ஆகவே  ஒருவரை எதிர்க்கவோ,   மற்றவரை ஆதரிக்கவோ என்னால் முடியாது.  உங்கள் இருவருக்கும்  ஒரு யோசனை.   என் சேனை வேண்டுமானால் ஒருவருக்கு  தருகிறேன். நான் வெறுமனே ஆயுதம் தரிக்காமல் சும்மா இருப்பேன் அது மற்றவரிடம்.  

யாருக்கு   ''நான் மட்டும்''  வேண்டும்,  யாருக்கு  என் சேனை பூரா வேண்டும்?  சொல்லுங்கள். இருவருமே எனக்கு வேண்டியவர்கள் என்றாலும்  முதலில் நான் பார்த்த இளையவன் அர்ஜுனன்  அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்கட்டும்'' என்று கிருஷ்ணன் கேட்கும்போது  அவன் மனதில்  எங்கே  அர்ஜுனன் தனது சேனையை கேட்டுவிடுவானோ என்ற அச்சம் இருந்தது.  அர்ஜுனன் துளியும் யோசிக்காமல் ''எனக்கு எந்த சேனையும் வேண்டாம்,  கிருஷ்ணா,  நீ மட்டுமே என்னோடு இருந்தால் அதுவே போதுமானது என்று சொல்லிவிட்டான்.  

பின்னர்  யுத்தம் வேண்டாம் சமாதானமாக  பிரச்னையை தீர்ப்போம் என்று கிருஷ்ணன் பாண்டவ தூதராக சென்று சமாதான முயற்சியில்    துரியோதனனோடு பேசி,  தோல்வி கண்டான்.  அந்த முடிவு அவன் எதிர்பார்த்ததே, ஆகவே  அவனைப் பொறுத்தவரை அவனது தூது  வெற்றிகரமாக முடிந்தது என்று  கிருஷ்ணனுக்கு  மட்டும் தெரியும்.

வேண்டுமென்றே துரியோதனன் அழைப்பை ஏற்க மறுத்து, தூதுவனாக சென்றபோது விதுரன் வீட்டில் தங்கியதும் கூட  கிருஷ்ணனின் ஒரு திட்டம். 

'' ஆஹா  துவாரகை மன்னன்,  கடவுளின் அம்சம்,   ஸ்ரீ.  கிருஷ்ணன் என்னைத் தேடி என் இல்லத்தில் வந்து,  ''
எனக்கு பசிக்கிறது,  ஏதாவது கொடு, குடிக்க நீர் கொடு''  என்று கேட்க  நான் என்ன தவம் செயதிருக்கவேண்டும் என்ற சந்தோஷத்தில், தன்னிடமிருந்த சில  உலர்ந்த பழங்களை உரித்து அவசரம் அவசரமாக ஒரு தட்டில் வைப்பதாக நினைத்துக் கொண்டு  உரித்த பழத்தை வெளியே எறிந்துவிட்டு, பழத் தோல்களை தட்டில் வைத்து கிருஷ்ணனுக்கு  ''இந்தா கிருஷ்ணா பசியாக வந்திருக்கிறாயோ, இதை சாப்பிடு என்று  ஒரு பாத்திரத்தில்   குளிர்ந்த நீரும்  பருகுவதற்கு தருகிறார்.

தோலைத் தின்று பசியாறிய  கிருஷ்ணன் விதுரரின் அன்பில் உண்மையான பாசத்தில், பக்தியில்  பெரிதும் மகிழ்கிறான்.   துரியோதனன்,  திருதராஷ்டிரன், பீஷ்மர்  எல்லோரும்  ''கிருஷ்ணா என் மாளிகையில் வசதியாக தங்கு''  என்று சொன்னபோது விதுரன் தனது எளிய ஆஸ்ரம வீட்டில் ''கிருஷ்ணா இது நீ வாழும் உன் இல்லம் அதில் தங்கு'' என்று   அல்லவோ சொன்னார்.

கிருஷ்ணா  இந்த பாவி எவ்வளவு பெரிய  பாபத்தை செய்துவிட்டேன். உனக்கு  பழத்தை  அளிப்பதாக நினைத்து தோலை தந்தேன். நீயும் ஒன்றும் சொல்லாமல் எப்படி அத்தனையும் சாப்பிட்டாய்? சொல்லி இருக்கலாமல்லவா  எனக்கு ?  எதிர்பாராமல் என்னை தேடி வந்த உன்னைப்  பார்த்த மகிழ்ச்சியில் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. என்ன செயகிறோம் என்றே புத்தி உணரவில்லை. என்னை மன்னித்துவிடு என்கிறார்  விதுரர் 

''விதுரரே , நான் உம்மை தேடி வந்து, உங்களோடு தங்கி இரவெல்லாம் பேசி மகிழ்ந்து நாளை துரியோதனனைப் பார்க்க  அவன் அரண்மனைக்கு செல்வேன்''  எனக்கு  யார் எதை கொடுக்கிறார்கள் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பது எப்போதும் தெரியாது. எப்படி கொடுக்கிறார்கள் என்று தான் பார்க்க தெரியும். அது தான் ருசிக்கும். உள்ளன்போடு ஒரு உத்தரணி ஜலம் , ஒரு காய்ந்த இலை , ஏதாவது சிறியதாக காய்ந்த ஒரு கனி அன்போடு அளித்தால்  அதுவே எனக்கு பரம திருப்தி என்று கிருஷ்ணன் கீதையில் சொல்லியது நமக்கு ஞாபகம் வருகிறது இல்லையா.

" ஐயா,ஸ்ரீ ராமானுஜரே , நீங்களே சொல்லுங்கள்  என்னால் விதுரரைப் போல் தன்னிலை மறந்த அன்பினையும் மதிப்பையும் கிருஷ்ணனின் மீது வைக்க முடியுமா? எதையும் சிந்திக்காமல் விதுரரைப் போல் என்  அகத்தை  ( அகம் என்றால் வீடு உள்ளம்)_  இரண்டையும் இங்கு குறிக்கும்)கிருஷ்ணனுக்கு கொடுக்க இயலுமா?  முடியாது என்று தெரிந்து நான் எப்படி  இந்த திருக்கோளூரில் வசிக்க அறுகதையானவள். நீங்களே சொல்லுங்கள்?''  என்கிறாள்  திருக்கோளூர் பெண் பிள்ளை.  

அசந்து போய் நிற்கிறார்  ராமானுஜர். இன்னும்  79 பேர் பற்றி வேறு சொல்லப்போகிறாள் என்று அவருக்கு தெரியுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...