Saturday, November 30, 2019

NARSI MEHTA



                           பரமேஸ்வர புலி   J K  SIVAN 


 இறைவன்  படைப்பில்  அனைத்திலும்  அவன்  இருக்கிறான்.   பக்தி  என்பது  உள்ளூர ரத்தத்தில்  ஊறியது என்பதற்காக  லேப் டெஸ்டில் lab test  ரத்தத்தை பரிசோதித்தால்  பக்தி  நிச்சயம் தெரியாது. மனதால்  மட்டுமே  அறியக்கூடியது.

ஒரு  நல்ல  ராஜா.  பிபாஜி  என்று  பெயர்.  அவனுகேற்ற   ஒரு  நல்ல ராணி.  ரெண்டு பேருமே பக்தியில் திளைத்தவர்கள்.     இது   கதையில்  தான் நடக்கும்  என்று  இல்லை.  உண்மை வாழ்க்கையிலும்  நிறைய  குடும்பங்களில் நடக்கிறது.  இதற்கு  ஏழை  பணக்கார  பேதம்  கிடையாது.  நான்  அருமையான சில குடும்பங்களை பார்த்திருக்கிறேன்.  ராஜாவாகத்  தான் இருக்க வேண்டிய அவசியமில்லை.

பிபாஜி தனது குரு  ராமாநந்தாவிடம் நிறைய உபதேசங்கள்  பெற்றான்.   நாராயணன்,  அவனது அவதாரங்களான  ராமன்,  கிருஷ்ணன்  பற்றியும்  பண்டரிநாதன்  மகாத்மியங்களை  எல்லாம்  நிறைய கேட்டு   மகிழ்ந்த  பிபாஜி ராஜாவுக்கு பக்தி மேலும்  அதிகரிக்க,  ஒருநாள்,  குரு  ராமானந்தாவின் பாதங்களை  வணங்கிவிட்டு   ''சுவாமி  நாங்கள் இருவரும்   த்வாரகை செல்ல  விரும்புகிறோம். கிருஷ்ணனை தரிசிக்காவிட்டால்  தூக்கமே  எங்களுக்கு  இனி  கிடையாது.  தங்கள் ஆசி  அனுமதி வேண்டும். .

'' ரொம்ப சந்தோஷம். போய்வாருங்கள். ஆசிர்வாதங்கள் ''

தம்பதியர்  இதுவரை  சிவ பக்தர்கள்.  பவானியையும்  சிவனையும்  வணங்கி வந்தவர்கள்.  சமீபத்தில்  தான்   குருவிடமிருந்து   ராமனைப்பற்றியும்  க்ரிஷ்ணனைப்பற்றியும்  நிறைய  உபதேசங்கள்  பெற்றவர்கள்.    உடனே   துவாரகைக்கு பயணம்  தொடங்கினார்கள்.   கிருஷ்ணன்  முன்  ஆலயத்தில்  நின்று அவன்  அருளை வேண்டி நின்றார்கள்.  நான்கு மாத  காலம்  மனம் குளிர  கிருஷ்ண தர்சனம்  தினமும்  பெற்றனர்.  காட்டு  வழியாக ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.   அது அடர்ந்த பெரிய  காடு.  நிறைய  வன  விலங்குகள்  குறுக்கிட்டன.   ராஜாவும்   ராணியும் ஹரே  கிருஷ்ணா  ஜெய்  பாண்டுரங்கா   என்று   வாய்  ஓயாமல்  பஜித்துக்கொண்டே நடந்தார்கள்.

ஒரு  பெரிய வேங்கைப்புலி வழியில்  குறுக்கிட்டது.  ராணி நடுங்கினாள். ''அதோ  பாருங்கள் எதிரே  புலி'' என்று  பின்னால்  வந்து கொண்டிருந்த  ராஜாவிடம்  சொன்னாள் . புலி  பார்த்துவிட்டு   உறுமியது. நெருங்கியது.

''பயப்படாதே.  என்றான்  ராஜா.

''இல்லை   நாதா.  நம்மை கொன்று  விடும் இந்த  புலி.   சில நிமிஷங்களில்  நாம்  இன்று இதன்  ஆகாரம். ''

''பயப்படாதே.  எல்லாவற்றிலும் நாம்  வணங்கும்  கிருஷ்ணன்,  விட்டலன்  இருக்கிறான். எனவே அவன்  நம்மைக்  கொல்ல மாட்டான்  பார். ''

''பிபாஜி அருகே   புலி  வந்து விட்டது.  ராஜா   தைர்யமாக,  '' ஹே    புலியே,   இது வரை  நீ  கொடியவனாகவே  வாழ்ந்தாய். இது முதல்  உன்  வாழ்க்கையில்  ஒரு  திருப்பம்  அமையட்டும்.   இனி  உயிர்களைக்  கொல்லாதே.  கிருஷ்ணனையோ   ராமனையோ  நினை.  உன்  ஜன்மம்  கடைத்தேறும் '' என்றான்.  தன்  கழுத்தில்  இருந்த  துளசி மணி மாலையைக் கழட்டி  அந்த   புலியின் கழுத்தில்  மாட்டி விட்டான் ராஜா பிபாஜி.   அவன்  வாயிலிருந்து   ''ராம  கிருஷ்ண விட்டல்''  என்று விடாமல்  நாமஸ்மரணம்.

புலி  ஸ்தம்பித்து  நின்றது.  அதற்குள்  என்னவோ  ஒரு   புது  மாற்றம்   ஏற்பட்டது.

புலி  ஆச்சர்யமாக  ''ஜெய்  விட்டல்,  ஜெய  ராம்,    ஹரே கிருஷ்ணா''  என்று  உச்சரித்ததில்  அதன் குணமே  மாறிவிட்டது.  (இது  கதை.  புலி  பேசுமா  என்று குறுக்கே கேள்வி  கேட்கக்கூடாது.  பேசியதாக நம்பவேண்டும்)

புலி இரு முன்னங் கால்களையும்  நீட்டி   வணங்கி   '' சுவாமி, எனக்கு இது வரை  தெரியாததை  உணர்த்தி  இவ்வளவு  சந்தோஷத்தை கொடுத்தீர்கள்''  என்று  ராஜாவை  நமஸ்கரித்தது .  ராஜாவும்   ராணியும்  மேலே நடந்து சென்றுவிட்டார்களே  தவிர  புலி அந்த நிமிஷம் முதல்   எந்த  விலங்கையும் கொல்லவே யில்லை.  காட்டில் கிடைத்த  காய்  கனி  இலைகளை  தின்று   ஒதுங்கிவாழ்ந்தது.   சிலநாளில்  இறந்தது.  (இதன்  மூலம்  நாம  சங்கீர்த்தனம்   புலியைக்கூட  மற்றும்  சக்தி வாய்ந்தது   என்று  புரிந்தாலே  போதும்.)

 கதைக்கு   நடுவே  ஒரு அற்புத  விஷயம்  சொல்கிறேன்.  நாம்   கடைசி  நிமிஷம்  எதை  நினைக்கிறோமோ அதுவே   நமக்கு  சம்பவிக்கிறது.  கீதை அப்படி தான் சொல்கிறது.  அடுத்த  பிறவி இந்த  அடிப்படையில்   தான் நிகழும்  என்பதால்   நாம்    அந்திம  காலத்தில்  பகவன் நாமாக்களையே  நினைவில்  கொள்ள வேண்டும்.  புலி 


கதையில்  புலி   ''கிருஷ்ணா  விட்டலா''  என்று  சொல்லிக் கொண்டே உயிரை விட்டதால்  அடுத்த பிறவி  மேன்மையாக  கிட்டி   ஜுனகாத்  என்கிற  குஜராத்  ஊரில்  சிறந்த  விட்டல பக்தர்  நார்சி  மேத்தாவாக  பிறந்தது.
''வைஷ்ணவ   ஜனதோ''  என்ற  மகாத்மா  நிறைய  விரும்பி  கேட்ட  பாடல் தெரியுமல்லவா?  அதை  இயற்றியவர் நார்ஸி  மேத்தா. என்னுடைய  ''தெவிட்டதா விட்டலா'' புத்தகத்தில் அவர் பற்றிய   கதைகள்  நிறைய  சொல்லி இருக்கிறேன்.   ரிஷிகள்  முநீஸ்வரர்கள் யோகிகள்   சிலர் இவ்வாறு  தமது  அடுத்த  பிறவிகளில்  கங்கை, பாகிரதி  சந்திரபாகா  போன்ற  புண்ய நதிகளாக  கலந்து அவதரித்ததால்  நாம்  இம்மாதிரி  நதிகளில்  ஸ்நானம்  செய்து புண்ய  பலன்  பெறுகிறோம்.  

 நமது கதையில் வரும் புலி  சிவ பெருமானின்  ஒரு அவதாரம்.  நார்ஸி  மேத்தா   எப்போதும் புலித்தோலோடு காணப்பட்டதால்  சிவனின்  பூலோக  அவதாரம்  என்பார்கள்.

இளம்  வயதிலேயே  ஒரு  காட்டில்  சிவ  தரிசனம்  பெற்றவர் மேத்தா.  சிவனிடமிருந்து கிருஷ்ணன் மகிமையை  தெரிந்து கொண்டார்.  நேரே  கிருஷ்ணன்  வாழ்ந்த  புண்ய  இடங்களுக்கு  எல்லாம்  க்ஷேத்ராடனம் போனார்.   துவாரகா நாதனுக்கு  எதிரே வணங்கி நின்ற  மேத்தாவை  சிவன் என்று  தெரிந்தது. புரிந்தது.   ஹரியும்   ஹரனும்   இணை பிரியாதவர்கள்  அல்லவா.  ''நீலகண்டா,  உன்னை  கண்டதில்  எனக்கு  மகிழ்ச்சி''  என்றான்  ஹரி.''

''நான் புலியாக இருந்தபோது  எனக்கு  உன்  நினைவு வரச்செய்தவன்  பிபாஜி  என்ற  விட்டல  பக்தன். நீ தானே  விட்டலனும்  கூட ''  என்று  சிரித்தார்  மேத்தா. ' அதனால்  தான்  விட்டல  நாமம் எங்காவது  கேட்டாலே  போதும், சகலமும்  மறந்து  ''விட்டலா  விட்டலா''  என்று  ஸ்மரித்துக்கொண்டே  ஆடக் கிளம்பிவிடுவார்  மேத்தா .  சிவனுக்கே  ஆடலரசன்  நடராஜன்   என்று பெயர்.  நடனப்ரியன்.  ஹரிக்கோ, விட்டலனுக்கோ  கோபிகளுடனும்  பக்தர்களுடனும்  சைதன்யர்களுடனும்  தனை மறந்த பக்தி பரவச ஆடல்,  ராசக்ரீடை பிடிக்கும்.  

ஆகவே    ஹரியும்  ஹரனும்   ஒருவரை ஒருவர்  ஆடலில்  மிஞ்சுபவர்கள் என்று  சொல்லலாமா?   சுவாமி  ஹரிதாஸ்  கிரி,  விட்டல்  தாஸ்,  உடையாளூர்  பாகவதர்,   போன்ற  எண்ணற்ற  மஹா புருஷர்களின்  அபங்கங்கள் கேட்கும்போது  தலையாவது  கையாவது  ஆடுகிறது நமக்கு.  ஆடலும்  பாடலும்  ஒன்றை  ஒன்று  பிரியாதவை.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...