Tuesday, November 5, 2019

திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்   J K  SIVAN 

                                                              
      3.  தேஹத்தை விட்டேனோ ரிஷி பத்நியைப் போலே

என்னைப்பொறுத்தவரையில்  கற்றலிற்  கேட்டலே நன்று...ரொம்ப  பொருத்தமான வாசகம்.  என் தாய் பள்ளிக்கூடம் பார்த்ததில்லை.  தொண்ணூறு வயசுக்கு மேலேயும்  அவள் பழைய  அருணாச்சல கவிராயர், கவி குஞ்சர பாரதியார் பாட்டுகள் எல்லாம் வார்த்தை பிசகாமல் பாடுவாள். எழுத்து கூட்டி பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதைகள் படித்து பார்த்திருக்கிறேன்.

இப்படி இருக்கும்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருக்கோளூர்  பெண் ஒருத்தி அற்புதமாக நிறைய  பாகவத பாரத இதிஹாச நிகழ்ச்சிகள், சம்பவங்களை நிறையபேரிடம் கேட்டு  மனதில் பத்திரப்படுத்தி இப்போது பட் பட்டென்று  ராமானுஜர் முன் பொரிந்து தள்ளுகிறாள்.

மூன்றாவது சம்பவம் அவள் கூறுவது: 

பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் மற்ற கோபாலார்களோடும்  அண்ணன்  பலராமனோடும் காட்டில் பசுக்களை மேய்க்கிறான். பசுக்கள்  மேய்ந்துகொண்டிருக்கும் நேரம்  கிருஷ்ணனும் மற்றவர்களும் விளையாடுவார்கள். பசி வந்தபோது கட்டுச்சாத மூட்டையை அவிழ்ப்பார்கள்.   எல்லோரும் கலந்து பல வீட்டு  உணவு பண்டங்களை  பரிமாறி  உண்பார்கள்.  சீக்கிரமே  வீடு திரும்பலாம் என்பதால் அதிகம் கொண்டுவரவில்லை . பசி எல்லோருக்கும் அதிகமாகியது. 

''கிருஷ்ணா  என்னடா, உன் பேச்சை கேட்டு நிறைய  சாப்பாடு கொண்டுவரவில்லை, பசிக்கிறதே. இப்போது என்ன பண்ணுவது நீதான் ஏதாவது ஏற்பாடு பண்ணவேண்டும்..'' என்று அவன் மீது கடமையை  மற்றவர்கள் திணித்தார்கள்  கண்ணன் யோசித்தான்.

''இந்த காட்டில்  வடக்கே  சற்று தள்ளி  ஒரு பகுதியில் ரிஷிகள் தங்குகிறார்களே  தெரியுமல்லவா?  இன்று  அங்கே  ஒரு பெரிய யாகம் நடத்துகிறார்கள்.   நீங்கள் ரெண்டு பேர் அங்கே போய் அவர்களிடம்   '' கிருஷ்ணன் பலராமன் பசியாக இருக்கிறார்கள். சீக்கிரம் ஏதாவது உணவு  தாருங்கள் என்று கேளுங்கள்"என்று கூறி  கிருஷ்ணன் ரெண்டு பேரை அனுப்பினான் .

அவர்கள் கூறியதை   யாகம் செய்து கொண்டிருந்த  ரிஷிகள்  காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மீண்டும் கேட்க  ரிஷிகளின் தலைவர்   "யாகம் முடிய நேரமாகும். சாயந்திரம் ஆகிவிடும் .  பகவானுக்கு  ஆஹுதி,  நைவேத்தியம் எல்லாம் ஆகி, பிராமணர்கள் போஜனம் ஆன பிறகு தான்   மற்றவர்களுக்கு அன்ன தானம் .  போய்வாருங்கள்''   என்று அனுப்பினார்.

பசியோடு திரும்பிய அந்த ரெண்டு பெரும்  கிருஷ்ணனிடம் நடந்ததை கூற   அவன் சிரித்துக்கொண்டே   ''அப்படியென்றால்  நீங்கள் உடனே  அந்த ரிஷிகள் வீடுகள் அங்கே இருக்கிறதே அங்கு சென்று  வீடுகளில் உள்ள  ரிஷி பத்தினிகளிடம்  ''கிருஷ்ணனும் பலராமனும் பசியோடு இருக்கிறார்கள், உந்தலிடம்  உணவு வாங்கிக்கொண்டு  வரச் சொன்னார்கள்'' என்று சொல்லுங்கள் என்றான் கிருஷ்ணன் .

கோபாலர்கள்  மீண்டும்  பிராமணர் அக்ரஹாரம் சென்று  ரிஷி பத்தினிகளை கண்டு  விஷயம் சொன்னதும்  அவர்கள்  "அட,  கிருஷ்ணன் எங்கே இருக்கிறான்? என்கிறார்கள் 

''இங்கே தான்  சற்று தள்ளி ஆற்றங்கரையில் '' என்கிறார்கள் யாதவ சிறுவர்கள்.
''ஆஹா, கிருஷ்ணன் எங்களிடம்  பசிக்கிறது உணவு தா என்று கேட்டானா ''  என்ன ஆச்சர்யம்''  என்று ஆனந்தத்தில்
ஆழ்ந்து,  யாகத்துக்கு  சமைத்த  உணவு பண்டங்கள் அனைத்தையும்    எடுத்துக் கொண்டு  ரிஷிகளின் எதிர்ப்பையும் மீறி கிருஷ்ணனிடம் சென்று   கிருஷ்ணனுக்கும் மற்றவர்களும் உணவு பரிமாறுகிறார்கள். கிருஷ்ணன் ரசித்து சாப்பிடுவதை கண்டு மகிழ்ந்தார்கள்.  

'' ரொம்ப திருப்தி. நீங்கள் வீடு திரும்புங்கள் '' என்று கிருஷ்ணன் சொல்லியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. 
ஏன் என்றால் தங்கள் சொல்லை மீறி அவர்கள்  யாகம் முடியும் முன்பே  ஹவிர்பாகத்தை  எடுத்து சென்று மற்றவர்களுக்கு  அளித்ததால்  ரிஷிகள் இனி அவர்களை அக்ராஹாரத்தில் அனுமதிக்க மாட்டார்களே ''. 

''நாங்கள் இங்கேயே  உன்னோடு இருந்துவிடுகிறோம் கிருஷ்ணா என்கிறார்கள் அந்த ரிஷிகள் மனைவியர்கள்.

''அப்படியெல்லாம் நடக்காது. நீங்கள் தாராளமாக வீடு திரும்பலாம், ரிஷிகள் உங்கள் வரவேற்று உபசரிப்பார்கள் . பாருங்கள்'' என்று கிருஷ்ணன் சொல்லியபடியே,   அங்கே  யாகத்தில்  அக்னிக்கு  உணவுகளை படைத்தபோது  தேவதைகள் அக்னியில் எழுந்து நின்று  வேண்டாம்  நாங்கள்  நிறைய  சாப்பிட்டாகி விட்டது. திருப்தி என்றதும்  அதிசயித்தார்கள். 
''நாங்கள் இன்னும் அக்னிக்கு ஹவிஸ்  இடவே இல்லையே, அதற்குள் எப்படி என்ன சாப்பிட்டீர்கள். திருப்தி பெற்றது எப்படி '' என்று ரிஷிகள் வினவ,  அக்னிதேவன் '' உங்கள் மனைவிமார்கள்  எங்களுக்கு  ஏற்கனவே  கிருஷ்ணன் மூலம் திருப்தியாக உணவளித்துவிட்டார்கள். உங்களுக்கு  எங்கள் வாழ்த்துக்கள், ஆசிகள், என்று யாகத்தில்   ப்ரீத்தி அடைந்த தேவதைகள் அக்னி மூலம் சொன்னார்கள்.

தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு. பெண்களை கோபித்துக்கொண்டு இனி வராதே என்று விரட்டியது தவறு என்று உணர்ந்து அங்கிருந்த ரிஷிகள்  அவர்களைத் தேடி வருகிறார்கள். எதிரே அவர்களை கண்டதும் மரியாதையோடு உபசரித்து வரவேற்கிறார்கள். 

ஒரு கோபக்கார ரிஷி மட்டும் தன் மனைவி செய்தது தவறுதான் என்று அவளை   திரும்ப ஏற்றுக்கொள்ளாதால் அவள் கிருஷ்ணனுக்கு  உபகாரம் செய்த இந்த தேகம்  கிருஷணனை அடையட்டும் என்று   அந்த  யாகத்தீயிலேயே விழுந்து உயிர் நீத்தாள். வைகுண்டம் சேர்ந்தாள்''      ரிஷி தனது செய்கைக்கு வருந்தி கிருஷ்ணனை சரணடைந்து பாவத்திலிருந்து விடுபட்டார்.    

 ஐயா  ஸ்ரீ  ராமானுஜர், இப்போது சொல்லுங்கள்,  நான் எந்த விதத்திலாவது  அப்படி  தன்  உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் அந்த நாராயணனின் அவதாரமாகிய கிருஷ்ணனுக்கு அர்ப்பணித்த  ரிஷியின் மனைவி க்கு ஈடாவேனா?  நானும் அவளைப்போல ஒரு பெண் தான்? என்ன செய்துவிட்டேன் இதுவரை இந்த புண்யபூமி திருக்கோளூரில்  தங்கி வசிப்பதற்கு தகுதிபெற. நீங்களே சொல்லுங்கள்?   என்கிறாள் திருக்கோளூர் பெண். 

 ராமானுஜர் தனது சிஷ்யர்களோடு அவள் வீட்டுக்கு சென்று கிருஷ்ணனை போல  அவள் அளித்த உணவை அருந்தி அவளை அந்த ஊரில் தங்க  வைத்தார் என்பது பின்னால்  வரும் விஷயம்.



இதற்கிடையில் அந்த பெண் மற்ற 78 பேர்களை  அடையாளம் காட்டுகிறாள். நாம்  தெரிந்து கொள்ளவேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...