Saturday, November 30, 2019

SARNAGATHI

                                              பூரண  சரணாகதி  

ஆசை ஆசையாக மயிலிறகு போல்  தடவி ,  பார்த்து பார்த்து வளர்க்கும் அம்மா கூட  தான் குழந்தையை அடிக்கிறாள். ஏன் ? அது  தப்பு செய்யும்போது  திருத்த வேண்டும் என்பதற்காக. 

அப்படி தான் நீ  கிருஷ்ணா, காக்கும் கடவுள்  என்று பெயரெடுத்தாலும், அப்பப்போ வந்து கெட்டவர்களை, தீயவர்களை, ராக்ஷஸர்களை எல்லாம் காலி செய்கிறவன்.  ஓரு  கிலோ கத்திரிக்காயில்  மூன்று நான்கு  சொத்தை இருந்தால் அதை தூக்கி வெளியே  போடுவது போல்.

உனது காருண்யம் எல்லையில்லாதது.  ஏதோ நூறு தடவை பொறுமையாக இருந்தாய் சிசுபாலனுக்காக. அவன் தாய்க்கு கொடுத்த வாக்குக்காக  அவன் உன்னை இழிவாக பேசும்போதெல்லாம் சிரித்துக்கொண்டே தானே  இருந்தாய்.  ராவணன்  நிராயுதபாணியாக இருந்தபோது  கூட அவனைக் கொல்லாமல் , இன்று போய் நாளை வா என்று சொன்னவனா யிற்றே நீ.

ஒரு காட்சி  என் மனத்திரையில்  ஓடுகிறது. சொல்கிறேன்.  

அடர்ந்த காடு ஒன்றில் பறவைகள் மிருகங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது  வேடர்கள் அவற்றை வேட்டையாட வருகிறார்களே. வேட்டையாடுவது அவர்கள் ஜீவனம். என்ன செய்வது?

பூர்ண கர்ப்பமாக ஒரு மான். வேகமாக ஓடமுடியவில்லை.  எந்த நேரமும் பிரசவித்து மான் குட்டி பிறக்கும் நேரம்.  நிம்மதியின்றி அந்த  மான் ஜாக்கிரதையாக ஆபத்தில்லாத ஒரு இடம் தேடி குட்டி போட அலைகிறது.   ஒரு இருட்டு  மூலையை கண்டு பிடித்துவிட்டது.  இங்கு இருந்தால் மற்ற மிருகங்கள் கண்ணிலிருந்து தப்பலாம்.   கீழே  புல்தரை  மெத்து மெத்தென்று நல்ல படுக்கையாக அமைந்துவிட்டது.  அந்த  இடத்திற்கு ஒரு பக்கம்  சலசலவென்று ஓடும் காட்டாறு.   ஆகவே  மிருகங்கள் ஆபத்து  அந்த பக்கத்திலிருந்து வராது.   மான் தரையில் படுத்துவிட்டது. பிரசவவிக்கப் போகிறது. 

மான் மேலே பார்த்தது.    ''டம டம''  என்று  பெரிய இடி சத்தம்.    காதை செவிடாக்கும் சப்தம். பளிச் பளிச்சென்று மின்னல் வெட்டுக்கள்.  மின்னல் இடி விழுந்து  மான் படுத்திருந்த பக்கத்தில்  இருந்த  மூங்கில் காட்டில் தீ பிடித்ததால்  மூங்கில் மரங்கள் கபகபவென்று எரிய ஆரம்பித்துவிட்டது.   ஆபத்து ஏதாவது வந்தால்  இனி அந்த பக்கம் ஓடி தப்ப முடியாது.   தீ  கொஞ்சம் கொஞ்சமாக இந்த பக்கம் வேறு வந்து கொண்டிருக்கிறது.  

திரும்பி  ஆற்றங்கரை பக்கம் பார்த்தது மான். ஐயோ  இது என்ன ஆபத்து.  ஒரு  கருப்பு  ஆள்,  வேடன்,   ஆற்றிலிருந்து  கரை ஏறி, மான் இருந்த பக்கம் கையில்  வில் ஈட்டி அம்புடன் வந்து கொண்டிருந்தான்.

அடடா  இது என்ன ஆபத்து,  ஒரு பக்கம் நெருப்பு,  இன்னொருபக்கம்  ஆற்றில் இறங்கி ஓட முடியாது. வேடன் வருகிறான். வடக்கு மூலையிலிருந்து அப்போது தான  ஒரு சிம்ம கர்ஜனை. பசியோடு ஒரு சிங்கம் இறை தேடுகிறது.  மான் வாசனை மூக்கை துளைத்து விட்டது போல் இருக்கிறது.  ஆஹா  ஒரு நல்ல ஆகாரம் அருகிலேயே  எங்கோ இருக்கிறதா?

பிரசவ வலி அதிகரித்துவிட்டது. இதோ  இன்னும் சில நிமிஷங்களில் புள்ளி மான் குட்டி ஒன்று புத்தம் புதிதாக  பூமியில் தோன்றப்போகிறது.  தாய் மான்  என்ன செய்யும்? அது முதலில் பிழைக்குமா?குட்டி ஈனுமா? அதுவும் தப்புமா?

மானின் கண்கள்  தீனமாக எதையோ பார்த்தது. மனதில் யாரை வேண்டுகிறது? எழுதும் எனக்கு புரியவில்லையே?  வேடன் மானை பார்த்துவிடுவானா?   சிங்கம் முதலில் விழுங்குமா?  நெருப்பு பரவி  சூழ்ந்துகொண்டு  மான்  தீயில் வெந்து போகுமா?  இந்த நிலையில் பிரசவம் சுகமாக  நிறைபெறுமா ? என் அழகிய புள்ளி புள்ளி   குட்டியே  உன்னை பார்க்க வேண்டாமா நான்.....? கொஞ்சவேண்டாமா?  யார் உதவுவார்கள்?

மான் கண்ணுக்கு  யார் தோன்றி இருப்பார். கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று சொல்லி இருப்பார்?  என்ன சந்தேகம். புல்லாங்குழல் ஊதிக்கொண்டு மான்களோடு விளையாடும் கிருஷ்ணனுக்கு  தாய் மானுக்கு வந்த  இந்த  ஆபத்து, நெருக்கடி, தெரியாமலா போகும்?

ஆம். தெரிந்திருக்கிறது.  மேலே  பார்த்த மான் கண்களுக்கு   யாரோ தெரிந்தார்கள். அதற்கு நிம்மதி வந்தது.  கண்ணை மூடிக்கொண்டு ஒரே  முக்கு  முக்கி, அழகிய குட்டிமானை  வெளியே தள்ளியது.  இத்தனை ஆபத்துகள் சூழ்ந்திருக்க கவலையே இல்லாமல்  மான் குட்டி உலகை மிரள மிரள  ஆச்சர்யமாக  பார்வையிட்டது.   

திடீரென்று ஏன்  வேடன் அலறினான்?  அவன் தான் தூரத்தில் தரையில் படுத்திருக்கும் தாய் மானைப் பார்த்து விட்டானே. அம்பை   குறிவைத்து மானை நோக்கி விடும் நேரம்... ஐயோ,   பளிச் என்று ஒரு வெளிச்சம்.   மின்னல் அவன் கண்ணை பறித்து விட்டதே.  அந்த ஒளி கண் பார்வையை மழுங்க செய்த நேரம்  அவன் தொடுத்த அம்பு  திசை மாறி சரியாக சிங்கத்தின் மார்பில் பாய்ந்து அந்த க்ஷணமே சிங்கம் சுருண்டு விழுந்து இறந்தது.   மின்னல், இடியை தொடர்ந்து ஒரு பேய் மழை ஜோ என்று பெய்ய மூங்கில் காட்டு தீ அணைந்தது..... எங்கும் அமைதி,  நிசப்தம். பிரசவம்,   ஆபத்துகள், அவற்றின்  நீக்கம் எல்லாம் ஒரே சமயமா?

தாய் மான் மெதுவாக எழுந்து குட்டியை உடல் முழுதும் நக்கி கொடுத்தது.  தாய் அன்பு. 

தாய் மான் மேலே  பார்த்தபோது கிருஷ்ணனின் கண்களுக்கு  மான்  திரௌபதியை  நினைவூட்டி இருக்கலாம். க்ஷண நேரத்தில் அவள் மானத்தை  காப்பாற்றியது போல்  மானுக்குமா உயிர் பிச்சை? வாஸ்தவம் தான்.  திரௌபதி எல்லாவிதத்திலும் முயற்சி  செய்து ஒரு வழியும் தெரியாமல், ஒரு உதவியும் கிடைக்காமல்    ஹே  கிருஷ்ணா, ஆபத் பாந்தவா  என இருகைகளையும் உடலைவிட்டு  மேலே கூப்பி சரணடைந்தான் .  மான்  எங்கும் ஓட  தனது சக்தி எல்லாம் இழந்து  நாலா பக்க  ஆபத்திலிருந்து தன்னையும், தனது சிசுவையும் காப்பாற்ற மேலே பார்த்தது.   அதால் ''ஆபத் பாந்தவா''   என்று கண்ணால் மட்டும் தான் சொல்ல முடிந்ததோ? பூர்ண சரணாகதியோ?.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...