Tuesday, November 6, 2018

SUGAM SANGEETH


தியாகராஜ சங்கீதம் J.K. SIVAN
''நகுமோமு '' - ஆபேரி

அவ்வப்போது நேரம் கிடைத்தால் மனதில் பட்டால், சங்கீதம், பழைய பாடல்கள் பற்றியும் எழுத விரும்புவேன். சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லையே என்று ஒரு குறை அடிக்கடி துன்புறுத்தும்போது நாம் என்ன நிறைய புண்யம் பண்ணி இனி பிறவியே இல்லாமலா கிருஷ்ணனிடம் போகப்போகிறோம். ஞாபகமாக அடுத்தபிறவியில் (மானுடப் பிறவி எடுத்தால்!!) சங்கீதம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒரு முடிச்சு வேஷ்டியில் போட்டு வைத்துக்கொள்ளுகிறேன்.

தியாகராஜ ஸ்வாமிகளை விட அவரது கீர்த்தனங்கள் பிரபலமானவை.
ராமனை, கிருஷ்ணனை,சிவனை விட அவர்கள் நாமங்கள் சக்தி வாய்ந்தவை என்பதைப் போல. தியாகராஜ ஸ்வாமிகள் தெலுங்கர் என்பதால் கீர்த்தனங்கள் தெலுங்குகாரர்களுக்கு மட்டும் என்றில்லாமல் உலகம் முழுதும் பலதேசத்தில் பல மொழியினரால் கேட்கப் படுகின்றன. அவரது கீர்த்தனங்களுக்கு ஜீவன் ஊட்டுவது போல் அவர் அமைத்து இருந்த ராகங்கள் ஒரு காரணம்.

ரெண்டாவது பக்தி உணர்ச்சி. ஸ்வாமிகளின் கீர்த்தனங்களை எவர் பாடினாலும் அதன் ருசி அந்த ராகம் வழியாக செவிக்குள் நுழைந்து பக்தி பாவம் மனதுக்குள் இறங்கி கெட்டியாக இடம் பெறும். ராக தாளத்தை விட பாவம் முக்கியம்.

இன்று தியாகராஜ சங்கீதத்தில் எடுத்துக்கொண்ட கீர்த்தனை மிகப் பிரபலமான 'நகுமோமு''.

என்னைப் பொறுத்தவரை நான் முதலில் இந்த கீர்த்தனையால் தான் காலஞ்சென்ற ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணாவின் குரலுக்கு அடிமையானேன். இந்த கீர்த்தனையை அவர் விசேஷமாக ரசித்து, ஆலாபனை பண்ணி விஸ்தாரமாக பாடியதை சின்ன வயதில் கேட்டபோது சங்கீதம் தெரியாமலேயே மயங்கினேன். சங்கீதம் அறியாத தெலுங்கு தெரியாத இசை அறியாத ராகத்தால் பாவத்தால் வசமானவன்.

அதற்கப்பறம் எத்தனையோ முறை, இன்றைய காலை வரை அதை கேட்கும்போதும் அதே ஆர்வம், அதே தாகம், அதே உணர்ச்சி. கொஞ்சம் காது மந்தமாகிவிட்டதால் சற்று வால்யூம் மிகைப் படுத்தி கேட்கவேண்டியிருக்கிறது. ருசி குறைய வில்லை.

நமக்கு எத்தனையோ வசதிகள் வந்தாலும் சங்கீதம் கேட்க வாய்த்திருக்கும் யூ ட்யூப், ஆடியோ வீடியோ வசதிகள் மிகவும் வரப்பிரசாதமாக அமைந்தவை என்று சொல்வேன்.

அப்போதெல்லாம் மெழுகில் வார்த்த RPM லாங் பிளே ரிகார்டுகள், இசைத்தட்டுகள் 3 நிமிஷம் பாட பலமுறை ஒரு வெல்வெட் தட்டின் மேல் சுற்றும். அது சுற்றும்போது சவுண்ட் பாக்ஸ் ஊசி அந்த வார்ப்பு தட்டு மேல் சுகமாக நர்த்தனமாடிக்கொண்டே பிரயாணம் செய்யும். வரிசையாக வரிவரியாக தட்டு சுற்ற சுற்ற புனல் மாதிரி பெரிய ஸ்பீக்கர் வழியாக ஓசை கேட்கும். சரியான வேகத்தோடு ரிக்கார்ட் பிளேட் சுற்றினால் தான் இசையை கேட்கமுடியும். இல்லாவிட்டால் கர்ண கொடூர அழுகை. இன்னொரு விஷயம். இப்படி பிளேட் சுற்ற சாவி கொடுக்கவேண்டும். அதிகமாக கொடுத்தால் ஸ்ப்ரிங் .அறுந்து போகும். ஊசியை அடிக்கடி மாற்றவேண்டும்.

இன்னொரு முக்கிய சமாச்சாரம். மெழுகு இசைத் தட்டில் எங்காவது கீறல் இருந்ததோ அவ்வளவு தான். மேலே ஊசி சரளமாக நகரமுடியாமல் அந்த இடத்தையே திரும்ப திரும்ப பாடிக் கொண்டிருக்கும். மேற்கொண்டு கேட்க ஊசியை மெதுவாக தூக்கி நகர்த்தி அடுத்த கோட்டில் சரியாக மிருதுவாக வைக்க வேண்டும். ஊசி மெழுகு தட்டில் பள்ளம் பண்ணாமல் ஜாக்கிரதை......தேவை.

ஒருமுறை MS சுப்புலக்ஷ்மி பாடிய ''கண்டதுண்டோ கண்ணன் போல'' என்ற பிளேட் ''கண்ணன் போல'' என்ற இடத்தில் கீறல் விழுந்து ஊசி மேலே நகராமல் தட்டு மட்டும் சுற்றிக் கொண்டிருக்க, திரும்ப திரும்ப ''போல போல, லபோ, லபோ'' என்று ''லபோ லபோ'' என்று கத்திக்கொண்டே இருந்தது ஞாபகம் இருக்கிறது.

Pallavi:
Nagumomu Ganaleni Naajaali Delisi
Nannu Brova Raa Raadaa Sri Raghuvara! Ni

நகுமோமு கனலேனி நாஜாலி தெலிசி
நனு ப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர - நகு

Anupallavi:

Nagaraajadhara! Nidu Parivaarulella
Ogi Bodhana Jesevaaralu Gare Yatulundadura Ni

நகராஜ தர நீது பரிவாருலெல்ல
ஓகி போதன ஜெஸேவாரலு காரே யதுலுந்ததுரா நீ

Charanam:
Khagaraaju Niyaanativini Vega Chanaledo
Gaganaanikilagu Bahu Durambani Naado
Jagamele Paramaatma! Evarito Moralidudu
Vagajupagu Taalanu Nannelukora Tyagarajanutani

ககராஜு நியா நதிவினி வேக சானலேதோ
ககனாநிகி லகு பஹு தூரம் பானி நாடோ
ஜகமேலே பரமாத்மா எவரித்தோ மோரலிடுது
வகஜூபகு தாளனு நன்னெலு கோறா த்யாகராஜனுதனி (நகு )

O Rama! Supreme among Raghus! Missing your charming smile-lit face I languish here. Knowing my mental plight, cant you come and protect me?
O One who holds Govardhana hill! Members of your retinue who have the duty of reminding you of your daily engagements cannot fail in their duty.
Does not Garuda execute your commands expeditiously? Could he have excused himself saying that he was staying far from the earth in Vaikunta, your heavenly abode ? Exalted Lord! Ruler of the Universe! Whom else can I appeal to? Please shun disregard. I cant bear it. Take me into your fold.

இந்த கீர்த்தனை எழும்போது ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் மனத்தில் தோன்றிய எண்ணம்:

''ரகு குல ஒளி விளக்கே, ஓ ஸ்ரீ ராமா, உன் புன்னகை தவழ் திரு முக மண்டலத்தை காணாமல் அனலிலிட்ட மெழுகாக தவிக்கிறேனே, என் தாபத்தை உணர்ந்து வரமாட்டாயா, என்னை காத்திடவாயேன் காகுத்தா!
நீ தானே கோவர்தன கிரியை சுண்டுவிரலில் உயர்த்தி பிடித்தவன். கோப கோபியரை .காத்தவன். கேசவன்.
உன் பரிவாரங்கள் என்ன செயகின்றன. உனது கடமையை உனக்கு வேண்டாமா. அன்றாட வேலைகளை நினைவு படுத்த வேண்டாமா. என்னைக் காக்க வேண்டாமா? வேலையில் அவர்கள் ஏன் தவறுகிறார்கள்? ஏன் கருடன் நீ இட்ட வேலையை, கட்டளைகளை சரிவர வேகமாக செய்வதில்லையா? வைகுண்டம் தான் ரொம்ப தூரத்தில் இருக்கிறதே எப்படி பூமிக்கு உன்னைத் தூக்கி சென்று என் வேலையை செய்வது என்று சாக்கு போக்கு சொல்கிறானா? என்னிடம் நீ பண்ணுகிறானா? மகா ப்ரபோ, லோக நாயகா, வேறு நான் யாரிடம் முறையிடுவேன். என் ஆதங்கத்தை எங்கே போய் எவரிடம் சொல்வேன்? என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் தள்ளாதே, நான் தாங்க மாட்டேன். என்னை உன் பரிவாரத்தோடு சேர்த்துக்கொள்ளேன்''

அசாத்தியமாக ஆபேரி என்று ஒரு மனம் கவரும் ராகத்தை ஸ்வாமிகள் இந்த கீர்த்தனத்துக்கு பொருத்தி இருக்கிறார். பால முரளியை சுகமாக கேளுங்கள். இது தான் லிங்க் அதை சொடுக்கி தியாகராஜரோடு லயித்து ராமனை தேடுங்கள்https://youtu.be/aktURvfHWnE

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...