Sunday, November 4, 2018

DEEPAVALI



DEEPAVALI STORY J.K. SIVAN

அசுரனின் ஆசை
பௌமாசுரனுக்கு ( பூமாதேவியின் புதல்வன்) ,இன்னொரு பேர் நரகாசுரன். அந்தக்காலத்தில் நாம் ஐயர் , ஐயங்கார் என்று பேருக்கு பின்னால் போட்டுக்கொள்கிறோமே அது போல் அசுரர்களும் அசுரன் என்று தம்மை சொல்லிக் கொள்வார்களோ? அல்லது மற்றவர்கள் ஆத்திரத்தோடு இட்ட பட்டப்பெயரோ தெரியவில்லை.

அசுரர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு கடும் தவம் செய்து வரம் பெறுவார்கள். நிறைய யோசித்து கெட்டிக்காரத் தனமாக வரம் கேட்பார்கள். பௌமாசுரன் (எ )நரகாசுரன் அவ்வாறே தன்னை தனது தாயைத் தவிர வேறு எவரும் கொல்ல முடியாத வரம் பெற்றான். எந்த தாயும் பெற்ற மகனை கொல்லமாட்டாளே என்ற தைரியம். கலிகாலம் அவனுக்கு தெரியாதே. அவன் துவாபர யுகத்து ஆள்.

எனவே தான் கிருஷ்ணன் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவை கூட்டி வந்து, தானே அவளுக்கு சாரதியாக உதவிசெய்து அவள் மூலம் நரகாசுரனை கொன்றார் . இதை தான் கதையாக சொல்கிறேன்.

“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!!!” -- இதை யார் சொல்லியிருந்தாலும் அதை முற்றிலும் தவறு என கொள் வதா, வேண்டாமா என்பது நமக்கு இப்போதைய ஆராய்ச்சி அல்ல. அதற்கு நேரமும் இல்லை. ஏனெனில் அதோ பாருங்கள், வெகு வேகமாக கண்ணன் தேரை சத்யா பாமா ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

இடியோசை போன்ற பிளிறலுடன் நரகாசுரனே எதிரே வருகிறான். பயங்கர கோபமும் ஆத்திரமும் அவனுக்கு!!.

நரகனுக்கு ஒரே ஆச்சர்யம் . என்ன இது? அசகாய சூரன், வீராதி வீரன், எவருமே எதிர்க்க அஞ்சும், ஆனானப்பட்ட முரன் கூட இந்த கிருஷ்ணனால் கொல்லப்பட்டானே. மலைபோல அல்லவா முரனை நம்பியிருந்தோம்??. கஷ்டங்கள் தனித்தே வருவதில்லையா?”

என் ஆசை சகோதரி, சக்தி வாய்ந்தவள், மாயாவி, நக்ரதுண்டி வெறுங்கையுடன் திரும்பியதல்லாமல் அவமானப்பட்டு மல்லவா அழுது கொண்டு வந்தாள்!!!. இதற்கெல்லாம் பழிக்குப் பழி இதோ இப்போதே வாங்குகிறேன். இன்றோடு கிருஷ்ணன் ஒழிந்தான்!!

இந்த எண்ணங்களுடன் தான் நரகன் யுத்தத்தில் இறங்கினான்.

நரகாசுரன் படைகளும் த்வாரகை விருஷ்ணி குல வீரர்களும் அங்கங்கு மோதிக்கொண்டிருக்க நரகன் கிருஷ்ணனையே குறி வைத்தான். அம்புகள் மழையெனப் பொழிந்தன. யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பு, வீரர்களின் ஆக்ரோஷ சப்தம், இடியென முழங்கும் கதாயுத மோதல், வாட்கள் உராய்வு, ரத்தமும் வலியும் பெருக வீரர்களின் மரணக் கூச்சல், மேலே கூகைகள்,பருந்துகளின் சப்தம், இவற்றுக்கிடையே கிருஷ்ணனின் தேர் வளைந்து நெளிந்து சென்று நரகனின் தாக்குதலை, அம்புகளை தவிர்த்தது. கிருஷ்ணனின் சரங்களும் குவிந்து சென்று நரகனை வாட்டின.

நேரம் சென்றதே தவிர வெற்றி தோல்வி எதுவும் சொல்ல முடியாமல் நரகாசுரன்-கிருஷ்ணன் யுத்தம் நீண்டது.

சத்யபாமா பாமா தேர் ஓட்டுவதில் அனுபவசாலி என நிரூபித்தாள். அவள் க்ரிஷ்ணனுக்காக தேர் ஓட்டினாலும் அவ்வப்போது கிருஷ்ணனுக்கு ஆயுதம் தேர்ந்தெடுத்து உதவினாள். கிருஷ்ணனின் உடலிலும் வியர்வையும் ரத்தமும் ஆறாகப் பெருகி தேரில் வழிந்தது. நரகனோ ரத்தத்திலேயே குளித்துக் கொண்டிருந்தான்.

மாலையும் வந்துவிட்டது. இருள் இன்னும் சற்று நேரத்தில் கவிந்து வரும். இரவில் அசுரர்களுக்கு பலம் அதிகரிக்கும்.

கிருஷ்ணனுக்கு திடீரென்று அந்த முடிவு எடுக்கவேண்டும் என தோன்றியது. ஒரு இளம் சிரிப்பு அவன் முகத்தில் மின்னிற்று.

“ எனக்கும் வயதாகிவிட்டதே!! சே, மறந்தே போனேன். அனாவசியமாக ஒரு சிறு கதையை தொடர்கதையாக்கி விட்டேன்!!””. அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது கிருஷ்ணனுக்கு.

“”பாமா!! தேரை யானைப் படைகள் பின்னால் செலுத்து. தேரை நிறுத்து. நீ தேர் தட்டுக்கு வா. நான் தேரைச் செலுத்துகிறேன். இந்தா நான் கொடுக்கும் இந்த பாணங்களை நரகனின் மேல் விடாது செலுத்து.”

எங்கே கிருஷ்ணனைக் காணோம் என்று தேடிக்கொண்டிருந்த நரகாசுரனின் கண்களில் மீண்டும் கிருஷ்ணனின் தேர் தென்பட்டதும், அவன் தேரை நரகன் துரத்தினான். கிருஷ்ணனும் தேர் செலுத்திக்கொண்டே எப்படி அம்புகளை எய்ய வேண்டும் என்று வாய் ஓயாமல் பாமாவுக்கு சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வாறே பாமாவும் சரமாரி பொழிந்தாள். முதலில் நரகனின் குதிரைகள் மாய்ந்து விழுந்தன. கொடி அறுந்து விழுந்தது. அதற்கும் முன்பாக நரகனின் கிரீடமும் போட்டி போட்டுக்கொண்டு உருண்டு விழுந்தது. அவனது ரதத்தின் சக்கரங்களை ஓடித்தான் கிருஷ்ணன். ஓட முடியாமல் வில்லின்றி நரகன் தேர்க்காலில் விழுந்தான் நரகாசுரனை வாட்டியது பாமாவின் கணைகள்!!.

கிருஷ்ணனின் சக்ரா யுதம் நரகனின் மார்பை இரண்டாக பிளந்தது. அரை உயிருடன் தடுமாறும் வார்த்தைகளில் நரகன் பேசினான்.

“கிருஷ்ணா!!, நீ ஒரு பேடி. ஒரு பெண்ணை முன் நிறுத்தி யுத்தம் செய்தாய்,!! உன்னால் என்னை ஜெயிக்க முடியாதல்லவா?? "

“நரகா, மறந்து விட்டாய் போலிருக்கிறதே. நீ விரும்பியது அவ்வாறே அல்லவா?? நீ கேட்டபடியே தான் நான் உன் முடிவைத் தந்தேன்!!!!”

“வரம் கேட்பதும் பெறுவதும் எளிதல்ல. கடும் தவம் செய்து பெற்றதை விரயம் செய்து உன் அழிவை நீ தேடிக்கொண்டாய்!! ஆனால் ஒன்று நிச்சயம். உன்னுடன் யுத்தம் செய்ய நான் மிகவும் பிரயாசைப் பட வைத்தாய். அப்போது தான், ஒரு பெண்ணால், அதுவும் உன் தாயால் மட்டுமே உன் முடிவு என்று நீ கேட்டு பெற்ற உன் வரம் எனக்கு நினைவுக்கு வந்தது. என்னுடன் யுத்தம் செய்த நீ நற்கதியே அடைவாய்!!”

“கிருஷ்ணா!! உன் பெருமை உணர்ந்தேன். மனிதர்களே, அரசர்களே, தேவர்களே, மறந்து தவறு செய்யும்போது நான் ஒரு அசுரன் தவறு செய்வதில், மறந்ததில், என்ன ஆச்சர்யம்!!??. இந்த நாளில் நம் யுத்தம் அனைவருக்கும் நினைவு வரட்டும் நான் உன் கையால் மடிவதில் எனக்கு பாக்யமே!”

“ நரகா. உன் விதியை நீயே தேடிக்கொண்டாய். சத்யபாமா உன் தாய் பூமாதேவி அம்சம். நீ பௌமாசுரன் என்ற பேர் அவளால் தானே பெற்றவன் அல்லவா ?

''நரகா, எனினும் நீ விரும்பியவாறே ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐப்பசி சதுர்த்தசி நரக சதுர்த்தசி என உன் பெயராலேயே தீபாவளி என ஒரு சிறந்த நாளாக மக்கள் பூமியில் கொண்டாடுவர். நமது யுத்தம் ஒரு சில வாண வேடிக்கைகளுடனும் (பட்டாசு) சரங்களுடனும், (தரை, விஷ்ணு) சக்கரங்களுடனும், ஒளியும் ஒலியுமாக நினைவுக்கு வரும். அனைவரும் இனிப்பு உண்டு வழங்கி, புத்தாடை உடுத்தி, கொண்டாடப்படும் மகிழ்ச்சி தரும் பண்டிகை நாள் ஆகும் திருப்தியா, நரகா??!.

நரகன் பேசவில்லை. அவன் கண்கள் பேசின. அவன் ஆனந்தமயமான கிருஷ்ணனை தரிசித்தான். இரு கரங்கள் மேலே எழும்பி கூப்பின. திருப்தி திருப்தி திருப்தி என உணர்த்தின.

கண்ணன் ஆசி அருளினான். நாமும் ஒரு விதம் என்ன, பல விதத்தில் நரகர்களாக திகழ்கிறோமே. சிரம் மேல் கரம் உயர்த்தி ''கிருஷ்ணா'' என இன்று தீபாவளி நன்னாளில் வணங்குவோம். நம்மையும் அன்போடு நேசத்தோடு வாழ்த்துவான் கண்ணன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...