Friday, November 9, 2018

KRISHNA DHARSHAN




​​           கிருஷ்ண தரிசனம்  -  J.K. SIVAN 



''கடவுளை நாம்  பார்க்க முடியுமா?'' எங்கே போனால்  கிடைப்பார்?

'எதுக்கு  உனக்கு  இப்போ  அந்த  கவலை?

''இல்லை  நிறைய  அவரைப்பத்தி  கேக்கிறதாலே  பார்க்கணும்னு தோணறது.'  நமக்கு  அவர் தானே  எல்லா உதவியும் செய்கிறார் , கடவுள்  ரொம்ப  நல்லவர்  என்று சொல்வாயே.  நான்  அவரைப் பார்க்கணுமே '' -- பன்னிரண்டு வயது கோவிந்தாச்சாரி  அம்மாவிடம்   பேசின பேச்சு இது.   இவனுக்கு  என்ன  பதில் சொல்வது.  திணறினாள்  வேதவல்லி.

''என்ன  பேசாமல் இருக்கிறாய்.  சீக்கிரம்  சொல்லு.  நான்  எங்கே  போய்  அந்த  கிருஷ்ணனைப்  பார்க்க முடியும்.''

 திடீரென்று அவளுக்கு  ஒரு எண்ணம் தோன்றியது.

''கடவுள் தான்  கிருஷ்ணனா  இருக்கிறார். கிருஷ்ணனைப்  பார்க்க வேண்டு

மானால்  அதோ   அந்த  ஆற்றங்கரை ஓரமாகவே  நடந்து போ,  தூரத்தில்  தெரிகிறது  பார்  ஒரு சின்ன மலை. அதன் மேல் ஒரு  கோவிலில்  கிருஷ்ணன்  இருப்பான்  போய்ப் பார்த்துவிட்டு வா ''.

அங்கு  ஒரு  கிருஷ்ணன்  கோயில் இருப்பது  தெரியும் அவளுக்கு​. ​பலமுறை ​ அவளே  சின்ன வயதி​லிருந்து   அந்த கோவிலுக்குச்  சென்றிருக்கிறாளே .

கோவிந்தாச்சாரி  மறுநாள் காலை  நிறைய  ரொட்டிகளை பொட்டலம்  கட்டிக்கொண்டு  ஒரு  பாத்திரத்தில்  குடிக்க  நீர் எடுத்துக்கொண்டு  முதுகில் ஒரு மூட்டையோடு  மலையை நோக்கி  நடந்தான்.  எப்படியும்   ரொம்ப தூரம் நடந்தாக வேண்டும்.  நடந்தான்.  சூரியன் தலைக்கு மேல்  வந்து விட்டது.  இன்னும்  பாதி தூரம்  கூட  கடக்கவில்லை.  ரொம்ப  களைத்துப்போய்விட்டான் . சரி  எங்காவது இளைப்பாறலாம்  என்று  இடம் தேடியவன் கண்ணில்  ஒரு  மாந்தோப்பு  தென்பட்டது. அதன்  அருகிலேயே ஒரு சின்ன தாமரைக் குளம்  கூட  இருந்தது  சௌகர்யமாக  போய்விட்டது.

கோவிந்தாச்சாரி  குளத்தங்கரையில்  ஒரு  தாத்தா   உட்கார்ந்திருந்ததைப்  பார்த்தான்.  அந்தக் குளத்தில் ஒரு  வெள்ளை  வாத்து  தன குஞ்சுகளோடு ஆனந்தமாக நீரில்   நடமாடிக்கொண்டிருந்தது  பார்க்க  அழகாக இருந்தது.   கிழவர் அதைக்கண்டு ரசித்துக்கொண்டிருந்தார்.

சற்று தள்ளிப்போய்  பசி  வயிற்றைக்  கிள்ள  கோவிந்தாச்சாரி  ஒரு  ஓரமாகபோய் உட்கார்ந்து  மூட்டையை  அவிழ்த்தான்.

எப்படித்தான்    அந்த  வெள்ளை  அம்மா  வாத்து அவனுக்கு  நெருக்கமாக  தனது  குடும்பத்தோடு நின்று கொண்டிருந்தது. கோவிந்தாசாரிக்கு  அதைப்பார்த்ததில்  சந்தோஷம்.  கொஞ்சம்  ரொட்டியை துண்டுகளாக்கி  தண்ணீரில்  வீசினான்.  அம்மா வாத்து லாகவமாக  அதைப்பிடித்து  தானும்  உண்டு தனது  வாரிசு
களுக்கும்  விட்டுக்​ ​கொடுத்தது.  அவற்றின்  சந்தோஷமான  சப்தம்  அந்த குளக்கரை நிம்மதியில் கேட்டது.  நாலைந்து  ரொட்டிகள் ​இவ்வாறு ​ துண்​டுகளாகி   வாத்து குடும்பத்திற்கு ஆகாரமானது. கிழவர்   கைதட்டல் கோவிந்தாசாரியின்  கவனத்தை ஈர்க்க அவரது  முகம்  பிரகாசமாக  இருப்பதைக்  கண்டான்.  அவருக்கும்  ஒரு  ரொட்டியைக் கொடுத்தான்.  பசி போல்  இருக்கிறது  அவருக்கும். ஆவலாக  வாங்கி  பல்லில்லாத  வாயில்  மென்று மென்று  சாப்பிட்டார்.

ஒன்றுமே  பேசவில்லை.  தலையை  ஆட்டினார்.அவரது  முகத்தில்  ஒரு  சாந்தமும்   காந்த  சக்தியும் இருந்தது  எங்கேயோ  பார்த்தமுகமாக  தோன்றியது.  கோவிந்தாச்சாரி  யோசித்தான்.  ஆஹா.  நமது வீட்டில்  ஹாலில்  இருக்கும்   சீரடி சாய்பாபா முகம் மாதிரியல்லவா  இருக்கிறது. வெள்ளை தாடி,  சுருங்கின  கன்னம் . கோடு  கோடாக  நெற்றி.  முகத்தின் சிரிப்பு  அவனை  வசீகரித்தது. கழுத்தை சாய்த்து தன  கையில்  வைத்திருந்த  ஒரு சிறு குச்சியால்  வாயைத் தட்டியபடியே  தலையை  ஆட்டி  ஆட்டி  மகிழ்ந்தார். ரொட்டியை  ​அவர் மென்று  தின்ற விதம்  அவ​ருக்கு அது  பிடித்தது போல்  காணப்பட்டதால்  மீண்டும்  சில  ரொட்டிகள்  வாத்துகளுக்கும் கிழவருக்கும்  கை மாறின.

ரெண்டு மணி நேரமும்  போனதே   தெரியவில்லை. கொண்டுவந்த  18 ரொட்டியும்  தீர்ந்து போய் விட்டது.  வாத்து குடும்பம், வயதானவர்​, ​  கோவிந்தாச்சாரி மூன்று  பேரும்  அதை​  தின்று தீர்த்துவிட்டனர். சந்தோஷம்  அவனுக்கு.  கிழவரும்  வாத்துகளும்  அவனுக்கு அவ்வளவு  மகிழ்ச்சியை அளித்​தார்களே. கிழவர்  ​கண்களின் ஒளி  அவரது  மலர்ந்த முக​ம்  அவன் மனதில் இடம் பிடித்தது.  அவருக்கு  பசி இல்லை இப்போது.  வாத்துகளுக்கும்  ரொட்டி  மீனையும் புழுவையும்  விட  ​ அன்று கிடைத்த ரொட்டி  ​நல்ல  உணவாக அமைந்தது.  ஒரு வார்த்தை  கூட  கிழவர்  அவனோடு பேசவில்லை.  ஒருவேளை  தமிழ்  தெரியாதோ  என்னவோ​?

பொழுது சாய்ந்தது.  இருட்ட  ஆரம்பித்தது.  கையில்  உணவோ தண்ணீரோ  காலி.  எனவே  மலைக்கு போகும்  உத்தேசத்தை கோவிந்தாச்சாரி  விட்டுவிட்டான்.  வீடு திரும்பினான்.  அவன்  மனம் பூரா  குதூகலம். கிழவரும்  எழுந்து போய்விட்டார்.  வாத்து​ குடும்பம் அங்கேயே  வழக்கம்போல்  இருந்ததன் காரணம்  அது தான்  அவற்றின் வீடு.  மற்ற  இருவரும்  விருந்தாளிகள் தானே.

கிழவர்  போகுமுன்  கோவிந்தாசாரியை  இழுத்து  அணைத்து  கட்டி  கன்னத்தில் முத்தமிட்டார். ஏனோ  கோவிந்தனுக்கும் அவரைப்பிடித்துவிட்டதால்  அவரை கழுத்தில்  கட்டிக்கொண்டான்.

இரவு  வீடு திரும்பிய  பையனை  அம்மா கேட்டாள்.

என்னடா கோவிந்து  உனக்கு  முகத்தில்  இத்தனை  சந்தோஷம். கிருஷ்ணனைப்  பார்த்ததிலா? 

இதற்குள்  கோவிந்தனின்  கண்கள்  ஹாலில்  இருந்த ஷிர்டி பாபா படத்தை  பார்த்ததால்  அந்த கிழவர்  சாயல் முகத்தில் தோன்றியதைவிட  ஒரு  அதிசயம்  காத்திருந்தது. சுவற்றில் மேலே  கிருஷ்ணனின்  படம்  இப்போது கண்ணில் பட்டது.  கண்களின் காந்த சக்தி,  வாயில்  புல்லாங்குழல்  சாய்ந்த  தலை, கழுத்து   எங்கோ பார்த்தோமே  என்று  யோசிக்க வைத்தது.  ஆஹா  அந்த கிழவரின் கண்கள்,  அவர்  தலையை​  அசைத்து  வாயில்  ஒரு குச்சியை தொட்டுக்​ ​கொண்டிருந்தது, மலர்ந்த  முகம், சிரிப்பு  எல்லாம் நினைவுத்திரையில்  படமாக  ஓடியது.

''என்னடா  கேட்கிறேன்  சுவற்றைப்பார்த்து  வாயைப்  பிளந்துகொண்டு  நிற்கிறாய்.​ 
 ​என்ன  கிருஷ்ணனைப் பார்த்தாயா.?''

''ஆஹா   நன்றாய்  பார்த்தேன்,  கிருஷ்ணனோடு  நான் இன்று  ரொட்டிகூட  சாப்பிட்டேன்''  என்று மு​ணு  ​மு​ணுத்தான் கோவிந்தாச்சாரி​.​

.''அம்மா  உனக்குத் தெரியுமா,  கிருஷ்ணனின் சிரிப்பு  கொள்ளை கொள்ளச் செய்வது.  கண்களில்  ஒரூ விதமான  ஒளி  உள்ளத்தை மயக்கும்  பார்வை, பார்ப்பதற்கு  கிழவராக  இருந்தாலும்  காந்த சக்தி  அவரிடம் இருந்தது.  என்னை  ஸ்பரிசிக்கும்போது  நான்  எங்கோ போய் விட்டேன். கிருஷ்ணன் வாயால் பேசவில்லை.  ஆனால் என்  மனத்தை  நிரப்பிவிட்டார்." 

ஊருக்கு  வெளியே  ஒரு  வீட்டில்  இருவர்  பேசிக்கொண்டிருந்தனர்  ஹிந்தியில்.

''எங்கே உன்னைக்காணோம்  நாள்  முழுதும். எங்கே  போய்  இருந்தாய் வயசான  காலத்தில்  நேரத்தோடு  வராவிட்டால்  கவலையாக இருக்கிறதே. என்றான் மகன்  அப்பாவிடம்.

''இல்லை மகனே,  இறைவன் வசிக்கும் இடம்  பார்த்தேன். மகிழ்ச்சியில்  அங்கேயே  உட்கார்ந்து விட்டேன்.  இன்று  இறைவனோடு உணவும் சாப்பிட்டேன்.''

''என்ன சொல்கிறாய் அப்பா?  நீ பகவானோடு  சாப்பிட்டாயா?

''ஆமாமடா  மகனே, ஒரு விஷயம்  சொல்லட்டுமா.   அந்த  பகவான்  சின்னப் பையனாகத்தான்  இருந்தான். நான் எதிர்பார்க்கவே  இல்லை. எனக்குப்  பசி.  அவன் தான்   ரொட்டி கொடுத்தான்.  அவனை  அணைத்தேன். உச்சி முகர்ந்தேன்   கன்னத்தில் முத்தமிட்டேன்.  எனக்கு  ரொம்ப  சந்தோஷம்.  பேசவே  தோன்றவில்லை.  அவனை  கண்ணாரப் பார்த்துக்கொண்டிருந்தேன். பேச்சு வரவில்லை​''​.

இப்போது புரிகிறது.  நாம்   எத்தனைமுறை  நம்மை வந்தடைந்த  ஸ்பரிசம்,  புன்னகை, ஒரு  வார்த்தை,  ஒரு  தலையாட்டல்,  தொடல்,  இதையெல்லாம்   உதாசீனப்படுத்துகிறோம்.   மனிதர்களை வைத்து  இவற்றை  எடைபோடுகிறோம்.  அன்பைப்  பார்ப்பதில்லை,  கலப்பற்ற  பாசம், நேசம்  இதெல்லாம் ​நம்மை வந்தடைவதை ​ கவனிப்பதில்லை.​ உணர்வதில்லை. ​  அப்படி  நம்  வாழ்வில்  வந்த  ஒவ்வொருவரும்  ​இறைவனால்  அனுப்பப்பட்டவர்களோ,  அவனேயோ  தான்.​ ஏதோ  ஒரு காரணத்து​​​க்காகவோ, ஒரு காரியத்துக்​காகவோ, குறிப்பிட்ட  காலத்திலோ  தான் ​நம்மை மகிழ்விக்க, இன்புறச்செய்ய,  நம்மிடம்  வந்தவர்கள  உண்மை தெரியாமல்  அறியாமல்   புறக்கணித்தது, வீடுதேடி வந்த தெய்வத்துக்கு  கதவைச் சாத்தினது  மட்டும்  தான்  நாம்  செய்தது.
 உண்மைதானே?  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...