Friday, November 2, 2018

HISTORY



ஏன் தீபாவளி கிடையாது ?
J.K. SIVAN

சரித்திரத்தை நாம் முழுமனதோடு ஏற்க மனம் வரவில்லை. நேற்று நடந்ததை , கண்ணாலே பார்த்ததை இன்று பேப்பரில் வேறு விதமாக போடுகிறார்கள். எல்லா பத்திரிகையும் ஒட்டு மொத்தமாக ஒன்றாக சொன்னால் அது தான் நிஜம் என்று ஆகிவிடும். பல வருஷங்கள் தாண்டி எல்லோரும் அந்த சம்பவத்தின் உண்மையான விபரத்தை எவரோ சொல்லும்போது ''அதெல்லாம் கப்ஸா, பொய் , இது தான் நிஜம் என்று தாங்கள் எழுத்தில் படித்ததை மேற்கோள் காட்டும் அறிவு ஜீவிகள் உண்டே. எல்லோரும் அதை தான் நம்புவார்கள். எந்த ராஜாவுக்கு பயந்து எந்த எழுத்தாளன் சரித்திரக்காரன் என்ன திரிசமன் பண்ணினானோ. கஞ்சனை கர்ணன், கொலையாளியை தர்ம நீதி வான் என எழுதாவிட்டால் அவன் கதி? தலை தப்புவது முக்கியமா? உங்களுக்கு உண்மையை சொல்வது அவனுக்கு முக்கியமா?

திப்பு சுல்தான் பற்றி இப்படித்தான். அவன் மத வெறியன். இந்து கோவில்களை இடித்தவன் , பல இந்துக்களை கொன்றவன். அராஜகன் என்று ஒரு சாரார் சொல்வார்கள். அப்படி யார் சொன்னது? பாவம் முதலில் வெள்ளைக்காரர்களை வரவிடாமல் எதிர்த்து உயிரையே விட்ட சுதேசி தியாகி. சுதந்திர வீரன் என்றும் சிலர் புகழ் மாலை இடுகிறார்கள்.

''அடே திப்பு, நீ யார் உண்மையில்? உன்னை துப்பு துலக்க முடியவில்லையே ?''

திப்பு சுல்தான் நிறைய இந்து கோவில்களுக்கு மானியம் விட்டிருக்கிறானாம். சிருங்கேரி, மேல்கோட்டையில் செலுவ நாராயணன், யோக நரசிம்மன் கோவில்களுக்கு வாரி வழங்கியவனாம். அவன் அரண்மனை பக்கத்திலேயே ஸ்ரீரங்கபட்டணத்திலும் நஞ்சங்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கும் நிறைய உதவிகள் செய்தவனாம்.

அதே சமயம் கேரளாவில் நிறைய பேரை ஆடுகள் போல் வெட்டியவன். நரகாசுரன் தான் .மேல்கோட்டையில் 800 பிராமணர்களை தீபாவளி அன்றே கொன்றவன். இருநூறு வருஷங்களுக்கு மேல் ஆகியும், இன்றும் மாண்டியா ஜில்லாவில் திப்புவை நினைத்து பொருமுகிறார்கள். சாப மிடுகிறார்கள். திப்புவால் உயிரிழந்தவர்கள் மண்டையம் அய்யங்கார்கள். அவர்கள் தான் அங்கே அதிகமாக இருந்தவர்கள். அவர்கள் எல்லோருமே பாரத்வாஜ கோத்ரக் காரர்கள். மொத்தமாக திருப்பதியிலிருந்தது அங்கே குடிபெயர்ந்த குடும்பங்கள்.ராமானுஜர் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்த வைஷ்ணவர்கள். ஸமஸ்க்ரித நிபுணர்கள். பேசுவது மண்டையம் அய்யங்கார் தமிழ். எல்லோருமே தென்கலை வைஷ்ணவர்கள். அவர்கள் மடிந்த காலம் கிழக்கிந்திய கம்பனி வெள்ளைக்காரர்கள் ஆங்கிலோ-மைசூர் மூன்றாவது கடைசி யுத்தம் நடத்திய போது. வெல்லெஸ்லி என்பவன் பற்றி சரித்திர பாடத்தில் படித்து மனப்பாடம் செய்து நிறைய மார்க் வாங்கியது ஞாபகம் வருகிறது. வெள்ளைக்காரர்களின் உடன்படிக்கை கண்டிஷன்கள் திப்புவுக்கு கோபத்தால் மீசையை துடிக்க வைத்தது. அவனது துரோகிகள் மேல் ஆத்திரம் வந்தது.

ஒருநாள் குக்கர் மூடி உஷ்ணத்தால் வெடித்தது! திப்புவின் மந்திரிகளில் ஒருவன் ஷாமைய அய்யங்கார். மைசூர் ராஜாக்களாக இருந்த உடையார்கள் வெள்ளைக்காரன் அடிவருடிகள் துரோகிகள் என திப்பு நினைக்கும்போது ஷாமையா உடையார் ராணி லக்ஷ்மம்மணி யோடு சேர்ந்து வெள்ளைக்காரர்கள் பக்கம் போனதோடு அல்லாமல் வெள்ளையர்கள் திப்பு சுல்தானை அழிப்பதில் அவனும் கூட இருந்தால் திப்பு வெடிக்காமல் என்ன செய்வான்?

''எல்லாம் என் தந்தை ஹைதர் அலி செய்த தப்பு. அக்கிரமம். இந்த மண்டையத்து அய்யங்கார்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதித்ததால் வந்த வினை'' என்று பொருமினான். உடையார் ராணிக்கோ ஹைதர் தன்னுடைய மைசூர் ராஜ்யத்தை அபகரித்துக் கொண்டதில் கோபம். அதை திரும்ப பெற எந்த வழிக்கும் அவள் தயார்.
சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள். 1760ல் திருமலை ராவ், நாராயண ராவ் என்ற இருவரிடமும் ''எனக்கு மைசூரை எப்படியாவது மீண்டும் உடையார் ஆட்சிக்கு கொண்டுவந்தால் உங்களை பிரதானமந்திரிகளாக்குவேன். மைசூர் ராஜ்ய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு உங்கள் சம்பளம்'' என்று ஆசை காட்டினாள். இருவருக்கும் சந்தோஷம்.

அரசல் புரசலாக விஷயம் ஹைதர் காதுக்கு கசிந்துவிட்டதும் அவன் அவர்கள் உறவினர்கள் எல்லோரையும் சிறையில் அடைத்தான். ஹைதர் மரணத்திற்கு பின் திப்பு உடையார்களையும் அவர்கள் திட்டங்களையம் ரகசியமாக கண்காணித்து வந்தான். கிட்டே போகவில்லை. ஷாமையா அய்யங்கார் மூலம் வெள்ளைக்கார அதிகாரிகளை ராணி சந்திக்கிறாள் என்று அறிந்து கொண்டான். ஷாமையாவை பழிவாங்க துடித்தான்.

சென்னையில் கோட்டையில் திருமலை அய்யங்காருடன் வெள்ளைக்காரர்கள் ஒப்பந்தம் கையெழுத்து விட்டுவிட்டார்கள் என்று தெரிந்தான். திருமலை அய்யங்காரை வெள்ளைக்காரன் மைசூருக்கு பிரதான மந்திரியாக்கிவிட்டான். திருமால் ராவ் என்று தான் வெள்ளைக்காரர்கள் அவனை குறிப்பிட்டார்கள்.

ஒரே நாள் இரவில் திருமலை ஐயங்காரின் அனைத்து உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் குஞ்சு குடுவா, அனைவரையும் மேல்கோட்டையில் திப்பு படுகொலை செய்தான். எல்லோரும் விடிந்தால் தீபாவளி கொண்டாட சந்தோஷமாக இருந்த 800 பேர். விடிந்ததும் மேல்கோட்டை காலியாகிவிட்டது. மீதி உயிர் தப்பியவர்கள் இரவோடு இரவாகவே ஊரை விட்டு ஓடிவிட்டார்கள். சமஸ்க்ரிதம் அழிந்தது. கோவில் குளங்கள், புஷ்கரணிகள், கல்யாணிகள் என்று பேர் கொண்டவை. மேல்கோட்டையில் 27 கல்யாணிகள் பராமரிப்பு இன்றி வறண்டது. நீர் பஞ்சம். வியாதி எங்கும் பரவியது. பச்சையாக இருந்த மலைகள் செம்பட்டை நிறமாகி நின்றன. வறட்சி.

அன்றுமுதல் மண்டயத்து அய்யங்கார் களுக்கு தீபாவளி என்றாலே வெறுப்பு. கொண்டாடுவதில்லை. துக்கநாள். சரித்திரம் இதெல்லாம் சொல்லவில்லை. ஏனோ? உள்ளூர் காரர்கள் வம்சாவழியாக நினைவில் கொண்ட சமாச்சாரம். பொய்யென்று எப்படி தள்ளுவது?

டாக்டர் M.A . ஜெயஸ்ரீ, M .A . நரசிம்மன் ஆராய்ச்சி செய்த்துள்ளார்கள். சம்பவம் நடந்தது உண்மையாம். கொல்லப்பட்டதில் அநேகர் பெண்கள். மைசூர் த்வன்யாலோகா வில் ஒரு மாநாட்டில் இதை வெளியிட்டார்கள். ராணி லக்ஷ்மம்மாணி தனது வம்சம், உடையார்கள், மீண்டும் ஹைதரிடம் இருந்து கைப்பற்றப்பட்டு மைசூர் தம் வசமாக ப்ரயத்தனப் பட்டதை ஹய வதன ராவ் என்பவர் ஆராய்ந்து மூன்று பாகங்களாக ஒரு மைசூர் சரித்திர நூல் எழுதி இருக்கிறார்.
ராணியின் முயற்சியால் அவளது கணவர் கிருஷ்ணராஜ உடையார் மைசூர் ராஜாவானார். இதற்கு உதவியவர்கள் திருமலை அய்யங்கார், நாராயணராவ். பிரதான மந்திரிகள். உடையார் வம்சத்திற்கு உழைத்தவர்கள். ராணியுமில்லை, ப்ரதானா மந்திரியுமில்லை, மண்டையத்தய்
யங்கார்களின் மண்டை உடைந்ததும் சரித்திரத்தில் காணோம். தீபாவளி போது தான் எங்கோ யாரோ அந்த வம்சத்தினர் வயிறெரிகிறார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...