Wednesday, November 28, 2018

SRI RAGAVENDRAR

ஸ்ரீ ராகவேந்திரர்    

                                                   மந்த்ராலய மஹான்

ஒரு இடத்தில் ஒரு இரவுக்கு மேல் தங்காத  உண்மையான சந்நியாசி  ராகவேந்திரர்.  ஒருநாள் எங்கோ காட்டுப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்.    மிகவும் களைத்து  பசி தாகத்தோடு ஒரு மரத்தடியில் அமர்கிறார்.  அந்த பாதையருகே இருந்த வயலில்  ஒரு ஆடு மேய்ப்பவன் அவரை பார்த்து  தன்னையறியாமல் அவர் மேல்  மிகுந்த பக்தி தோன்றி  வணங்கினான்.  அவருக்கு  சுத்தமான   நீர் குடிக்க வழங்குகிறான்.  சில  மரங்களிலிருந்து  பழங்கள் கொண்டு வந்து அவர் எதிரே  வைக்கிறான் கை  கட்டி நிற்கிறான். என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. 


 ''அப்பா,  உன்  உதவிக்கு  மிக்க நன்றி.   உனக்கு எப்போது தேவையோ என்னை நினை அப்போது''  என்று மட்டும்  சொல்லி அவனை ஆசீர்வதிக்கிறார்  ராகவேந்திரர். இது எவ்வளவு பெரிய  உதவி அவனுக்கு  என்று அப்போது  கல்வியறிவில்லாத  ஆடு மேய்ப்பவன்  உணர வாய்ப்பில்லை.

ஆதோனி என்ற பிரதேசத்துக்கு அப்போது நவாபாக இருந்தவன் மசூத் கான்.அவன் பாரசீகன். கன்னடமோ தெலுங்கோ தெரியாதே. ஒருநாள் அவன் குதிரையில் பிரயாணம் செய்தபோது மேலே சொன்ன ஆடு மேய்த்துகொண்டிருப்பவனை வழியில் கண்டான். அந்த நேரம் டெல்லி சுல்தானிடமிருந்து ஒரு கட்டளை உள்ளூர் பாஷையில் எழுதப்பட்டு மிக அவசரமாக நவாபிடம் தரப்பட்டது. அதிலென்ன வாசகம் என்று அறிய ஆள் தேடிக்கொண்டிருந்தபோது ஆடு மேய்ப்பவன் கண்ணில் பட, அவனை இதை உடனே படித்து சொல் என்றான்.      ஆடு மேய்ப்பவன் கல்வி இல்லாதவன்.   எழுத்தறியாதவன். '' நவாபோ உடனே இதைப் படி'' என்கிறானே. என்ன செய்வது? அந்த ஓலையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான். நவாப் '' இந்த ஆள் வேண்டுமென்றே இதை எனக்கு படித்து சொல்லமாட்டேன் என்கிறான். இவன் படித்துச் சொல்லாவிட்டால் இவன் தலையைச் சீவுங்கள்'' என்று கோபமாக கட்டளையிட்டான்.

அதிர்ஷ்டவசமாக ஆடு மேய்ப்பவனுக்கு, வெகு நாள் முன்பு, ஒரு சந்நியாசி தன்னிடம் ''எப்போது தேவையோ என்னை நினை'' என்று சொன்னாரே என்பது நினைவுக்கு வந்தது.   பயத்தில் நடுங்கினான்.   வியர்த்து கொட்டியது.   உயிர் போவது நிச்சயம் என்று தோன்றும்போது தான் பளிச்சென்று  ராகவேந்த்ரரை மனதில் கண்மூடி ஒரு வினாடி நினைத்தான். எதிரே நீட்டிய ஓலையை பார்த்தான். அதில் இருந்த எழுத்துக்கள் அவனுக்கு துல்லியமாக தெரிந்தது. படிக்க முடிந்தது.   நவாபிடம் அதன் விவரம் புரியும்படியாக சொன்னான். 

அந்த ஓலையில் மாசூத் கானை மெச்சி அவனுக்கு சாதகமாக டில்லி சக்ரவர்த்தி எழுதியிருந்தார். எனவே மிக்க மகிழ்ச்சி அந்த அதோனி பிரதேச நவாபுக்கு.
''இந்த நிமிஷம் முதல் இந்த ஆள் தான் ஆதோனிக்கு திவான்'' என்று  சந்தோஷத்தில் ஆடு மேய்ப்பவனை  அணைத்தான்.    பெரிய உத்தியோகம் பதவி எல்லாம்  ஆடுமேய்ப்பவனுக்கு வழங்கினான் .

இதன் பிறகு அதே ஆதோனி நவாப் ஒருமுறை ராகவேந்திரரை சந்திக்க நேர்ந்தது.   எல்லோரும் இந்த மனிதனை  புகழ்கிறார்கள்.  இவர்  ஒரு வேளை போலி சன்யாசியா என்று சோதிக்கவேண்டும்  என்று  நினைத்தான் நவாப்.    அவன் மனதில் ஒரு திட்டம் தீட்டி அதை நிறைவேற்ற கிளம்பினான்.    பரிவாரங்களோடு, அவரை நேரில் கண்டு வணங்கினான்.

  ''இந்தாருங்கள் பழங்கள்'' என்று ஒரு தட்டு நிறைய மாமிசங்களை பாத்திரம் பூரா நிரப்பி வெள்ளைத் துணியால் மூடி  ராகவேந்திரர் முன்பு வைத்தான்.

மூல ராமனை  வாயார மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் சொல்லி பாராயணம் செய்து கொண்டிருந்த  ராகவேந்திரருக்கு  ஒரு கணம்   கண் மூடி  தியானித்ததும்  விஷயம் விளங்கி விட்டது. 

கமண்டலத்திலிருந்து சிறிது தீர்த்தம் எடுத்து   தன்  எதிரே  நவாப்  வைத்த  பெரிய  மூடியிருந்த தட்டின் ''ஸ்ரீ  ராமா இது உனக்கே  அர்ப்பணம்'' என தெளித்து மூல ராமருக்கு நைவேத்யமாக அர்ப்பணித்து விட்டு மூடியைத் திறந்தார் ராகவேந்திரர்.

பாத்திரம் நிறைய இருந்த மாமிசம் புத்தம் புது பழங்களாக மாறியிருந்தது. துளியும்  மாமிச வாசனை அதில் இல்லை. 

மூடியைத்திறந்ததும்  ராகவேந்திரர்  மாமிசத்தைப்பார்த்து துள்ளிக்குதிக்கப்போகிறார்  என்று ஆவலாக எதிர்பார்த்த நவாப்  அவை அத்தனையும் பழங்களாக மாறியதை பார்த்து நவாப்  ஆச்சரியத்தில் துள்ளி குதித்தான்.  அவனே  மாமிசத்தை நிரப்பி தன் கையால் மூடி கொண்டுவந்ததால்  யாரும்  பழங்களாக அதில் நிரப்பவில்லை என்று அவனுக்கு தெரியுமே.     

இந்த நிகழ்ச்சி, அதிசயம்,  ராகவேந்திரரின்  தூய்மை,  நவாப் கொண்டு வந்த மாமிசம்  மாறியது போல் அவனும் மாறினான்.  ராகவேந்திர பக்தனாக மாறிவிட்டான். செல்வங்களை  வாரி  வழங்கினான். ராகவேந்த்ரருக்கு செல்வத்தில் பற்றில்லை. மாஞ்சாலியில் ஒரு இடத்தில் மடத்திற்கு மனை மட்டும் பெற்றுக் கொண்டார். அதுவே இப்போதுள்ள மந்த்ராலயம். மேலும் நிறைய தர ஆசைப்பட்டான் நவாப். ஆனால் துங்கபத்ரா நதிக்கரை வறண்ட நிலமே போதும் என்றார் மகான்.

''குருநாதா,  நல்ல இடம் நவாப் தருகிறேன் என்றபோது ஏன் இந்த வறண்ட நிலத்தை கேட்டு பெற்றீர்கள்  என்று சில சிஷ்யர்கள் பின்னர்   ஒரு சமயம் கேட்டார்கள்.

''இதுவா வறண்ட நிலம், இங்கு தான் ப்ரஹ்லாதன் யாகங்கள் செய்தான்'' என்று அந்த க்ஷேத்திர மகிமையை சொன்னார். மந்த்ராலயத்தில் ராகவேந்திரர் மடம் ஸ்தாபித்தார். அன்னதானம் துவங்கி வைத்தார். இன்றும் அது தொடர்கிறது.

அருகில் பஞ்சமுகி என்ற ஒரு க்ஷேத்ரம். அங்கே ராகவேந்திரர் தவம் செய்தார். பஞ்ச முகத்தோடு ஹனுமான் அவருக்கு  தரிசனம் கொடுத்தான்.   பக்தர்கள் ராகவேந்திரரை பிரஹலாதன் மறு பிறவி என்று போற்றுவதுண்டு. ப்ரஹலாதனே சங்கு  கர்ணன் என்கிற தேவன் அவதாரம் தானே. எனவே மந்தராலயத்தில் பிருந்தாவனம் தோன்றியது.

1671ல் ஸ்ராவண கிருஷ்ண பக்ஷம் த்வீதிய திதியில் ராகவேந்திரர் மனம் திறந்து பக்தர்களுக்கு  என்ன உபதேசித்தார் தெரியுமா?

''நேர்மையான வாழ்க்கையை பின் பற்றுங்கள்.  நேர்மையான எண்ணம் தோன்றும். அவரவர் கர்மாக்களை, கடமைகளை  மேற்கொள்ளுங்கள். பலன்  பகவானுக்கு  போகட்டும்.  இதுவே சதாசாரம். (நல்வழி). கர்ம யோகம்.
மக்கள்  சேவை மகேசன் சேவை.   ஜன சேவை  ஜனார்த்தன சேவை.   வாழ்வில் ஒவ்வொரு கணமும் நாம் செய்வது பகவானுக்கு சேவை, வழிபாடு. ஒவ்வொரு செயலுமே பூஜை.  இந்த மனுஷ ஜன்மம் அபூர்வமாக முன் செய்த புண்ய கர்மாவால் நமக்கு கிடைத்தது.   எனவே   ஒரு வினாடி வீணடிக்க வேண்டாம். இனி அது திரும்ப கிடைக்காது. புரிந்து கொள்ளுங்கள். பகவானை நினைக்க தவறாதே . மறக்காதே. "

இந்த குரு எப்படி,   இப்போது  சாஸ்த்ரங்களை  கடாசிவிட்டு,  நான் தான் குரு , பகவான் என  சில  சில்லறை சித்து விளையாட்டு காட்டி   பணத்தை தேடி பறக்கும்  மாயா ஜாலக்காரர்கள் எப்படி?   அதிசயம்  வித்தை காட்டுபவர்கள் அருகே  செல்லாதீர்கள்.  ராகவேந்திரர் சொல்வது கேளுங்கள்  '' நானும் அதிசயங்கள் நிகழ்த்தியிருக்கிறேன். மத்வாசார்யார் போன்றவர்களும்  நிகழ்த்தி யிருக்கிறார்கள் . ஆனால் அதெல்லாம் யோக சித்தியால் மட்டுமே. .சாஸ்திரம் சொல்லியபடி நடந்து, பகவான் கிருபையால் எப்படி பலன் பெறலாம் என்று நிரூபணம் செய்யவே. "

"ஞான மார்க்கம் அதிசயம் நிகழ்த்துவதை விட சிறந்தது.  இது இல்லாமல் வெறும் வித்தைகள், பயனற்றவை. தந்திரம்.வீண். பகவானிடம் பக்தி வை. அவனது கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து செலுத்தும் பக்தி சிறந்தது. யோகிகள், குருமார்களிடம்  அதே பக்தி தேவை. அவர்கள் ஆசியே நமக்கு பலம்.''

 ஸ்ரீ ராகவேந்திரர்  உபதேசம் முடிந்தபின்   தானே கட்டிய பிருந்தாவனத்தில் அமர்ந்தார். 
மாஞ்சாலியில் மாதவரம் கிராமத்திலிருந்து கற்கள் கொண்டுவரச் சொன்னார். த்ரேதா யுகத்தில் ராமன், சீதா, லக்ஷ்மணன் பாதம் பட்ட இடத்திலிருந்து வந்த கற்கள் அவை என்றார். 

என்னை சுற்றி கற்கள் அடுக்குங்கள். நான் கண் மூடி ஜபமாலையை உருட்டிக்கொண்டு  தியானத்தில் இருப்பேன்.   என் கைகளில் உருளும் ஜபமாலை மணிகள் எப்போது உருளாமல் நிற்கிறதோ அப்போது என்னை சுற்றி  எழுப்பிய   சமாதியை மூடிவிடுங்கள்''  .

பிரணவ மந்த்ர ஜப சப்தம் நின்றது.  பூரண சமாதியில் ஆழ்ந்து விட்டதால்   ஜபமாலை  மாலை மணிகள் அசையாமல் நின்றது.    ராகவேந்திரரை சுற்றி எழுப்பப்பட்ட கற்சுவர் சிரம் வரை எழும்பியது. சிரத்தை மூட ஒரு தாமிர பெட்டி. அதில் நேபாளத்தில் கண்டகி நதி தீரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 1200 லக்ஷ்மி நாராயண சாலக்ராமங்கள் நிரப்பி சுற்றிலும் சுவர் எழும்பியது. சமாதி மூடப்பட்டது. 12000 வராஹ அபிஷேகங்கள் அவரது பிருந்தாவனத்துக்கு நடந்தது.  ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள்  ஜீவ சமாதியில் இன்றும் இருக்கிறார்.  லக்ஷோப  லக்ஷம் பக்தர்கள் அவரது ஜீவ  சமாதியை  மந்திராலயத்தில் சென்று தரிசிக்கிறார்கள். ஸ்ராவண கிருஷ்ண பக்ஷ த்விதிய திதி அன்று ஆராதனை வருஷந்தோறும் நடக்கிறது. 
மந்திராலய மடத்துக்கு ஒரு ஆபத்து வந்த போது  ஸ்ரீ ராகவேந்திரர்  வெள்ளைக்காரனுக்கு முன் தோன்றி வாதாடினார் அது தெரியுமா?  சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...