Sunday, November 4, 2018

deepavali



என் மேலேயா குறை ? J.K. SIVAN

உங்களுக்கு இப்போ ஒரு தீபாவளி கதை சொல்லட்டா?

இன்று தீபாவளி. விசேஷமான நாள் ஆயிற்றே. எங்கும் மகிழ்ச்சியும் குதூகலமும் காண்கிறது. புத்தாடை, பக்ஷணங்கள், நண்பர்கள், உறவினர் கூட்டம் எல்லாமே மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. குமே.

' இந்த எண்பது வயதில் எத்தனை தீபாவளி பார்த்தாச்சு. கிருஷ்ணா உன்னை மட்டும் தான் பார்க்கணும். படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ''

எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணா கிருஷ்ணா என்று தான் சாம்பமூர்த்தியின் வாய் எந்த பையனைப் பார்த்தாலும் கூப்பிடும். அவர் ஒரு கிருஷ்ணா மாமா. அவர் வீட்டில் ஒவ்வொரு கிருஷ்ணன் பொம்மைக்கும், படத்திற்கும், ம் ஏதாவது ஒரு பெயர் வைத்து தான் கூப்பிடுவார். கும்பிடுவார். உதாரணம் சிலது: கருப்பண்ணன், குண்டு கோபு , கிட்டு, சுட்டி, கள்ளப்பயல், ப்ளூட்டுக்காரன், வெண்ணை திருடன், புளுகாண்டி என்னும் எத்தனையோ செல்லப்பெயர்கள்.

கிருஷ்ணன் பேசுவானோ, பதில் சொல்வானோ? ஹுஹும் அதெல்லாம் சும்மா என்று தானே நாம் சொல்வோம்? மாமாவைக் கேளுங்கள்: ''ஆஹா அந்தப்பயல் கேட்டதெல்லாம் கொடுப்பவன் மட்டுமில்லே. கேட்டதுக்கு பதில் கொடுப்பவனும் கூட ''.

ஒருநாள் கிருஷ்ணனை மாமா என்ன கேட்டார் என்று மேலே சொன்னேனே. மீண்டும் அதை திருப்பி சொல்கிறேன்:

''கிருஷ்ணா உன்னை நான் பார்க்கணும். படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ''

கிருஷ்ணன் பதில் சொன்னான்: "ஆஹா உன் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேனே!" காத்திரு. இதோ வருகிறேன்''

வீட்டில் ஒரே சத்தம். நிறைய ஜனங்கள். தீபாவளி கும்பல் சேர்ந்து விட்டதே. மாமா கிருஷ்ணனை தனியே காண விரும்பினார். எனவே வீட்டின் பின்புறம் கொல்லைப்பக்கம் சென்றார். நல்லவேளை பெரிய தனிவீடு. கொல்லையில் பச்சென்று செடி கொடி மரங்கள். துணி தோய்க்கும் கல் (பல வருஷங்களாகிறது. இப்போது யாரு துணி கல்லில் அடித்து தோய்க்கிறார்கள். பழைய கிணற்றில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. அங்கே அமைதியாக காத்திருந்தார் . எங்கும் நிசப்தம்.

''கிருஷ்ணா.. முகுந்தா......'' என்று ஹரிதாசில் MKT பாடின பாட்டை வாய் பாடியது.
ஒரு குயில் எங்கிருந்தோ வந்து அவர் எதிரே மாமரத்தில் ஒரு கிளையில் உட்கார்ந்தது. பார்க்க அழகாக சின்னதாக கருப்பாக இருந்தது. மதுர குரலில் அது சில நிமிஷங்கள் ஏதோ இனிமையாக ஒரு ட்யூன் (tune) கூவியது. என்ன தோன்றியதோ சட்டென்று பறந்தும் போயிற்று. மாமா காத்திருந்தார்.

சற்று நேரத்திற்கு முன் நின்றிருந்த பிசு பிசு மழை மீண்டும் வரும் போல் இருந்தது. அதற்கு ஆயத்தமாக வானில் எங்கோ ஒரு பேரிடி முழக்கம். வீட்டில் உள்ளே இருந்தவர்களுக்கு டிவியில் ''மழை பெயதாலும் பெய்யலாம் கனத்த மழையாகவும் இருக்கலாம்'' என்று ஒருவர் வழக்கமாக ஆரூடம் சொல்லியது சிரிப்பு வந்தது. மாமா மழை வரும் முன்பு வீட்டிற்குள் போய்விடலாமா என்று ஒரு கிலேசம். இன்னும் கொஞ்ச நேரம் கிருஷ்ணன் வரவுக்காக காத்திருப்போமே? வரேன் என்று சொன்னவன் இன்னும் ஏன் வரவில்லை?'' எங்கோ படித்தேனே கிருஷ்ணா, உன்னைப் பார்க்க, கேட்க ஏன் தொட கூட முடியுமாமே?'' எங்கோ எவரெல்லாம் சொன்ன உபன்யாசங்கள், படித்தவைகள் எல்லாம் மனதில் தோன்றியது.

''அய்யா உங்களை எங்கே எல்லாம் தேடறது. இங்கே வந்து உக்கார்ந்திருக்கீங்களா?''
''யாரு?'' . மாமா திரும்பிப்பார்த்தார். வீட்டில் வேலை செய்யும் பெரியாயி ஒரு சிறு குழந்தையை பொட்டலமாக அணைத்துக்கொண்டு அருகில் வந்தாள்.
''என்னம்மா வேண்டும்?''
''ஒண்ணும் இல்லீங்க அய்யா. அம்மா கிட்டே புதுசா பொறந்த என் பேரனை த்தூக்கி யாந்து காட்டி ஆசீர்வாதம் கேட்டேன். அய்யா தோட்டத்திலே இருக்கார் அவர் கிட்டேயும் காட்டு ன்னு சொன்னாங்க.''
''ஆஹா! பேஷ் பேஷ். ஜாக்ரதையா சீக்ரம் உள்ளே எடுத்துண்டு போ. மழை வரும்போல இருக்கு..'' அவர் மனது கவனம் எல்லாம் கிருஷ்ணனின் வரவில் இருந்ததால் வாய் மெஷினாக பேசியது துணிப்பொட்டலத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மேல் பார்வை போகவில்லை.
''எங்கிருந்தோ ஒருபாதி அணில் கடித்த கொய்யா பழம் தாத்தா மீது தொப்பென்று மரத்தின் மீதிலிருந்து மாமா மீது விழுந்தது. மேலே பார்த்தார். எப்படி காலம் ஓடறது. இப்போது தான் செடி வைச்சமாதிரி இருக்கு இந்த நாலைந்து வருஷத்தில் நம் வீட்டு கொய்யா மரம் இவ்வளவு உயரமா? அவர் வாய் தான் பெரியாயிடம் பேசியதே. மனம் பூரா கிருஷ்ணனை தேடிகொண்டு தான் இருந்தது. கிருஷ்ணன் மீது கொஞ்சம் கோபமும் வந்தது.
வெகு நேரம் ஆகியும் ஏன் கிருஷ்ணன் வரவில்லை? விர்ரென்று ஒரு பட்டாம்பூச்சி முகத்திற்கு நேரே பறந்து வந்தது வந்ததும் இல்லாமல் இறைக்கையை அடித்துக்கொண்டு அவர் கைமேல் வந்து உட்கார்ந்தது. எரிச்சல் வந்தது மாமாவுக்கு. ''சனி.'' என்று அதை திட்டி வெடுக்கென்று கையை உதறி விரட்டினார்.
மழை தூற்றல் ஆரம்பிக்கவே வீட்டுக்குள் சென்றார்.

பெரும் ஏமாற்றம்.''வரேன்'' என்று சொன்ன கிருஷ்ணன் வராவிட்டால் சந்தோஷமாகவா இருக்கும்?
அவர் ஸ்பெஷலாக தினமும் எதிரே உட்கார்ந்து பாடும் பெரிய ராதா கிருஷ்ணன் படம். நிறைய அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி தூப தீபங்களோடு காட்சியளித்தது. தீபாவளி அல்லவா எதிரே தட்டுகளில் பக்ஷணங்கள் பழங்கள், நைவேத்யம். புல்லாங்குழல் ஊதிக்கொண்டு புன்னகைத்த கிருஷ்ணன் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

'' கிருஷ்ணா நீ இப்படி பண்ணலாமா? 'வரேன் என்று சொல்லி ஏன் வரவில்லை. எத்தனை நேரம் காத்திருந்தேன்? இவ்வளவு யுகம் ஆகியும் இன்னும் பொய் சொல்ற பழக்கம் உனக்கு போகலையா?''
கிருஷ்ணன் பேசாமல் சிரித்தான்
''கிருஷ்ணா , மாயாவி, என்னை ஏமாற்றியதில் உனக்கு இத்தனை சந்தோஷமா?''
கிருஷ்ணன் பேசினான் தாத்தாவிடம்.
'என்னையா பொய் சொல்றவன் என்று சொல்றே நீ . உன் கிட்ட உடனே வரேன் என்று சொல்லி விட்டு தான் நான் உடனேயே வந்தேனே.''
''ஹாஹாஹா இது தான் கிருஷ்ணா நீ சொன்னதில் எல்லாம் ரொம்ப பெரிய அண்ட புளுகு, ஆகாச புளுகு. எப்போது வந்தாய் நீ? நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா ? உடனே ன்னா என்ன அர்த்தம் தெரியாதா உனக்கு?
''நான் தான் வந்தேனே . நீ என்னை பார்த்தாய். என் குரல் கேட்டாய். நான்தான் அந்த கருப்பு சின்ன குயிலாய் வந்து உனக்கருகிலேயே அமர்ந்து பாடினேன். நீ கேட்கவில்லை.
''சரி ஒருவேளை காது கேட்கவில்லையோ என்று ஒரு பேரிடியாக சத்தம் போட்டேன். உன் டமார காதில் விழலியா? நீ எங்கே கேட்டாய்?
'' சரி அப்படி என்றால் ஒருவேளை என்னைப் பார்க்க மட்டும் தான் விருப்பமோ என்று ஒரு குழந்தையாய் உன்னிடம் வந்தேன். துளிக்கூட என்னை பார்க்க வில்லை நீ. தொடக்கூட இல்லை நீ. விரட்டி விட்டாய்.
''ஓஹோ நீ என்னைத் தொட விரும்பவில்லை நானாவது உன்னை தொடறேனே என்று தான் ஒரு அழகிய பட்டாம்பூச்சியாய் உன் கையைத் தொட்டேன். வெடுக்கென்று உதறி தள்ளிட்டியே என்னை.இவ்வளவையும் நீ செய்து விட்டு என்னை குறை சொல்கிறாயே? ஞாயமா மாமா?'' கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே கேட்டான்.
மாமாவின் உள்ளம் உண்மையை உணர்ந்ததை அவர் கண்கள் குளமாக காட்டியது.

இறைவனை எங்கும், எதிலும் எப்படியும் காணலாமே, கேட்கலாமே, உணரலாமே!! இதை அறிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல் வெறுமே வாயினால் மட்டும் He is omnipresent ,omniscient , omnipotent என்று சொல்லி படித்து என்ன லாபம்? நாமும் தீபாவளி அன்றிலிருந்தே இதை அறிந்து, புரிந்து கொண்டு அவனை தேடி எங்கும் அனுபவிக்கலாமா ?

-- முதலில் உள்ளிலிருந்தே...! அப்புறம் வெளியே எங்கும் எதிலுமே...! சரியா? தீபாவளி வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...