Tuesday, November 13, 2018

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்    J.K. SIVAN 
மகா பாரதம் 


     வனவாசத்தில்  கிருஷ்ணன் விஜயம் 

எல்லோருக்கும்  வாழ்வில் ஒரு நல்லகாலம்  துன்ப நேரம்  என்று உண்டு. எவரும் அதிலிருந்து விடுபட முடியாது. இப்படி கஷ்டம் அனுபவிக்கும்போது  சிலர்  கோள்கள் மீது, பிறர் மீது  பழியைப்  போடுவார்கள். சிலர்  முன்வினை என்பார்கள். சிலர்  எதுவந்தாலும் எந்த வித்யாசமு மின்றி ஏற்பார்கள்.  பாண்டவர்கள் கடைசி வகையை சேர்ந்தவர்கள்.  பல வருஷங்கள் ஆகிவிட்டது அவர்கள் வனவாசத்தில். 

ஒரு நாள் கிருஷ்ணன் பலராமன் ஆகியோர் சுற்றத்துடன், கானகத்தில் பாண்டவர்களை சந்திக்கிறார்கள். 

சடை யோடு கூடிய  முடி, மரப் பட்டைகளாலான உடை, உடல் முழுதும் மண், மெலிந்த உடல், இப்படிப்பட்ட  நிலையில் யுதிஷ்டிரனையும், மற்ற மூன்று சகோதரர்களையும், திரௌபதியையும்  கண்ட  பலராமன், கிருஷ்ணன், மற்ற வ்ரிஷ்ணி குல  வீரர்களின்  கண்களில் நீர் குளமாகிறது.  பலராமன்  துரியோதனன் மீது கோபம் கொள்கிறான்.  சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அல்லவோ  தர்மன் கஷ்டப்படுகிறான். அவனை ஏமாற்றி அவன்  சொத்தை துரியோதனன் அனுபவித்து மகிழ்கிறானே  என்று கோபத்தில்  எப்படி  இதை  பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன், கிருபர், ஆகியோர்  பொறுத்து, ஏற்றுக்கொண்டனர்  என்று  அவர்களைச்  சாடுகிறான் பலராமன். அவனருகில் இருந்த சாத்யகி, அவன் உறவினன்,
 ''பலராமா, இனியும்  இதை  பார்த்துக்கொண்டிருக்க முடியாது.  நம்மவர்  சிலர்  துன்பப்படும்போது நாம் சும்மா இருக்கலாமா.  உட்னே , நமது சேனையுடன் ஹஸ்தினாபுரம் சென்று கௌரவர்களை அழிக்க வேண்டும்.  கிருஷ்ணன் ஒருவனே போதும் என்றாலும்,  சாம்பன், பிரத்யும்னன், நீ,  நான், ஆகியோரும்  இருக்கிறோமே.  அனைவரையும் கொன்று குவிப்போம்''  என  சாடுகிறான்.

கிருஷ்ணன்  இதெல்லாம் கேட்டுக்கொண்டே  இருந்தவன் சிரித்தான்.

 ''சாத்யகி, நீ சொல்வது வாஸ்தவம். ஆனால்  யுதிஷ்டிரன்  நீ சொல்வதை கனவிலும்  ஒப்புக் கொள்ள மாட்டான்.  தனது சக்தியால்  வென்றாலொழிய பிறர் மூலம்  வரும்  பெருமையை வேண்டமாட்டான்.  அவன் ஏற்றுக்கொண்ட வாக்கை தான்  மதிப்பவன். பன்னிரண்டு வருஷ  வனவாசம்  ஒரு வருஷ  அஞ்ஞாத வாசம் முடிந்தபிறகே  யுத்தம் புரிய ஒப்புக்கொள்வான்.  நேர்மையில்  பிறழாதவன். பீமார்ஜூனர்களின் பலம் உலகறியுமே.''

யுதிஷ்டிரன் குறுக்கிட்டான். '' ஆமாம்  கிருஷ்ணா, நாட்டையும் செல்வத்தையும்,  வசதியையும் பலத்தினால்  பெறுவதை விட  கொடுத்த வாக்கை  நிறைவேற்றுவதையே நான்  மதிக்கிறேன்.  காலம் கனிந்து வரும் வரை  துரியோதனனை எதிர்ப்பது  தவறு. அந்த தவறை நான் செய்யமாட்டேன்''

''கிருஷ்ணா,  உன்னை நான் நன்றாக அறிவேன். உன் உதவி  தேவைப் பட்டபோது வருவேன். நீங்கள் செல்லுங்கள் ''   என்றான் தர்மன்.
அவர்கள் சென்றதும்  தீர்த்தயாத்திரை தொடர்ந்தது. கயா  சென்றார்கள். ஸ்நானம் செய்து பித்ரு கடன் முடித்தார்கள். அங்கிருந்து நர்மதை அடைந்தார்கள்.

வழியில்  லோமசர்  ஒரு கதை சொல்கிறார்
பிருகு முனிவருக்கு  ச்யவனன்  என்று ஒரு பிள்ளை.  அவன் ஒரு ஏரிக்கரையில்  அசையாமல் தவமிருந்து அவனை  மண் புற்று மூடிவிடுகிறது. அவன் மீது எறும்பு, வண்டு, சிறு பூச்சிகள்  குடிகொள்கின்றன . காலம் செல்லச்  செல்ல  சியவனன் ஒரு மண் மேடாகிறான் . ஒருநாள்  சர்யதி என்கிற அரசன்  தனது மகள்  சுகன்யாவோடு அந்த கானகம் வருகிறான்.  சுகன்யா பேரழகி. குறும்புப் பெண். அவளது அழகை  அந்த நேரம் புற்றுக்குள்  இருந்து  கண் திறந்த சியவனன் பார்த்துவிட்டு அவள்  மீது மையல் கொள்கிறான். மயங்குகிறான்.

புற்று ஒன்று பெரிய மண் மேடாக தெரிகிறது.  ஆனால்  அதில் ஏதோ ஒரு துளையில்  ஒரு வண்டு பளிச் பளிச் என்று தெரிகிறதே  என்று  முள்ளை எடுத்து அந்த  சிறிய  துளையில் பளிச்சிட்ட வண்டு மீது  அந்த  இளவரசி  விளையாட்டாக   குத்துகிறாள்.  சியவனின் கண் அது.  வலி தாங்காமல்  சியவனன்  கத்த , அரசன் சர்யதி அங்கு வந்து  விஷயம் அறிகிறான்.  அது  ஒரு ரிஷி  என்று புரிகிறது.   யார்  அவனுக்கு தீங்கு விளைத்தது என்று அறிகிறான்.  சுகன்யா ரிஷியின் கண்ணை ஏதோ ஒரு மின் மினிப் பூச்சி என்று  நினைத்து விட்டேன் என்கிறாள். அதை  வெளியே  கொண்டுவர  ஒரு  முள்ளால் குத்தினேன்  என்கிறாள்.   ரிஷியிடம்  மன்னிப்பு கேட்கிறார்கள்  தந்தையும் மகளும்.  ''அவள்  என் மனைவியானால் உங்களை மன்னிக்கிறேன்''   என்கிறான் சியவனன் . சியவனனின்  மனைவியாகிறாள் சுகன்யா. காட்டில் வாழ்கிறாள். ஒருநாள்  அஸ்வினி இரட்டையர்கள் அவளை  ஆற்றங்கரையில் கண்டு மோகித்து எங்களில் ஒருவனை நீ மணக்கவேண்டும் என்கிறார்கள். சுகன்யாவோ  கிழவராக இருந்தாலும் என் ரிஷி கணவரே எனக்கு உயிர் என்கிறாள்.
''கவலைப்படாதே உன் கிழக்  கணவனை இளைஞனாக்கும் வித்தை எங்களுக்கு தெரியும். அவனை இளைஞனாக்கினால்  எங்களில் ஒருவனை மணப்பாயா.  உன் கணவனையே  போய்  கேள்''  என்கிறார்கள்.  ''என்னை இளைஞனாக்கச்சொல்  பிறகு  அவர்களில் ஒருவனை மணப்பதைப் பற்றி சொல்கிறேன் என்கிறான் ச்யவனன். ச்யவனனை  ஒரு ஆற்றில் தங்களோடு  மூழ்கச்  சொல்லி மூவரும்  எழுந்தபோது  மூவருமே ஒரே மாதிரி இருந்ததால்  யார்  கணவன் என்று  சுகன்யாவுக்கு புரியவில்லை (நள  தமயந்தி கதை மாதிரி போகிறதா??)  மூவரில் யாரை தேர்ந்தெடுப்பது??  சுகன்யா  எப்படியோ  தனது கணவனை அடையாளம் கண்டு கொள்கிறாள்.  அவனையே  சேர்கிறாள். அஸ்வினி இரட்டையர்கள்  அவர்களை வாழ்த்திச் செல்கிறார்கள்.

இதற்கிடையில்  சர்யதி தனது மருமகன் ச்யவனன் இளமை பெற்று சுகன்யாவோடு  சுகமாக  வாழ்வதைக் கண்டு மகிழ்கிறான்.  ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறான். சியவனன்  தனக்கு இளமை அளித்த  அஸ்வினி  தேவதைகளை  அழைத்து அவர்களுக்கு  சோமரசம்  தயாரித்து அளிக்க, இதனால்  இந்திரன் கோபம் கொள்ள.  சியவனனுக்கும் இந்திரனுக்கும் வாக்குவாதம் மூள,  இந்திரன்  தனது வஜ்ராயுதத்தை ச்யவனன்  மீது எறிகிறான்.  சியவனனின்  தபோவலிமையால்  இந்திரன் கைகள்  சுவாதீனம் இழந்து விடுகிறது. சியவனன்  மாடன் என்ற பெயர் கொண்ட  ஒரு  பராக்கிரம பூதத்தை  ஏவ அது இந்திரனை விழுங்க  நெருங்குகிறது.  கைகள் சுவாதீனம் அற்ற இந்திரன்  கதறி சியவனனிடம் உயிர் காப்பாற்ற கெஞ்சுகிறான்.  சியவனன்  மாடனை நிறுத்தி  திருப்பி அனுப்பிவிடுகிறான். இந்திரனின்  கைகளுக்கு   இழந்த  சக்தியை மீண்டும் தருகிறான்.

இது தான் அந்த  சியவனன் வாழ்ந்த ஆஸ்ரமம் '' என்று  ஒரு இடத்தை கானகத்தில் காட்டுகிறார் லோமசர்.  யுதிஷ்டிரன்  மற்ற பாண்டவர்கள் எல்லோரும் அந்த ஆஸ்ரமத்தை நெருங்கி சுற்றி வந்து அதை வணங்கிவிட்டு  அடுத்து  சைந்தவ வனம் செல்கிறார்கள். யமுனையை நெருங்குகிறார்கள், இங்கு தான்  மாந்தாதா இருந்தார்  என்று  லோமசர் சொன்னவுடனே  யுதிஷ்டிரன்  மாந்தாதா வுக்கு அந்த பெயர் எதனால் வந்தது என்று  ஒரு கதைக்கு  விதை விதைத்தான்.   லோமசர் சொல்ல ஆரம்பித்தார். 

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...