Tuesday, July 24, 2018

PATTINATHAR

பட்டினத்தார்  J.K. SIVAN 




                      ''பேய்க்கரும்பு  இனித்தது''

திருவையாற்றில் தியாகேசனை தரிசிக்கிறார்  பட்டினத்தார். அழகு தமிழில் ஒரு பாடல் பிறக்கிறது.

மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா
திருவையாறு ஐந்து ஆறுகள் ஒன்று சேரும் இடம்.  சிவன் ஐயாறப்பன். ஸம்ஸ்க்ரிதத்தில் பஞ்சநதீஸ்வரன். 

''ஆஹா,  இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்கவேண்டுமோ, எடுத்து தான் ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.  பலமுறை என்னை எரிப்பார்களே, மண் சுடுமே, என்னை எரித்த மண் சூடு ஆறட்டும்,  சூடு தணியட்டும்,  பலமுறை பிறந்து இறந்து எரியவிட்டதால் மண்டிய புகை வானத்தை மூடி மறைத்திருக்கிறதே,  சூடான புகை  ஆறட்டும்,   விட்ட பாடில்லையே இவன், என்று என்னை பல பிறவிகளாக சுமந்து பெற்ற  அம்மாக்கள் , கொஞ்சம் இளைப்பாறட்டும்,  இந்த பயலுக்கு இது தான் விதி என்று என் தலைகளில் எழுதும்  பிரமன் கொஞ்சம் மூச்சு விட்டு கைக்கு ஒய்வு தந்து களைப்பாறட்டும்,  ஐயாறப்பா ,  ஒவ்வொரு பிறவியிலும் உன்னை தேடி ஓடிய  என் கால்கள் கொஞ்சம்  இளைப்பாறட்டும்,   ஆறு ஆறு என்று  திருவையாறு மகேசனை அற்புதமாக பாடியிருக்கிறார்  பட்டினத்தார்.  அவர் பாடல்கள் முடிந்த போதெல்லாம் படிப்போம். நிறைய இருக்கிறது.

திருவிடைமருதூரில் பட்டினத்தார் ஒரு வாசலிலும்  பத்திரகிரியார் ஒரு வாசலிலுமாக வாழ்ந்த காலத்தில் பத்ரகிரியாருக்கு மஹாலிங்கம் மோக்ஷம் அருளுகிறார். 

''அப்பனே எனக்கு எப்போதப்பா உன் அருள் கிடைக்கும்?'' என்கிறார் பட்டினத்தார்.

''இந்தா  இந்த பேய்க்கரும்பு   உன்னிடம் இருக்கட்டும். என்று  உப்புக்கரிக்கும்  ஒரு பேய் கரும்பை மகாலிங்க சுவாமி   பட்டினத்தாரிடம் தருகிறார்.  

''பரமேஸ்வரா,  என்ன கட்டளை இடுகிறீர்களோ அது அடியேன் பாக்யம்''.

'இந்த பேய்க்கரும்பு முற்றி இனிப்புச்சுவையடையும் இடம்தான் நீ நற்கதியடையும் ஊராகும். அப்போது  நீ என்னை வந்தடைவாய் .” 

''எந்த ஊரில் எனக்கு இந்த கரும்பு இனிக்கும்?  நான் முக்தியடையப்போகும் அந்த ஊர் எது ?''    பட்டினத்தார் ஊர் ஊராக  சிவ தரிசனம் செய்தவாறு நமது சென்னைக்கு அருகே இருக்கும்  திரு வொற்றியூரை வந்து  அடைகிறார்.  

''அட இது என்ன ஆச்சர்யம்,  பட்டினத்தார் கையில் இருந்த கரும்பு எப்படி  தானாகவே வளர்ந்தது.  இனிக்கவும்  செய்தது.  ஓஹோ,   ''எந்த ஊர்  என்றவனே  இது தான் அந்த ஊரோ?'' இனி இங்கேயே மோக்ஷத்துக்கு வழி தேடுவேன். '' 

பட்டினத்தார் திருவொற்றியூரில் தாங்கினார். அங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கும் தியாகராஜனை கண்டு வணங்கினார். ஆனந்தித்தார்.  சில நாட்கள் சென்றன.  அருகே,   கடற்கரை.   அடிக்கடி அங்கே சென்று அமைதியாக  உட்கார்ந்து தவம் செய்வார்.    வழக்கமாக  அங்கே  மணலில் வீடு கட்டி விளையாடும் சிறுவர்களை அழைப்பார். அவர்களோடு விளையாடுவார். ஒரு விளையாட்டு என்ன தெரியுமா?

''எல்லோரும் இங்கே வாங்க''
''என்ன  தாத்தா, எதுக்கு கூப்பிட்டீங்க?''
''நான் ஒரு விளையாட்டு சொல்லி தரட்டுமா,?
''சரி தாத்தா. ''
''நாம் எல்லோருமாக இங்கே ஒரு பள்ளம் தோண்டுவோம். என்ன? நான் அதில் உட்கார்ந்து கொள்வேன்.  நீங்கள் என் மண்ணை போட்டு மூடி விடவேண்டும்.  சிறிது நேரம் கழித்து நான் வெளியே வருவேன். சரியா?''
அவர்கள் குழியில்  பட்டினத்தாரை அமர வைத்து மூடுவார்கள், அவர் எழுந்து வருவார். அவர்களுக்கு ஆச்சர்யம்.
இந்த விளையாட்டு ஏற்கனவே சில நாள் தொடர்ந்தது.  

''எனது நேரம் முடியப்போகிறது''  என்று பட்டினத்தாருக்கு தோன்றியது.  ஒருநாள்  அந்த சிறுவர்களை கூப்பிட்டு அந்த  குழி விளையாட்டை விளையாடினார் . 

வழக்கம்போல்  அவரும் சேர்ந்து குழந்தைகளோடு ஒரு ஆழமான குழி தோண்டி அதில் ''ஓம் நமசிவாய என்று அமர்ந்தார். மேலே மண்ணை போட்டு மூடச்சொன்னார். மூடினார்கள்.  வெகுநேரம் ஆகியும்  பட்டினத்தார் வழக்கம்போல் வெளியே வரவில்லை.  

பயந்து போன குழந்தைகள் வீடு சென்று பெரியோரிடம் சொல்ல, எல்லோரும் திரண்டு வந்தார்கள். 

வேகமாக எல்லோரும் குழியை திறந்தனர்.  
உள்ளே   பட்டினத்தார் இல்லை.  ஒரு  சிவலிங்கம் இருந்தது.
அந்த இடம் தாம் இப்போது திருவொற்றியூரில் நாம் காணும் பட்டினத்தார் ஜீவ சமாதி ஆலயம்.   பெரிய ராஜகோபுரமோ, விமானமோ இல்லை. சாதாரண கட்டிடம்.  முடிந்தபோதெல்லாம்  திருவொற்றியூர் சென்று அங்கே அமைதியாக அமர்ந்து பட்டினத்தாரோடு சேர்ந்து தியானம் செய்வோம்.

ஆடி மாதம் உத்திராடம் நக்ஷத்திரம் அன்று குருபூஜை நடக்கும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...