Tuesday, July 17, 2018

NOSTALGIA

NOSTALGIA -   J.K. SIVAN

   முனுசாமி ஒரு ''பல்'' கலை வேந்தன் .

 டாக்டரிடம் போகாதவர் எவரும் கிடையாது.   சில குடும்பங்களில் ஒரு டாக்டர் நம்பிக்கைக்கு பாத்திரமாகி இருப்பார். அவரிடம் தான் தலைமுதல் கால் வரை எந்த வலியும் நோயும் பற்றி சொல்வோம். அவர் மருந்து கொடுப்பார். அதுமட்டுமல்ல, குடும்பத்தில் எல்லாரையும் பற்றி விசாரித்துக்கொண்டு நோய்க்கு சிகிச்சை செய்வார். குடும்ப நிகழ்ச்சிகளில் அவர் இல்லாமல் கிடையாது.

முனுசாமி  ஒரு சாதாரண பெயர். அனைவருக்கும்  எத்தனையோ  முனுசாமிகளை  தெரிந்திருக்கும்.  எனக்கும்  அவ்வாறே  தான்  அல்லவா?  ஆனால்  இந்த  முனுசாமி  கொஞ்சம் வேறே மாதிரியான  ஆள்.

கருவலாக  முகம் சுருங்கி, முன்  தலை முடியிழந்து,  அருகில்  ரெண்டடி  முன்னால் இருந்தாலே   கவர்னர்  பீடி மணத்தோடு,  சுருங்கிய  கண்கள்   ஒட்டிய  கன்னங்களின்  மேல் இருந்து  விரக்தியாக  ஒரு  பார்வையை வீழ்த்த  தலையில்  அழுக்கு   நீல  துணியில்  முண்டாசோடு,   நாலரை  அடி உயரத்தில்,  தாங்கி  தாங்கி நடந்து கொண்டு  கையில்  ஒரு  பெரிய  கித்தான்  பை,   கக்கத்தில்  ஒரு  சிறிய  அலுமினிய  பெட்டியோடு  உங்களுக்கு  யாராவது  தெரியும்  என்றால்  அது  தான்  நான்  சொல்லும்  முனுசாமி.   அவனை  நீங்கள் இப்போது  தேடவோ  பார்க்கவோ  முயலவேண்டாம்.  75  வருடங்களுக்கு  முன்பு  நான் பார்த்தபோதே முனுசாமிக்கு ரெண்டு மனைவி, வயது  50க்கு மேல்.

முனுசாமி  யார்?

இந்த கேள்விக்கு  உடனே  ஒரு  வார்த்தையில் என்னிடமிருந்து பல  பதில்கள்  கிடைக்கும்.   ஒரு  டாக்டர்,  நாவிதர்,  கிருஷ்ணன் வேஷதாரி,  ஜோசியர். நாதஸ்வர வித்வான்.  இது வினாடி வினா பதில் அல்ல. நான் சொன்ன அத்தனையுமே  சரியான  விடைகள்.

முனுசாமி  கக்கத்தில்  வைத்திருக்கும்   அலுமினிய  பெட்டியில்  நாவித  உபகரணங்கள்  இருக்கும். அவையாவன:  ஒரு   சிறிய  முகம் பார்க்கும்  கண்ணாடி.  தண்ணீர் வைக்க  ஒரு அலுமினிய கிண்ணம். ஒரு சாணைக்கல்,  ஒரு  தோல் பட்டை.  அதுவும்  கத்தி  தீட்ட.  சில  கத்திகள், கத்திரிக்கோல்,  பிளாஸ்டிக்  சீப்பு, ஒரு பயங்கர ராக்ஷஸ கருவி.  கிடுக்கி போல், ரெண்டு கால்கள். சாதுவாக இருக்கும் அதை  புல்டோசர் போல  நெற்றியிலிருந்து  பின் மண்டை  வரை செலுத்தும்போது  மண்டையை  அது படுத்தும்  பாடு  எனக்கு தான்  தெரியும்.  ஒரு  கட்டிங்  ப்ளேயர் போல்  அதை  அமுக்கி அமுக்கி  முனுசாமி  நகர்த்தியபோது  தலை முடியை  வேரோடு அது பிடுங்கும்.

''கிருஷ்ணா,  நீ  அப்போதெல்லாம்  எங்கு போனாய்  என்னை  காப்பாற்றாமல்?  புல் வெட்டுவதுபோல்  வெட்ட வேண்டிய அந்த  பயங்கர  ஆயுதம்.  ஏனோ  வேரோடு  பிடுங்கும் ஆபத்தான உபகரணமாக  இருந்தது.  அதை  என் தமையன்கள்  ரெண்டு பேர், நான், ஆகிய  மூவர் தலையிலும் செலுத்தினால்  தான்  எங்கள்  அப்பா 12  அணா  காசு  கொடுப்பார்.  

''முனுசாமி  மெஷின்  கொண்டுவந்திருக்கியா?   -- அவனைப் பார்த்ததும்   என் அப்பா  கேட்கும் முதல்  கேள்வி.   ஆகவே  அந்த  ஹிட்லர் முனுசாமி எங்களை  படாத  பாடு படுத்தினான்.    ஒரு தலைக்கு  நாலணா.  இதை  மாதத்திற்கொருதரம்  ஏன்  செலவு  செய்யவேண்டும்  என்று என் தந்தையார்  விருப்பப்படி  மூன்று மாதம் முடி வளராதபடி  பண்ணுவதற்கு  அந்த  மெஷின் உதவியது.  நாங்கள்  எவ்வளவோ கெஞ்சியும் முனுசாமி இரக்கமின்றி  ஒரு  அங்குலம்  நீளம்  முடி கூட  விட்டு வைக்க மாட்டான்.  படு பாவி.  கத்தி  வேறு  பல  இடங்களில்  காதிற்கு பின்னால் பின்னந்தலையில்  எல்லாம்  காயப்படுத்தும்.  எரிச்சல் உள்ளேயும்  வெளியேயும்  எங்களுக்கு. முடிதிருத்த  அமரும்  முன்பே  எங்கள்  ஆடைகள்  அகற்றப்பட்டு  நாங்கள்  மூன்று  சகோதரர்களும்  பழனி  ஆண்டியாக  கோவண தாரிகள்.   முடி எடுப்பு   விழாவுக்குப்  பிறகு  நேராக  வீட்டின் பின்புறம் கிணற்றடியில்  அமர்ந்து  எங்கள்  அம்மா  வாளியால்  ராட்டினம்  ஓசைப்பட  நீர்  மொண்டு  எங்கள் தலைகளில்  கொட்டி  அபிஷேகத்திற்கு  பிறகு தான்  வீட்டில்   உள்ளே அனுமதி.   இந்த  எல்லா அக்ரமமும்  எங்கள்  வீட்டு  வேப்ப மரத்தின்  அடியில்  தான் நடக்கும்.   அது  தான்  ''முனுசாமி முடி திருத்தகம்.'' எங்கள் முடியை சூறையாடும் போர்க்களம்.

எங்களுக்கு   -  எனக்கு,  என்  அண்ணன்கள்  ரெண்டுபேருக்கு,  அப்பாவுக்கு, இவ்வளவு  பேருக்கும் முனுசாமி உதவிக்கொண்டிருக்கும்போதே  வீட்டிற்கு பின்னாலிருந்து  ஆள்  வந்து விடும். எங்கள்வீட்டுக்கு பின்னால் சந்திலிருந்து அடுத்த தெரு. கூப்பிட்டால் கேட்கும் தூரம்.

''என்ன  முனுசாமி  ஆச்சா  சீக்கரம்  வா! ''  அடுத்த தெரு சுப்ரமணிய அய்யர்  குரல்  எதிரொலிக்கும்.   

வந்துட்டேன்  சாமி.  இதோ...  இதோ''

'' இதோ''... நேரம்  ஓடிக்கொண்டே  இருக்கும்.  அப்பா  எல்லார்  தலையும்  பார்த்து முழு திருப்தி (திருப்பதி!!) பெற்ற பின்னே  தான்  ஒரு  ரூபாயை கொடுப்பார்.  முனுசாமி பேரம்  பேசுவான்.  எங்கப்பா  தான்  ஜெயிப்பார்.  நாலு  பேருக்கு என்பதால்  டிஸ்கவுன்ட் கேட்பார்.  முனுசாமி  கஸ்டமர்  ஸேடிஸ்பேக்ஷன்  SATISFACTION என்பதற்காக  கொடுத்ததை  வாங்கிக்கொண்டு  நகர்வான்.  அம்மா  ஒரு டம்பளர் கஞ்சி  அல்லது மோர் கொடுப்பாள். ஒரு கிருஷ்ணன் பாட்டு பாட சொல்வாள். றோய்ங்  என்று மூக்கால் ஒரு சுரம் போட்டுக்கொண்டு ''அத்தினாபுரத்து ராஜா  என்று ஒரு பாட்டை அவிழ்த்து விடுவான்.. அலுமினிய பெட்டி தான் மிருதங்கம்.

நகர்வதற்கு  முன்பு  இதில்  விட்டதை  அடுத்ததில்  பிடிப்பான்.  இப்போது  முனுசாமி முடி திருத்துபவன் அல்ல.  டாக்டர்.  எனக்கு என் சகோதரர்களுக்கு  எங்காவது  சொத்தைப்பல்,  அஜீரணம், வயிற்று வலி, சுளுக்கு, அடிபட்ட  காயம், சிரங்கு,  இது  போன்ற  எந்த  வியாதி  இருந்தாலும் தானே கண்டுபிடித்து எல்லாவற்றிற்கும்  வெள்ளை வெள்ளையாக  சில  பொடிகள்  சிறுசாக  பொட்டலம் கட்டி  ஏற்கனவே  கித்தான்  பையில்  வைத்திருப்பதில்  சிலவற்றை  வழங்குவான்.  தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.   சர்வரோக நிவாரணி. ஒரு மருந்து தான் எல்லா நோய்க்கும்.
பல்லில்  குழி  இருந்தால், லேகியம்  போல,  புளி  போன்ற கெட்டியான  ஒன்றை  பல்லில்  வைத்து ஒரே அழுத்து அழுத்துவான்.  வலிக்கும்.   எரியும்  கூட.  இதற்கு  அப்பா  கேட்டதை  கொடுத்திடுவார். நான்கு பேருக்கும் வீட்டில்  பெண்கள்  சொன்ன  வியாதிகள்  அனைத்திற்கும்   ஏறக்குறைய  ஒரே சூரணம்  மாதிரி பல அளவில்,  பல  பொட்டலங்கள்  கை மாறும்.  அனைவரின்  வியாதிக்கும் மருந்திற்கான   பீஸ்   அதிக பட்சம்  நாலு  ரூபாய் கொடுப்பார்.  இருபது  இருபத்தைந்து சின்ன பொட்டலங்கள் கித்தான் பையிலிருந்து வெளியே வரும். அம்மா ஜாக்கிரதையாக வாங்கி உள்ளே கொண்டு வைப்பாள்.
எனது இடது பக்க  கீழ் கடை வாய் பல்  ஒன்று  வெகுநாட்களாக  குழி  விழுந்து கொண்டு வந்ததை முதலில்  மூடிய  டாக்டர் முனுசாமி என்னால் மறக்க முடியாதவர்.

ஊரில்  எந்த  உத்சவம் ஆனாலும்,   எவர்  வீட்டில்  கல்யாணம், விசேஷம்  ஆனாலும்  முனுசாமியின் ''நாத (அப) ஸ்வர இன்னிசை.   பாட்டுக்கும்   இசை என்கிற  ஒசைக்கும்  சம்பந்தமில்லாமல்  அவரது மருமகன் பார்சாதி (பார்த்தசாரதி என்று ஒரூ தடவை கூட முழுபெயரில்  அவனை யாரும் கூப்பிட்டதில்லை.

தப்பாக,  தாளம்  இல்லாமல்  முரட்டு தனமாக  தவில்  வாசித்து  கெட்டவார்த்தையில் மணியக்காரர் ராஜப்பாவிடம் திட்டு வாங்குவதை  பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் முனுசாமியின்  தோற்றம் வேறு.  பட்டையாக  விபுதி,  கழுத்தில்  உருத்ராட்சம்.  ஒரு  அழுக்கு  ஜிப்பா-- ஒரு காலத்தில் வெண்மையாக  இருந்து  சாமியாராக  காவி  ஏறியது--  காலில்  செருப்பு  கிடையாது.  அவர்  சின்ன பையன் முத்துக்கருப்பன் தான் ஒத்து.  இது  நாதஸ்வர வித்வான்  முனுசாமியின்  டீம்.

ஜமீன் பல்லாவரம்  பின்னால்  அப்போதெல்லாம்  ஒரு  கிராமத்தில்  தான்  முனுசாமியின்  ஜாகை. அந்த  ஊரில்  அடிக்கடி தெருக்கூத்து  நடைபெறும்.  அதற்கு  வசனம்  எழுதுவது பாடுவது  எல்லாமே  இசை  ஞானி  முனுசாமி  தான்.  முக்யமான அயன்  ராஜபார்ட் ,  கிருஷ்ணன்  வேஷம் அவருடையது  தான்.  நாலரை  அடி  உயரத்தில்  கையில்  புல்லாங்குழலோடு  தலையில்  ஒரு  அட்டை  கிரீடம், முகம்  கை மார்பு, கழுத்து  எல்லாம்  விஷம்  போல  நீல  நிற  சாயம்,  கண்கள்   ஒடுங்கி  முனுசாமி  நடமாடி வர  கோபியர்கள்   பீடி பிடிப்பதை  நிறுத்திவிட்டு  ஆட  வந்து விடுவார்கள்.  (கோபியர்கள்  அவர்  நண்பர்கள். பெண் வேஷ தாரிகள். உற்சாகமூட்ட தான்  கிருஷ்ணருக்கும்  கோபிகளுக்கும்  கவர்னர்  பீடி  கொஞ்சம்  தேவைப்படும்.)

பனந்தோப்பு.   ஏதாவது ஒரு மரத்திற்கு  பின்னால்   சென்று  ரெண்டு இழுப்புக்குப்   பிறகு உற்சாகம்  பிறக்கும்.  தீவர்த்தி   வெளிச்சத்தில்  இரவெல்லாம்  மஹா பாரதம்  காட்சிகள்  நடைபெறும். இதற்கு முனுசாமி  எல்லாரிடமும்  முன்கூட்டியே  வசூல்  பண்ணிவிடுவார்.   இது  போதும்  நடிகர்  முனுசாமி பற்றி  சொல்ல.

முனுசாமிக்கு  ரெண்டு மனைவிகள்.  அவர்கள்  சண்டை தீர்க்கவும்  கிருஷ்ணன்  முனுசாமி  உதவுவார்.  அவர்கள்  ரெண்டு பேருமே  மருத்துவ  நிபுணர்கள்.  அவர்களை மருத்துவச்சி என்று  வீட்டில் சொல்வார்கள்.  எங்கு  யாருக்கு  ஊரில் பிரசவம்  நடந்தாலும்  இவர்கள்  தான்  முதலில்  பிரசவம்  கவனித்து  குழந்தை  ஆணா    பெண்ணா  என்று  முதலில்  வெளியே  வந்து  சொல்வார்கள். பிரசவம்  வீட்டிலேயே தான்  நடக்கும்  அப்போதெல்லாம்.  நர்சிங் ஹோம் என்றால்  என்ன?  சிசேரியன்  என்பது  ஒரு  கெட்ட  வார்த்தையா  என்று  கேட்கும்  காலம்?

வலி  எடுத்தால்  சொல்லி  அனுப்பினால் -   டெலிபோன் கிடையாது.  ரெண்டு  பெண்களும்  வந்து இரவெல்லாம்  உள்ளே  படுத்திருப்பார்கள்.  வெந்நீர்  தவலை அடுப்பில்  போட்டு கொதிக்க கொதிக்க  அண்டா அண்டா வாக  ரெடியாக இருக்கும்.  முனுசாமியின்  கத்தி அவர்களிடம்  இருக்கும்  தொப்புள்  கொடி  அறுக்கும்  கத்தி...!!

இந்த  இடத்தில்  தான்  ஜோசியர்  முனுசாமி  வருகிறார்.  நாள்  நக்ஷத்ரம் , நேரம்,  காலம்,   யோகம்,கர்ணம்  என்றெல்லாம்  பேசி  எந்த  ராசி, என்ன  எதிர்காலம்  என்றெல்லாம்  பிறந்த  சிசுவுக்கு  நிர்ணயித்து சொல்வார்.  அதற்கும்  பீஸ்  உண்டே.

பிறகு  மற்றவை  பற்றி  பேசுவோம்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...