Thursday, July 19, 2018



ஒரு அற்புத ஞானி''   -  J.K. SIVAN 
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்.

                     2    ‘’தங்கக் கை''

நாட்கள் நகர்ந்ததால் இப்போது சேஷாத்திரிக்கு ஒரு வயது. 

ஆண்டு நிறைவு கோலாகலமாக நடந்தது. ரெண்டாவது வயதும் வந்தது. நடக்க ஆரம்பித்தான். விளையாடினான்.தெருவில் ஓடினான்.(அப்போதே!)
வெயிலை லக்ஷியம் பண்ணாமல் புழுதி தோய்ந்த உடம்புடன் வெயிலில் மண்ணில் வெகுநேரம் உட்கார்ந்திருப்பான். வாசலில் தலையில் கூடைசுமந்து  பழம் விற்பவர்களை பார்த்து கை காட்டி தாய் முகம் பார்ப்பான். கொல்லையில் பசு கன்றுக்குட்டியை நக்கி கொடுக்கும்போது அதன் கழுத்தை கட்டிக் கொள்வான்

'அடே, கோபால கிருஷ்ணா' என்று தாய் மரகதம்  ஓடி வந்து அவனைத் தூக்கிக் கொள்வாள். அப்பா வரதராஜ சாஸ்திரி சிஷ்யர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்போது  குட்டிப்பயல் சேஷாத்திரி ஓடிப்போய்  அப்பாவின் மடியில் அமர்ந்து   அவர் கையில் இருக்கும் புத்தகத்தை பிடுங்கி தான் படிப்பது போல் பாவனை பண்ணுவான். சிஷ்யர்களை பார்த்து தலையை ஆட்டுவான்.

 ''புரிகிறதா என்று கேட்கிறானா?'' ஒரு ப்ரம்ம ஞானியை அவ்வளவு சுலபம் புரிந்து கொள்ளமுடியுமா?

அப்பாவோ அம்மாவோ பூஜை பண்ணும்போது தானும் புஷ்பங்களை எடுத்து போடுவான்.  காலம் இப்போது போல் அப்போதும்  வெகு வேகமாக தான் ஓடியது.

சேஷாத்திரிக்கு மூன்று,  நாலு,  ஐந்து வயதும் ஆகிவிட்டது. கீர்த்தனைகள், அஷ்டகங்கள், ஸ்தோத்ரங்கள் அம்மா சொல்லிக்கொடுத்ததை கெட்டியாக மனதில் பதிந்து கொண்டான். அப்பா ஜபம் பண்ணும்போது தானும் கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டு சின்முத்திரை காட்டுவான்.  (விளையாட்டாகவா , அனுபவித்தா??) அவனது உச்சரிப்பு அக்ஷர சுத்தமாக இருக்கும். காந்தர்வ வித்யை தெரிந்த குடும்பம் அல்லவா. குயில் தோற்றுப்போகும் படியான இனிய குரல் மரகதத்துக்கு..

சேஷாத்திரி என்ற இந்த  குழந்தையை  கவனித்தவர்களுக்கு தெரியும்.   இந்த குழந்தை விளையாட்டை விட பக்தியில் தான் ஈடுபாடு அதிகம் காட்டியது. மற்ற சில நேரங்களில் ஓட்டம் ஆட்டம் மீதி குழந்தைகளைப் போலவே. ஆனால் பிடிவாதம், அழுகை, இல்லாத  எப்போதும் ஒரு சாந்த முக குழந்தையை யாராவது பார்த்ததுண்டா?

அம்மா மரகதம் தினமும் ஈஸ்வர தரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டாள்.  அன்று வைசாக உத்சவம். காஞ்சி வரதராஜர் கோவிலில் அதிக கூட்டம். கோலாகலமாக உத்சவம் நடந்தது.

 மரகதம் நாலு வயது சேஷாத்திரியை கையைப் பிடித்து க்கொண்டு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வைசாக உத்சவத்துக்கு புறப்பட்டாள்.

அந்த காலத்தில் கூட திருவிழா காலங்களில் தெருவை அடைத்துக்கொண்டு எண்ணற்ற திடீர்  கடைகள் தோன்றும். . அவல், கடலை, பொரி, பழங்கள், வெல்லம், மிட்டாய்கள், பக்ஷணங்கள்,பாத்திரங்கள், துணிகள், மர சாமான்கள் விளையாட்டு பொம்மைகள்  எல்லாமே குவிந்திருக்கும். என்னன்னவோ பொருள்கள் விற்பார்கள். பாதி ஜனங்கள் இங்கே வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கவே வருவார்கள்.

வெளியூரிலிருந்து வந்த  வியாபாரிகளில் ஒருவன்  அங்கே   நிறைய ஒரே மாதிரியான ரெண்டு அங்குல உயரவெண்கலத்தில் செய்த தவழும் நவநீத கிருஷ்ணன் விக்கிரஹத்தை ஒரு சாக்கு நிறைய கொண்டு வந்து கொட்டி கடை பரப்பியிருந்தான். வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த சேஷாத்திரி அம்மா கையை பிடித்துக் கொண்டு நவநீத கிருஷ்ணன் விற்ற வியாபாரியின்  கடைக்கும் வந்தான்

''அம்மா, எனக்கு இது ஒண்ணு வேணும். அழகா இருக்கு. பூஜை பண்ணனும். வாங்கி கொடு''

அம்மா யோசிக்கும்போது, கடைக்காரன் சேஷாத்திரியை பார்த்தான். அவனுக்கு குழந்தையை பிடித்தது.

''அம்மா, இந்த குழந்தை சின்ன வயசிலேயே பூஜை பண்ணனும்னு ஆசைப்படுது. இப்பத்தான் கடை ஆரம்பிக்கிறேன். குழந்தை கேட்டதை எடுத்துக் கொடுங்கோ. ரெண்டணா தான் ஒன்னு. ஆனா இந்த குழந்தை கிட்ட காசு வாங்கமாட்டேன். இன்னும் போணி ஆவலை.  முதல் பொம்மை குழந்தை கிட்டே போவட்டும் ' என்றான்.

'சேஷா நீயே ஒன்று எடுத்துக்கோ'' என்றாள் மரகதம்.

குவியலை துழாவி ஒரூ நவநீத கிருஷ்ணன் பொம்மையை   கையில் எடுத்து  சேஷாத்திரி ''இது அழகா இருக்கு'' என்று  வைத்துக் கொண்டான்.  பற்றற்ற துறவியின் முதல் பற்று இது.  ரெண்டணா கொடுத்த மரகதத்திடம் ''வேண்டாம் அம்மா '' என்று   பணத்தை திருப்பிக் கொடுத்தான் வியாபாரி.

மறுநாள் காலை பந்துக்களுடன்  எதற்கோ வெளியே கிளம்பிய மரகதம் சேஷாத்திரியையும் கையில் பிடித்துக்கொண்டு  காஞ்சிபுரம் வரதராஜர்  கோவில் பக்கம்  சென்ற போது  அப்போது அங்கே இருந்த  நவநீத கிருஷ்ண வியாபாரி பார்த்து விட்டான். ஓடிவந்தான். அவர்களுக்கு நமஸ்காரம் செய்த அவன் கண்களில் ஆறாக கண்ணீர்.

' இது என் தங்கக் கை , என் தங்கக் கை'' என்று சேஷாத்திரியின் கைகளை பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டான்.

''இந்த கிருஷ்ணமூர்த்தி என் கூடையிலே  கையை வைச்சு ஒரு பொம்மை  எடுத்தான் மா. ஆயிரம் பொம்மை கொண்டுவந்தேன் கண் மூடி கண் திறக்கறதுக்குள்ளே எல்லாம் வித்து போச்சு. இதே பொம்மை எத்தனை திருவிழாக்கெல்லாம் எடுத்துக் கொண்டு போனேன். நாளெல்லாம் பாடு பட்டு அலைந்தால் கூட நூறு வித்தா ஜாஸ்தி. இப்படி ஒரு வியாபாரம் ஆனதே கிடையாது. இது  '' தங்கக்கை மா,   தங்கக்கை'' என்று மீண்டும் குழந்தை சேஷாத்திரியின்  கைகளை இருக்கரங்களாலும் தொட்டு வணங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டான்.

அன்றுமுதல் சேஷாத்திரியை வீட்டில் எல்லோரும் ''தங்கக்கை''  என்றே அழைத்தார்கள்.  சேஷாத்திரி ஸ்வாமிகள் ரொம்பகாலம் அந்த நவநீத கிருஷ்ணனை  பூஜை பண்ணினார். பிறகு அது அவர் தம்பி நரசிம்ம ஜோசியரிடம் போய் சேர்ந்து அவரால் பூஜை பண்ணப்பட்டது.

ஐந்து வயது சேஷாத்திரிக்கு வித்யாரம்பம். சாஸ்த்ரோக்தமாக காமகோடி சாஸ்திரி பேரனுக்கு ஒரு நல்ல நாளில் ஆயுஷ் ஹோமம் முதலில் பண்ணிவிட்டு தர்ப்பை நுனியால் சேஷாத்திரி நாக்கில் ''ஸாரஸ்வத மஹா பீஜம், ஸாரஸ்வத தஸ ஸ்லோகி மந்த்ரங்களை எழுதினார். கோ க்ஷீரம் (பசும்பால்) மந்த்ரம் சொல்லி ப்ராசனம் (ஆகாரம்) செய்வித்தார். பஞ்சாக்ஷர, அஷ்டாக்ஷர மந்த்ரங்களை உபதேசித்தார்.

பிறகு சேஷாத்திரி பாடசாலைக்குப்  போனான். காஞ்சிபுரம் கோவிலுக்கு அருகிலேயே மூணு பாடசாலைகள். ரெண்டு வேளையும் சென்றான். ஒரேமாசத்தில் நிகண்டு முதற்கொண்டு மனப் பாடம் ஆயிற்று. அவனுடைய அமானுஷ்ய சக்தி வெளிப்பட்டது. உபாத்யாயர்கள், சக மாணவர்கள் அனைவருமே ஏகோபித்து இவன் தெய்வப் பிறவி என்றார்கள். மூணே வருஷத்தில் காவியம், சம்பு, நாடகம், அலங்காரம், நியாயப்ரகரணம், அனைத்திலும் தேர்ச்சி.

அந்தக்காலத்தில் காஞ்சி வரதராஜர் கோவில் அருகே சாஸ்த்ர பாடசாலையில் தமிழ் புலவர்கள் ரெண்டு பேர் மாசிலாமணி முதலியார், வெங்கடாசல முதலியார் என்று புகழ் வாய்ந்தவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் நன்னூல், நைடதம், நாலடியார், திருக்குறள், கம்பராமாயணம் எல்லாம் கற்றுக்கொண்டான் சேஷாத்திரி. இப்போது யாருக்காவது மேலே சொன்ன நூல்கள் பேராவது தெரியுமா? திருக்குறளைத் தவிர. அது கூட பேரளவில் தான் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக சேஷாத்திரியின் திறமை பெருமை வெளியே தெரிய ஆரம்பித்து பண்டிதர்கள் அவனை கூப்பிட்டு பேசச்  சொன்னார்கள். திவ்யமாக பேசுவான். சொற்சுவை, பொருட்சுவை நிரம்பியிருக்கும். தெளிவாயிருக்கும். --- சேஷாத்திரி புரியும்படியாக பேசினாரா என்று பிற்காலத்தில் வியக்கப் போகிறோம்.--      

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...