Saturday, July 14, 2018

ARUPATHU MOOVAR




அறுபத்து மூவர்
மானக்கஞ்சாற நாயனார்   J.K. SIVAN

                                ''இதோ தருகிறேனே ....!


நாகப்பட்டினம் ஜில்லாவில் ஆனந்த தாண்டவபுரம் என்று ஒரு ஊர். அங்கே  பஞ்சவடீஸ்வரர் ஆலயம் அழகாக அமைந்துள்ளது.  இந்த ஆலய சிவன் கோவில் ஸ்தலம் ஒரு காலத்தில் கஞ்சரூர் என்ற பெயரில் இருந்தது. 
மயிலாடுதுறையிலிருந்து  5 கி.மீ. வடகிழக்கே உள்ளது.   இந்த கிராமத்தில் பல கோவில்கள்  உள்ளன.  ஆனந்ததாண்டவேஸ்வரர், வரதராஜ பெருமாள், கணபதி, மாரியம்மன், வீரன், சின்னமாரியம்மன் சப்தமாதா என்று பல தெய்வங்களுக்கு கோவில்கள். 

சிவன் இங்கே ஜடாநாதர்.  அம்பாள்கள் கல்யாண சுந்தரி, பிரஹந்நாயகி. பாரத்வாஜ ரிஷி வழிபட்ட ஆலயம்.
சிவனுக்கு இங்கே பாரத்வாஜேஸ்வரர், கைலாசநாதர் என்றெல்லாம் கூட பேர் உண்டு. 

இங்கே நடராஜர் ஆனந்தமாய் ஆடுபவர். அழகானவர்.  தூக்கிய  இடது திருவடி  சிவன் முகத்திற்கு சமமாக நேரே இருந்தால் அந்த நடனம் ஆனந்த தாண்டவம். அது இங்கே.   இந்த ஊருக்கே  ஆனந்த தாண்டவபுரம் என்று பெயர் அவரால் தான்.  ஸ்வயம்பு லிங்கம்.    சோழ கால கோவில்.  வெண்கல சிலையில் ஜடாநாதர் கண்ணைப் பறிக்கிறார்.

எதுவுமே நமதல்ல. சிவனுடையது, சிவனுக்கே. சிவனுக்காகவே இந்த உடல் பொருள் ஆவி எல்லாமே என்ற கோட்பாடுடன்  வாழ்பவர்கள் சிறந்த சிவனடியார்கள். அவருள் ஒருவர்  மானக்கஞ்சாறர் . அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

இந்த கஞ்சறூரில்  வேளாளர் குளத்தில் பிறந்து பரம்பரையாக அரசருக்கு சேனாதிபதியாக சேவகம் செய்த குடும்பத்தை சேர்ந்தவர்  மானக்கஞ்சாறநாயனார். பெரும் சிவ பக்தர். பல காலம் பிள்ளையின்றி தவம் செய்து ஒரு பெண்ணை வரமாகப்பெற்றார். அந்தப் பெண் வளர்ந்து மணவயது வந்தவுடன் ஏயர்கோன் கலிக்காமர் என்பவருக்கு பேசிமுடித்தார்கள் ஊர் பெரியவர்கள்.

கலிக்காமர் வருமுன் சிவபெருமான் பைராகி போல மகா விரதம் பூண்ட ஒரு சிவனடியாராக  வேடம் கொண்டு மானக்கஞ்சாற நாயனார் வீட்டுக்குச் சென்றார். நாயனார் வரவேற்று உபசாரம் செய்து வணங்கினார்.

''ஐயா  சிவபக்தர், உங்கள் வீட்டில்   இங்கே என்ன விசேஷம் நடக்க இருக்கிறது"  -  சிவனடியார் கேட்டார்.

"சுவாமி, இது அடியேனுடைய மகள் . அவளுக்கு  திருமணம்  நிச்சயமாகி  இன்று இங்கே நடக்க இருக்கிறது.'' பெண்ணை பார்த்து ''அம்மா சிவனடியாருக்கு நமஸ்காரம் பண்ணு ''என்கிறார். அந்த பெண்ணும் வணங்கி எழுந்தது.

அழகான நீண்ட கூந்தலை உடைய அந்த பெண்ணை சிவனடியார் பார்த்தார், ஆசிர்வதித்தார். பிறகு  மானக்கஞ்சாற நாயனாரை கூப்பிட்டார்.

''சிவபக்தர், நான் ஏதாவது கேட்டால் கொடுப்பீரா?''

''சுவாமி என்ன கேள்வி இது. சிவனடியார்  நீங்கள் கேட்டு என்னால் கொடுக்க இயன்றதை கொடுக்காமல் இருப்பேனா?''

''எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  இந்த அழகிய பெண்ணின்  தலை முடி நீண்டு இருப்பதை பார்த்தபின் அதை  முப்புரி நூலாக  அணிந்து கொள்ளவேண்டும்.'

''ஆஹா  நான் தன்யனானேன், ஒன்றுமில்லாத இந்த விஷயமா தங்கள் கேட்பது. அதை நான் மறுப்பதா?  இதோ வருகிறேன்.''

நாயனார் தனது கூரான  வாளால்  அந்த பெண்ணின் ஆறடி கூந்தலை அடியோடு அறுத்தார். அப்பாவுக்கு என்ற அந்த பெண்ணும் ''நமது திருமண நாளில் ஒரு பழுத்த சிவனடியாருக்கு திருப்தி அளிக்க எனது கூந்தல் பயனளித்ததே. என்ன புண்யம் செய்த்திருக்கிறேன் நான் '' என்று மகிழ்ந்தாள். 

நாயனார் அந்த நீண்ட கூந்தலை சிவனடியாரிடம் அளிக்க ஒரு தாம்பாளத்தில் வைத்து சமர்ப்பித்தபோது அங்கே சிவனடியார் இல்லை.  எதிரே  ரிஷபாரூடராக சிவன் தோன்றினார். 

அங்கே அப்போது நின்றிருந்த  மாப்பிள்ளை ஏயர்கோன்  கலிக்காமர் கண்களில் ஆனந்த கண்ணீரோடு தனது மாமனாரான  நாயனாரை போற்றினார். சிவனே வந்து  என் மனைவியின் கூந்தலை யாசிக்க அவளும் மனமுவந்து அளிக்க  இப்படிப்பட்ட பெண்ணை மனைவியாக பெற, இந்த மகா சிவபக்தரை என் மாம னாராக பெற என்ன பாக்யம் செய்திருக்கிறேன்''  என்று புளகாங்கிதம் எய்தினார். இதற்கிடையே, முடி இழந்த அந்த பெண்ணின் கேசம் தானாகவே முன்பை விட அதிக நீளமாக அழகாக வளர்ந்திருந்ததே.

இதில் முக்கியம் என்னவென்றால், திருமணநாளன்று மங்களமான காரியமாக முடி இழத்தலை ஒரு பெண் ஏற்க முன்வந்தால் அவள் மனது எவ்வளவு தூயது, அதை  யோசிக்காமல் அளிக்க முன்வந்த அந்த சிவபக்தர் , நாயனார் எத்தகைய பக்தி உடையவர் என்று விளங்கும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...