Tuesday, November 30, 2021

vainava vinnoli

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர் J K  SIVAN   


8.   ''அத்தை தின்று அங்கே கிடக்கும் ''

எல்லோராலும்  பாட்டெழுத முடியாது.  பல  காகிதங்களை கிழித்துப்போட்டு தன்னைச் சுற்றி ஒரு பெரிய காகிதமலை எழுப்பியவர்கள் என்னையும் சேர்த்து அநேகர்.  ஹுஹும்   கவிதை, பாட்டு  எழுதுவது இவ்வளவு கஷ்டமா?  இலக்கணம் தெரியாதவன், தெரிந்தவன் எவனுக்கும் இதே கதி. அப்படி அவன் பாட்டு எழுதினாலும் அதில் உயிர்ச்சத்து இருக்கவேண்டும்.  வாசகனைக் கட்டிப்போட வேண்டும். பலமுறை சிந்திக்க வைக்கவேண்டும்.  பக்தி ரஸம்  ததும்ப வேண்டும். அப்போது தான் ஒரு பாரதி, கண்ணதாசன் கிடைப்பான்.  கரம் கூப்பி  தொழவைக்க  ஆழ்வார்கள் தோன்றுவார்கள்.
 
அப்படிப்பட்ட ஒரு கவிஞர்களில் ஒருவரது கவிகள், பாசுரங்கள், பாக்கள் எந்த அளவிற்கு தேன் சொட்ட அமைந்திருந்தால், இனிமையாக இருந்தால், அவரது  உண்மைப் பெயர் மறக்கப்பட்டு ''மதுர கவி'' என்று நினைக்கப்படுவார். போற்றப்படுவார், தெய்வமாக கருதப்படுவார்?'' 

இதை உணரும்போது  ''ஆஹா,  மதுர கவி ஆழ்வாரின் பாசுரங்களை உடனே படித்து மகிழ ஆர்வம் ஏற்பட வில்லையா?. எனக்கு ஏற்பட்டது மட்டுமல்லாமல் யோசிக்க வைத்தது. மற்ற ஆழ்வார்களுக்கும் இவருக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம் ?
மற்ற பதினொரு ஆழ்வார்கள் வைகுந்தனை, மாலவனை வேண்டி துதி பாடிய போது , இந்த மதுர கவி மட்டுமே தனது ஆசானை, குருவை,  கோவிந்தனை விட  அதிகமாக நேசித்தவர் .  தமது குருவைப் பற்றி மட்டுமே பாசுரங்கள் இயற்றி திருப்தி அடைந்தவர்.  இது ஒன்றே போதாதா அவர் மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் குருவை   தெய்வத்துக்கு முன்பே  வழிபட்டவர் என்று உணர்த்த,   சீரிய ஆச்சாரிய பக்தியை வெளிப்படுத்த இன்னொரு மதுர  கவி  பிறக்கவேண்டும்.

மதுரகவி ஆழ்வாருக்கு மற்றுமுண்டான பெயர்கள் இன் கவியார், ஆழ்வார்க்கு அடியான்.(''பொன்னியின் செல்வனில்'' வரும் ஆழ்வார்க்கடியான் நம்பி இவர் இல்லை)

மதுர கவி  ஆழ்வார் பிறந்தது திருக்கோளூர் என்ற கிராமத்தில்.ஆழ்வார் திருநகரி என்கிற வைணவ க்ஷேத்ரத்தின் அருகே உள்ளது.  இவரைப் பற்றி  அறிய முற்படும்போது தான் எனக்கு  திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் பழக்கமாயிற்று. அவளைப்  பற்றி தெரிந்துகொண்டபோது  உடனே  அவளது 81  உதாரண புருஷர்கள் ஸ்த்ரீகள் பரிச்சயமாயினர்.  ''கேள்வி ஒன்று, பதில் எண்பத்தி ஒன்று '' என்ற புத்தகம் உருவாயிற்று. இன்னும் நிறைய அன்பர்களுக்கு அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன். (வேண்டுவோர்  அணுக: 9840279080  வாட்ஸாப்ப் ).

கி .பி. ஒன்பதாவது நூற்றாண்டில் ஈஸ்வர வருஷம் முதன்மை வாய்ந்த இந்த மதுர கவி  ஆழ்வார் முதல் மாதமான சித்திரையில் ஜனித்து  சித்திரை நக்ஷத்திரத்தோடு முத்திரை பதித்தவர். இவரை கருடனின் அம்சமாகவும் -- வைனதேயன் (வினதாவின் மகன்)-- என்று கருதுவதால் தான் 11 பாசுரங்கள் மட்டுமே அளித்து எங்கோ உயரே சென்றுவிட்டார். கருடன் அல்லவா?

இந்த ஆழ்வாரை குமுத கணேசர் என்னும் விஷ்வக்சேனரின் சிஷ்யரே தான் பூமியில் வந்து பிறந்தவர் என்றும் கூறுவார்கள். இதற்கு எது ஆதாரம் என்றெல்லாம் கேட்கவேண்டாம். ஆராய நேரமோ அவசியமோ இல்லை. 

ஆழ்வார்களில் சிறந்தவர் என்ற உண்மை இவர் பதினொரு பாசுரங்களே எழுதி அவை நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் முக்யமாக நடுநாயகமாக வைக்கப்பட்டுள்ளதிலிருந்தே தெரிய வருகிறதே.

மதுரகவியின் கண்ணினுட் சிறுதாம்பு அந்தாதி வகையைச் சேர்ந்த பாசுரம். இப்பாசுரங்களைப் பாடிய பிறகே திருவாய் மொழி பாசுரங்கள் துவங்கும் வழக்கம் என்பதிலிருந்தே இவற்றின் முக்யத்வம் புரியும்.

நாதமுனிகள் 12000 முறை கண்ணினுட் சிறுதாம்பு பாசுரங்களைப் பாடிய பிறகு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. சாக்ஷாத் நம்மாழ்வாரே அவருக்கு தரிசனம் கொடுத்து 12 ஆழ்வார்களின் பாசுரங்களை, நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை, அருளினார் என்பது சரித்திரம். 

மதுரவி, நம்மாழ்வாருக்கும் முன்னே தோன்றியவர். நம்மாழ்வாரின் முதன்மையான சீடராக விளங்கிய இந்த ஆழ்வார் நம்மாழ்வாருடைய ''திருவாய் மொழி''  யை வைஷ்ணவ சமுதாயம் அன்றாட வாழ்வில் நித்ய பாராயணம் செய்யும் அளவுக்கு பரவச் செய்தார். அந்த காலத்தில் பிரசுர வசதிகள் ஏது ? வாய் மொழியாகவே பல இடங்களுக்கு அது பரவ வேண்டுமானால் எத்தனை பேர் அதைக் கற்று, சென்ற இடமெல்லாம் அனுபவித்துப் பாடி, மற்றோர் பலரும் அதே வண்ணம் செய்ய வைத்திருக்க  வேண்டும்!!. இதைத்தான் பிரம்மப் பிரயத்தனம் என்று சொல்கிறோமோ?

எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் இந்த மதுர கவியை பற்றி சுருக்கமாக சொல்லும்போது  
''பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் பதினொன்று தான். அவை எல்லாம் குருகூர் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் புகழைப் பாடுவதே. இருப்பினும் மதுரகவி வைணவர்களின் மரியாதைக்கு உரியவர் - அவர்தான் நம்மாழ்வாரைக் கண்டுபிடித்துப் பாடல்களை உலகுக்கு வெளிப்படுத்தியவர் என்கிற தகுதியில் நம்மாழ்வாரையே தனது தெய்வமாகக்கொண்டு அவர் பிரபந்தத்தைப் பரப்பியவர். நம்மாழ்வாரை உலகுக்குக் காட்டி அவர் பாடல்களை ஓலைப்படுத்தியவர் மதுரகவிகள் என்பதில் ஐயமில்லை.  
வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் பெரியவரான நம்மாழ்வாரைத் தன் குருவாகக் கொண்டார். அவருக்கு மற்ற தெய்வங்கள் தேவைப்படவில்லை.''

"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே"

''எனக்கு வேறு தெய்வமில்லை, குருகூர் சடகோபன்(நம்மாழ்வார்)தான் தெய்வம் என்று அவர் மேல் பதினோரு பாடல்கள் பாடி, ஆழ்வாரின் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டவர் மதுரகவியார்.

நம்மாழ்வார் நீண்டகாலம்  ஜீவியவந்தராக இல்லை  என்று அறிகிறோம். பதினாறு வயது வரை வாய் பேசாதிருந்துவிட்டு மதுரகவியாரைச் சந்தித்ததும் தன் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல் களையும் செஞ்சொற் கவிகளாக அவருக்குச் சொல்லியிருக்கிறார்.  

மொத்தம் பதினோரு பாடல்கள்தான் எழுதியிருந்தாலும் மதுரகவியின் பாடல்களைத் திருமந்திரத்தின் நடு மந்திரமான "நமோ" என்பதின் விளக்கம் என்று சொல்கிறார்கள்.

''கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணி் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே."

நுட்பமான கண்ணிகளால் ஆன சிறிய கயிற்றினாலே கட்டப்பட்ட கண்ணபிரானைக் காட்டிலும் தென்குருகூர் நம்பி எனும் சடகோபன் என்னும்போது என் நாக்கில் தித்திக்கும் (அண்ணிக்கும்) அமுது ஊறும். பகவானை விட பாகவதன் முக்கியம் என்பது வைணவத்தின் ஆதாரக் கருத்துகளில் ஒன்று.
ஆசார்யனே என் குரு தாய் தந்தை எல்லாம் என்கிறார்  கவி.

"நன்மையாய் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே"

படித்தவர்கள் என்னைச் சிறியவனாகக் கருதலாம். அதனால் என்ன, என் அன்னையும் தந்தையும் அவன்தான். அவன்தான் என்னை ஆட்கொள்கிறான், சடகோபன் என்னும் நம்பி. சங்கப் 
 பலகை
யில் ஆழ்வாரின் பாடலை வைத்து அதன் ஏற்றத்தை நிரூபித்தவரும் மதுரகவி தான்.

'ஓம் நமோ நாராயணாய' என்பது திருமந்திரம். அதில் ஓம் என்பது முதல் பதம், நமோ என்பது மையப் பதம், நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஓம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது என்கிறார்கள். இரண்டாம் பதம் ஆச்சாரியனுக்குத் தொண்டு செய்வதை வலியுறுத்துவதாகச் சொல்கிறார்கள்.

மதுரகவியின் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' பாசுரங்களை திருமந்திரத்தின் மத்தியப் பதமாகவே எண்ணி அதைப் பிரபந்தத்தின் நடுவே வைத்திருக்கிறார்கள். மிக ஆச்சரியமாக இது அமைந்துள்ளது.
பதினோரு  கண்ணினுட் சிறு தாம்பு  பாசுரங்களை  12,000 தடவை சேவித்தவர்களுக்கு நம்மாழ்வார் காட்சி தருவார் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. நாதமுனிகள் தான் ''நான் பார்த்தேனே'' என்கிறாரே.

இந்த ஆழ்வார் பதினொரு பாசுரங்கள் மட்டுமே எழுதினார் என்பதைவிட அவர் செய்த மாபெரும் சேவை வைணவ உலகம் மறக்க முடியாததொன்று. நம்மாழ்வாரின் அனைத்து திருவாய் மொழி பாசுரங்களையும் 1102 ஐயும் பிரதி எடுத்து, சிறப்பித்து, உலகறியச் செய்தவர் என்ற ஒன்றே போதாதா!.
நம்மாழ்வார் பேச்சின்றி இருந்தவர் பிறந்தது முதல். ஒரு புளியமரத்தின் உட் பகுதியில் அமர்ந்திருந்தவர். அவர் முதலில் பேசியது மதுர கவியிடம் மட்டும் தான்.
அதன் பின்னே ஒரு கதை உலாவுகிறதே.  அதை மீண்டும் ஒரு முறை சொல்லி நிறைவு செய்கிறேன். 

 ஒரு நாள் மதுரகவி தனது வட இந்திய யாத்ரையில் சரயு நதி யில் ஸ்நானம் செய்து கொண்டி ருந்தபோது அவர் எதிரே வானில் பளிச் சென்று ஒரு ஒளி தோன்ற,  இது என்ன ஆச்சர்யம் என்று  அண்ணாந்து பார்த்தவரை  அது  காந்த சக்தியாக ஈர்க்க அதையே தொடர்ந்து சென்றார். அது தென் திசை நோக்கி பயணித்தது. அதைப் பார்த்துக்கொண்டே தெற்கே நகர்ந்தவர், அந்த ஒளி எங்கே நின்றது என்று பார்க்கும்போது அது ஆழ்வார் திருநகரியைக் கடந்து ஒரு பெரிய புளியமரத்தடியில் அவரை நிற்க வைத்து விட்டு  மறைந்தது.   விண்ணொளி  தேடி வந்தவர்  எதிரே  அங்கே  ஒரு ஞான ஒளிச்  சிறுவன் அமர்ந்திருந்தான். 16 வருடங்களாக கண் மூடி, வாய் பேசாமல், காது கேளாமல் த்யானத்தில் இருந்தவன். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று உணர ஆழ்வாருக்கு வெகு நேரம் ஆகவில்லை. அந்த பால யோகியின் அருகே சென்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?''
பிறந்தது முதல் இதுவரை பேசாமல், பார்க்காமல் உண்ணாமல் இருந்த அந்த பாலயோகி உடனே பதில் சொல்கிறார்
''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்''
இந்த வாசகம் மிக ஆழமானது. எத்தனையோ அர்த்தங்களை உள்ளே அடக்கியது. அழிவே சாஸ்வதமான இந்த உடலில் உள்ளே  தோன்றுகிற ஆத்மா என்கிற ஜீவன் எதை உட்கொண்டு ஜீவிக்கும்? என்ற பொருள் கொண்டால் ஜீவாத்மா சம்சாரத்தில் உழலும்போது அதாவது எண்ணற்ற உடல்களில் உட்புகுந்து அதன் கர்மாக்களின் பலநாள் சிக்கிக் கொண்டு அதன் பலனில் கட்டுண்டு கிடக்கும்.  பின்னர்  சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு ஜீவன் பரமாத்மாவை நாடி வைகுண்டம் சேரும்.
அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து சரணடைந்தார். நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டார்.
பிறகு நடந்ததை எல்லாம்  ஸ்ரீ வைஷ்ணவ சரித்திரம் கூறுகிறதே. 

ஆழ்வார் பாசுரங்கள் அனைத்துமே வைஷ்ணவ சிந்தாந்தம் வேதாந்தம் நிறைந்தவை. சைவமும் வைணவமும் தக்க சமயத்தில் அவதரித்து, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வேகமாக பரவி வந்த ஜைன புத்த மதத்தை தடுத்து நிறுத்தியது. இதில் ஆழ்வார்களின் பங்கு இன்றியமை யாதது.

1879ம் ஆண்டு மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களுக்கு ''பெரிய வாச்சாம்பிள்ளை வியாக்யானம் , ஸ்ரீ ராமனுஜரின் அரும்பதம், பிரசுரிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் PDF ரூபத்தில் என்னிடம் உள்ளது. (உங்களால் புரிந்து கொள்ள முடியாத நீண்ட மணிப்ரவாள நடையாக இருந்தாலும் - வேண்டும் என்பவர் என்னை அணுகவும். முகநூலில் அதை அனுப்ப வசதி, வகை இல்லை. வாட்சப்பில் 9840279080  அல்லது  மின்னஞ்சலில்  jksivan @gmail .com  ல் தொடர்பு கொண்டால் அனுப்ப எனக்கு காசோ பணமோ  செலவில்லை, நான் குறைந்தும்  போய்விடமாட்டேன்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...