Sunday, November 7, 2021

MAHA KAVI BARATHI

 நங்கநல்லூர்  J.K. SIVAN 


''என் நந்தலாலா  .......

மழை கொட்டோ கொட்டு என்று பெய்கிறது.  பேய் மழை என்பார்களே  அது இது தானோ?  வழக்கமாக தெருவில் சுற்றும்  நாய்கள், பசுக்கள்  எதையுமே  காணோம். காக்கைகள் பறவைகள் எங்கோ அடைக்கலமாகி விட்டன.  வெள்ளம்.  நீர் நிலைகள்  நிரம்பி விட்டன.  மேலும்  சில நாட்கள் இது தொடரும்  என  அறிக்கைகள். எல்லாம் உன் செயல்  கிருஷ்ணா.  நான்  உன்னை நினைத்துக்கொண்டே  இருக்கிறேன். ஏதோ படிக்கிறேன், எழுதுகிறேன். வேறொன்றும் செய்ய என்னால் இயலாது. வெளியில்  காலாற  நடந்து விரும்பிய இடத்துக்கு எல்லாம் போய்  ரெண்டு வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது.  இப்போது இதுவே  பழக்கமாகி விட்டது.  இதுவும் நல்லதற்கே.

சில பேரால் தான் சில  விஷயங்களைச் சொல்லவோ  செய்யவோ  முடிகிறது.  இதுவும்  உன்  சங்கல்பமே. எல்லோராலும் எல்லாமே செய்ய முடிந்தால் அந்த காரியத்துக்கு என்ன மதிப்பு, செய்பவனுக்குத் தான்  என்ன தனிப்  பெருமை? 

பக்தி  பலரிடத்தில் மிளிர்கிறது.  அவரவர்  தத்தம்  முயற்சிக்கேற்ப,  விருப்பத்துக்கிணங்கி  வசதியின் படி, தமது இஷ்ட தேவதையை வாழ்த்தி வணங்க   நமது சனாதன தர்மத்தில்  இடம் இருக்கிறதே.   ஒருவரோடு ஒருவரை  இணைத்தோ, ஒப்பிட்டோ பார்ப்பது  தேவையற்றது. பக்தி அவரவர் மனம் விரும்பியபடி தான் அமையும்.  மற்றவர்க்கு அதில் எந்த சம்பந்தமு மில்லை. அது பற்றி அபிப்ராயம்  சொல்வது தப்பு. தேவையற்றது. எதுவும் உசத்தியில்லை, எவரும்  தாழ்ந்தவரும் இல்லை. 

என்னைப்  பொறுத்தவரையில்  காணும் யாவிலும் கண்ணனைக் காண  வேண்டுமானால்   நமக்கு  பாரதி போல் கண்ணதாசனைப் போல்  கவிதை புனைய தெரியவேண்டாம்.  ''பெத்த''  (பெரிய)  படிப்பு வேண்டாம். உயர் குல பிறவி வேண்டாம்.    எவராக இருந்தாலும்  கருத்திலே கண்ணன் இருந்தாலே போதும். கண் வேண்டும்.   அதாவது மனக்கண்.   கண்ணாடி அணிந்த 
புறக்கண்  அல்ல.  புறக்கண்  வேறு எதை எல்லாமோ தான் தேடும். அகக் கண் அவனையே மட்டும் தேடும்,  காணும்.   அவனை அப்படியே  கட்டிப் பிடித்து  தன்னுள்  வைத்துக் கொள்ளுமே.  என்னுள் அப்படி செய்கிறதே! அது என் அதிர்ஷ்டமா பாக்யமா? 
மனத்திரையில்  ஒரு காட்சி ஓடுகிறது.  விவரிக்கிறேன். 
ஒரு காகம் அருகிலே வந்து நின்றது. அதை உடனே  ''காக்கா ஓஷ் '' என்று  ஒட்டவோ  கை ஓங்கி விரட்டவோ  இல்லை. அதையே  பார்த்துக்கொண்டிருந்தேன்.  பறவைகளில் காகம் அழகற்றது. ஒரு தரம் பார்த்தாலேயே  அருவருப்பு.  குரல் கர்ண கொடூரம்.   இப்படி  தான்  காகம் நம்மிடையே  பெயர் பெற்றிருக்கிறது.   ஆனால்  அதன் கருமையே அழகு. தனிச் சிறப்பு. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு  என்று கூத்தாடி  அதன் கருப்பிலே  கண்ணனைக் காண்பது  ஒரு அபூர்வ அனுபவம். எல்லோராலும்  இந்த  ரசனையை  உணர முடியாது.   அது மட்டுமா?.
 
 நடந்து கொண்டே போகும்போது   இரு புறமும்  பச்சைப் பசேல் என்று செடியும் கொடியும், மரமும் கண்ணில் பட்டால், 
''ஆஹா  என்ன  இனிய  பசுஞ்சோலை  குளு  குளு வென்று  காற்று''  என்பதோடு  நிறுத்திக் கொள்கிறோம்.   அந்த  பச்சை வர்ணத்தில்  பச்சை மாமலை போல் மேனி பவழவாயன் தெரிகிறதை  பார்க்க நம்மால்  ஆழ்வாராக முடியவில்லை.   நான் யாத்திரை பண்ணும்  போதெல் லாம் பச்சை பசேல் வர்ண வயல்களில் செடி கொடிகளில்  அவனை நினைக்கிறேன், இல்லை,  அவற்றை படைத்ததற்காக  அவனை  நினைப்பவன். 

சோலையான  ஒரு பிரதேசத்தில் நடந்து செல்கிறோம். மரங்களில் அண்டி இருக்கும்  பல வித வண்ணப் பறவைகள்  ஆனந்தமாக குரல் கொடுக்கிறதே.  அதை விட்டு  என் நண்பன்  ''முஷாரப்''  '' மு.க,  கட்சி என்று என்னென்னவோ பேசிக்கொண்டே வருகிறான். என் மனதில் அவன் சொல்வது எதுவும்   
ஏறவில்லை.  பறவைகளின் பலவித ஸ்ருதிகளில் தாளங்கள் சேர்ந்த  கானம்  அப்படியே  உன்னிடம் என்னைக் கொண்டு சேர்க்கிறதே பார்த்தசாரதி.  ஆஹா  இது  உன் குழல் நாதம் என்று அல்லவோ இதை நான் கேட்கிறேன் என்று சொல்லத்  தோன்றுகிறதா நமக்கு?

 ''அடுப்பில் அப்பளம்  சுடும்போது,   அப்பளம் மீது படவேண்டிய  சூடு  கை விரலில் பட்டு  மூன்று அடி உயரம் எம்பிக் குதிக்கிறாயே  கோமளா. அப்படியே  அந்த  தீயின் உஷ்ணத்தில்  கையை வைத்துக்   கொண்டே  ''ஆனந்தமாக இருக்கிறதே, ஆஹா இதுவல்லவோ உன்னை தீண்டும்போது கிடைக்கும் சுகம்''   என்று சொல்லேன் பார்க்கலாம்.  முடியுமா  உன்னால்?  நான் இதை சொன்னதற் காகவே என்னை எரித்து விடுவாய் பார்வையில் ! ''.
இப்படி ஏடாகூடமாக  ஒருதரம் சொன்ன
பட்டப்பா  பட்ட பாடு தெரியுமா உங்களுக்கு. வீட்டை விட்டே  விரட்டி விட்டாள்  கோமளா.  

ஆனால்  அப்படி ஒருவர்  நிச்சயம்  நம்மிடையே இருந்தார்.  எங்கும் எதிலும் எப்போதும் கண்ண
னைக் கண்டவர்.   எண்ணத்தை எழுத்தில்  வண்ணமாக  வடித்தவர்.  ஆமாம்,  வறுமையில் செம்மையாக வாழ்ந்த  மஹா கவி,   சுப்பிரமணிய பாரதி.   அப்படி தான் கண்டு மகிழ்ந்த கிருஷ்ணனை  மகாகவி  ''நந்தலாலா''  என்று  வாத்சல்யமாக அழைத்து வரிகளாக்கியிருப்பதை படியுங்கள்.

காக்கைச் சிறகினிலே    நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதையே    நந்தலாலா;1

பார்க்கும் மரங்களெல்லாம்    நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே   நந்தலாலா;

கேட்கு மொலியிலெல்லாம்    நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா    நந்தலாலா;

தீக்குள் விரலைவைத்தால்    நந்தலாலா -- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா   நந்தலாலா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...