Sunday, November 7, 2021

ADHI SANKARAR

 ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN

சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்  -  

நான்காவது  அக்ஷரம்    ''வ ''

‘நமச்சிவாய வாழ்க; நாதன்தாள் வாழ்க’  என்று மணிவாசகரின்  திருவாசகம் துவங்குகிறது.  பண்டைத் தமிழர்   பஞ்சாக்ஷரத்தை ஐந்தெழுத்து ஓதுதல் என்பர்.   அது சைவ மரபு திருமூலர் காலத்தில்  ஆரம்பமானது.  முதல் தமிழ்ச் சைவர் திருமூலர் என்று சொல்லலாம்.  ரொம்ப  அழகாக சொல்கிறார் திருமூலர்.

கரணங்கள் விட்டுஉயிர் தான்எழும்போதும்,
மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும்போதும்,
அரணம்கை கூட்டுவது அஞ்சுஎழுத்து ஆமே. (திருமந்திரம் 2702)

ஏழு வர்ணங்கள் கொண்டது  சூரிய ஒளி.  ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள்,  ஆரஞ்சு, சிவப்பு. உயிர் வாழ  சக்தி அளிக்கும்  அக்ஷரம்   ஓம்  நமசிவாய.   மரனாந்திர காலத்தில் கூட   ஒரு  பாதுகாப்பு தருவது  என்கிறார் மேலே  சொன்ன திருமந்திரத்தில்.
நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்ற  திருநாவுக்கரசரை  கல்லோடு கட்டி கடலில் போட்டபோது காப்பாற்றியது.

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்;
வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்சஉ தைத்தன அஞ்சு எழுத்துமே (தேவாரம், 3:22:1)

மேலே சொன்னது  சம்பந்தர் தேவாரம்.  ஓம்  நமசிவாய  எனும்  ஐந்தெழுத்தை,  தூங்கும்போதும், தூங்காமல் விழித்திருக்கும்போதும், நெஞ்சம் நைந்துபோகுமாறு நாளும்நாள் இடைவிடாது நினையுங்கள் என்கிறார்.  மார்க்கண்டேயனின் உயிர் பிரிக்க காலனிடமிருந்து அவனைக் காப்பாற்றியது  ஓம் நமசிவாய எனும்  நாமம்.

திருமூலர்  இந்த   ந, ம, சி, வா, ய  என்ற  ஐந்தெழுத்துக்கள்  எதைக்  குறிக்கிக்கிறது என்று அழகாக சொல்கிறார்.

சிவன்,சத்தி, சீவன், செறுமலம், மாயை,
அவம்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர,
அவஞ்சேர்த்த பாசம் அணுககி லாவே. (திருமந்திரம் 2710)

‘சி’ சிவனையும், ‘வா’ சத்தியாகிய அருளையும், ‘ய’ உயிரையும், ‘ந’ அறியாமையாகிய ஆணவத்தையும், ‘ம’ மலங்களாகிய மாயை முதலிய அழுக்கு களையும் குறிக்கும். சி-வா-ய-ந-ம என்னும் ஐந்தெழுத்தில், ‘ய’ என்னும் உயிர், ‘சி’, ‘வா’ என்னும் சிவன்-அருள் ஆகியவற்றுக்கும், ‘ந’, ‘ம’ என்னும் ஆணவம்-மலங்கள் ஆகியவற்றுக்கும் இடையில், சிவன்-அருள்-உயிர்-ஆணவம்-மலங்கள் என்ற வரிசையில் நிற்கிறது.

அதாவது சார்ந்து நிற்கத் தகுந்த பொருளுக்கும், சார்ந்து நிற்கத் தகாத பொருளுக்கும் இடையில் நிற்கிறது. இந்தப் பக்கம் சாய்ந்தாலும் சாயலாம்; அந்தப் பக்கம் சாய்ந்தாலும் சாயலாம். இந்தப் பக்கம் சாய்ந்தால் சிவனருள்; அந்தப் பக்கம் சாய்ந்தால் பிறவிப் பெருங்கடல். தவித்து நிற்கும் உயிர் தகுந்த கட்சியில் சேர்ந்தால் வம்பு வழக்குகள் கிட்டவே  வராது.
எதை பேசினாலும்  முதலில்   ''சிவ சிவ''  என்று சொல்லும் பழக்கம் வேண்டும் என்று சொன்னவர் மகாபெரியவா.

‘சிவ’ என்னும் காரண ஐந்தெழுத்தைவிட, ‘சி’ என்னும் பெருங்காரண ஐந்தெழுத்தே உச்சம். ஏன்? உயிர் தானற்றுப்போய்ச் சிவன்மட்டுமே நிற்றலால்.  ‘சி’ என்னும் இந்தப் பெருங்காரண ஐந்தெழுத்தை ‘நாயோட்டு மந்திரம்’ என்கிறார் திருமூலர். அதென்ன நாயோட்டு மந்திரம்? தெருவில் போகையில் வாலைக் குழைத்து வரும் நாயை எப்படி ஓட்டுவீர்கள்? ‘சி சீ ’ என்றுதானே?

நாய்ஓட்டும் மந்திரம் நான்மறை நால்வேதம்;
நாய்ஓட்டும் மந்திரம் நாதன் இருப்பிடம்;
நாய்ஓட்டும் மந்திரம் நாதஅந்தம் ஆம்சோதி;
நாய்ஓட்டும் மந்திரம் நாம்அறி யோமே. (திருமந்திரம், 3051)

இன்னும்   நிறைய   சிவ வாக்கியர் திருமூலர்  எல்லாம் பேசலாம். இன்று ஆதி சங்கரர் இயற்றிய சிவாபஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தில் நான்காவது அக்ஷரம்  ''வ'' பற்றி அறிவோம்.

4. वशिष्ठकुम्भोद्भवगौतमार्य_
मूनीन्द्रदेवार्चितशेखराय ।
चन्द्रार्कवैश्वानरलोचनाय
तस्मै व_काराय नमः शिवाय ॥४॥

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்தர தேவார்சித்த சேகராய
சந்த்ரார்க்க வைச்வானர லோச்சனாய
தஸ்மை வகாராய நமசிவாய

பரமேஸ்வரா,  தேவலோக ரிஷிகளில் முதன்மையான  வசிஷ்டர், கும்பமுனி எனும்  அகஸ்தியர், கௌதமர்  போன்ற மஹரிஷிகள்  சூழ்ந்து கொண்டு  உன்னை வணங்கி  பூஜிக்கிறார்கள். அவர்களுக்கு பின் எண்ணற்ற  தேவர்கள்  இதர ரிஷிகள், முனிகள், கந்தரவர்கள், கின்னரர்கள், போன்றோர்  துதிக்க, நடுநாயகமாக  பிறைச்  சந்திரனை  தலையில் அழகாக கொண்ட பிறை சூடி,   சூர்ய சந்திரர்களை கண்களாக கொண்டவனே,  த்ரிநேத்ரா,  உன்னை   பஞ்சாக்ஷரத்தின் நாலாவது அக்ஷரமான  ''வ '  எனும் எழுத்தாக  வணங்குகிறேன்.


தொடரும்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...