Monday, November 8, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகங்கள்  65-67   நாமங்கள்  275 - 288

भानुमण्डल मध्यस्था, भैरवी, भगमालिनी ।
पद्मासना, भगवती,  पद्मनाभ सहोदरी ॥ 65 ॥

Bhanumandala madhyasdha bhairavi bhagamalini
Padmasana bhagavati padmanabha sahedari – 65

பாநுமண்டல மத்யஸ்தா பைரவீ பகமாலிநீ |
பத்மாஸநா பகவதீ பத்மநாப ஸஹோதரீ || 65

उन्मेष निमिषोत्पन्न विपन्न भुवनावलिः ।
सहस्रशीर्षवदना, सहस्राक्षी, सहस्रपात् ॥ 66 ॥

Unmesha nimishotpanna vipanna bhuvanavalih
Sahasrashirshavadana sahasrakshi sahasrapat – 66

உந்மேஷ நிமிஷோத்பந்ந விபந்ந புவநாவளீ |
ஸஹஸ்ரசீர்ஷ வதநா ஸஹஸ்ராகஷீ ஸஹஸ்ரபாத் || 66

आब्रह्म कीटजननी, वर्णाश्रम विधायिनी ।
निजाज्ञारूपनिगमा पुण्यापुण्य फलप्रदा ॥ 67 ॥

Aabramhakitajanani  varvashrama vidhaein
Nijagyna rupanigama punyapunya phalaprada – 67

ஆப்ரஹ்ம கீட ஜநநீ வர்ணாச்ரம விதாயிநீ |
நிஜாஜ்ஞாரூப நிகமா புண்யாபுண்ய பலப்ரதா || 67

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (275-288) அர்த்தம்

* 275 * भानुमण्डलमध्यस्था - பாநுமண்டல மத்யஸ்தா --
ஸ்ரீ லலிதாம்பிகையின் இருப்பிடத்தை சூரியமண்டலத்தின் மத்தியில் என்கிறார் ஹயக்ரீவர். சாந்தோக்ய உபநிஷத் (I.vi.6) என்ன சொல்கிறது? '' சூரியனின் மண்டலத்தில் வீற்றிருக்கும் தககக வென்று தங்கமாக ஜொலிக்கும் தெய்வத்தை யோகிகள் காண்பார்கள்'' என்கிறது. அனாகத சக்ரத்தை  சூரிய மண்டலம் என்று எடுத்துக் கொண்டால் அதில் ஜொலிக்கும் தெய்வம் தான் குண்டலினியாகிய அம்பாள்.

* 276 * भैरवी - பைரவி.
சிவனை பைரவன் என்று போற்றும்போது அம்பாள் பைரவியாகிறாள். உன்னத ப்ரம்ம சக்தி ஸ்வரூபம். இந்த ஈரேழு லோகங்களை பரிபாலிக்கும் காவல் தெய்வங்கள் பைரவ பைரவி சக்தி. பன்னிரண்டு வயது பெண்ணை பைரவி என்போம்.

* 277 *भगमालिनी - பகமாலிநீ --
 ''பக '' என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. நல்லதிர்ஷ்டம், சந்தோஷம், சௌகர்யம், வளம், சுகம், கெளரவம், கம்பீரம், தனிப்பெருமை, உயர்வு, அழகு, போன்று சில அர்த்தங்கள் அதில் அடக்கம். பகமாலினி ஒரு திதி நித்ய தேவி. பதினைந்து திதி நித்ய தேவிமார்கள் உண்டு. சந்திரனின் ஒவ்வொரு நாளும் திதி என்கிறோம். அதில் ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவி. ஸ்ரீ சக்ர நவாவரண பூஜையில் இவர்களை உபாசிக்கிறோம். லிங்கபுராணம் (I.99.6, 7) ''பக என்பவள் இந்த பிரபஞ்ச தாய். சிவலிங்கத்தின் ஆவுடையார் அவள் '' என்கிறது. ஆவுடையார் மேல் ஆரோகணித் திருப்பது லிங்கம். சிவசக்தி தத்வம்.

* 278 * पद्मासना - பத்மாஸநா -- 
தாமரைமேல் வீற்றிருப்பவள் அம்பாள் எனும் நாமம் இது. ஆசனங்களில் பத்மாசனம் என்பது தாமரை மலரைப் போல் அமர்வதை குறிக்கும் அல்லவா?. ஒரு கால் மற்றொரு தொடை அடிபாகம் வரை மடங்கி இருக்கும். யோகிகள் அமர்வது இப்படித்தான். நம்மால் அப்படி பழக்கமில்லாமல் உட்காரமுடியாது.

*279* भगवती - பகவதீ --
அம்பாள் பரிபூரணமான புனிதத்தன்மை கொண்டவள். சிவனின் சகல சக்தியும் தனதானவள். பகவான் என்றால் ஆறு சக்திகளை, குணங்களை உடையவர் என்று பொருள். அவை, உயர்ந்த தலைமை பொறுப்பு, நேர்மை, புகழ், ஞானம், அறிவு பாகுபாடு. அம்பாள் இவை அனைத்தையும் தன்னிடத்தே கொண்டவள். ஏனைய தேவதைகள் உப தெய்வங்களால் வணங்கப்படுபவள். ஆகவே பகவதி.

*280*  द्मनाभसहोदरी - பத்மநாப ஸஹோதரீ -
அம்பாளுக்கு விஷ்ணுவின் தங்கை என்று ஒரு நாமம். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் விஷ்ணு முன்னிலையில் நடக்கும் சித்திரங்களை சிற்பங்களை பார்க்காதவர்கள் உண்டா? ப்ரம்மா- லட்சுமி, விஷ்ணு- உமா, சிவன்- ஸரஸ்வதி ஆகியோர் இரட்டையர்கள். இந்த ஜோடிகள் தான் ஸ்ருஷ்டி  ஸ்திதி லய காரியங்களை பொறுப்பேற்பவர்கள். ஒன்றின்றி மற்றொன்றில்லை.

*281* उन्मेषनिमिषोत्पन्नविपन्नभुवनावली - உன்மேஷ நிமிஷோத்பன்ன 
விபந்ந புவநாவளீ -
உன்மேஷ என்றால் கண் இமைகளை திறப்பது. நிமேஷ் என்றால் இமைகளை மூடுவது. - கண்மூடி கண் திறப்பதற்குள் என்று சொல்கிறோம் அல்லவா?. அது நேரத்தை குறிக்கும். சிருஷ்டி ஸ்திதி லயம் அந்த வேகத்தில் நடைபெறுகிறது. அம்பாள் கண் திறந்தால் பிரபஞ்சம் உருவாகிறது. சற்றே கண் மூடினால் மறைகிறது. (விபன்னா) . சர்வ சாதாரணமாக இதை இயக்குகிறாள் அம்பாள். சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் 55 இதை தான் சொல்கிறது: ''அம்பாளின் கண் மூடி கண்திறக்கும் நேரத்தில் ப்ரபஞ்ச தோற்றம் மறைவு நிகழ்கிறது என்று யோகிகள் ரிஷிகள் அறிவார்கள் ''

 *282*  सहस्रशीर्षवदना -ஸஹஸ்ரசீர்ஷ வதநா -
''எனக்கு ஆயிரம் வேலை இருக்கு' என்றால் சரியாக ஆயிரம் என்று அர்த்தம் இல்லை. நிறைய, அநேக என்று தானே புரிந்து கொள்கிறோம். அம்பாள் லலிதை எண்ணற்ற முகங்கள் உடையவள். பாரதியார் ஆயிரம் கண்ணாள், கண்ணுடையாள் , என்பார். ஒவ்வொரு ஜீவனிலும் அம்பாள் இருக்கிறாள் என்றால் எத்தனை தலைகளை எண்ணுவது? புருஷ சூக்தம் '''சஹஸ்ர சீருஷ புருஷ'' என்று எண்ணற்ற சிரங்களைக் குறிக்கிறது. மஹா நாராயண உபநிஷதம் (I.13) ''பிரம்மனுக்கு உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மகன்கள், கைகள், அங்கங்கள் '' என்கிறது.

*283* सहस्राक्षी -ஸஹஸ்ராக்ஷி -
ஆயிரம் கண்ணாள் என்ற இந்த நாமம் மேலே சொன்னதை தான் குறிப்பிடுகிறது.  விஷ்ணு சஹஸ்ரநாமம்  (226)கூட இதைத்தான்  குறிப்பிடுகிறது 

*284* सहस्रपात् -ஸஹஸ்ரபாத் --
புருஷ சூக்தம் ஆயிரம் பாதங்கள் உடைய என்று சொல்கிறதே அதே தான் இது. விஷ்ணு சஹஸ்ரநாமமும் (284) இதையே தான் சொல்கிறது. பஞ்சதசி முதல் கூடமும் இதை தான் குறிப்பிடுகிறது.

*285* आब्रह्मकीटजननी - ஆப்ரஹ்ம கீட ஜநநீ -
இந்த நாமம் எதைசொல்கிறது என்றால் அம்பாள்  ஸ்ரீ  லலிதை ப்ரம்மா முதல் கண்ணுக்கு தெரியாத சிறிய வண்டு வரையில் சகல ஜீவன்களையும்   ஸ்ரிஷ்டிக்கிறாள். பெரிது முதல் சிறிது வரை சகல ஜீவன்களையும் படைப்பவள் என்ற பொருளில் அமைந்துள்ள நாமம்.

*286*  वर्णाश्रमविधायिनि - வர்ணாச்ரம விதாயிநீ -
வாழ்வின் வரைமுறையை, வாழும் வகையை நிர்ணயிப்பவள் சர்வ சக்தி கொண்ட அம்பாள். அவரவர் ஞானத்தை, வித்வத்தை, தன்மையை, தகுதியை, அனுசரித்து பொறுப்பை வகைப்  படுத்துபவள். எல்லோரும் ஒன்று சேர்ந்து ஈடுபட்டால் சுபிக்ஷம் நிலவும் என்று அறிவுறுத்த இந்த ஏற்பாடு.

*287* निजाज्ञारूपनिगमा -  நிஜாஜ்ஞாரூப நிகமா -
அம்பாள் தன்னுடைய கட்டளைகளை வேத ரூபமாக வெளிப்படுத்துகிறாள். வேதம் எதை நாம்  செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று தெளிவாக அறிவுறுத்துகிறது. வேதம் சொல்வதனைத்தும் ஒருவனால் நிறைவேற்றமுடியாது. அதற்கென்று பலர் தேவை. பொறுப்பைப்  பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றை தான் ரிஷிகள் முனிவர்கள் யோகிகள் எடுத்து சொல்கிறார்கள்.

*288*  पुण्यापुण्यफलप्रदा -புண்யாபுண்ய பலப்ரதா-
புண்யம் என்பது நல்லவை, சரியானவை, சிறந்தவை, நேர்மையானவை, உண்மையானவை. அபுண்யம் என்பது புண்யமில்லாதது.  புண்யத்துக்கு  எதிர்மாறானது. அதை பாபம் என்கிற தலைப்பில் வரிசைப் படுத்துகிறோம். அவரவர்க்கு அவர்கள் செய்த வினைப்பயனை அளிப்பவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். தினை விதைத்தவன் காலாகாலத்தில் தினை அறுவடை செயகிறான். வினை விதைத்தவன் பாவம் தான் விதைத்ததைத்  தானே திரும்ப அதிகமாக தனக்கே பெறமுடியும். ப்ரம்ம சூத்ரம் (II.i.34) ''எல்லாவற்றையும் நன்றாக பரிசீலித்து எந்த பாரபக்ஷமும் இல்லாமல் பகவான்/அம்பாள் பரிபாலிப்பதை வேதங்கள் காட்டுகிறது.

இன்று  சக்தி ஆலயம் -  திருமுல்லை வாயில் கொடியிடை அம்மன் .

அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து  1 கி.மி. தூரம்.  புராதன  சிவஸ்தலம்.  சென்னையில்  அம்பத்தூரில் இருந்து  3 கி.மீ.  நிறைய  பஸ்  ஓடுகிறது.  சிவன் பெயர்  மாசிலாமணீஸ்வரர். அம்பாள்  கொடியிடை நாயகி. இன்னொரு  திருமுல்லை வாயில்  காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ளது

காஞ்சிபுரம்  ராஜா  தொண்டைமான் ஒரு முறை திக்விஜயம் மேற் கொண்ட போது, அவனை எதிர்த்தவர்கள், எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல் கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் எனும் ரெண்டு  அசுரர்கள்.  தொண்டைமான்  தோற்றுப்போனான்.   தனது யானையின் மீது  நொந்து வருந்தி திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானையால் நடக்க முடியவில்லை.   கீழே இறங்கிய  தொண்டைமான்  வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டியபோது   முல்லைக்கொடிகள் அடியில்  இரத்தம். அதிசயித்து  முல்லைக் கொடிகளை விலக்கிய போது அங்கு ஒரு சிவலிங்கம் அவன் வாளால்  காயமுற்று ரத்தம் வருவதை பார்த்து    வணங்கி தனது  தவறை பொருத்துக் கொண்டு மன்னிப்பு அருள வேண்டினான். சிவன்  ராஜ  முன் தோன்றி  வாழ்த்தி  வனுக்குத் துணையாக நந்திகேஸ்வரரை  அனுப்பி  ஓணன் காந்தனை  சந்தித்து போரில் வெல்கிறான்.   நன்றிப்பெருக்கால்  முல்லைக்கொடி இருந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டினான். அசுரர்களின்  கோட்டையிலிருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளெ ருக்கு தூண்களை  சிவாலயத்தில் கர்பகிரஹத்தில்   பொருத்தினான். இன்றும்  மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் அதை காணலாம்.

தெற்கே  இராஜ கோபுரம்  தான்  பிரதான  வாயில்.   கிழக்கே ஒரு வாசல்.  தெற்கில்   16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைத் தாண்டி  உள்ளே  சென்றால்  பிரசன்ன கணபதி சந்நிதி. ர். அவருக்குப் பின்னால் மதில்மீது  ஸ்தல வரலாற்றுச் சிற்பம் - தொண்டைமான்  முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் காட்சி தருவது ஆகியவை .

தெற்கு வெளிப்பிரகார நுழைவு வாயில் வழியே  போனால்  அம்பாள்  கொடியிடை நாயகி சந்நிதி,  கிழக்கு பார்த்து  காட்சி தருவாள். மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி  அம்பாள் சந்நிதி  ரெண்டுமே கிழக்கு பார்த்த ஒரே கோவில் இது.  அம்பாள்   சிவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும்  இங்கே விசேஷம்.

தொண்டமான் வாளால் வெட்டுப்பட்ட  சிவனுக்கு  அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையா ருக்குத் தான். வெட்டுப்பட்ட எரிச்சல்  தீர குளிர்ச்சியாக    எப்போதும் சந்தனக் காப்பு.
நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது  அவர்  யுத்தத்துக்கு தயாரான நிலையை காட்டுகிறது.   அம்பாள் விசேஷ  சக்தி கொண்டவள்.

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லைவாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படு துயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...