Monday, November 29, 2021

KUDHAMBAI CHITHTHAR

 குதம்பை சித்தர்--  நங்கநல்லூர்  J K  SIVAN 


இதற்கு முன் எழுதிய  சில குதம்பை சித்தரின் பாடல்கள்  நிறைய பேருக்கு பிடித்திருந்தது என்று அறிகிறேன்.  இன்று  இன்னும்  சில  பாடல்கள் பதிவிடுகிறேன்.  அவர் பாடல்களுக்கு அர்த்தம் சொல்ல அவசியமே இல்லை. எளிதில் புரியும். ரெண்டடி பாடல்கள் தானே. அதில் ஒன்று திரும்ப திரும்ப வருவது.

   ''தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
     மூவரும் ஆவாரடி குதம்பாய்
     மூவரும் ஆவாரடி.

அடியே  பெண்ணே,  இந்த திருமூர்த்திகள்  இருக்கிறார்களே, ப்ரம்மா, விஷ்ணு,  சிவன். இவர்களைத்தான் விண்ணோரும் மண்ணோரும்  சதா தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேடுகிறார்கள்.  வெவ்வேறாக தெரியும்  இந்த மூவருமே  மொத்தத்தில் ஒருவரே தானடி.

சத்தாகிச் சித்தாகித் தாவர சங்கமமாய்
     வித்தாகும் வத்துவடி குதம்பாய்
     வித்தாகும் வத்துவடி.22
 
பெண்ணே,  தெரிந்துகொள்ளடி,  ஸத் , சித் , ஆனந்தம்  என்றெல்லாம் யோகிகள் சொல்வார்கள். உலகில் தோன்றிய  தாவர ஜங்கம  வஸ்துக்கள்  எல்லாவற்றுக்கும்  கூட  அந்த பரமாத்மா ஒருவர் தானடி ஆதாரம்.  அவர் தான் வித்து. அதிலிருந்து விளைந்தது மற்றெல்லாம்.

உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
     திருவாகி நின்றது காண் குதம்பாய்
     திருவாகி நின்றது காண்.23

பெண்ணே இதையும் தெரிந்துகொள்ளடி.  எதெல்லாம் உருவமோ, எதெல்லாம் அருவமோ, எதெல்லாம் ஒளிவீசுகிறதோ, எதெல்லாம் எல்லையற்ற  பெருவெளியோ , அந்த  தெய்வம் ப்ரம்மம் என்று புரிந்துகொள்ளடி.
 
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
     பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
     பாருமாய் நின்றதைக் காண்.24

பெண்ணே, பஞ்ச பூதங்கள்  அனைத்தும் அந்த பரமாத்மாவின் வெவ்வேறு ஸ்வரூபங்கள் தான் என்று உணர்ந்து கொள்ளடி.
 
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
     சிவனாலே ஆகுமடி குதம்பாய்
     சிவனாலே ஆகுமடி.25

பெண்ணே,  எல்லாமே ஸாஸ்வதம்  என்று நினைக்கிறாயே , பொய் அதெல்லாம்.  அழிவில் தான் தோற்றம். தோற்றத்தின் முடிவு தான் அழிவு .  பழையன கழிதலும்  புதியன புகுதலும்  நியதி. எல்லாம்  அந்த  சிவன் ஒருவனாலே தான் என்பதை மறவாதேடி ..
 
அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
     புவனத்தில் உண்மையடி குதம்பாய்
     புவனத்தில் உண்மையடி.

பெண்ணே, நீ  நினைக்கிறாய்  எல்லாம் உன் முயற்சியால் சாமர்த்தியத்தால் என்று,  அது மடமையடி.  நன்றாக புரிந்துகொள் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது அப்பட்டமான உண்மை.  

(திருவிளையாடல் சினிமாவில் கூட  சிவாஜி கணேசன், சிவனாக  கண்ணை பெரிதாக உருட்டி விழித்து,  TMS  குரலில்  ''நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே '' என்று பாடுவாரே  அது இந்த உண்மையை எளிதில் எல்லோர் மனதிலும்  பதிய வைக்க). 

காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
     ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய்
     ஆரணஞ் சொல்லுமடி.27

பெண்ணே,  உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் காரியம் இணைபிரியாமல் உண்டு. காரணம் இன்றி காரியம்  இல்லை,  பகவான் சித்தம் என்பது தான் காரணம், அது நிறைவேறுவதும் நமது மூலம் அவன் சங்கல்பம்.. இதை வேதங்களும் சாஸ்திரங்களும் நிறைய சொல்கிறதடி.
  
காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந்
     தாரணி சொல்லுமடி குதம்பாய்
     தாரணி சொல்லுமடி.28

மேலே சொன்னதன்  விளக்கம் இது.  காரணம் இன்றி காரியம் இல்லை. இது உலக வழக்கு. விதி முடிந்து மண்டையைப் போட்டால் கூட  ஏதோ ஒரு வியாதி பெயரைச்சொல்லி அது  அவனை நின்றுவிட்டது என்கிறோம். டாக்டர்கள் பாடு கொண்டாட்டம்.  வாழ்நாள் பூரா சேர்த்து, கடன் வாங்கி டாக்டர் மருந்து  ஆஸ்பத்திரி என்று  விரயம் செய்து  விதி விட்ட வழியில்  வெறுங்கையுடன் போகிறோம்.
 
ஆதிசகத்து என்று அநாதி மகத் தென்று
     மேதினி கூறுமடி குதம்பாய்
     மேதினி கூறுமடி.29

பெண்ணே, உலகில் ஸர்வம்  விஷ்ணு மயம் ஜகத், ப்ரம்மமயம் ஜகத். என்கிறோமே என்ன அர்த்தம்?  இந்த உலகம் ஒரு மாயத்தோற்றம்.  விதவிதமான கலர்களோடு  மாற்றங்களோடு நம்மைக் கவரும் அழியும்  தோற்றம். இது தான் ஜகத்.   இதை ஆட்டுவிப்பது,  இதன் ஆதாரம்,  அந்த  அழிவற்றப்ரம்மம் எனும் அளவற்ற, உருவற்ற  மஹத் என்ற பேரருள்.  இதை தான் வேதங்கள் சொல்கிறதடி.

  யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல்
  சேனையைத் தந்தானடி குதம்பாய்  
சேனையைத் தந்தானடி.31
 
அடேயப்பா, இந்த ப்ரபஞ்சத்தில் தான் எத்தனை உயிர்கள் படித்துக்கொண்டே இருக்கிறான் அந்த பிரமன்.  யானை போன்ற பெரிது முதல் எறும்பு போன்ற  சின்னூண்டு வரை, எவ்வளவு விதமான ஆச்சரியமான உருவங்களில் எண்ணற்ற  ஜீவராசிகளை  அவன் படைக்கிறான். ஜீவாத்மாக்களில் உள்ள அந்த பரமாத்மா தான் எல்லாவற்றுக்கும் காரணம்.

மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
     எண்ணளவு இல்லையடி குதம்பாய்
     எண்ணளவு  இல்லையடி.32

மனிதன் அறிவு  என்னவெல்லாம் செய்கிறது பார்த்தாயா பெண்ணே.  ஊர்கள், உலகம் என்று மண்ணால்  ஏதேதோ  எல்லை, அளவு  அவன்  காட்டலாம். ஆனால்  இவ்வளவு வஸ்துக்களை  படைக்கும் அந்த பரமாத்மனையோ,  அவன் காரியங்களையோ, அறிவதற்கு,   எண்ணுவதற்கு இன்னும் ஒரு அளவு, அளவுகோல்,  கிடைக்கவில்லையடி..

அழிக்கமுடியாத  ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
     சோதியாய் நின்றானடி குதம்பாய்
     சோதியாய் நின்றானடி.33

ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் நடத்தும் அந்த ஆதி அந்தமில்லாத,  தோற்றம் மறைவு இல்லாத  பரஞ்சோதியை, ஒளியாக கும்பிடடி.
 
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
     தேவன் அவனாமடி குதம்பாய்
     தேவன் அவனாமடி.34

பெண்ணே  அவனை யார்  என்று நினைக்கிறாய்?  அவன் தானடி நமக்கெல்லாம்  இந்த  ஜீவன், உயிர், உள்ளம், எண்ணம், புத்தி, உடல் எல்லாமே  தந்தவன். ப்ரம்மமாகிய  பரமேஸ்வரன். அவனை வணங்கடி..
 
சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
     சத்தியம் உள்ளானடி குதம்பாய்
     சத்தியம் உள்ளானடி.35
 
கடவுள் இல்லை என்று எவன் சொன்னான்?  அவன் உள்ளான் .  அவனே  நாதம் . ஓம்கார பிரணவ ஸ்வரூபம். அவனே ஒளி ஒலி, குணம், குணம் இல்லாதது, எல்லாமானவன் , அவன் தான் அழிவற்ற  ஸத்யம்  ஸத்யம்  ஸத்யம்  என்று புரிந்துகொள்ளடி பெண்ணே. தெரிந்துகொள்ளடி.

குதம்பை சித்தரை அடிக்கடி வணங்கி  அருள்வாக்கு பெறுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...