Saturday, November 27, 2021

SRI LALITHA SAHASRANAMAM


 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்   J K  SIVAN 

ஸ்லோகங்கள்  99-100.  நாமங்கள்  480- 490.


पायसान्नप्रिया त्वक्स्था पशुलोक-भयङ्करी ।
अमृतादि-महाशक्ति- संवृता डाकिनीश्वरी ॥ ९९॥

Payasanna priya tvaksdha pashuloka bhayankari
Amrutadi mahashakti sanvruta dakinishvari – 99  

பாயஸாந்ந ப்ரியா   த்வக்ஸ்தா பசுலோக பயங்கரீ |
அம்ருதாதி மஹாசக்தி ஸம்வ்ருதா டாகிநீச்வரீ || 99

अनाहताब्ज-निलया श्यामाभा वदनद्वया ।
दंष्ट्रोज्ज्वलाऽक्ष-मालादि- धरा रुधिरसंस्थिता ॥ १००॥

Anahatabjanilaya shyamabha vadanadvaya
Danshtrojvalakshamaladi dhara rudhira sansdhita – 100

அநாஹதாப்ஜநிலயா ச்யாமாபா வதநத்வயா |
தம்ஷ்ட்ரோஜ்வலாsக்ஷமாலாதி தரா ருதிரஸம்ஸ்திதா || 100  

லலிதா ஸஹஸ்ரநாமம் - (480-490) அர்த்தம்

* 480 *  
 पायसान्नप्रिया - பாயஸாந்ந ப்ரியா - 
ஒரு பண்டிகை விசேஷம் என்றால் வடை பாயசம் இல்லாமல்  கொண்டாடுவதில்லை. பாயசம் அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணும்போது நமக்கும் சந்தோஷம். அவளுக்கும் அது பிடிக்கும்.  நான் சேமியா பாயசத்துக்கு  என்றும் அடிமை.  இந்த நாமம் சொல்வது விசுத்த சக்ர யோகினியான  டாகினிக்கு  பாயசம் ரொம்பவே பிடிக்குமாம்.

* 481 *
 त्वक्स्था -  த்வக்ஸ்தா  -- 
தொடுதல் - ஐம்புலன்களில்  ஒன்றின் அனுபவம். அந்த  தொடுதலில் இருப்பவளை த்வக்ஸ்தா என இந்த நாமம் உணர்த்துகிறது. சருமத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டவள்  டாகினி.  ஒரு ஜீவனின் உடலை முழுதுமாக பாதுகாப்பது சருமம் அல்லவா?

* 482 * 
 पशुलोकभयङ्करी - பசுலோக பயங்கரீ -- 
மிருகங்களுக்கும்  மாந்தரைப் போல்  பயத்தை அளிப்பவள்.   பிரம்மத்தை அறியாத அஞ்ஞானிகளை பசுக்கள் என்று சொல்வதுண்டு. அப்படிப்பட்டவர்கள் கண்டு அஞ்சும்படி செய்பவள் டாகினீஸ்வரி.  ப்ரஹதாரண்யக உபநிஷத்  (I.iv.10) ” அறியாமையால் தான்  பயம் விளைகிறது'' என்கிறது.  யாருமே  தனியாக இருக்க விரும்புவதில்லை. தனிமை நிறைய பேருக்கு பயத்தை அளிக்கிறது.  ஞானிகள் தனிமையைத்  தான் வேண்டி விரும்புவார்கள். தைத்ரிய உபநிஷத் கூட  இதை தான் சொல்கிறது (II.7). “தனது ஆன்மாவை உணர்ந்தவனுக்கு எதற்கும்  எதனிடமும் பயம் இல்லை  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருக்கிறது என்று உணர்ந்தவனுக்கு எதனிடமும் பயம் இருக்க முடியாதே.
 
* 483 *
अमृतादिमहाशक्तिसंवृता -  அம்ருதாதி மஹாசக்தி ஸம்வ்ருதா  -- 
அம்பாளை சுற்றி சதா சர்வகாலமும் மஹா சக்திகள் உள்ளனர்.  அம்ருதா, ஆகர்ஷிணி, இந்திராணி, ஈசனி, உமா,  ஊர்த்வ  கேசி  டாகினீஸ்வரி  முதலான பதினாறு யோகினிகள் பதினாறு  தாமரை இதழ்களில்  ஸ்ரீ சக்ரத்தில் காண்கிறார்கள்.

* 484 *
डाकिनीश्वरी - டாகிநீச்வரீ  --    
தென் திசை தேவி  டாகினீஸ்வரி.

* 485 * 
अनाहताब्जनिलया - அநாஹதாப்ஜநிலயா  --  
பன்னிரு  இதழ்கள்  கொண்ட தாமரையில்  வசிப்பவள்.  அனாஹத சக்ரம் தான்  இதய சக்ரம்.  கழுத்து (தொண்டை) விசுத்தி சக்ரத்தின் கீழ் இருப்பது. இந்த சக்ரம் சப்தத்தை உண்டாக்குவது. எனவே  சப்தம் சப்தபிரம்மம் எனப்படுகிறது.  இந்த இதய சக்ரத்தில்  கட்டைவிரல் அளவில் ஆத்மா என்னும் புருஷன் எட்டு இதழ் தாமரையில்  புகையில்லாத ஜோதியாக  இருப்பதாக கடோபநிஷத் சொல்கிறது.  

* 486 *
 श्यामाभा - ஸ்யாமாபா -- 
கரும்பச்சை நிறமாக தோன்றுபவள் ராகினி எனும் யோகினி. பதினாறு வயது பெண்ணாக தோன்றுபவள்.

* 487 *  
वदनद्वया - வதநத்வயா -- 
இரு வதனங்கள் , முகங்கள் கொண்டவள் என்று இந்த நாமம்  சொல்கிறது. யோகினியாகிய ராகினிக்கு  இரு முகங்கள்.  யோகினி டாகினீஸ்வரிக்கு ஒரு முகம்.

* 488 * 
 दंष्ट्रोज्ज्वला -      தம்ஷ்ட்ரோஜ்வலா - 
நீண்ட பற்கள் பெரிதாக  வெளியே நீட்டிக்  கொண்டிருப்பவள்  என்று  இந்த நாமம்.  ராகினிக்கு  பயத்தை தரும்  நீண்ட பற்கள் கொண்ட முகம்.  வராகம்,  காட்டுப்பன்றி,  போன்று  வாயின் இரு புறமும் தந்தம் கொண்டவள் என்று சொல்லப்படுகிறது.

*489 * अक्षमालादिधरा -    அக்ஷமாலாதிதரா -  
தியானம் செய்ய  உபயோகிக்கும் மணிகள்  கோர்த்த  மாலை சூட்டிக் கொண்டவள்.  ராகினிக்கு  51 மணிகள்  கொண்ட மாலை.  இந்த 51  என்ற எண்  சமஸ்க்ரித மொழியின் 51 அக்ஷரங்களை குறிக்கும். இந்த சக்ரத்திலிருந்து தான் 'ஓம்'  என்ற பிரணவ சப்தம் ஒலிக்கிறது.  எனவே தான் ராகினிக்கு  51 அக்ஷர மணி மாலை.  இந்த மணி மாலையோடு ஜபித்த மந்த்ரங்கள் கை மேல் பலன் தருபவை.  அக்ஷமாலிகா உபநிஷத் என்று கூட ஒன்று இருக்கிறது.  வெள்ளியோ தங்கமோ கம்பியில் கோர்த்த 51 மணிகள் ( வெவ்வேறு மணிகள் கோர்த்திருந்தாலும் ) நாம ஜெபத்திற்கு ஏற்றது. அதை முதலில் பூஜையில் வைத்து வணங்கி  புனிதமாக்கிவிட்டு பிறந்து ஜெபத்திற்கு உபயோகிக்கவேண்டும். அப்படியே கடையில் வாங்கி கழுத்தில் ஏறக்கூடாது.

* 490 *  रुधिरसंस्थिता -  ருதிரஸம்ஸ்திதா --  
ரத்தத்தில் கலந்தவள் என்று லலிதைக்கு ஒரு நாமம்.  சருமத்திற்கு அடுத்து உடலின் முக்கியமானது ரத்தம். உடல் முழுதும் பரவுவது.  ராகினி ரத்த ஓட்டத்தை நிர்வாகிக்கிறாள்.
    
ஒரு சக்தி பீடம் :  திருக்கடையூர்  அபிராமி 

மயிலாடுதுறையிலிருந்து 21 கி.மீ.  தூரத்தில் உலகப்புகழ்   பெற்ற  திருக்கடையூர் உள்ளது.  புராதன  பெயர்  திருக்கடவூர்.   60, 70  80  வயது பூர்த்தி ஆனவர்கள் இங்கே வந்து அந்தந்த அப்த பூர்த்தி பூஜை விசேஷங்களை நடத்துவது வழக்கம்.  மார்கண்டேயன் உயிர் காக்க,  காலனை வதைத்த  காலஸம்ஹார மூர்த்தி இங்கே பெரிய விக்ரஹமாக இருக்கிறார். கண் கொள்ளாக் காட்சி.   அம்ரிதகடேஸ்வரர் என்று சிவனுக்கு இங்கே பெயர். திருப்பாற்கடலில் அம்ரிதம் கிடைத்தபோது அந்த பானை  இங்கே கொண்டுவரப்பட்டது. எனவே சிவனுக்கு அம்ருத கடேஸ்வரர் என்று பெயர்.   அம்பாள் அபிராமி.    அபிராமி அந்தாதி படிக்காத,   தெரியாத,ஹிந்து தமிழ் பெண் கிடையாது என்று சொல்லலாம். சோழர் காலத்து ஆலயம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...