Wednesday, November 10, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர் J K  SIVAN

ஸ்லோகம் 71-72  நாமங்கள்:  305-320

राजराजार्चिता, राज्ञी, रम्या, राजीवलोचना ।
रञ्जनी, रमणी, रस्या, रणत्किङ्किणि मेखला ॥ 71 ॥

Rajarajarchitha Rakhini Ramya Rajeeva lochana
Ranjani Ramani Rasya Ranath kinkini mekhala

ராஜராஜார்ச்சிதா ராஜ்ஞீ ரம்யா ராஜீவலோசநா |
ரஞ்ஜநீ ரமணீ ரஸ்யா ரணத் - கிங்கிணி மேகலா || 71

रमा, राकेन्दुवदना, रतिरूपा, रतिप्रिया ।
रक्षाकरी, राक्षसघ्नी, रामा, रमणलम्पटा ॥ 72 ॥

Ramaa Raakendu vadana Rathi roopa Rathi priya
Rakshaa kari Rakshasagni Raamaa Ramana lampata

ரமா ராகேந்துவதநா ரதிரூபா ரதிப்ரியா |
ரக்ஷாகரீ ராக்ஷஸக்நீ ராமா ரமணலம்படா || 72

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (305-320) அர்த்தம்

*305* राजराजार्चिता - ராஜராஜார்ச்சிதா -
ராஜாதி ராஜாக்கள் எல்லோருமே வணங்கி வழிபடுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. தாய் அல்லவா. எல்லோராலும் தொழப்படுபவள். இன்னொரு அர்த்தம் கூட உண்டு. ராஜ ராஜன் என்றால் குபேரன், மனு, மற்றும் பத்து பெயர்கள் கொண்டவர்களை குறிக்கும். ராஜராஜன் என்கிற பேர் பன்னிரண்டு பேரை குறிக்கும் . இவர்கள் வணங்கும், வழிபடும் அம்பாள், லலிதாம்பிகை என்று ஒரு அர்த்தம்.

*306* राज्ञी -ராஜ்ஞீ --
ஸ்ரீ காமேஸ்வரனின் மஹாராணி என்கிறது இந்த நாமம். இந்த பிரபஞ்சத்தை ஆள்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை. ஸர்வ சக்தி.   அவளே  மா என்று எல்லோராலும் போற்றப்படும் தாய்.

*307*रम्या - ரம்யா -
ரம்யமாக இருக்கிறது என்றால் எல்லோரையும் மகிழ்விப்பது. சந்தோஷமாக இருக்கிறது என்ற பொருளில் சொல்கிறோம்.  அம்பாளின் திருநாமத்தை சொல்லும்போது மனம் இனிக்கிறதல்லவா? அழகின் சிகரம்  மனதை  மகிழ்விக்காதா?

*308*राजीवलोचना - ராஜீவலோசநா --
ஸ்ரீ அம்பாளை தாமரைக்கண்ணாள் என்கிறார் ஹயக்ரீவர். மான் விழி, கயல்விழி, என்றும் சொல்லலாம். ராஜீவ என்றால் மான், மீன் என்றும் அர்த்தம். மற்றெதுவுடனும் ஒப்பிட முடியாத அழகிய விழிகள். அவள் கடைக்கண் பார்வையே உலகை ரக்ஷிக்கிறது.

*309* रञ्जनी - ரஞ்ஜநீ -
தன்னுடைய சிவந்த நிறத்தால் சிவனையும்  உலகத்தையும்  செம்மையாக, சிவப்பாக்குபவள். சிவன் பளிங்கு  மாதிரி.   நிறமற்றவர். எதையும் பிரதிபலிப்பவர். எனவே அம்பாளின் ஒளி அவரை சிவப்பாக  காட்டுகிறது. மறுபிறப்பெனும் துன்பமில்லாமல் நம்மை காப்பவள்  ஸ்ரீ லலிதை.

*311* रमणी - ரஸ்யா --
எல்லாமே கரைத்து குடித்தவர் என்று ஒருவரைச் சொல்கிறோமே என்ன அர்த்தம். சகலமும் அறிந்தவர் என்று தானே. ஸ்ரீ லலிதை எல்லாவற்றின் ஸாரமானவள். ஆத்மாவின் ரஸம் அவள். தைத்ரிய உபநிஷத் ஒரு வார்த்தை சொல்லும்: (II.vii) '' ரஸோ வை ஸா '' -- ' இனிப்பானது, சுவையானது என்றால் ''அது தான்'' . ஆத்மாவை தான் இப்படிச் சொல்கிறது.   ஆத்மா தான்  அம்பாள்.

*312*   रणत्किङ्किणिमेखला -  ரணத் - கிங்கிணி மேகலா --
இடுப்பில் ஒட்டியாணம் அணியும் வழக்கம் இந்தக்காலத்தில்  மறந்தே போய் விட்டது. இடுப்பே இல்லாத காலம் போய்  விட்டது.   இடுப்பு  தெரியாததால்   அதை  அடையாளம் காட்ட,  அந்த  இடத்தையாவது காட்டுவோம் என்று  தங்க ஒட்டியாணத்தில் சிறு சிறு மணிகள் கட்டி  அணிந்திருப்பார்கள்.   ஒலிக்கும்   ஓட்டியாணம் அணிந்தவள் நடக்கும்  போது சுநாதமாகமணிகள் கவிபாடும்.   கைவளை, கால் சதங்கை வேறு பக்கவாத்யமாக இசைக்கும். ஸ்ரீ லலிதாம்பிகையின் இடையில் அவள் அணிந்த ஒட்டியாண சலங்கை  மணிகளின்  ஓசையை அனுபவித்து ஹயக்ரீவர் இந்த நாமத்தை நினைவு கூறுகிறார்.

*313*  रमा - ரமா -
 ஸ்ரீ லலிதாம்பிகை தான் லக்ஷ்மி என்கிறது இந்த நாமம்.     ரமா என்றாலே லக்ஷ்மிகரம். செல்வத்தின் அதிபதி.

*314* . राकेन्दुवदना - ராகேந்துவதநா --
களங்கமற்ற பூரண சந்திரனைப் போன்ற முகமுடையவள் ஸ்ரீ லலிதாம்பாம்பிகை

*315*  रतिरूपा - ரதிரூபா -
 காந்தமென அனைத்தையும் கவர்பவள். அழகின் சிகரம்.

*316*   रतिप्रिया -ரதிப்ரியா -
மன்மதன் மனைவி ரதியை அம்பாளுக்கு பிடிக்கும். அதனால் தான் ரதி துயரத்தோடு வேண்டிய போது மன்மதனை உயிர்ப்பித்தாள். இன்னொரு விஷயம். ரதிப்ரியா என்ற நாமத்தில் ஒரு யக்ஷிணி உண்டு. குபேரனின் மனைவியான அவள் தான் செல்வத்தை வாரி வழங்குபவள். குபேரன் யக்ஷர்களின் தலைவன். இன்னொரு விஷயம் சொல்கிறேன். செல்வம் வேண்டும் என்று ரதிப்ரியா மந்திரங்கள் ஜபிப்பவர்கள் இரவில், ஆலமரத்தின் உயர கிளைகளில் அமர்ந்து உச்சரிப்பார்களாம். அந்த மந்திரம் என்ன தெரியுமா? ''ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியா ஸ்வாஹா: ''   எங்காவது சௌகர்யமாக உட்கார ஒரு ஆலமரத்தை தேடி உடனே  அதன்   மேல் ஏறி  உட்கார்ந்து இந்த மந்திரத்தை விடாது  சொல்லுங்கள் ஒருதடவை ரெண்டு தடவை  அல்ல.   குறைந்தது ஒரு  
லக்ஷம் தடவை சொல்லுங்கள்.  இல்லாவிட்டால்  அம்பாள் சும்மா   எதிரே வந்து  நிற்பாளா? பெரிய பை பெட்டி  நிறைய செல்வத்தோடு. ஆலமரம் தேடுங்கள் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம். ரதிப்ரியாவுக்கு பதில் போலீஸ் வந்து இரவில் மரத்தருகே நின்றால் நீங்கள் தான் பொறுப்பு
நானல்ல.

*317* रक्षाकरी -  ரக்ஷாகரீ -
நம்மை எல்லாம் காப்பவள். லோக நாயகி.

*318* राक्षसघ्नी - ராக்ஷஸாக்நீ --
அரக்கர்களுக்கு ராக்ஷஸர்களுக்கு, கூடியவர்களுக்கு அம்பாள் என்றாலே சிம்ம சொப்பனம். தீயைப்போல் அவர்களை கபளீகரம் பண்ணி விடுவாள். இதற்காகத்தான் கிருஷ்ணனும் அர்ஜுனனிடம் ''யுகம் யுகமாக நான் வருவேன். தர்மத்தை நிலைநாட்ட, அதர்மத்தை அழிக்க என்றான்'' .   அம்பாள் யுகத்திற்கு  ஒரு தடவை வருபவளல்ல.   எப்போது வேண்டுமானாலும்  நொடியில் வருபவள்.

*319*  रामा - -ராமா
 ஸ்த்ரீ சக்தி ஸ்ரீ.     பெண்மைக்கு தனி சக்தி உண்டு. கருணை தயை அன்பு எத்தனையோ அத்தனை அவளிடம் கோபம், எதிர்ப்பு, அழிக்கும் சக்தியும் உண்டு. ராமா என்ற இரண்டெழுத்து தாரக மந்திரம் இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிப்பது.

*320* रमणलम्पटा  -  ரமணலம்படா -
 காமேஸ்வரனாகிய சர்வேஸ்வரனிடம் பூரண அன்பு கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை. சித்தானந்தம், சித்தானந்தத்தில் திளைப்பவள்.

இன்றைய  சக்தி ஆலயம்:   ஸ்ரீ பத்திரகாளி அம்பாள்   -திருகோணமலை    ஸ்ரீ லங்கா .

 ஸ்ரீலங்காவின் மையப்பகுதியில்,  திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ  தூரத்தில் இந்த  புராதன  ஆலயம் அமைந்துள்ளது.   பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும்  51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி எனும் நூல்  சொல்கிறது.  புராதன  கோவில்  போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்று  அறியப்படுகிறது.

இந்த  ஆலயத்தில்  சில   கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம்   இதெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு  அறிவோமானால்,   இது  முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டும்  என்று    இலங்கை  தேச சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம்   கூறுகிறார்.

பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சவம்  மகோன்னதமான  10  நாள்  நடக்கிறது   9ம் நாள்  ரத  உத்சவம்.   பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் திரி  கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர்.   வைகாசிப் பௌர்ணமி க்கு முதல்  திங்கட் கிழமை   பத்திரகாளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலையில் சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளம் தான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...