Sunday, November 28, 2021

ADHI SANKARA KOUPEENA PANCHAKAM


 ஆதி சங்கரர் -   நங்கநல்லூர்  J K  SIVAN

கௌபீன பஞ்சகம்

ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவுக்கான துணி தான் கோவணம். உலகத்தை துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம் . முற்றும் துறந்தவனையே கோவணாண்டி என்று சொல்வது.  ஆதி சங்கரரின் இந்த ஐந்து  கோவண ஸ்லோகங்கள்  தான் ''கௌபீன பஞ்சகம்''

முருகனே மாம்பழம் சமாச்சாரத்தில் கோபம் கொண்டு கைலாசத்தை துறந்து, பெற்றோரை வெறுத்து, பழனியில் கோயில் கொண்டபோது அவன் தோற்றம் இன்றும் கோவணாண்டி தானே. பேரே பழனியாண்டி.  ஆண்டியின்  யூனிபார்ம்  தான்  கோவணம். நிறைய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இவ்வாறு கோவணாண்டிகளாக (கௌபீன தாரிகளாக) வாழ்ந்தார்கள். ரமணர்,  சேஷாத்திரி ஸ்வாமிகள், பட்டினத்தார், சில சமயம் விவேகானந்தர், எத்தனை மஹான்கள், சிலசமயம் மஹா பெரியவாளும்.   அப்படி  அவர்  இருந்த ஒரு படம் இத்துடன் இணைத்துள்ளேன்.

கோவணாண்டி என்றதும் அருவருப்பு வேண்டாம்.  கோவணம் அவமரியாதை கிடையாது.  எவ்வளவு உயர்ந்த தியாகி அவன் என்று  உணர ஆதி சங்கரரின் கோவணதாரி ஸ்லோகங்கள் ஐந்து பற்றி  சொல்கிறேன். அர்த்தத்தை ஊன்றி கவனியுங்கள். புரிபடும்.

எனக்கு தெரிந்து இளம் வயதில் நிறைய வயல் வெளிகளில் வேலை செய்பவர்களும் கூட கௌபீன தாரிகளாகத்தான் வாழ்ந்தார்கள். இன்றும் கிராமங்களில் கௌபீனதாரிகளை பார்க்கலாம். இப்படிப்பட்டவர்களை பார்த்துவிட்டு தான் மஹாத்மா காந்தி தனது ஆடைகளை துறந்தார்.

கோவணதாரி ஸ்லோகங்கள்  ஐந்தும்  அற்புதமானவை. உயர்ந்த ஆத்ம  வேதாந்த தத்துவங்களைப்  பிழிந்த ரசம்.  அத்வைத ஸாரம் .  கோவணாண்டி அடேயப்பா  இவ்வளவு  பாக்யவானா என்று மூக்கின் மேல்  விரல் வைக்கச் செய்பவை.  நீங்களே ருசித்து ரசியுங்கள்.

वेदान्तवाक्येषु सदारमन्तो भिक्षान्नमात्रेण च तुष्टिमन्तः ।
अशोकवन्तः करुणैकवन्तः कौपीनवन्तः खलुभाग्यवन्तः ॥१॥

Vedantha Vakhyeshu Sada ramantho, Bhikshannamathrena trishtimantha,
Vishokamantha karane charantha, Kaupeenavantha Khalu bhaghyavantha . 1

வேதாந்த வாக்கியேஷு சதா ரமந்தோ பிஷான்ன மாத்ரேண த்ரிஷ்டிமந்த
விசோகமந்த கரணே சரந்தா,கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா''

வேறெந்த சிந்தனையும் இன்றி வேதாந்த, சித்தாந்த வனத்தில் சஞ்சரிப்பவன். வேறென்ன வேண்டுமடா. என் மனம் எல்லாம் வேதாந்த விசாரங்களை பற்றி நிரம்பி இருக்கிறது. நான் என்ன பசியாலா வாடுகிறேன்?   பசி நேரத்தில் கை நீட்டி எது கையில் திருவோட்டிலோ,  அல்லது நீட்டிய உள்ளங் கையில் விழுகிறதோ, அதுவே அன்றைய உடலைக்  காக்கும் உணவு என்ற திருப்தி அடைந்கிறவன்.  ஓரு கவளம் அன்னம் என் கப்பரையில், விழுந்தால்  அது போதுமே.  கிடைத்ததை மகிழ்ச்சியோடு உண்பவனுக்கு தனியாக எது ருசி எதற்கு ருசி. எனக்கு ஒரு கவலையும் இல்லை, நான் சந்தோஷத்தில் மிதக்கிறேன் என்று களிப்பவன்.  சுகம் துக்கம் எதுவுமே சமமாக அனுபவிப்பதால் எப்போதும் ஆனந்தமானவன், சதானந்தன் வெளி உலகை கவனிக்க நேரமில்லா மல் தனது ஆன்ம உலகிலே உள்ளேயே உலவுபவன், 
 பகவானை  சித்தத்தை கொள்ளை கொண்டு சதானந்தத்தில் ஆழ்ந்தவனுக்கு  என்ன குறை?''.
இப்படிச் சொல்லும் இந்த கோவணதாரியல்லவோ ஈடிணையற்ற பாக்கியவான். பெரும் அதிருஷ்ட காரன், ,குபேரனும் கூட..''ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான். ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன். ''

मूलं तरोः केवलमाश्रयन्तः पाणिद्वये भोक्तुममत्रयन्तः।
कन्थामपि स्त्रीमिव कुत्सयन्तः कौपीनवन्तः खलुभाग्यवन्तः॥२॥'

Moolam tharo kevalam ashrayantha, Panidhvayam bhokthuma manthrayantha,
Kandhamiapi sthreemiva i kuthsayantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 2

மூலம் தரோ கேவலம் ஆஷ்ரயந்த பாணித் வயம் போக்தும மந்த்ரயந்த
கந்தாமபி ஸ்த்ரீமிவ குத்சயந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா.

வீடு, மனைவி,  சமைக்க அடுப்பு, வெளியே சாப்பிட ஓட்டல் எதுவுமே எதுவும் வேண்டாமய்யா. தொப்பென்று மரத்திலிருந்து விழும் காய் கனி, பூமியில் கிடைக்கும் கிழங்கு வகைகள், இலைகள், கொடிகள் இது போதும். ஆடு மாடு மாதிரி உணவு எனக்கும் . இரு கை குவித்து அதில் என்ன விழுகிறதோ, கிடைக்குமோ அதுவே வயிறு நிரம்ப போதுமானது. ஒரு கையகல கிழிசல் துணி ஒன்றே  கால்களுக்கு இடையில்  என் வஸ்திரம். இதற்கு மேல்  செல்வம் உண்மையாகவே எதற்கு ?'' 
 ஆஹா, இந்த மரத்தடி வேர் ஆசனம் எவ்வளவு சுகம் தருகிறது. மணம் கமழ் நிழல். கிழங்குகள், வேர்கள், இலைகள், ரெண்டு கவளம் எந்த சோறு கிடைத்ததோ அது கை நிரம்பி விட்டதே. இனி வயிரை நிரப்பிவிடுமே. கிழிசலை ஓட்டுப்போட்ட துணி தான் இந்த உலகத்தில்  என் செல்வம் எல்லாம்.   உடுத்த கோவணம் இணையற்ற செல்வம் என்ற நினைப்பு ஸ்வர்கத்துக்கே தூக்கி சென்று விடுகிறது. 
''ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான்.ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.''

स्वानन्दभावे परितुष्टिमन्तः  सुशान्तसर्वेन्द्रियवृत्तिमन्तः ।
अहर्निशं ब्रह्मसुखे रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ ३॥

Swanandha bhave pari thushti mantha,Sushantha sarvendriya vruthi mantha,
Aharnisam brahma sukhe ramantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 3

ஸ்வானந்த பாவே வ பரி துஷ்டி மந்த சுஷாந்த சர்வேந்திரிய வ்ருத்தி மந்த
அஹர்ணிசம் பிரம்ம சுகே ரமந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா.

எனக்கு யார் கூடவும் பேசவேண்டாம். தனியாக இருக்க விட்டால் அதுவே மஹா சந்தோஷம். எனக்குள்ளேயே எனக்கு ஆனந்தம் இருக்கும்போது வெளியே எங்கே யாரிடம் அதை தேடவேண்டும் ? என்னை எதுவும் அணுகாது.  நான் எதையும் நெருங்காது என்னை அடக்கி ஆள்கிறேன் . எனக்கு நானே ராஜா.   இல்லையா? இப்படிப் பட்ட ப்ரம்மானந்தத்தில் யார் என்னைப் போல் திளைக்க முடியும் ? கௌபீனவந்தன் ஒரு பாக்கியசாலி தனவந்தர்.

எண்ணமே எங்கே ஓடுகிறாய், வெளியே, போ திரும்பி உள்ளே, அங்கே இல்லாத சுகமா வெளியே? என்று எண்ணங்கள் மற்றும் ஐந்து புலன்களையும் கட்டுப்பாட்டில் கொண்டவன், ஜிதேந்த்ரியன், புலனடக்கிய சக்ரவர்த்தி, இரவு பகல் என்று இல்லாமல் சதா சர்வ காலமும் பிரமத்தில் ஐக்யமாகி சுகிப்பவன்,
''ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான்.ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன். '

देहादिभावं परिवर्तयन्तः स्वात्मानमात्मन्यवलोकयन्तः ।
नान्तं न मध्यं न बहिः स्मरन्तःकौपीनवन्तः खलु भाग्यवन्तः

Dehadhi bhavam parivarthayantha,Swathmana athmanyavalokayantha,
Naantha na Madhyam na bahi smarantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 4

தேஹாதி பாவம் பரிவர்தயந்த ஸ்வாத்மனா ஆத்மன்யவலோக யந்த
நாந்தன மத்யம் ந பஹி ஸ்மரந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா

நான் வேடிக்கை பார்க்க எதற்கும் எங்கும் போவதில்லை. நிறைய வேடிக்கைகள், ஆட்டங்கள் பாட்ட ங்கள் என் உடம்பிலேயே நிகழ்ச்சிகள் மாற்றங்களாக நிறைய நடக்கின்றனவே. அவற்றை பார்த்து ரசிக்கவே நேரம் போதவில்லையே. எங்கோ கடையில் ஷோ கேஸில் அடுக்கி வைத்திருக்கும் பொம்மையைப் பார்ப்பது போல் ஆர்வமாக என்  உடம்பையே, அதன் மாறுதல்களை வேடிக்கை பார்க்கும் போது  வினோதமாக உள்ளது.   இந்த உடம்பு நம்மை கேட்காமலேயே எப்படியெல்லாம் மாறுதல்களை அடைகிறது!.   நரை, திரை, மூப்பு , ஏன்  தலை முடியையே காணோம்? சில பற்கள்  எப்போது விழுந்தது?, ஏன் கொஞ்சமும் காது கேட்கவில்லை. உலகமே அமைதியாகிவிட்டதோ? ஆடி விழாமல்  நடக்க எதற்கு ஒரு மூங்கில் கம்பு? எப்போது என் முதுகு தானாகவே வளைந்தது? தெரியவில்லையே. ஆசை மட்டும் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருக்கிறதே. என்ன ஆச்சர்யம்!

நான் தான் இந்த உடம்பில்லையே, பரிபூரண ஆனந்தமயன் ஆச்சே. ஆரம்பமோ, நடுவோ முடிவோ எதுவும் இல்லாதது நான் என்கிற ஆத்மா. இப்படிப் பட்ட சுகம்  வேறே எங்கே ஐயா கிடைக்கும்?
தேகமில்லாத ஆத்மாவாக என்னை கண்டு கொண்டன்.  முடிவோ, நடுவோ, எதுவுமே லக்ஷ்யமில்
லாதவன்.

 'ஏ கோவண தாரியே , நீ தானடா பாக்யசாலி. .ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.'

ब्रह्माक्षरं पावनमुच्चरन्तो ब्रह्माहमस्मीति विभावयन्तः ।
भिक्षाशिनो दिक्षु परिभ्रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥

Brahmaksharam pavanamucharantho, Brahmahamasmeethi vibhavayantha,
Bhikshashano dikshu paribramayantha, Kaupeenavantha Khalu bhaghyavantha 5

ப்ரம்மா க்ஷரம் பாவன முச்சரந்தோ ப்ரம்மாஹ மஸ்மீதி விபாவயந்தா
பிக்ஷா ஷனோ திக்ஷு பரிப்ரமயந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா

வாயைத் திறந்தாலும்,  திறக்காமல் இருந்தால் மனத்திலும்,  எப்போதும் எனக்கு ப்ரம்ம ஸ்மரணை தானே. ஸர்வம் பிரம்மமயம் என்று ஆடிப் பாடுபவன்  ''நானே தானடா அந்த ப்ரம்மம்'' என்ற நினைப்பில் களிப்பவன், எங்கே எதற்கு ஏன் என்றே தெரியாமல், கால் போனபடி சுற்றும் சுதந்திரமானவன்.  விழிப்பிலும் உறக்கத்திலும் கூட. ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் அலைந்து கொண்டே இருப்பது தான் என் வேலை,   எங்கு எது கிடைக்கிறதோ அதுவே உணவு. அதைத் தேடி அழிவதில்லை ஐயா. இதற்குமேல் ஒருவனுக்கு எது அதிருஷ்டம் சொல்லுங்கள்?கிடைப்பதை உண்டு மகிழ்பவனே,
''ஏ கோவணதாரியே , நீ தானடா பாக்யசாலி. ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.'

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...