Monday, November 22, 2021

ORU ARPUDHA GNANI


 ஒரு அற்புத ஞானி -  நங்கநல்லூர் J  K  SIVAN 


ப்ரம்ம ஞான குழந்தை.

சேஷாத்திரி ஸ்வாமிகளை  எப்படி  விவரிப்பது என்பதே  முடியாத காரியம்.  பஞ்சு எப்படி காற்றில் ஒரு இடத்தில்  தான்  இருக்கும் என்று சொல்லமுடடியாதோ,  அங்குமிங்கும்  சதா பறந்து கொண்டே இருக்குமோ அது தான் சேஷாத்ரி ஸ்வாமிகள்.

திருவண்ணாமலையில்  எங்கே எப்போது எப்படி இருப்பார்  என்று அவருக்கே தெரியாத போது மற்றவர்களுக்கு எப்படி தெரியும்?

எப்போது வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது யார்  எதைக் கொடுத்தாலும் சிறிது வாங்கி புசிப்பது, எவரைக் கண்டாலும் விழுந்து வணங்குவது, இரவு பகல் என்றில்லாமல் சுற்றி எங்கோ ஒரு இடத்தில் ஒதுங்குவது தான் வாடிக்கை.  சன்னதி தெருவில், திருவூடல்  தெரு  முனையில்,    செங்கம் ரோடில், எங்கெங்கெல்லாமோ பார்த்தேனே  அவரை, என்பார்கள் பலர்.  

சூரிய நாராயண சாஸ்திரி என்ற உறவினர் சேஷாத்திரி ஸ்வாமிகள்  மஹிமையை, பெருமையைப்  பற்றி நன்றாக அறிந்தவர்.     திருவண்ணாமலை சந்நிதி தெருவில் வசித்தார். ஆனால்  சேஷாத்ரி ஸ்வாமிகள்  அங்கே  வருவதும் போவதும் தெரியாது.பராபரியாக ஸ்வாமிகளை பற்றி செய்தி காதில் விழவே, தேடலானார்.

திருவண்ணாமலை ஆலய தேர்முட்டி அருகே எதிரில் ஒரு மாந்தோப்பு.  அதை கீணாத்தூர் தோப்பு என்பார்கள். அங்கே ஒரு மண்டபம்.

ஒருநாள்  ஸாஸ்திரி அதிருஷ்ட வசமாக  அந்த மண்டப வாசலில்  சேஷாத்ரி ஸ்வாமிகள்   நின்று கொண்டு  அங்கே நின்ற ஏழு கழுதைகள்  அருகே சென்று  அவைகளைத் தொட்டுத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டிருப்பதைப்  பார்த்தார்.  சேஷாத்ரி ஸ்வாமிகளை அவர்  நேருக்கு நேர்  
பார்த்ததில்லை.  அந்த காலத்தில் போட்டோக்கள் கிடையாது.

''இதென்ன  யாரோ  ஒரு  பைத்தியம். கழுதையைத்  தொட்டு  வணங்குகிறதே''  என்று பார்த்தபோது தான் அது தான்,  அருகிலிருந்தவர்கள்  அவரை வணங்கியபோது  விசாரித்து அறிந்தார்.  இதுவரை  தான்  தேடிய சேஷாத்ரி ஸ்வாமிகள் தான் அது என்று புரிந்தது.  

''சேஷு ,  நான்  சூரி.   தெரியறதா?  என்னடா  இது இப்படி இருக்கே? பித்துக்குளி மாதிரி ஆயிட்டே.  அடையாளமே தெரியலே  உன்னை.   என்ன  இது,  கழுதையெல்லாம் தொட்டு  நமஸ்காரம் பண்றே,  கண்ணிலே ஒத்திக்கிறே''  

''யார்  சூரி?  நான்  தானே  சூரியன்!''  நீ வேறேயா?   அது சரி. யார் சொன்னா இதெல்லாம் கழுதைன்னு?  வாயை அலம்பு.  அதோ அங்கே நிக்கறவர் ஜமதக்னி.  பக்கத்தில் குள்ளமாக  நிற்கிறது  அகஸ்தியர்.   எதிரே திரும்பி நிக்கறவர் யாருன்னு தெரியலையா உனக்கு ? வசிஷ்டராக்கும்.  பின்னாலே  தான் விஸ்வாமித்ரர்..   இவா  ஏழுபேர் சப்தரிஷிகள். என்னடா மரியாதையில்லாமெ  கழுதைங்கறே ''

ஒவ்வொரு கழுதைக்கும் ஏதோ ரிஷி பேர் சொல்லி சுற்றி வந்து  ப்ரதக்ஷிணத்திற்கு பிறகு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார்  ஸ்வாமிகள் என்பது  எல்லோருக்கும் தெரிந்தது.

'''வீட்டுக்கு வா''  என்று மன்றாடினார்  ஸாஸ்த்ரி .
'அதோ தெரியறதே ரோடு அங்கே ஓடு.  நிற்காதே போ '' என்று விரட்டினார்  ஸ்வாமிகள்.

 ஸ்வாமியின் இந்த மாதிரி அனுபவங்கள் செயல்கள் செயதியாக  அந்த அமைதியான கிராமத்தில் பரவி  பலபேருக்கு  அவர் ஒரு ஞானி, பைத்தியம், சோம்பேறி,  அவதாரம், பேசும் தெய்வம் என்று எல்லாம் விதவித ராகங்களில்   பேர் கிடைத்தது.

நாள் செல்லச் செல்ல  நிறைய பேர் ''திருவண்ணாமலையில் மூணு லிங்கம். அருணாசலேஸ்வரர், ரமணர்  சேஷாத்திரி ஸ்வாமிகள்'' என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஒரு திருமூலர்  திருமந்திரம்  ஞாபகத்துக்கு வருகிறது.

'' அறிவு வடிவு என்று அறியாத என்னை    
   அறிவு வடிவு  என்று அருளச்  செய்தான் நந்தி
   அறிவு வடிவு என்று  அருளால்  அறிந்தே
   அறிவு வடிவு என்று  அறிந்து  இருந்தேன்!

''யாரும் சொல்லித்தராமலே, நானாகவே, எந்த கருவியும் இல்லாமல்  எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் எனக்கு இருக்கிறது என்பது எனக்கே தெரியாமல் வெகுகாலம் வாழ்ந்தேன்.  நான் தான் உண்மையிலேயே அந்த அறிவின் வடிவமே - இது தெரியாமல் இருக்கிறாயே மூடனே என்று அந்த பரமன் உணர்த்தினான்.  ஆஹா  நான் அறிவின் வடிவமா? என்று அறிந்து ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே இருந்தவன்  நானே  அந்த  அறிவாக மாறியதை அறிந்து கொண்டு  அறிவாகவே இருந்தேன்''.   

 வார்த்தைகளைப்  பின்னுவதில் திருமூலருக்கு இணை அவரே தான்.    

சேஷாத்ரி அறிவின் வடிவம். அவர் உருவம்  எப்படி இருந்தது தெரியுமா?  குள்ளமும் இல்லை, நெட்டையும் இல்லை, புன் முறுவல் பூத்த முகம்.  பரந்த நெற்றி. அதில்  வெள்ளை வெளேரென்று பூசிய விபூதி பட்டைகள்.  பெரிய  குங்குமம் இரு புருவ மத்தியில்.  கருணை நிரம்பிய சாந்தமான கண்கள். எப்போதும் அரை மூடியே இருக்கும்.  எதையுமே குறிப்பாக பார்க்காத அலைபாயும் கண்கள். தன்னை நமஸ்கரிப்பவர்களைப்  பார்ப்பது கிடையாது.  சில பாக்யவான்களின் கண்களை  நேராக  இமைக்காமல் நோக்குவார்.  அதுவே அவர் அளிக்கும்  நயன தீக்ஷை.  வெண்மையான சங்கு போன்ற மெல்லிய கழுத்து. பின் மண்டையிலிருந்து கழுத்து வரை பிரி பிரியாக  குட்டை சடைகள். தங்க  ஒளிமயமான  ஒல்லியான உடம்பு. நீண்ட கரங்கள்.   அகன்ற மார்பு, நிமிர்ந்த நடை. ஓடுவது போல் வேகமாக நடப்பார்.  தங்க ரேக்கு மாதிரி ஒரு ஒளி உடம்பில் வீசிக்கொண்டே இருக்கும்.    அழுக்கான ஆடை, மேலும்  கீழுமாக  கோணா மாணா  என்று சுற்றிக்  கொண்டிருப்பார். மேலே ஒரு துண்டு  பூணல் மாதிரி யோகவேஷ்டியாக வண்டி வண்டியாக  அழுக்கு புழுதி மண் கறைகள் நிறைந்து.  எவ்வளவு புதிதாக வாங்கி கொடுத்தாலும் அரைமணியில் இந்த நிறம் வந்துவிடும். அஞ்சு நிமிஷத்தில் ஐம்பது  இடத்தில் பார்க்கலாம்
எப்போது உட்கார்ந்தாலும் பின்பாகம் இரு குதிகால்கள் மேல் தான் இருக்கும். முட்டியை மடக்கிக்கொண்டு நம்மால் அப்படி வெகுநேரம் உட்கார முடியாது. இது ஸ்வஸ்திகாஸனம்  எனப்படும் . இனிய குரல். யாராவது எதையாவது கேட்டால், புன் முறுவல், தலையாட்டல். ஒன்று இரண்டு வார்த்தைகள் மிருதுவாக.  சிலது புரியும், சிலது புரியவே புரியாது. சம்பந்தமில்லாததாக தோன்றும்.  அல்லது பேச்சே கிடையாது. மௌனம்.

எப்பவாவது தானே பாடுவார். ''ரமாபதே ஸநாதனே'',    ''அம்பாசிவே''   சிறிது ஆலாபனை பல்லவியில் ரெண்டு அடிகள் மட்டுமே. இது காமகோடி  சாஸ்திரி  கீர்த்தனை என்பார். தகரம் மரக்கட்டை  எதிலாவது விரல்களால் தாளம் போடுவார்.   ஒரு சிறந்த  வித்துவான் தாளக்  கட்டோடு  வாசிப்பது போல் இருக்கும். அவ்வளவு சங்கீத ஞானம்.

சேறு குப்பை கூளம்  எல்லாம் ஒன்றே என அமர்ந்து இருப்பார். எதை சாப்பிட்டாலும் அந்த இடுப்புத்   துணியிலேயே துடைத்துக் கொள்வார். இருகைகளையும்  ஊன்றி தவளை மாதிரி தத்தி தத்தி செல்வார். உருளுவார். வெவ்வேறு திசைகளை நோக்கி  மாற்றி மாற்றி உட்காருவார்.   ஏன்? எதற்கு?  ---  யாருக்கு தெரியும்? அடிக்கடி ஆகாசத்தை பார்த்து பேசுவார். சிரிப்பார். இடுப்பில் இரு கைகளையும்  வைத்துக்கொண்டு  குதிப்பார்.ஆடுவார்.  வெகுதூரம் நடப்பார்.    அணில் பூனை  நாய்  ஏதாவது ஓடினால்  திடீரென்று தானும் அதன் பின்னே ஓடுவார். அது எங்கோ சென்று மறைந்தால் அங்கே சென்று காத்திருப்பார். வாய் ஏதோ மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருக்கும்.

திருவண்ணாமலையில் எல்லா மாட்டு வண்டி,  ஜட்கா,  கை , வண்டிக்காரர்களுக்கும் அவர்   திடீரெனெ ஓடிவந்து தமது வண்டியில்    ஏறி உட்கார்ந்து கொள்வது  இறங்குவது பழக்கமான ஒன்று என்று  ஏற்றுக்  கொண்டார்கள்.  யாரும்  ஒரு வார்த்தை பேசமாட்டார்கள்.  ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.   ஏனென்றால்  சேஷாத்ரி ஸ்வாமிகள்  தொட்ட , ஏறி அமர்ந்த வண்டி அன்று நிறைய  சம்பாதிக்கும்.   நல்ல வியாபாரம் ஆகும் அவர்களுக்கு.  திடீர் திடீர்  என்று கடைகளுக்குள் நுழைந்து விடுவார்.  எதை வேண்டுமானாலும் தொட்டுப் பார்ப்பார்.  எஜமான் கல்லாப்பெட்டியைத்  திறந்து காசையெல்லாம் எடுத்து  அடுக்கி வைத்து அழகு பார்த்து கீழே உருட்டி விடுவார். போய்விடுவார்.  எல்லோரும்  அவரது பாதங்களைத்  தொட்டு வணங்குவார்கள். நமஸ்கரிப்பார்கள். சிலரை  அடிப்பார்,  ''துஷ்டா, திருடா, கொலைகாரா, கொள்ளைக்காரா. தொடாதே ஓடு'' என்று விரட்டுவார். எவ்வளவு பெரிய  மனிதனானாலும் அவருக்கு ஒன்று. எதனால் அப்படி அவர்களில் சிலரை விரட்டுகிறார், திட்டுகிறார் கோபிக்கிறார்,  என்று  தப்புகள் செய்த அவர்கள் மனதுக்கு மட்டும் தெரியும்.  ஒருவரும் ஒன்றும் சொல்ல  மாட்டார்கள்.  

வழியில் சில பெண்களை மட்டும் எப்போதாவது கழுத்தில் கையால் கட்டிக்கொண்டு நடப்பார்.  ஒருசிலரை  '' நீ தான்  என் அம்மா  கல்யாணி, மரகதம்,  சில  ஆண்களை, சிறு வயதானால் கூட 
 'வாங்கோ தாத்தா, கிரந்தம் சொல்லுங்கோ, அப்பா சாப்பிட வாங்கோ'' என்று கை  நிறைய மண்ணை எடுத்து கொடுப்பார்.

மழை வந்தால் குஷி.   மழை நிற்கும் வரை மழையில் தொப்பலாக  இரவோ பகலோ  நனைந்து கொண்டே இருப்பார். எவராவது எண்ணெய்  தேய்த்து விடுகிறேன் என்று எண்ணெய்  கொண்டு வந்தால், அத்தனை எண்ணையும்  தலையில் ஊற்றிக் கொண்டு  சொட்ட சொட்ட  பத்து பதினைந்து நாட்கள்  கூட அப்படியே  இருப்பார்.    

சுப  அசுப காரியங்கள்  எங்கே நடந்தாலும் அங்கே கலந்து கொள்வார்.  வித்யாசமே தெரியாது . யாரோ ஒருவர் விலையுயர்ந்த வேட்டியை  அவர் மேல் சுற்றி விட,   ஓடிப்போய்  ஒரு பிச்சைக்காரன் மேல் அதை போட்டுவிட்டு அவன் இடுப்பில் கட்டி இருந்த   அழுக்கு வேஷ்டியை ஆவலோடு  அவிழ்த்து அணிந்து கொண்டார்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...