Thursday, November 18, 2021

lalitha sahasranamam

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  - நங்கநல்லூர்   J K  SIVAN  

ஸ்லோகங்கள்  83-85   நாமங்கள் 379 - 392

 
ओड्याण पीठनिलया, बिन्दुमण्डल वासिनी ।
रहोयाग क्रमाराध्या,रहस्तर्पण तर्पिता ॥ 83 ॥

Odyana peeda nilaya Bindu mandala vaasini
Raho yoga kramaradhyaRahas tarpana tarpitha

ஓட்யாணபீட நிலயா பிந்துமண்டல வாஸிநீ |
ரஹோ யாகக்ரமாராத்யா ரஹஸ்தர்பணதர்பிதா || 83

सद्यः प्रसादिनी, विश्वसाक्षिणी, साक्षिवर्जिता ।
षडङ्गदेवता युक्ता, षाड्गुण्य परिपूरिता ॥ 84 ॥  

Sadya prasadin Viswa sakshini Sakshi varjitha
Shadanga devatha yuktha Shadgunya paripooritha
 
ஸத்ய:ப்ரஸாதிநீ விச்வஸாகஷிணீ ஸாக்ஷிவர்ஜிதா |
ஷடங்க தேவதா யுக்தா ஷாட்குண்ய பரிபூரிதா || 84

नित्यक्लिन्ना, निरुपमा , निर्वाण सुखदायिनी ।
नित्या, षोडशिकारूपा,श्रीकण्ठार्ध शरीरिणी ॥ 85 ॥

Nithya klinna Nirupama Nirvanasukha dayini
Nithya Shodasika Roopa Sri Kandartha Sareerini

நித்யக்லிந்நா நிருபமா நிர்வாணஸுக தாயிநீ |
நித்யா ஷோடசிகாரூபா ஸ்ரீ கண்டார்த்த சரீரிணீ || 85

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (379 -392)  அர்த்தம்
 
* 379 *
ओड्याणपीठनिलया -    ஓட்யாணபீட நிலயா  - 
 ஸ்ரீ லலிதாம்பாள் ஒட்டியாண  பீடத்தில் காண்பவள் என்கிற நாமம். நமது உடலில்  அம்பாள் நாலாவது பீடத்தில் இருப்பதை உணர்த்துகிறது.   கழுத்து சக்ரத்தில்.  விசுத்தி என்று பெயர் அதற்கு.

* 380 * 
 बिन्दुमण्डलवासिनी -பிந்துமண்டல வாஸிநீ --   
ஸ்ரீ சக்ரத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ லலிதை நடுமையத்தில் (நடு சென்டரில்!!!என்கிறோமே அது ) ஒரு புள்ளியாக இருப்பவள். தனியாக இல்லை,  காமேஸ்வரனோடு.

* 381 *
 रहोयागक्रमाराध्या - ரஹோ யாகக்ரமாராத்யா  -- 
ரகசிய  மந்திர யாகத்தில் அவளைத்  தேடுகிறார்கள்.  சிவசக்தி வழிபாட்டை ரகசிய வழிபாடு என்பது  வழக்கம்.

* 382 * 
रहस्तर्पणतर्पिता -  ரஹஸ்தர்பணதர்பிதா- 
இப்படி சொல்கிற மந்திரங்களால் அம்பாள் திருப்தி அடைகிறாள். இவை உரக்க வெளியே சொல்லும் மந்திரங்கள் அல்ல. மனதுக்குள் வாய் அசையாமல் சொல்லும் மந்திரங்கள்.

* 383 *
सद्यःप्रसादिनी - ஸாத்ய:ப்ரஸாதிநீ -  
எளிதில் உடனேயே சந்தோஷம் அடைபவள் அம்பாள்.அதோடு வேண்டியதை  வாரி வழங்கி அருள்பவள்.

* 384 * 
विश्वसाक्षिणी -  விச்வஸாக்ஷிணீ  -  
பிரபஞ்சத்தின் நடவடிக்கையை ஒரு சாக்ஷியாக  கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவள்.  நிர்குண பிரம்மத்தின்  தன்மை இது. எதிலும் தான் ஈடுபடாமல் எல்லாவற்றையும் கண்காணிப்பது.

* 385 * 
साक्षिवर्जिता - ஸாக்ஷிவர்ஜிதா-   --   
அவள் கவனிக்கிறாளா இல்லையா என்று பார்த்துச்  சொல்ல எந்த  சாக்ஷி இருக்கிறது?    சாக்ஷி யற்ற  ப்ரம்ம சத்யம் அவள். வேறொன்றுமில்லாத  தானே எல்லாமாகியவள்.

* 386 *
षडङ्गदेवतायुक्ता - ஷடங்க தேவதா யுக்தா  -  
ஒவ்வொரு மந்திரத்திற்கும்  ஆறு  பகுதிகள் அங்கங்கள் உண்டு. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தேவதை உண்டு.   ஒவ்வொரு மந்திரத்துக்கு அந்த  ஆறு  பிரிவுகளை  அதன் இதயம், சிரம், சிகை, கரங்கள், கண்கள், ஆயுதங்கள் என அறியவேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதை , எத்தனை மந்திரங்கள், எத்தனை தேவதைகள் என்று எண்ண முடியுமா?  ஒவ்வொரு மந்திரமும் சொல்லிவிட்டு அந்தந்த பாகத்தை உடலில்  விரல் நுனியால் தொடவேண்டும்.

* 387 *
षाड्गुण्यपरिपूरिता - ஷாட்குண்ய பரிபூரிதா -  
அம்பாளின்  ஆறு குணங்களை,  தன்மையை நினைவூட்டும்  நாமம் இது.  அந்த ஆறு என்ன ?   செல்வம், கடமை, புகழ் , ஞானம்,  காருண்யம்,    தியாகம்.

* 388 * 
नित्यक्लिन्ना - நித்யக்லிந்நா -  
கருணை பொங்கி வழியும் இதயத்தினள்  ஸ்ரீ லலிதாம்பிகை. அற்புதமான நாமம். குழந்தைகளுக்கு இது மாதிரி பெயர் வைக்கலாமே.  புதுசு புதுசாக  '' மாடர்ன்''  பேரால் என்ன லாபம்?. அவசரத்தில் கூப்பிட்டால் நாக்கு சுளுக்கிக்கொள்ளும்.

* 389 *निरुपमा - நிருபமா-- 
அற்புதமான நாமம்.  எதனுடனும் எவருடனும் ஒப்பிட முடியாதவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
 அதனால் தான் ஸ்வேதாஸ்வதார உபநிஷத்  (IV.19)  “அவனை/ளை  வர்ணிக்க இயலாது. ஒரே வார்த்தையில் சொல்வதானால்  அவனு/ளு க்கு நிகர் அவனே/ளே  ''

ஒரு ரிஷி தனது ரெண்டு பிள்ளைகளை தவம் செய்ய அனுப்பி  அவர்கள் தவம் முடிந்து திரும்பி வந்தபோது  ''இங்கே வாருங்கள்.  நீங்கள் இருவருமே   தவம் செய்தவர்கள்,  என் காது குளிர  பகவானை எப்படி கண்டீர்கள், உணர்ந்தீர்கள் என்று விவரமாக சொல்லுங்கள்''  என்கிறார்.  அண்ணன்  முதலில்  சொல்ல  ஆரம்பித்தான்.   சண்டமாருதமாக பொழிந்து தள்ளினான்.  ''ஆஹா ஆஹா''  என்று .மகிழ்ந்தார் ரிஷி.   அடுத்து  ரெண்டாமவனை, தம்பியை பார்த்து   ''என்னடா  உன் அனுபவம்?'' என்றார் .  அவன் பதிலே சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டான்.  ரிஷி அப்புறம்  சிரித்துக்கொண்டே விளக்கினார்:
 ''மகனே  நீ பகவானை விளக்க முடியாது என்று புரிந்து கொண்டவன். விளக்கினாலும் அது தவறாகவே இருக்கும் என்று தெரிந்துகொண்டவன் '' என்று அவனை அணைக்கிறார்.

* 390 * 
निर्वाण सुखदायिनी - நிர்வாணஸுக தாயிநீ  -- 
நிர்வாணம்  என்றால்  துணி இன்றி, ஆடையில்லாமல் என்று மட்டுமா அர்த்தம்?. இந்த தேகத்திலிருந்து  சுதந்தரம் என்ற அர்த்தத்தில் தான்  ஆடையில்லாமல், ஆசையில்லாமல் அவதூதர்கள் அலைவார்கள்.   தேகத்தை பற்றிய சிந்தனை இல்லாவிட்டால் ஆனந்தம் தான். அப்படிப்பட்ட சுகத்தில் திளைப்பவள் அம்பாள் என்று இந்த நாமம் சொல்கிறது.

* 391 *
नित्या-षोडशिकारूपा - நித்யா  ஷோடசிகா ரூபா   -  
ஸ்ரீ லலிதாம்பாள்  பதினாறு  தேவதைகளின் ஒட்டு மொத்த உருவம்.  அவர்களை பதினாறு  வளர் பிறைகளில்  ஸ்ரீ சக்ரத்தில் வழிபடுவார்கள்.  பதினாறாவது நாள் ஸ்ரீ லலிதாம்பிகையாக.  முதல் பதினைந்து தேவதைகளும் தான் பஞ்ச தசியில் பூஜிக்கப்படும்  பீஜ அக்ஷர மந்த்ரங்கள்.  மோக்ஷம் அளிக்கும் சக்திவாய்ந்த மந்த்ரங்கள். புனிதமானவை.

392 * ஸ்
श्रीकण्ठार्धशरीरिणी - ஸ்ரீ  கண்டார்த்த சரீரிணீ --  
அம்பாள்  அரனின் உடலில் பாதியானவள்.  அர்த்தநாரீஸ்வரி.  பாகம் பிரியாள். வாமி. சிவனின்   இடப்பக்கமானவள்.  சிவனுக்கு ஸ்ரீ கண்டன் என்று ஒரு பெயர். ஸ்ரீ என்றால் விஷம் என்றும் ஒரு அர்த்தம்.  கண்டம்  என்றால் தொண்டை.  நஞ்சுண்ட நீலகண்டன்.

வடக்கே  ஒரு சக்தி பீடம்:   அம்பாஜி ஆலயம்,  குஜராத் 

தனது தந்தை தக்ஷன்  எல்லோர் முன்பும், தனது கணவன் சிவனை அழைக்காமல் யாகம் நடத்தி அவமதித்ததால் சிவன் ருத்ரனாக தக்ஷனைக்  கொல்ல , அம்பாளும் அந்த யாகத்தீயில் தீக்குளிக்க, கோபம்  கொண்ட சிவன் அவள் கருகிய உடலை சுமந்து தாண்டவமாட அவள் உடல் 51 கூறுகளாக பூமியில் பல இடங்களில் விழ அவை சக்தி பீடங்களாக நமக்கு கிடைத்துள்ளது.   அவளது இதயம் விழுந்த இடம் அம்பாஜி ஆலயம் .  

அம்பாஜி ஆலயத்தில் உருவம், சிலை கிடையாது.  யந்திரம் பிரதிஷ்டை பண்ணப்பட்டு யாரும் பார்க்க முடியாது. போட்டோ எடுக்க கூடாது. கப்பார் குன்று என்ற சிறு  மலைமேல் அம்பாஜியின் கோயில். குஜராத் ராஜஸ்தான் எல்லையில்  உள்ள கோவில். அருகே சரஸ்வதி நதி  உற்பத்தியான இடம்.   குஜராத்  பனஸ்கந்தா ஜில்லாவில் உள்ளது. வருடந்தோறும் லக்ஷக்கணக்கான சக்தி  உபாசகர்கள், பக்தர்கள் தரிசிக்கும் ஆலயம்.  அஹமதாபாதிலிருந்து 185 கி.மீ.  அபு ரோடு ஸ்டேஷனிலிருந்து  20 கி.மீ. பலன்பூர்  என்ற இடத்திலிருந்து 65 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.  நான் மனதால் சென்று தரிசித்துவிட்டேன்.  குஜராத்   சென்றிருந்த  போதெல்லாம்  இந்த ஆலயம் பற்றி விசாரிக்கவில்லை, அறியவில்லை. 
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...