Wednesday, November 17, 2021

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்   J K  SIVAN  -


2.  தமிழின் இரு கண்கள்.
 
நாம் செய்த பாக்கியம் தமிழ் கூறும் நல்லுலகில்  பிறந்தது.  நம்முடைய  அதிர்ஷ்டம் நமக்கு தமிழை பக்தியில் பிசைந்து ஊட்ட  ஆழ்வார்கள் நாயன்மார்கள் தோன்றியது.   ஆழ்வார்களின்  பாசுரங்கள் அழகிய பழகும் தமிழில் எளிய முறையில்  புரியும்படி  இயற்றப்பட்டவை. 

ஆழ்வார்களின் தமிழிசையில்  நாம்  அனுபவிப்பது  பக்தி ப்ரவாஹம்  பெருகும் விஷ்ணு மகிமையோ, அவரது அவதார சரித்திர மென்மையோ,  அல்லது அவரது  அவரது ஆலயங்கள், அமைந்துள்ள  புண்ய க்ஷேத்ரங்களோ பற்றி அற்புதமாக இருப்பவை. 
அவர்களை என்றும் தமிழுலகம் நன்றியுடன்  நினைவு கூறும்படி அற்புதமாக  படைப்புகளை நமக்கு பல நூற்றாண்டுகாலம் வாழ்ந்து அளித்தவர்கள்.   அவர்களைப்  போற்றிப்பாடாத நூலோ  பக்தர்களோ  இல்லை எனலாம்.  ஆழ்வார்கள் வாழ்ந்த காலம் அநேகமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (4200 BCE - 2700 BCE.).

ஆரம்ப காலத்தில் ஆழ்வார்கள் பத்து பேர்கள் மட்டும் தான் என்று அறியப்பட்டார்கள். பின்னர், மதுரகவி ஆழ்வாரும் ஆண்டாளும் சேர்க்கப்பட்டு பன்னிரு ஆழ்வார்கள் ஆயினர். இந்தப் பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள் தான். அவள் இறைவியாக  சந்நிதி பெற்று வைணவ ஆலயங்களில் வணங்கப்படுபவள். தாயார் என்று அழைக்கப்படுபவள்.

தெள்ளு தமிழ்த்தேனில் இதயத்தைப் பிழிந்து கலந்த பக்தி பிரவாகமாக ஆழ்வார்கள் கவித்வம் அமைந்திருக்கிறது. விஷ்ணுவை பக்தியோடு பின் பற்றுபவர்கள் வைஷ்ணவர் எனப் பெயர் பெற்றனர்.  வைணவ க்ஷேத்திரங்கள் முக்கியமாக  108 திவ்ய தேசங்கள். அவற்றில் பூலோகத்தில் நாம் சென்று தரிசிக்கக் கூடியவை 106.    திருப்பாற்கடல் மற்றும் வைகுந்தத்தை நம்மால்  ஸ்தூல சரீரத்தோடு தரிசிக்க வாய்ப்பில்லை.

ஸ்ரீமந்  நாராயணன் எங்கும் உளனாக இருப்பினும், ஆழ்வார்களின் திருவாக்கிலிருந்து பாடல் பெற்ற  தலங்கள் 108 திவ்ய தேசங்களானது.

 ஆழ்வார்கள் இவற்றில் அனேக ஸ்தலங்களை தரிசித்து பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். அவர்கள் பக்திப் பாசுரங்களின் தனித் தன்மை அவை பாசத்தோடும், பரிவோடும், அன்பைக் கூட்டி பக்தியில் கலந்து சொல் நயம், பொருள் நயம் கூட்டி இலக்கண சுத்தமாக எளிய நடையில் சந்தத்தோடு மிளிர்வது ஒன்றே. நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் என்ற தமிழ்க்களஞ்சியம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது படித்து மகிழ வேண்டிய நூல்.

வைணவரோ, சைவரோ, எவரோ, தமிழ் தெரிந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.

வைணவர்களுக்கு ஒரு வாழ்வின் வழிகாட்டியாக அமைந்துள்ளது நாலாயிர திவ்யப்பிரபந்தம். வேத யஜ்ஞ ஸம்ஸ்க்ருத முறையினின்றும் எளிமைப் படுத்தப்பட்டு எவரும் அழகிய பழகும் தமிழில் பக்தி மூலம் முக்தி பெற வழி காட்டுபவையாக அமைந்தவை நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள்.

 மீண்டும் நினைவு படுத்துகிறேன். விஷ்ணுவிடம் முழுதும் பக்திப் பரவசத்தில் ''ஆழ்ந்த'' வர்களே ''ஆழ்வார்கள்'' -- ( மேலும் மேலும் ஆழ்ந்து கொண்டே இருப்பவர்கள்).

மேலே சொன்ன பன்னிரண்டு ஆழ்வார்களில் முதல் மூன்று ஆழ்வார்கள் முறையே, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார்,  பேயாழ்வார் எனப்படுவர். நான்காவதாக அவதரித்தவர் திருமழிசை ஆழ்வார்.  முதல் மூன்று ஆழ்வார்களும்  நம்மைப்  போல்  ஒரு தாய் வயிற்றில் பிறவாத அயோநிஜர்கள்.  திருமழிசை ஆழ்வார்  பிருகு மகரிஷிக்கு பிறந்தவர் என்பார்கள்.

பன்னிருவரில் மதுரகவி, பெரியாழ்வார், ஆண்டாள் , அந்தண வகுப்பைச் சார்ந்தவர்கள் குலசேகராழ்வார் க்ஷத்ரியர்.
 நம்மாழ்வார் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 
பாணர் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவர் திருப் பாணாழ்வார். பாணர்கள் இசை ஞானிகள். இவர்களைப் பற்றி நிறைய  சங்க நூல்களில் காணலாம். 
திருமங்கை ஆழ்வார் என்பவர் கள்வர் என்ற பிரிவைச் சேர்ந்தவர்.
இறைவனின் குழந்தைகள் அனைவருமே. அதில் சாதியென்ன மதமென்ன? அவை நம்மால் பிரித்துப் பார்க்கப்பட்டவை. மதிப்பற்றவை.

வைணவத்தைப் பற்றி அறிய சில நூல்களைப் பார்க்கலாம்.
கருட வாகன பண்டிதர் என்பவர் 11ம் நூற்றாண்டில் திவ்ய சூரி சரித்திரம்'' என்கிற நூலில் வைணவத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார். மற்றும் சில சமீப கால நூல்களில் பெயர்கள் சொல்கிறேன்.
பின்பழகிய  பெருமாள் ஜீயர் எழுதிய குரு பரம்பர பிரபாவம். ஆண்பிள்ளை கந்தாடை அப்பன் எழுதிய பெரிய திரு முடி அடைவு, பிள்ளை லோகம் ஜீயர்  அருளிச் செய்த   ''யதீந்திர பிரணவ பிரபாவம்'' என்கிற திவ்யப் பிரபந்த வியாக்யானம் மற்றும் ஏராளமான குரு பாரம்பரிய வியாசங்கள், ஆலய வரலாறுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், புராணங்கள், எல்லாமே ஆழ்வார்களைப் பற்றி அமோகமாக விவரங்களை அள்ளி வீசுகின்றன. முழுதும் இவற்றை அலச ஒரு வாழ்நாளோ, பிறவியோ  போதாது. சில விஷயங்களைப் படித்து யோசிக்கும்போது எளிதில் புலனாவது என்னவென்றால் விஷ்ணுவின் ஏதாவது ஒரு அம்சமே இந்த ஆழ்வார்கள் என்பதில் துளியும் சந்தேகம்  இல்லை.   நம் போன்ற சாதாரணர்களிலிருந்து  முற்றிலும்  மாறுபட்டவர்கள். அபூர்வர்கள்.

நிறைய சந்தர்ப்பங்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை விஷ்ணு ஆலயங்களிலும் மற்றும் விழாக் காலங்களிலும் அருகில் நின்று கேட்டிருக்கிறேன். ஒரு இனம் புரியாத இன்ப உலகத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறேன்.  பிரபந்தங்களை ஓதுவதற்கென்று ஒரு பண்  இசை பிரத்யேகமாக உள்ளது. அதன் கிரமத்தில்  இரு பிரிவாக மாற்றி மாற்றி அவர்கள் உச்சரிப்பதை  கேட்க செவி புண்யம் பண்ணி இருக்க வேண்டும்.   என்னைக் கடத்தியது அழகு தமிழா? அன்பின் எதிரொலியா? ஆழ்ந்த பக்திப் பிரவாகமா? பிரயோகித்த இசையின் பாங்கா? எல்லாமேவா?  விடை காண இயலவில்லை.

சேர சோழ பாண்டியர்களோடு சேர்ந்து பல்லவர்கள் காலத்திலும் ஆழ்வார்கள் நாயன்மார்கள்              ( சைவ குருமார்கள்) இணைந்து வாழ்ந்தவர்கள். இவ்விருவரும் நமது இந்து தார்மீகத்தின் இரு கண்களாக இருந்து தொண்டு செய்ததன் பயனாக பிற மதங்களான ஜைன, புத்த மத ஆதிக்கம் சற்று கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டது என்று சரித்திர வாயிலாக அறிவோம். 5ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரையில் சரித்திர வரலாற்றின் படி (The Encyclopædia Britannica) ஆழ்வார்களின் இந்த சீரிய தொண்டு குறிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று ஆழ்வார்கள் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்கிறது . நம்மாழ்வாரும் மதுரகவியும் 10ம் நூற்றாண்டு காலத்தவர்.. மற்றவர்கள் அனைவரும் 9வது நூற்றாண்டாம். சரித்திரம் எதையாவது சொல்லட்டும். அதால் எந்த முக்யமும் இல்லை. அவர்கள் எந்த நூற்றாண்டும் அல்ல. அத்தனை ஆழ்வார்களும் எல்லா யுகத்துக்குமே சொந்தமானவர்கள். சுகர் காலத்தில், அதாவது பாகவத புராணத்தில், ஆழ்வார்கள் இருந்ததாகவும் துவாபர யுகத்தில் சிலர் இருந்ததாகவும், ஏன் கலியுக ஆரம்பத்தில் நம்மாழ்வார் உலவியதாகவும் கூட சொல்லப்படுகிறது.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...