Monday, November 1, 2021

LIFE JOURNEY

 ரயில் பிரயாணம். -  நங்கநல்லூர்  J K  SIVAN 


நாம்  எல்லோருமே  இன்னும் குழந்தைகள் தான்.  வயசான, கொம்பு ஊன்றி நடக்கும், முக்கால் வாசி கேட்காத  காதும்,  சரியாக தெரியாத கண்ணும்,  பாதிக்கு மேல் பல் இழந்த  குழந்தைகள்.   நமக்கு இன்னும்  ரயில் மேல் ஆசை  விடவில்லை.  ரயில் பிடிக்காத, ரயில் போக ஆசைப்படாத குழந்தைகள் உலகத்திலேயே எங்கும் இல்லையே.

வாழ்க்கை ரயில்  ஜிகுபுகு என்று ஓடிக்கொண்டே தான் .  பெரிய நீள அகல ரயில் வண்டி நிலையம்.  ஸ்டேஷன்.  அதன் பெயர்  தான் உலகம். அடேயப்பா  அங்கே  எத்தனை எத்தனை ரயில்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. ஒரே சப்தம். காது செவிடு பொடி . ஏன் இத்தனை ரயில் வண்டிகள் என்று தெரியாதா. அத்தனை டிமாண்ட். ஜனங்கள் ஒருத்தரை ஒருத்தர்  அமுக்கி தள்ளி பிடித்துக்கொண்டு  ஏறுவதும் இறங்குவதுமாக அம்முகிறார்களே. i

நான் கொஞ்சநாளைக்கு முன்னாலே  பிரயாணம் தொடர இதிலே ஒரு வண்டியில் தொத்திக் கொண்டவன். ரெண்டு பேர் என் கூட.  யாரா?  என் அப்பா அம்மா தான். வேறே யார்? வண்டி நகரும் போது சந்தோஷமாக இருந்தது.  எனக்கு எல்லா சௌகர்யமும்  நான் எதுவும் கேட்காமலேயே ரெண்டு பேரும் பண்ணி கொடுத்தாங்க.  அப்புறம் சில பேர் சேர்ந்தாங்க.  சகோதர சகோதரிகள் என்று.  எல்லாமே பிடிச்சிருந்தது.

வண்டி நின்னு நின்னு  ஒவ்வொரு ஸ்டேஷனிலேயும் சிலரை இறக்கி சிலரை ஏற்றிக்கொண்டு போகிறது.  ஒரு ஸ்டேஷனில் அப்பா இறங்கிட்டார்.  இன்னொண்ணுலே அம்மாவை இறக்கி விட்டது. அவங்க ரயில் வண்டிலே இல்லேன்னு குறை தான். என்ன செய்றது? இப்போ . நான் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே தனியா   போய்ட்டிருக்கேனே. 

இந்த வண்டியிலே  நாம் மட்டும் இல்லை.  எத்தனையோ  பேரு எங்கூட பயணம் பண்ணாங்க,  பண் றாங்க.  யார் யாரோ.  கணக்கே இல்லை.  பெண்டாட்டி பிள்ளைங்க,  அண்ணன் தம்பி அக்கா தங்கச்சிங்க, ஸ்நேகிதங்க, ஸ்நேகிதிங்க, தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு  பல ரகம். எல்லோருமே நல்லவங்க தான்.  சந்தோஷத்துக்கு குறைவே இல்லை. ரயில் போய்கிட்டே இருக்குது.  

''நான் போய்ட்டு வரேன்''  ஒவ்வொருத்தரும் அவங்க இறங்கவேண்டிய  ஊர்லே  இறங்கிக்கிறாங்க. அவங்களை பிரியறோமேன்னு இருக்கு. என்ன செய்ய?  அவங்க இறங்க நேரம் வந்துடுச்சுல்லே?   ரயில் நட்புன்னாலே, ரயில் சிநேகிதம் என்றாலே, பாதியிலே அறுந்து போறது தானே.   ஒரு தரம் பாக்கறவங்களை மறுபடியும் பார்த்து பேசாமல் இருக்கிறது தானே. அப்பப்போ அவங்க ஞாபகம் வராமலா இருக்கும்? ரயில் பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்குது.  ஒரே ஸ்பீட். நின்னு நின்னு. சில நேரம்  சீட் காலி.  சில நேரம் புளிமூட்டை கும்பல்.

மரம், வீடு, ஆறு, மலை, வெயில், மழை, வயல் ஜனங்க யார் யாரோ,  எல்லாமே ஓடறமாதிரி இருக்கு ஜன்னல் வழியா பார்க்கும்போது. ஆனா  நான் தான்  ஓடறேன் , அதெல்லாம் நிக்கிறது.  இல்ல ரயில் என்னை ஒட்டுது. இதிலே ஒரு வேடிக்கை  என்னா தெரியுமா?  நான் இத்தனை  பேரை ரயில்லே பார்த்தேனே, என்னையும் சேர்த்து தான் சொல்றேன்.  ஒருத்தராவது எப்போ எந்த ஸ்டேஷனிலே  இறங்கணும்னு தெரியாதவங்க. வண்டி நிக்குது. இறங்கிக்கறாங்க. சிலர்  அதேபோல் ஏறிக்கிறாங்க. என் ஸ்டேஷன் எது, எப்போ வரும்..  தெரியலியே.  இப்படி எங்கே போறோம்னு தெரியாமலேயே  ரயில்லே போறது வேடிக்கையா ஜாலியா  இருக்கு.  போய்க்கிட்டே இருக்கேன். என்ன ஒரு விஷயம்னா. முடிஞ்ச போது சந்தோஷமா கால் நீட்டி படுக்கறது. முடியாதபோது நெரிசல்லே கை கால் நீட்ட மடக்க முடியாம அவஸ்தை படறது. எனக்கு மட்டும்   இல்லியே  இது.  எல்லாருக்கும் தானேன்னு ஒரு சமாதானம். நம்ம ட்ரைவர் இருக்காரே  கிருஷ்ணன். ரொம்ப  கெட்டிக்கார  ட்ரைவர். ரயில் எங்கே நின்னு யாரை இறக்கணும் , யாரை ஏத்திக்கணும்னு  தெரிஞ்சு வச்சிருக்கிற சிரிக்கிற ஆளு . ரொம்ப பிடிக்கும் அவரை எனக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...