Saturday, November 6, 2021

ULLADHU NAARPADHU

 உள்ளது நாற்பது - நங்கநல்லூர் J K  SIVAN -

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி .

32.  நீ தான் அந்த ப்ரம்மம்.

அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை
யெதுவென்று தான்றேர்ந் ததுநா –
னிதுவென்றென் றெண்ணலுர னின்மையினா லென்று
மதுவேதா னாயமர்வ தாலே - யதுவுமலாது 32

வேதத்தின் சாரம் உபநிஷத்.  அப்படிப்பட்ட  உபநிஷத்துகளை கடைந்தெடுத்த  நாலு வாக்கியங்களை மஹா வாக்கியம் என்கிறோம். அதில் ஒன்று தான்  சாந்தோக்யோபநிஷத்தில் இருந்து கிடைத்த  ''தத் த்வம்  அஸி'' .அதன் அர்த்தம்:  ''அது நீ தான்''.  அது: ப்ரம்மம் :   அது நீ தான். 

மற்ற  மூன்று மஹா வாக்கியங்கள்:  

அஹம்  ப்ரம்மாஸ்மி.
அயம் ஆத்மா ப்ரம்ம 
பிரஞ்ஞானம் ப்ரம்ம 

இவற்றை பின்னர் மற்றொரு  பதிவில் விளக்குகிறேன்.

ப்ரம்மம் என்பது நீயே . நான் யார் என்று அலசி தேடும்போது கண்டுபிடிப்பது அது தான். உன் ஸ்வரூபம்  எப்படி இருக்கும்  என்று தேடாமல் நான் ப்ரம்மம், அருவமானவன், நிச்சயம் இந்த தேஹம்  நான் அல்ல,  என்று மனதால் எண்ணுவது போதும்.

ரமணாஸ்ரமத்தில் ஒரு பக்தர்  மகரிஷியிடம் தன்னுடைய கஷ்டங்களை ரொம்ப நேரம் அழுது கொண்டே  சொல்லிக் கொண்டிருந்தார். மெளனமாக  இருந்த ரமணர் பொறுமையாக அவர் முடிக்கும் வரை காத்திருந்து  ''நான் யார், இந்த கஷ்டங்கள் யாரால் வந்தது, எப்படி வந்தது'' என்று உன்னிப்பாக  விசாரி. துக்கம் கஷ்டம் எல்லாம் உண்மை அல்ல என்று புரியும். ஞானம் உதயமாகும்'' என்றார்.

''சுவாமி,  எனக்கு  ஆத்மா  ஒன்றும்  தெரியவில்லையே. துக்கம் மட்டும் தானே தெரிகிறது '' என்கிறார்.

சுவாமி மெளனமாக அவரைப் பார்க்கிறார்.  அருகில் இருந்த முருகனார், ''நீங்கள் ரமண மஹரிஷி  சந்நிதியில் இருந்து கொண்டு  துக்கம் என்று சொல்வது,  கங்கைக்  கரையிலிருந்தும்  தாகத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது''  என்றார் . 

லாகூரிலிருந்து வந்த ஒரு பக்தர்  ''சுவாமி எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?'' என்றார் .

''முடியாது, உன்னை கடவுளாக்க  முடியும் ஏனென்றால், எதை நீ  தீவிரமாக தேடுகிறாயோ அதுவாகவே  நீ  ஆகிவிடுகிறாய்'' என்று காட்ட முடியும் என்றார் .

தொடரும் 




 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...