Thursday, November 25, 2021

vainava oli

 வைணவ விண்ணொளி  -  நங்கநல்லூர்  J K  SIVAN


7   பெரியாழ்வார்

பெரியாழ்வார் பற்றிய  முந்தைய பதிவு நீள்கிறது.  அவர் பெரிய ஆழ்வார் என்பதால்  மற்றவர்களை போல் அவருக்கு ஒரு பதிவு போதவில்லை.  

இங்கு ஒரு கதை அவசியமாகிறது. பாண்டிய ராஜா வல்லப தேவனுக்கு இரவில் நகர் சோதனை மாறுவேடத்தில் வருவது வழக்கம். ஒருநாள்  இரவில்  ராஜா வழியில் ஒரு அந்தணனைக் கண்டு நீ யார் எங்கிருந்து வருகிறாய் எங்கே போகிறாய்  இந்த அகால நேரத்தில்?  என்றான். அவன் நான் கங்கையில் நீராடி விட்டு  இப்போது தான்  ஊருக்கு திரும்புகிறேன்'' என்றான்.

''ஒ அப்படிப்பட்ட ஸ்ரேஷ்டரோ நீர் ? எனக்கு ஒரு உபதேசம் சொல்லுமேன்? ''

பிராமணன் ஒரு ஸ்லோகம் சொன்னான் அதன் பொருள்

'' மழைக்காலம் 4 மாசம் சுகமாக இருக்க  வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்கள் உழைக்கவேண்டும். இரவில் நன்றாக சுகமாக நித்திரை பெற பகலெல்லாம் பாடுபட்டு உழைக்க வேண்டும். வயசான காலத்தில் டாக்டரிடம் தினம் போகாமல் இருக்க வாலிப வயசிலேயே சுறுசுறுப்பாக மிதமான உணவுடன், வியர்க்க சோம்பல் இன்றி உழைக்க வேண்டும். மறுமையில் மோக்ஷம் கிட்ட, இப்பிறவியிலேயே தர்ம காரியங்கள், சத்தியமாக நேர்மையாக நியாயத்தோடு புரிந்து அன்போடு பரமனைப் போற்றி வாழ வேண்டும்.''

ராஜா நேராக தனது குரு செல்வநம்பியிடம் போனான். காலில் விழுந்தான்.

 ''குருவே எனக்கு மறுமையில் சுகம்பெற வழி சொல்வீர்'' என்று கேட்டான். '' இதற்கு ஆசாரமும் வேதமும் அல்லவோ பிரமாணம். நீ என்ன செய்கிறாய், சமயத்துறையில் சிறந்த அறிஞர்களை வரவழைத்து வேதாந்த சித்தாந்த பர தத்வம் உபதேசிக்கச் செய்து அதனால் பயனடைவாயாக என்று சொன்னார்.

யார் சொல்லும் தத்வ முறை சிறந்ததோ அப்போது, அதை முடிவு செயது  தானாகவே  கீழே இறங்கும்  வகையில் ஒரு பொற்கிழி ஸ்தம்பத்தில் கட்டப்பட்டது. வேத விற்பன்னர்கள் நாலா பக்கத்திலிருந்தும் வந்தார்கள். திருவரங்கன் அரங்கநாதன் சும்மாவா இருப்பார்.

''விஷ்ணுசித்தா, நீ மதுரைக்குப் போ, பாண்டியனுக்கு அறிவுரை தந்து பொற்கிழியைப் பெற்றுவா''
'' சுவாமி நான் வேதநூல்கள் அறிந்து கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறாதவன் ஆயிற்றே?''
''நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா. நீ கிளம்பு ''

பெரியாழ்வார் பாண்டியனுக்கு பர தத்வம் கற்பித்தார். ராஜாவும் குரு செல்வ நம்பிகளும் ஆச்சர்யப்பட்டனர். பெரியாழ்வாரின் கடல் மடை திறந்தாற்போல் நிகழ்ந்த வேத வியாக்யானம் அந்த மூங்கில் ஸ்தம்பத்திற்கே புரிந்து அது தானாகவே தலை குனிந்து வணங்கும்போது பெரியாழ்வார் கையில் பொற்கிழி விழுந்தது..

அப்புறம் என்ன? பெரியாழ்வார் நடக்கவில்லை. ஏன்?   அவரைத்தான் ராஜா பட்டத்து யானை  மேல் ஏற்றி அமரவைத்து நகர் வலம் வரவைத்துவிட்டானே. ராஜா  பெரியாழ்வாரின்  பர தத்வ உபதேசத்தால் வைணவனாக மாறிவிட்டானே. பெரியாழ்வாரின் கஜாரோஹணத்தை பார்க்க வந்தவர்கள் ஒருவர் கருடவாகனராக விஷ்ணுவே.   அடாடா  பெருமாளே  இப்படி  என்னை ஊர்வலத்தில் பார்க்க வந்திருக்கிறாரே , அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ? அவர்  நிறைய வருஷங்கள் இருக்கவேண்டும் என்று வாழ்த்திப் பாடியது தான் திருப்பல்லாண்டு என்பார்கள்.

அப்போது பெரியாழ்வார் பாடியது தான் திருப்பல்லாண்டு. இனியாவது தினமும் அதைப் படித்து அனுபவிக்கலாமா?     ஐந்து பல்லாண்டுகள் மட்டும் இங்கே  தருகிறேன். சாம்பிளுக்காக :

''பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு''

 ''நாராயணா, மாபெரும் மல்லர்களைத் தோற்கடித்த வலிமையான தோள்களையும் சிவந்த திருவடிகளையும் உடைய மணிவண்ணா!  பல்லாண்டென்ன, பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் உனக்கு பாதுகாப்பு உண்டாகட்டும்.  என்னைப் போன்ற அடியார்களுடன் நீ எப்போதும் பிரிவின்றி இருக்க வேண்டும்.''

''அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டுபடைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே''

என்போன்ற உன் பக்தர்களுக்கும்,  உனக்கும்  உன்னுடைய வலது மார்பிலே வாழ்கின்ற திருமகளுக்கும், உன் வலது கரத்திலே இருக்கும் சுடர் விடும் சுதர்சனச் சக்ரத்துக்கும், நீ போருக்குச் செல்லும் போது முழங்கும் பாஞ்ச ஜன்யத்துக்கும் பல கோடி நூறாயிரம் வாழ மங்களாசாசனம் செய்கிறேன்''.  

''வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே''

''சாப்பாட்டுப் பிரியர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் எங்கள் மண் சுமக்கும் கைங்கரியத்தில் பங்கு கொள்ளுங்கள்; பெருமை அடையுங்கள். நாங்கள் ஏழு தலைமுறைகளாக இந்தச் சேவையைச் செய்து வருகின்றோம். வானரர் சேனை கொண்டு இலங்கை அரக்கர்களுடன் போர் செய்து வென்ற ராம பிரானுக்குப் பல்லாண்டு பாடுங்கள்''.

''ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே''

ஏடு நிலம் என்பது கைவல்யம் ஆகும். இதில் வசிக்கும் கைவல்யார்த்திகள் தங்கள் ஆத்மாவை தாங்களே அனுபவிக்க விரும்புபவர்கள். ஸ்வானுபூதிகள் என்று பெயர்.  ''அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே '' என்று திருமூலர் கூறுவாரே  அந்த நிலை. 

கைவல்யம் என்றால்   மோக்ஷ நிலை. perfect isolation state. இந்த நிலையில் ஆத்மா மறு பிறப்பிலிருந்து விடு பட்டாகி விட்டது. ஆனால் விரஜா நதியிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. வைகுண்டத்தை இன்னும் அடைய வில்லை, அல்லது அடைய விரும்பவில்லை  என்று பெரியோர்கள் அர்த்தம் சொல்கிறார்கள்.    கைவல்யவாசிகள் அச்ரார்தி வழியில் செல்லுபவர் இல்லை. இவர்கள் விரஜா நதியிலிருந்து தொலை தூரத்தில் வசிப்பவர்கள். இவர்கள் பகவான் நாராயணனுக்கு பணி புரிபவர்களும் இல்லை, திரும்பப் பிறப்பு எடுப்பவர்களும் இல்லை.
இப்படிப் பட்ட ஏடு நிலத்தில் தள்ளப் படுவதற்கு முன்னால் எங்கள் குழுவில் வந்து சேர்ந்து விட ஆசைப் பட்டால் உடனே வாருங்கள். நாடு நகரம் அறியும் வண்ணம் ‘நமோ நாராயணா’ என்று பல்லாண்டு பாடுங்கள்.

''அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே''

 பிரதிவாதி பயங்கரம் சுவாமி இந்தப் பாடலுக்கு விளக்கம் அளிக்கும் போது, இந்தப் பாடல் ஐஸ்வரார்த்திகளை பல்லாயிரம் பாடும் படி அழைக்கிறது என்கிறார். யார் இந்த ஐஸ்வரார்த்திகள்? இவர்கள் இரு வகைப் படுவர்: ஒருவகையினர் கை தப்பிப் போன செல்வத்தை மறுபடியும் அடைய முயற்சி செய்பவர்கள்; இன்னொரு வகையினர் எளியோராய் இருந்து  இப்போது செல்வம் அடைய முயற்சி செய்பவர்கள்.

அண்ட சராசரங்களுக்கு அதிபதி ஆனவனும், அசுரரையும் அரக்கர்களையும்  பூண்டோடு அழித்தவனும், தன் இந்திரியங்களை அடக்கி ஆள்பவனுமான இருடிகேசன் (ரிஷிகேசன் என்ற வட மொழிச் சொல்லுக்குத் தமிழ் வடிவம்) நாராயணனுக்கு ஆயிரம் நாமங்கள் என்ன, பல்லாயிரம் நாமங்கள் சொல்லிப் பாட வாரீர்!

செல்வ நம்பிகள் திருக் கோஷ்டியூரைச் சேர்ந்த ப்ரோகிதர். அவரைப் பற்றி திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் சொல்கிறார்: ''அபிமானதுங்கன் செல்வனைப் போல நானும் பழவடியேன் '' (தி.ப. -10)

திருமாலை திருத் துழாய் மலர் மாலைகள் தொடுத்துச் சூட்டி மகிழ்வுறும் பணியினை மேற்கொண்டார் பெரியாழ்வார். ஆழ்வார்களிலேயே திருமாலின் கோயிலில் வாழ விரும்பிய வைணவர் என்ற பெருமை பெற்றவர் இவர் ஒருவர் தான்.

பொற்கிழியில் கிடைத்த தங்க மோகராக்கள் எந்த பேங்கில் சேமித்து வைக்கப்பட்டன தெரியுமா? பெரிய நந்தவனமாக, கண்ணைப் பறிக்கும் மலர்கள் மலிந்து கிடக்கும் மலர் வனமாக. எதற்கு? அத்தனையும் மலர் மாலையாக அன்றன்று அரங்கனின் நீண்ட நெடு மேனியை அலங்கரிக்க.

இந்த துளசி வனத்தில் தான் ஒரு நாள் ஆண்டாள் என்கிற கோதை அவரால் கண்டெடுக்கப்பட்டாள். அவளைப் பற்றி நிறையவே எழுதவேண்டும். ஒரு வரியில் சொல்வதானால் கண்டெடுத்த, வளர்ந்த, அவள், அரங்கன் மேல் காதல் கொண்டு அவனையே அடைந்தாள், பிரிந்தாள் . இதை அவர் ஒரு பாசுரத்தில் ''

''ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான்...!!'' ( பெரி. 3.8.4.)

ரங்க ''மன்னாரை'' அடைந்து கோதை தந்தை பெரியாழ்வாரை ''மன்னாரின் ''மா மனாராக'' மாற்றிய பெருமை கொண்டவள்.

நான் சரித்திரம் பக்கம் போகப்போவதில்லை, சரித்திரப் பேராசிரியர் மு. ராகவய்யங்கார் பெரியாழ்வார் காலத்துப் பாண்டியன் மாற வர்மன் என்கிறபோது, கோபிநாத ராவ் ''இல்லவே இல்லை, அவன் ஸ்ரீ வல்லபன் என்று கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகால வித்தியாசத்தைக் காட்டுகிறார். நல்லவேளை பெரியாழ்வார் 1 பெரியாழ்வார் 2 என்று வெள்ளைக்கார ராஜாக்கள் போல நம்பர் ஆழ்வாருக்கு இல்லை.

ஹிந்து சனாதனம் உலகப்புகழ் பெற காரணமாக அதற்கு இதயமாக இருப்பது ராமன் என்றால் ஆத்மாவாக இருப்பது கிருஷ்ணன் எனலாம். இந்த கிருஷ்ணனை சிறு வெண்ணையுண்ட வாயனாக கம கமக்கச் செய்தவர்கள் ஆழ்வார்கள். அவன் இளமையைச் சிறப்பித்தவர் பெரியாழ்வார். ஈடிணையற்றவர். வாழ வைப்பவனையே ''வாழ்க பல்லாண்டு '' என வாழ்த்தியவர்.
ஒரு அபூர்வ விஷயம்.   12   பன்னிரண்டு  என்பது ஒரு வைணவ  எண் .  நம்பர்.
ஆழ்வார்கள் 12.
பெருமாளின் நாமங்கள் 12.
 திருப்பல்லாண்டின் பாசுரங்கள் 12.
 பன்னிரண்டு ஆழ்வார்களில் பெருமாளிடம் ரொம்ப நெருக்கமானவர்கள் பெரியாழ்வாரும் தொண்டரடிப் பொடியாழ்வாரும் தான்.

''பெரிய'' (MACRO)ஆழ்வார் இல்லையா. பெருமாளை ''வாழ்த்தி'' பல்லாண்டு பாடினார். தொண்டரடி ''பொடி'' (MICRO )யாழ்வார் --துயிலெழுப்பினார். '' அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே''. எல்லா ஆழ்வார்களுமே ஒருவரை ஒருவர் மிஞ்சியவராகவே உள்ளனர். பரமனிடம் கொண்ட பரந்த பக்தியை திறந்த மனத்தோடு திறம்பட நினைத்ததை எழுத்தாக்கும் வித்தையில் அவர்களுக்கு இணை அவர்களே. நிறைய பார்க்கப்போகிறோம். ஆழ்வார்களைப்  பற்றி அறிமுகம் செய்து கொண்டு ஆச்சார்யர்கள் பக்கம்  திரும்புவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...