Sunday, January 20, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் 
 மஹா பாரதம்                                                                                                       


பகல் போஜனம் அனைவருக்கும் முடிந்து விட்டது.  சூரியன்  அந்தி நேரம் வந்து விட்டான். சற்று நேரத்தில் அஸ்தமனம் வந்துவிடும்.

இந்த நேரத்தில் துர்வாசர் தனது பதினாயிரம் சிஷ்யர்களோடு   பாண்டவர்கள் இருக்கும் இடம் விசாரித்துக்கொண்டு  காம்யக வனம்  வந்து விட்டார்.  விஷயம்  சாரணர்கள்  மூலம் யுதிஷ்டிரனுக்கு  எட்டியது.
                                       
தர்மனும் சகோதரர்களும்  கோபக்கார முனிவரை வரவேற்று உபசரித்து  ஸ்நானம்  முடித்து  போஜனத்துக்கு தயாராகும்படி  உபசரித்தனர்.

தருமனுக்கும்   அக்ஷயபாத்ரம் கழுவி வைக்கப்பட்டது  என்பது நினைவில்லை.  திரௌபதியிடம்
''துர்வாச முனிவர்  பதினாயிரம் சிஷ்யர்கள் புடை சூழ  இங்கே  போஜனத்து  வந்திருக்கிறார். நீ  உணவு தயார் செய்''   என்று சொல்லும்போது தான் அவளும் திடுக்கிட்டாள்.  

என்ன செய்வது?  இந்த நடுக்காட்டில்  எப்படி  பதினாயிரம் பேருக்கு உடனே இந்த இரவு நேரம்   உணவளிப்பது?.   இந்த நேரம் கெட்ட  நேரத்தில்  விரைவில்  ஸ்நானம் முடித்து  பசியோடு போஜனம் அருந்த அனைவரும் வருவார்களே.  
எப்படி  இந்த  இக்கட்டை  சமாளிப்பேன்.  ''கடவுளே ,  கடவுளே''  என்று  எண்ணிய திரௌபதியின்  மனதில் ஒருவன் பற்றிய  நினைப்பு  எப்போதும்போல்  சட்டென்று தோன்றியது.

முன்பு ஒருநாள்  எனக்கு  ஆபத்தில்  ஆடை கொடுத்து  சபையில் மானம் காத்தவன் அந்த  ஹரி தானே. அவனையே வேண்டினால் இப்போதும் உதவுவானே! அவனை விட்டால் எனக்கு வேறு யார்?

'' கிருஷ்ணா , வாசுதேவா, ஆபத் பாந்தவா..உடை கொடுத்து  உதவினவா, இப்போது உணவு கொடுக்க வா. ஆடை கொடுத்தவனே, ஆகாரம் கொடுக்க வா''

 ருக்மிணி அருகில் படுத்துக்கொண்டிருந்த  கிருஷ்ணன் எழுந்தான். அடுத்த கணம்  காம்யக  வனத்தில் இருந்தான்.

பாண்டவர்கள் இருந்த பர்ணசாலை கதவு தட்டப்பட்டது.  யார் இந்த இரவு நேரத்தில்  என்று  கதவைத் திறந்தாள்  திரௌபதி.  

எதிரே கிருஷ்ணன் நின்றான்.

'கிருஷ்ணா  நீயா?''

''ஆமாம்  கிருஷ்ணா .    நான் கிருஷ்ணன் தான். ஆண்  கிருஷ்ணன்.  நீ  பெண் கிருஷ்ணா  இல்லையா,  என்ன சந்தேகம் உனக்கு ''

''இப்போது தானே  உன்னை நினைத்தேன். எப்படி  அதற்குள் இங்கே வந்தாய்?
 எங்களுக்கு நீ உடனே  உதவ வேண்டுமே''

''இதோபார்  திரௌபதி,  உங்களுக்கு உதவி செய்வது ஒரு பக்கம்  இருக்கட்டும்.  எனக்கு நீ சொல்வது எதுவுமே  காதில் விழாதபடி  பசி  காதை அடைக்கிறதே,   எங்கிருந்தோ  இவ்வளவு தூரம் வந்தவனுக்கு பசிக்கு  முதலில் ஏதாவது கொஞ்சம் ஆகாரம்  வேண்டுமா என்று கேட்கவும் இல்லை,  கொடுக்கவும் இல்லை. உனக்கு உதவி ஏதோ செய்ய மட்டும்  ஞாபகமாக கேட்கிறாயே.  போய்  உள்ளே போய் ஏதாவது கொண்டுவா அப்புறம் உனக்கு உதவுவது பற்றி பேசுவோம்.''

ஐந்தாம் வேதம் 
மஹா பாரதம்.


                                                                      ''போஜனம்  இன்னொரு நாள் ...!

திரௌபதிக்கு தலை சுற்றியது. அப்படியே  சுவரில் சாய்ந்தாள்.''என்ன ஆயிற்று உனக்கு?''

'' கிருஷ்ணா,   நான் என்ன செய்வேன்.  இன்றைய பொழுது  எல்லோருக்கும் உணவளித்து,  கடைசியில் நானும் சாப்பிட்டு விட்டு  வழக்கம்போல அக்ஷய பாத்தரத்தை  கழுவி கவிழ்த்து வைத்து விட்டேனே,  இனி நாளை சூரிய  உதயத்தில்  தானே அதில் உணவு  கிடைக்கும் ''

''திரௌபதி,  விளையாடாதே என்னோடு. என் பசியில்  நான் உன்னையே  தின்றாலும் ஆச்சரியம் இல்லை. போய் அந்த  அக்ஷய பாத்திரத்தை உடனே இங்கே  கொண்டுவா. என்னிடம் காட்டு  நானே  அதை ஏதாவது முதலில் எனக்கு  கொடு என்று கெஞ்சிப் பார்க்கிறேன்''

காலியாக  இருந்த அக்ஷய  பாத்திரத்தை  கையில் வாங்கி கிருஷ்ணன்  மேலும் கீழும் முன்னும் பின்னும் பார்த்தான்.  அதன் விளிம்பில் ஒரு இடத்தில் ஒரு சிறு  கீரைத் துண்டு ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் கிருஷ்ணன் கண்களில் ஒளியும் இதழில் புன்னகையும் மலர்ந்தது. அந்த சிறு கீரைத் துண்டை ஆர்வத்தோடு எடுத்து  தனது  வாயில் போட்டுக்கொண்டு விழுங்கினான். 
''அப்பாடா''  என் பசி தீர்ந்தது.  திரௌபதி கொஞ்சம் குடிக்க தண்ணீராவது தருகிறாயா?''
கிருஷ்ணன் ஒரு வாய்  குளிர்ந்த ஜலம் பருகினான்.

அந்த நேரம்  அங்கே  பீமசேனன் ஓடிவந்து கிருஷ்ணனை வணங்கினான்.

''பீமசேனா  திரௌபதி சொன்னாளே  துர்வாசரும் அவரது பதினாயிரம் சிஷ்யர்களும் இங்கே  போஜனம் அருந்த வருவார்கள் என்று. ஏன் இங்கே நிற்கிறாய். அவர் கோபக்கார முனிவர் .  உடனே  நீயே  நேரில் சென்று அவரை வணங்கி  உபசரித்து இங்கே அழைத்துக்கொண்டு வா. உங்களுக்கு இருக்கும் போதாத நேரத்தில் அந்த பொல்லாத  கோபக்கார முனிவர் சாபம் வேறு சேர்ந்தால்  உங்கள் பாடு மிகவும்  கஷ்டமாகிவிடும் என்று தோன்றுகிறது. ''

 கிருஷ்ணன் சொன்னால்  பீமன்  மறுப்பானா.  உடனே ஓடினான்.

 இதற்கிடையே, ஆற்றில்  துர்வாசரும் சிஷ்யர்களும்  நீராடிக் கொண்டிருந்தனர்.   நீரில் குளித்துக் கொண்டிருந்தவர்கள்  ஏனோ தெரியவில்லை, அனைவருமே  ஆற்றிலிருந்து   ஒரு வாய் குளிர்ந்த ஜலம்  பருகினார்கள்.   அந்த ஒரு வாய் குளிர்ந்த நீரை விழுங்கியவுடன்  வயிறே வெடித்து விடும் அளவுக்கு  அனைவருக்கும் வயிறு நிரம்பிவிட்டது.  என்ன இது ?  யுதிஷ்டிரனிடம்,   உணவு தயாராகட்டும் இதோ ஸ்நானம் முடித்து வருகிறோம் என்று சொன்னோம்.  எப்படி அதற்குள்  நமக்கு பசி  பறந்துபோய்  வயிறு  நிரம்பி விட்டது போல்  ஆகிவிட்டது?  ''  துர்வாசருக்கு  ஆச்சர்யமாக  இருந்தது.

 சிஷ்யர்கள்  தயங்கியவாறு  துர்வாசர் எதிரே நின்று  வணங்கினார்கள்.

''என்ன?''  என்று அனைவரையும் துர்வாசர்  பார்வையால் கேட்ட போது அவர்கள்  தயக்கத்துடன்

''குருவே, என்னவோ தெரியவில்லை,  முதலில் பசியோடு தான் இங்கே ஸ்நானம் செய்ய வந்தோம். இப்போது ஏனோ  ஒன்றுமே சாப்பிட முடியாது போல் இருக்கிறது. வயிறு நிரம்பிவிட்டதே. நீங்கள்  தான்  எங்களால் யுதிஷ்டிரருக்கு சிரமம் ஏற்பட்டதற்கு   மன்னிக்கவேண்டும்.. எங்களில் ஒருவராலும்  இனி நாளை மதியம் வரை எதுவுமே  உண்ண  இயலாது.''

 துர்வாசர்  யோசித்தார்.  அவருக்கும்  அதே நிலை. '' நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது.  இத்தனை பேருக்கும்  சிறந்த உணவு தயார் செய்து நமக்காக  பாண்டவர்கள் காத்திருக்கிறார்கள்.  அவர்கள்  தர்மிஷ்டர்கள், சத்ய புருஷர்கள்.  பகவான் ஹரி அவர்களுக்கு உற்ற தோழன். நான் எவ்வாறு  அவர்களிடம்  சென்று  என்னால்  போஜனம் அருந்த முடியாது என்று சொல்வது.  அவர்கள் நம்மை பற்றி என்ன தாழ்வாக நினைப்பார்கள். அவர்கள் கோபத்திற்கு நாம்  ஆளாக கூடாது. அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். எனவே  நாம் எல்லோரும்  இனி யுதிஷ்டிரன் பர்ணசாலைக்கு செல்லவேண்டாம். பாண்டவர்களை சந்திக்க வேண்டாம். நேராக திரும்பிச் செல்வோம்.  அவர்கள்  என்றும் தர்மத்தில் உயர்ந்து சகல வெற்றிகளும் பெற்று சந்தோஷமாக  வாழ   வாழ்த்திவிட்டு  செல்வோம்.   மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர்களிடம் சென்று  போஜனம் அருந்துவோம். ''  வேகமாக அவர்கள்  அனைவரும்  அங்கிருந்து  அகன்றார்கள்.

ஆற்றங்கரைக்கு ஓடிய  பீமன்  அங்கே  யாரையும்  காணாமல் எங்கெங்கோ தேடினான். அங்கிருந்த  சில ரிஷிகளை, முனிவர்களைக்கண்டு  துர்வாசரைப் பற்றி விசாரித்தான்.  சற்று நேரம் முன்பு அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று அறிந்தான்.  யுதிஷ்டிரனிடம் விஷயம் சொன்னான் .

''அடடா,  மாலையில் பசியோடு வந்த ரிஷியும் சிஷ்யர்களும் உணவு இல்லாமல் சென்று விட்டார்களே. அவர்கள் மனம் துன்புற்றால் அந்த  பாபத்திற்கு நாம் என்ன ப்ரயசித்தம்  செய்ய முடியும்.'' என்று யுதிஷ்டிரன் வருந்தினான்.

அப்போது கிருஷ்ணன் தர்மன் முன் வந்து,  ''யுதிஷ்டிரா,  துர்வாசர் தனது பரிவாரத்தோடு வருகிறார்  அவரது கோபத்துக்கு  ஆளாகக் கூடாதே என்று  அஞ்சி  திரௌபதி என்னை அழைத்தாள் . நானும் ஓடோடி வந்தேன். உனது தர்ம சிந்தனை, சத்யம்,  சீலம் ஆகியவை அவரது தவ வலிமை குறைந்ததில்லையே,  உன்னிடம் சொன்ன வாக்கை  மீறியதற்கு எப்படி விளக்கம் சொல்ல முடியும் என்று  அஞ்சி துர்வாசர்  உன்னைக் காணாமலே  சென்று விட்டார் போலிருக்கிறது.  சரி,  நானும் செல்கிறேன். விடை கொடு'' என்றான் கிருஷ்ணன்.

நடந்ததை அறிந்த  திரௌபதி    'கிருஷ்ணா  எங்கள்  துன்பத்திலிருந்து எப்போதும் எங்களைக் காப்பவனே''  என்று மனமுருகி  கண்ணீர் மல்க  கிருஷ்ணனை வேண்டினாள்.   பாண்டவர்கள்  அனைவரும் வணங்க  அவர்களை வாழ்த்தி விட்டு  கிருஷ்ணன் மறைந்தான்.

    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...