Friday, January 4, 2019

aindham vedham





ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மகா பாரதம்
யார் முதல் தெய்வம்?
வியாசரின் லக்ஷக் கணக்கான மகாபாரத ஸ்லோகங்களில் இத்தனை விஷயம் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?. நிச்சயம் எனக்கு தெரியாது. எனவே அவற்றில் இந்தக் காலத்திற்கு தக்கவாறு எழுதக்கூடியதை மட்டும் எடுத்துக்கொண்டு அதை எவ்வளவு சுருக்க முடியுமோ, சுவாரசியம் குறையாமல் அதைக் கொடுக்க என் முயற்சி வெற்றி பெற்று வந்தால் அது உங்களது ஆசியாலும் , வாழ்த்துக்களின் சக்தியாலும் தான் என்று தயக்கமின்றி கூறுவேன்.
உதங்கர் ஒரு மகரிஷி. விஷ்ணுவிடம் அவர் கேட்ட வரம்: ' நாராயணா, என் மனம் நினையே நாடி நிற்க வேண்டும். சத்யம், திருப்தி, நின் பக்தி ஒன்றே. வேறெதுவும் வேண்டேன்''
''நீ கேட்ட வரம் தந்தேன்'' என்ற விஷ்ணு, ''உதங்கா, உன் யோக சக்தியால் மூவுலகும் பயன் பெறும். துந்து ஒன்று ஒரு அசுரன் மூவுலகும் அழிக்க கடுந்தவம் செய்கிறான். ஒரு சக்தி வாய்ந்த ராஜா இக்ஷ்வாகு குலத்தில் உருவாகப் போகிறான். வ்ரிஹதஸ்வன் என்ற அவனுக்கு குவலஸ்வன் எனும் மகன் தோன்றுவான். அவனால் துந்து அழிவான்'' என்று விஷ்ணு அருளினார். .
இக்ஷ்வாகு வம்சத்தில், அவனுக்கு பிறகு சசதன், அயோத்யா அரசனானான். அப்புறம் காகுத்ஸ்தன்,அநேனஸ், ப்ரிது , விச்வகஸ்வன், அத்ரி, யுவனஸ்வன், ஸ்ரவஸ்தன், வ்ரிஹதஸ்வன், அப்புறம் தான் இந்த குவலஸ்வன். குவலஸ்வனுக்கு (மயக்கம் போட்டு விழாமல் கெட்டியாக பக்கத்தில் ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு மேலே படிக்கவும்) 21000 பிள்ளைகள். பலசாலிகள்.
குவலஸ்வனை உதங்க ரிஷி ஒரு நாள் பார்க்கிறார்.
'' ஹே ராஜா, வடக்கே ஒரு பாலைவனம் போன்ற தேசம் இருக்கிறது. அதில் துந்து என்கிற ராக்ஷசன் இருக்கிறான். அவன் மது கைடபர்கள் மகன். அந்த மணல் பிரதேசத்துக்கு கீழே பாதாளத்தில் துந்து தவத்தில் இருக்கிறான். அவன் தவம் பூர்த்தியானால் மூவுலகையும் அழித்து விடுவான். அவனை தேவர்களோ, மற்றெவரோ கொல்ல முடியாதபடி வரம் பெற்றவன். எனவே விஷ்ணுவின் அருளால் நீ அவனை அழிக்ககிளம்பு." என்று அவனுக்கு உத்தரவிடுகிறார் ரிஷி உதங்கர்.
"குவலஸ்வன் என்ன செய்தான் ?'' என்று கேட்ட யுதிஷ்டிரனின் ஆர்வத்தைத் தணிக்க மார்கண்டேயர் மேலே சொல்கிறார்:
''இதைக்கேள். பிரளயத்திற்கு பிறகு மகா விஷ்ணு ஆதிசேஷன் மேல் படுத்து நீண்ட காலம் உறங்கி, அவரது கமல நாபியில் பிரமன் தோன்றி,நான்கு முகங்களுடன், நான்கு வேதங்களும் தோன்றின .அந்த நேரத்தில் கௌஸ்துபம் பீதாம்பர தாரியாக இருந்த விஷ்ணுவை மது கைடபன் என்கிற தவ வலிமை பெற்ற இரு ராக்ஷசர்கள் காண்கிறார்கள். அவர்கள் தவத்தை மெச்சிய விஷ்ணு, ''என் ஒருவனால் மட்டுமே உங்கள் முடிவு'' என்று வரம் அருள, அவர்கள் எங்களை நீங்கள் எதனாலும் மூடப்படாத பிரதேசத்தில் மட்டுமே கொல்ல வேண்டும், நாங்கள் உங்கள் பிள்ளைகளாக பிறக்க வேண்டும் என்றும் வரம் பெறுகிறார்கள். மூடப்படாத இடம் எதுவும் இல்லை என்பதால் ஒரு காலத்தில் தனது திறந்த தொடையில் அவர்களை வைத்து விஷ்ணு சுதர்சன சக்ரத்தால் சம்ஹாரம் செய்கிறார். அவர்கள் பிள்ளையே துந்து.
குவலஸ்வன் தனது 21000 பலசாலி பிள்ளைகளோடும், ஆயுதங்களோடும் துந்துவை தேடி பாதாளம் வரை சென்று பலநாள் யுத்தத்திற்கு பின் விஷ்ணுவின் சக்தியோடு துந்துவைக் கொல்கிறான். துந்துமன் என்ற பெயர் பெறுகிறான்.
நமது பண்பாட்டில், தாய் தந்தையர் தமது பிள்ளைகள் சிறந்து வாழ என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்பவர்கள். இன்றும் அது தொடர்கிறது.
ஒரு சிலர் வாழ்க்கையில் சரியான மார்கத்தில் அது செல்லவில்லை, நமது பண்பாட்டையே ஆட்டி அசைத்து வேரோடு கிள்ள அது பயன்படுகிறது என்பது வேதனை தரும் உண்மை. படிப்போ பணமோ நமது பாரம்பரிய பண்பாட்டை யே அசைத்து பார்ப்பதற்காக இல்லை. நாகரிகம், வளர்ச்சி என்று பெயர் சொல்லி ஒரு விருக்ஷத்தை வேரோடு வெட்ட முயல்வதும் அதை தூஷிப்பதும் நமது முன்னோரையே இகழ்வது ஆகும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...