Thursday, January 24, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்                                               ஜே.கே. சிவன் 
மகா பாரதம் 
                                               
               ஜெயத்ரதனின்  விபரீத ஆசை.

''வைசம்பாயனரே,  மேற்கொண்டு  காம்யக  வனத்தில் நடந்த சம்பவங்களை கூறுங்கள். கேட்கவே  சுவாரசி

யமாக இருக்கிறது. என் முன்னோர்களின்  பராக்கிரமம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறதே.    நான் அப்போது பிறக்காமல் போய்விட்டேன் என்ற குறை என் நெஞ்சை  தின்கிறது மகரிஷி  ''என்ற ஜனமேஜயனுக்கு வைசம்பாயன முனிவர்  மேலே  சொல்வது தொடர்கிறது.

''ஒருநாள்  பாண்டவர்கள்  ஆளுக்கு ஒரு திசையாக வேட்டையாடி காய் கனிகள்,உணவு வகைகள்  எல்லாம் சேகரித்துக்கொண்டு  அந்த  வனத்தில் இருந்த பிராமணர்களுக்கு தேவையான யாகயஞ்ய உபகரணங்கள்  சேமிக்க சென்றிருந்தபோது த்ரௌபதி   த்ரிணவிந்து,  தௌமியர்  ஆஸ்ரமத்தில் தனியே  இருந்தாள்.

அந்த நேரம் பார்த்து  சிந்து ராஜன், வ்ரித்தாக்ஷத்திரன் மகன் ஜெயத்ரதன் சால்வ நாட்டில் நடக்கும் ஸ்வயம்வரத்தில் கலந்துகொள்ள காம்யக  வனம் வழியாக தேரில் வந்தபோது  திரௌபதியை பார்த்து விட்டான்.

''யார்  இந்த  அப்சரஸ் இந்த நடு  காட்டில்?  ஏதோ வழி தெரியாமல் வந்த  தேவலோக பெண்ணா? மோகினி தேவதையோ? என்று வெகுநேரம் அவளை ரசித்துக் கொண்டிருந்தான் ஜெயத்ரதன்.  அவனோடு  தேரில் அருகில்  இருந்த  இளவரசன் கோடிகனை அழைத்தான்.

''கோடிகா,  நீ போய்  அதோ அந்த அழகிய  பெண்  யார் என்று தெரிந்து கொண்டு வா?  இவள் கிடைத்தால் நான்  சால்வ தேச ஸ்வயம்வரத்திற்கு செல்லவேண்டிய அவசியமே  இல்லை. அவள்  மனுஷியாக இருந்தால் ஏற்கனவே  மணமானவளா?   யார்  அவள் கணவன் என்கிற  பாக்யசாலி?   என்றெல்லாம் கூட  அறிந்து வா'' என்றான்  ஜயத்ரதன்.

கோடிகன்  புலிக்கு முன்  நரியாக  மெதுவாக திரௌபதி அருகே சென்று நின்றான். 
அவள்  அவனை ''நீ  யார் என்ன வேண்டும்''   என்று பார்வையால் கேட்டாள் .

 ''பெண்ணே,  நீ யார்? இவ்வளவு அழகான  நீ  ஏன்  தனியாக இந்த  பயங்கர காட்டில் நிற்கிறாய்?  உன் பெயர், உன் தந்தை,  சகோதரர்கள் யார் எந்தவூர் என்று சொல்,  ஒருவேளை உனக்கு  மணமாகியிருந்தால்  உன் கணவன் யார்  அவன் ஊர்  போன்ற  விருத்தாந்தம் எல்லாம் சொல்.  அதற்கு முன் நான் என்னைப் பற்றி சொல்லி விடுகிறேன். நான்  ராஜா சுரதனின் மகன், கோடிகன் , அதோ  தூரத்தில் நிற்கிறதே  அந்த தேரில் இருப்பவன் க்ஷேமங்கரன்  என்ற பெயர் கொண்ட  த்ரிகர்த்த அரசன். கருப்பாக அவன் அருகில்  இருப்பவன் சுவாலன்  மகன். இக்ஷ்வாகு குல திலகன். மற்றும் சிலர்  பிரபல அரசர்கள்’ என்றான் கோடிகன் .

'' ஐயா  நீங்கள் யாரா இருந்தாலும்  நான்  உங்களோடு பேசக் கூட  தயாரில்லை.  ஆனாலும் இப்போது என்னுடன் யாருமில்லாததால்   உங்கள்  கேள்விக்கு   நானே  பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் துருபதன் மகள்  கிருஷ்ணா. பாண்டவர்கள்  என்ற புகழ் பெற்ற  காண்டவப்ரஸ்த சக்ரவர்த்திகள்  மனைவி. வேறு எந்த விஷயமும் உமக்கு தேவை இல்லை நீர் போகலாம்.''

கோடிகன் சென்று  ஜெயத்ரதனிடம்  விவரம் சொல்ல,  திரௌபதியை கடத்திச் செல்வது என்ற முடிவுக்கு வந்தான் ஜயத்ரதன்.   நேராக  திரௌபதியிடம் வந்தான். 

' திரௌபதி, 'உன்னைப் பற்றி கேள்விப்பட்டேன்.  எதற்கு நீ இந்த காட்டில் நாடிழந்து திக்கற்ற பாண்டவர்களோடு வாழ்ந்து அவதிப் படுகிறாய். என்னோடு வா. உன் மாதிரி கெட்டிக்கார பெண் எதற்காக நாடோடிகளோடு  சுற்றி அவதியுற வேண்டும். இந்த கணமே  நீ  என் மனைவியாக  என்னோடு வா. உனக்கு சுக வாழ்வு தர காத்திருக்
கிறேன்''  என்றான் ஜயத்ரதன்.

கோபக்கனல் பறக்கும் கண்களோடு  ''அயோக்கியா
 முதலில் உன் வாயை மூடு. வெட்கமாக இல்லை உனக்கு  ஒரு  மணமான பெண்ணை பார்த்து இப்படிப் பேச? . என் கணவர்கள் உன் பேச்சைக் கேட்டால்  உலகில் எந்த சக்தியும் உன் உயிரைக் காப்பாற்ற முடியாதே. முதலில் இங்கிருந்து ஓடி உயிர் பிழைத்துக் கொள் ' என்றாள்  திரௌபதி. 

வெறிபிடித்த  ஜெயத்ரதன் பாஞ்சாலியை பிடித்து இழுக்க  அவள் தடுக்க,  திணற, அவளைத் தனது தேருக்கு இழுத்து சென்றான். 

பாண்டவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
 "ஏன்  இந்த பறவைகள், விலங்குகள் இன்று  ஏதோ அதிர்ச்சி  அடைந்து நிலை கொள்ளாமல்  கத்திக்  கொண்டு பறக்கின்றன, ஓடுகின்றன. .  யாரோ  வேட்டையாட இங்கு வந்திருக்கிறார்கள் போல் இருக்கிறது. போதும் நமது வேட்டை.  உடனே  நாம்  திரும்புவோம்.'' என்று யுதிஷ்டிரன் தம்பிகளிடம் சொன்னான்.
வழியில் ஒரு நரி  ஊளையிட்டது. ''இந்த நரியின்  ஊளை, துரியோதனன்  நமக்கு  மேலும் ஏதோ தீங்கு செய்யும் திட்டத்தில் இருக்கிறான் அல்லது வேறு ஏதோ  விபரீதம் என்பதன்  அறிகுறி. '  என்று  யுதிஷ்டிரன் உணர்ந்தான்.

ஆஸ்ரம  வாசலில்  திரௌபதியின்  தோழி தாத்ரேயிகா அழுது கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
அர்ஜுனன்  விரைந்து வந்து  ''ஏனம்மா அழுகிறாய்.  என்ன ஆயிற்று.  திரௌபதி எங்கே?'' என்று கேட்டான்.

''ஜெயத்ரதன் என்கிற அரசன் வந்து தேரில்  திரௌபதியை கடத்திச் சென்றுவிட்டான். அவன் தேர் சென்ற சுவடு இன்னும் மண்ணில் தெரிகிறது, போகும் வழியில் மரக்கிளைகளை ஒடித்துக்  கொண்டு  அவன்  படைகள் சென்றது.    இன்னும்  மரக்கிளைகளின்  பச்சை காயவில்லை,  உடனே  செல்லுங்கள்  அவனைத் துரத்தி பிடித்து  திரௌபதி தேவியை  மீட்டுக்கொண்டு வாருங்கள். சீக்கிரம்,  அவர்கள் படை  வெகு தூரம் போயிருக்க முடியாது''. என்றாள்  அந்த பணிப்பெண்.

 வேகமாக  துரத்திய பாண்டவர்களின்  ரதம்  விரைவில்  ஜயத்ரதனின் தேரைக் கண்டுபிடித்தது.  ஜெயத்ரதன் தேரை நிறுத்தவில்லை.  அவனது படையின் வீரத்தில் நம்பிக்கையோடு  தைரியமாக இருந்தான்.  பீமார்ஜுனர்களின் தாக்குதல்  அவனது படையை  நிலை குலைத்தது.  படை  சிதைந்தது. பல நூறு  வீரர்கள், யானைகள், குதிரைகள்  அழிந்தன.  தோல்வி நிச்சயம் என்று அறிந்ததும்,ஜெயத்ரதன் திரௌபதியை   விட்டு விட்டு  தேரில் தப்பி ஓடினான். திரௌபதியை  ஜாக்ரதையாக மீட்டு  யுதிஷ்டிரரிடம்  ஒப்படைத்துவிட்டு  ஜெயத்ரதனை கொல்வதற்கு பீமன்  அர்ஜுனன்  இருவரும்  பின் தொடர்ந்தார்கள்.

''ஜெயத்ரதனைக் கொல்ல வேண்டாம். அவன் உயிர் தப்பி ஓடிவிட்டான். அவன் நமது உடன் பிறவா சகோதரி  துஸ்ஸலாவின் கணவன்.  காந்தாரிக்காக  அவனை  மன்னித்து உயிர் தப்ப விடுவோம்'' என்று யுதிஷ்டிரன்  அறிவுரை வழங்கினான் .

எனினும் பீமன்  ஜெயத்ரதனைத் தொடர்ந்து பிடித்து அவனைக் கொல்ல  முயன்றபோது அர்ஜுனன் அவனைத்  தடுத்து  உயிர்பிச்சை வழங்கினான்.அக்காலத்து பெருத்த அவமானம் என்னவென்றால்  தோற்ற  அரசனின் தலையை மழித்து  ஐந்து குடுமிகள் மட்டும்  விட்டு, மீசையில் பாதி மழித்து  அனுப்புவது. இதை பெரிய அவமானமாக கருதினார்கள். ஜெயத்ரதனை  இவ்வாறு  அலங்கோலபடுத்தி அவனை ஒரு

சங்கிலியால் பிணைத்து யுதிஷ்டிரன் முன் கொண்டு நிறுத்தி

''நான் பாண்டவர்களின் அடிமை''  என்று அவனைச்  சொல்லவைத்து யுதிஷ்டிரனும் திரௌபதியும் அவனை மன்னித்து,  திருப்பி அனுப்ப  ஜெயத்ரதன் உயிர் தப்பினான்.

அவனை அனுப்பிவிட்டு  ஆஸ்ரமம் திரும்பிய யுதிஷ்டிரன்  பீமார்ஜுனர்கள் , திரௌபதி, நகுல சகாதேவர்கள், அவர்களோடு அப்போது அங்கு வந்த  ரிஷி  மார்க்கண்டேயரும் மற்ற ரிஷிகளும் காத்திருப்பதை  அறிந்து வணங்கினர்.

ஏமாற்றமும், கோபமும், துக்கமும் தோல்வியும்  அவமானமும் அவன் உடலையும் மனத்தையும் துளைக்க,  ஜெயத்ரதன் நேராக  கங்கோத்ரி சென்று  பரம சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். பல காலம் தவமிருந்த அவனுக்கு சிவன் தோன்றி வரம் வழங்கினார்.

''தேவாதி தேவா  எனக்கு  பாண்டவர்களை போரில் வெல்ல வரம் தரவேண்டும்.''
பரமசிவன்  பதிலளித்தார்.
''உன்னால் என்றும்  பாண்டவர்களை  வெல்ல முடியாது.  ஒரு வேளை  தடுத்து நிறுத்தலாம்.  அர்ஜுனனை உன்னால்  கொல்லவோ வெல்லவோ முடியாது. அவன்  நரன். நாராயணனின் தோழன். என்னிடம்  பாசுபதம் பெற்றவன். அர்ஜுனனைத் தவிர  மற்ற நால்வரை நீ வெல்ல முடியும். அதுவும்  ஒரே ஒரு நாள் மட்டும்.'' என்றார்  சிவ பெருமான். இந்த வரத்தால்  பின்னர்  மஹா பாரத யுத்தத்தில்  பெரும் சேதம்  பாண்டவர்களுக்கு ஏற்பட்டது பற்றி பின்னால் அறிவோம். 

 மேலே  என்ன நடந்தது ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...