Wednesday, January 2, 2019

MARGAZHI VIRUNDHU

மார்கழி விருந்து J.K. SIVAN
மார்கழி 19வது நாள்

மலர் மார்பா வாய் திறவாய்..

மார்கழியில் நாம் எந்த லௌகீக காரியங்களும் பண்ணுவதில்லை. அது கெட்ட மாசம் என்பதால் நமக்கு விஷயம் தெரியவில்லை என்று அர்த்தம். மார்கழி கெட்ட மாதம் அல்லவே அல்ல. மார்கழி இறைவனுக்கே என்று பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட உன்னதமான மாதம். நாராயணன் அம்சமாக, திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும் உண்டே. அவனை வணங்கி, இந்த மார்கழி 19ம் நாள் நாம் ஆயர்பாடி செல்வோம். இதுவரை நமது பயண சுகானுபவமானதற்கும் நன்றி சொல்வோம்.

அன்று, ஆயர்பாடி சிறுமி ஆண்டாள் என்ன செய்தாள் என்பது நமது கதையின் இன்றைய பகுதி அல்லவா?
அந்த கிராமச் சிறுமிகள் கள்ளம் கபடமில்லாத கல்மஷமில்லாத தூய மனம் கொண்டவர்கள். உள்ளே சுத்தமாக இருந்தாலும் புறமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று யமுனை ஆற்றில் நீராடி விரதமிருந்து மனத்திலும் வாக்கிலும் கண்ணனே, நாராயணனே என்ற திருநாமங்களே நிரம்பி வழிய, இந்த தனுர் மாதம் பூரா தங்களை பகவத் சிந்தனையில் ஈடுபடுத்திக்கொண்டதே பாவை நோன்பு என்பது தெரிந்தது தானே?

திரும்ப திரும்ப அந்த சிறு கிராமத்தில் வேறு என்ன இருக்கிறது. வேறு எங்கு செல்வது? நந்த கோபன் மாளிகைக்கு இன்று காலையும் வந்து விட்டார்கள். எதற்கு? சர்க்கரை இருக்கும் இடத்தில் எறும்பு சுற்றாதா? வழக்கம்போல் கண்ணனைத் துயிலெழுப்பவே!!

நப்பின்னை பிராட்டியுடன் தலைவன் உறங்குகின்ற அழகை அந்தப் பெண் ஆண்டாள் எவ்வளவு விவரமாக
வர்ணிக்கிறாள் பாருங்கள்.

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

இந்த முப்பது பாசுரக் கதைகளிலும் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு உடல் பயிற்சி என்னதெரியுமா? . ஆயர்பாடிக்கும் வில்லிப்புத்தூருக்கும் மனோவேகத்தில் பறப்பது தான். எப்போது எங்கிருப்போம் என்றே தெரியாத அளவுக்கு பறந்துகொண்டிருக்கப்போகிறோம்.

வில்லிப்புத்தூரில் ---

''விஷ்ணு சித்தர் சுவாமி, சமீபத்தில் உங்களை அடியேன் தரிசிக்க நேரவில்லையே . நேற்று சாயங்காலம் ஊருக்கு வந்ததிலிருந்து உடனே உங்களை தரிசித்து பாவை நோன்பு பாசுரங்களின் விளக்கம் கேட்க ரொம்ப ஆவலாக இருக்கிறது. இதோ இப்போது உமது பெண் கோதை பாடினாளே அதன் விளக்கம் எனக்கு அளிப்பீர்களா? அது என்ன ராகம் மனதை அப்படி பாகாக உருக்குகிறது.'' என்று கேட்டார் ஒரு வைஷ்ணவர்.

‘’நல்லது சுவாமி. அடியேனின் பெண் என்பதற்காக சொல்லவில்லை. மற்ற சில பாசுரங்களை விட என் கோதை அருளிச்செய்கிற இந்த திருப்பாவை பாசுரங்கள் புரிந்துகொள்ள அவ்வளவு கடினமில்லை. எதையும் நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் சூக்ஷ்மம் இருக்கிறது. அவரவர் மனத்திற்கு, எதிர்பார்ப்புக்கேற்ப பொருள் விளங்கும். '' என்கிறார் விஷ்ணுசித்தர்,

வாஸ்தவம் தான் நண்பர்களே, ஆண்டாள் பாடும் இந்த பாசுரத்தை சஹானா ராகத்தில் கேட்டால் அதிகமாகவே மனம் பிழி படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. சந்தேகம் அப்படி இருக்கும் என்றால் இதோ இந்த பாசுரத்தை MLV சஹானாவில் பாடுவதை கேளுங்கள். லிங்க்: https://youtu.be/jFnOj_BK61k

வில்லிபுத்தூர் வட பத்ர சாயி கோவில் பட்டாச்சர்யார் பரம சந்தோஷத்தோடு விஷ்ணு சித்தர் வாயிலாக என்ன கேட்டார்?

''குத்து விளக்கு என்பது சாதாரண பெட்ரூம் விளக்கோ அகலோ அல்ல. பஞ்ச லோகத்தில் செய்யப்பட்டு,
கம்பீரமாக நின்று ஐந்து முகங்களிலும் ஐந்து பஞ்சு திரிகள் நெய்யிலோ, நல்லெண்ணையிலோ ஊறி நின்று ஜோடியாக ரெண்டு புஷ்பங்கள் சுற்றப்பட்டு, நேராக வானம் பார்த்து எரியும் தீப ஒளி எவர் மனதையும் பக்தியில் இணைக்கும் தன்மை வாய்ந்தது.

பஞ்ச பூதங்களையும் காத்தருளும் பரமன் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கொளியில் நறுமண அகில் புகை கமகமக்க சப்ர மஞ்ச கட்டிலிலில் அருகே நப்பின்னை உறங்க தானும் உறங்கிக் கொண்டிருக்கிறான். மெதுவாக ஆண்டாள் கதவை தட்ட உடனே நப்பின்னை பிராட்டி விழித்துகொண்டு கிருஷ்ணனை பார்க்கிறாள். யார் முதலில் எழுந்து கதவை திறப்பது? வெளியே ஆண்டாள் குரல் கேட்கிறது-

‘ஹே துளசியும் வண்ண,மணமிக்க மலர்களும் மார்பில் புரள பிராட்டி நப்பின்னை அருகிருக்க துயில்பவனே, கொஞ்சம் வாயை திறந்து அருள்வாயா? மையிட்ட கண்களால் வையம் குளிர வைக்கும் நப்பின்னையே கொஞ்சம் அவனை எங்களுக்காக வெளியே விடுவாயா? நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எங்கே அவன் வாய் திறந்து இதோ வருகிறேன் என்று சொல்லி எழுந்து வந்துவிடுவானோ என்ற சந்தேகத்தில் அவனை ஒரு கணமும் பிரிய விரும்பாத நீ. நாங்கள் அவனை எழுப்ப விடமாட்டாய் என்று ரொம்ப நன்றாகவே எங்களுக்கு தெரியும். நீ செய்வது தகுமா, ஞாயமா, முறையா?? இல்லை, என்றே எனக்கு தோன்றுகிறது. உன்னருளும் அவனருளுடன் எங்களுக்கு கிடைத்து எங்கள் பாவை நோன்பு பலனளிக்க செய்வது உன் தயவால் தான் தாயே.!'' -- இது தான் ஆண்டாளின் பாசுர விளக்கம்.

நப்பின்னையை வணங்கிவிட்டு அந்தப் பெண்களின் கூட்டம் அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பியது'' இது தான் அந்த பாசுரத்தின் சாராம்சம்.

நாராயணனின் காருண்யத்தைச் சோதிக்க ஒரு முறை தாயார் '' நாதா, உங்கள் பக்தன் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, இவனைப் பாருங்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறான் என்று பூலோகத்தில் ஒருவனைச் சுட்டிக்காட்ட, பெருமான் சிரித்துக்கொண்டே ‘’என்னைத் தூய மனத்தோடு வேண்டும் என் பக்தன் ஒருபோதும் தவறு செய்ய மாட்டான், எந்தத் தவறுக்கும் காரணமாகவும் இருக்கமாட்டான்.அப்படி அவன் செய்யும் எந்த செயலாவது தவறாகத் தென்பட்டாலும் அது உலக நன்மைக்காகவே செய்ததாக இருக்கும் என்றான் இறைவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...