Friday, January 11, 2019

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி     J.K. SIVAN 
சேஷாத்திரி ஸ்வாமிகள் 

 
             
          ''அதோ  பார்  தேவலோகம்''

திரிகால ஞானி சேஷாத்திரி ஸ்வாமிகள்  யாருக்கு  ஒரு பிடி  மண்ணை கொடுத்து பொன்னாக்குவாரோ, எவர்க்கு  உயிர் பிச்சை அளிப்பாரோ, எவருக்கு  எம பட்டணம் காண்பிப்பாரோ,  எவருக்கு  கல்லால்  அடி  கிடைக்குமோ, எவர் வீட்டில் குழந்தை பிறக்குமோ, எவருக்கு  வீட்டில் கல்யாணம் நடக்குமோ, எல்லாமே   அவரவர் செய்த கர்ம பலனுக்கேற்ப  கிடைக்கும்.
இந்த வகையில்   இன்னொரு அதிசய சம்பவம் சொல்லவேண்டிய  சமயம் இது. 

நல்ல விஷயங்கள் அநேக  காலம் மனதில் தங்குவதில்லை.  யாராவது கெடுதல் செய்தாலோ, செய்ததாக நாம் நினைத்தாலோ அது மட்டும் வெகுகாலம் நெஞ்சிலே இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை வெடிப்பாக  பதில்  வெளியே வரும்.

வெங்கடாசல முதலியார்,  அவர் மனைவி சுப்புலக்ஷ்மி இருவருமே சேஷாத்திரி ஸ்வாமிகளின்   ஆதர்ச அதி தீவிர பக்தர்கள். அதிலும் சுப்புலக்ஷ்மி வெகு தீவிர பக்தை.

வெங்கடாசல முதலியார்  வெளியூர்  செல்ல வேண்டிய நிர்பந்தம்.  வீட்டில் யாரும் இல்லை. சுபபலக்ஷ்மியை தனியே விட்டு விட்டு செல்லவேண்டும்.  நேராக ஸ்வாமிகளை போய் பார்த்தார்.   சுவாமி ஒரு திண்ணையில் உட்கார்ந்திருந்த நேரம் அது.

''சுவாமி,   நான் கொஞ்சம் அவசர வேலையாக  மெட்ராஸ் பட்டினம்  போக வேண்டி இருக்கிறது.  திரும்பி வர எப்படியும் ஆறு ஏழு நாள்  ஆகலாம்.  நீங்க தான் எங்களுக்கு பெரிய துணை. அவளை கொஞ்சம் பார்த்துக்கணும்.''  என்கிறார் முதலியார். முதலியார் மெட்ராஸ் சென்று ஒரு இரு தினங்கள் ஆகி விட்டது.. 

ஒரு நாள் இரவில் ஸ்வாமிகள் முதலியார் வீட்டுக்கு வந்து  ''சுப்புலக்ஷ்மி நாளை ராத்திரி பக்கத்து வீட்டில் திருடன் வருவான். கூச்சலாக இருக்கும்.    நீ  பயப்படாதே. நான்  துணை இருக்கேன்''  என்கிறார்.  சுப்பலக்ஷ்மி இதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை.  சுவாமி பேசுவதில் சம்பந்தா சம்பந்தம் இல்லாத விஷயங்கள் நிறைய தென்படும். என்னவோ சொல்கிறார். என்று அதை காற்றில் விட்டு விட்டாள் .

அதே போல் அடுத்த நாள் இரவு    நள்ளிரவு முடிந்து விடிகாலே  ரெண்டுமணி இருக்கும். 

பக்கத்து வீட்டில் இருக்கும்  பொன்  வேலை செய்யும் தட்டான் மனைவி கூச்சல் போட்டாள் . இருபது சவரன் தங்க நகையை  உருக்கி தங்கக்  கட்டியாக்கி அதை தலையணைக்குள்  மூடி மறைத்து வெகு நாளாக  வைத்துக்கொண்டு இருந்ததை யாரோ  தெரிந்து, அறிந்து அன்றிரவு அந்த தலையணையை கொண்டு போய் விட்டான்.  அந்த பெண் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ''லபோ திபோ''   என்று கத்தினாள்.  அண்டை அசல் எல்லாம் கூடி விட்டது.   சுபபலக்ஷ்மிக்கு சுரீர் என்று உரைத்தது.   ஸ்வாமிகள் எங்கிருந்தோ அங்கே வந்து விட்டார். 

சேஷாத்திரி  ஸ்வாமிகள் முதலியார்  மனைவியை பார்த்து  ''நான் சொன்னேன் அல்லவா உனக்கு. நீ எதற்கும் பயப்படாதே. நான் துணை ''

அதற்கு அடுத்து ரெண்டு நாள் கழித்து ஒரு நாள் இரவு ராத்திரி 11 கதவைத்  தட்டினார்  சுவாமி.  அந்த வீட்டின் குல தெய்வம் ஸ்வாமிகள்.   எனவே அவர் எப்போது வந்தாலும் மரியாதையோடு வரவேற்பார்கள்.  முதலியார் அம்மா கதவை திறந்து வரவேற்று கைகட்டி நின்றாள்.
''சுப்புலக்ஷ்மி  உனக்கு   நாராயணனையும்  பார்வதி பரமேஸ்வரர்களையும் காட்டுகிறேன் பார் '' என்று அவளை படுக்கையில் படுக்க வைத்தார்.  அவள் நெஞ்சில் தனது வலது கையை   ஊன்றி ''மேலே நிமிர்ந்து பார்'' என்கிறார்.

சுபபலக்ஷ்மி பார்த்தாள் .  கண கண வென்று வெண்கல மணிகளின் நாதம், சினிமாவில்  தேவலோக சீனில் வருமே  அது போல  நிறைய சோப் குமிழிகள் போல் கலர் கலராய்  பெரிய  சிறிய உருண்டைகள் சுற்றிக்கொண்டே எங்கும் வியாபித்து பறந்தன. பளபளக்கும்  நவரத்ன  பந்துகள் போல்   சிறிதும் பெரிதுமாக எங்கும் அசைந்து ஆடி  ஓடி அலைந்து கொண்டிருந்தன. பட்டை  பட்டையாக  வண்ணக்  களஞ்சியமாக  மேலிருந்து கீழே நோக்கி நிறைய  ஒளிக்கதிர்கள் வீசின, கண் கூசியது. பெரிய  வெள்ளை யானை ஒன்று வந்தது.   அதன் மேல் ஒரு சுந்தரன்  பளபளக்கும்  கிரீடத்துடன். . அந்த சப்தங்கள் ஒளிக்கற்றை ,  யானை,  அதன் மேல்  ஒரு வீர புருஷன் எல்லாம் பார்த்து சுப்புலக்ஷ்மி ''ஆ'' வென்று கத்தினாள்.

''அதோ பார்.   அது தான்  இந்திரன். யானை தான்  ஐராவதம். தேவலோகம் எப்படி இருக்கு?   அங்கே  பார்  திரிசூலத்தோடு  ருத்ரன். அருகிலே பார்த்தாயா?    பச்சைப் பெண் பார்வதி. அவள் எதிரே பார் பெரிய  ரிஷபம். நந்தி உன்னைப் பார்க்கிறான் பார்.  இங்கே பார்  விஷ்ணுவை. . கையில் பார்த்தாயா  சுதர்சன சக்ரத்தை. ''

இவ்வாறு    எல்லா தேவர்கள் பெயரையும்  சொல்லி அறிமுகப்படுத்தினார்.  சுப்புலக்ஷ்மி மூர்ச்சை போட்டு விழுந்தாள். அவள் நெஞ்சிலிருந்து தனது கையை எடுத்தவுடன் அவள் பார்வை இழந்தாள் .   அவளை முதுகில் அடித்தார்.

 ''எழுந்திரு'' உனக்கு  பாக்யமில்லை. நான்  என்ன செய்ய.   உன் ஊழ்வினை நிறைய பாக்கி இருக்கே.  சரி சரி, நன்றாக குறட்டை விட்டு தூங்கு,  போ''

ஸ்வாமிகள் சொல்லிவிட்டு போய்விட்டார். அன்று இரவு கழிந்தது.  மறுநாள் காலை எழுந்தவளுக்கு  இரு கண்களும் தெரிய வில்லை. தட்டுத் தடுமாறி சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் .

காலை  11 மணிக்கு சுவாமி மீண்டும் வந்தபோது  அழுதாள்.
''ஏன் அழறே?''
''என்னை குருடாக்கி விட்டீர்களே. இது அடுக்குமா ''

சுவாமி தனது  மேல்வேஷ்டி நுனியால் அவள் கண்களை துடைத்தார்.  சுபபலக்ஷ்மிக்கு முன் போல் பார்வை நன்றாக ஆகி விட்டது.

ஏன் ஸ்வாமிகள் அவளுக்கு  தேவலோக தரிசனம் காட்ட விழைந்தார். அவள் பார்த்தும் ஏன் விருப்பமின்றி பயந்தாள், ஏன் குருடானாள் , எப்படி? ...... இதெல்லாம் விடை இல்லாத  வினாக்கள்.  சித்தர்கள் மஹா புருஷர்கள் சொல்லுக்கும்  செயலுக்கும்  நாம்  யார் காரணம் கற்பிக்க. என்னென்னவோ அற்புத சக்திகள் தொடர்ந்து நடக்கின்றன. எப்பவும் நடந்து கொண்டு தான் 
இருக்கின்றன.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...