Saturday, January 19, 2019

NAMBIYANDAR NAMBI



   

 மஹான்கள்                                             J.K. SIVAN
  நம்பியாண்டார் நம்பி


             இந்தா  உனக்கு தான்  சாப்பிடு!

நமக்கு யாருக்குமில்லாத  ஒரு பாக்யம்.   எங்கு  திரும்பினாலும்  எந்த  ஊர்  சென்றாலும்  தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுதுமே, ஏதாவது ஒரு  க்ஷேத்ரம்.  யாரோ  ஒரு மகான் சம்பந்தப் பட்டதாக தான்  இருக்கும்.  கும்பகோணம், காஞ்சிபுரம், சிதம்பரம் மதுரை  போன்ற  குறிப்பிட்ட ஸ்தலங்களைச்  சுற்றி இன்னும்  கொஞ்சம்  அதிகமாகவே  இத்தகைய   புண்ணிய க்ஷேத்ரங்கள் இருக்க  காரணம் என்ன.

புண்ய  ஸ்தலங்களைச்சுற்றி  தான் அநேக  மகான்கள்  வாழ்ந்தனர்  என்பதால்  சுற்றியுள்ள  ஊர்கள் க்ஷேத்திர வரிசையில் இடம்பிடித்தன.    அப்படி ஒன்று தான்   தி
ருநாரையூர்  சோழநாட்டு (வடகரை)த் தலம். சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் (காட்டுமன்னார்குடி) சாலையில், குமராட்சியை அடுத்து, சாலையில் திருநாரையூர் 1 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் பாதையில் (இடப்புறமாக) சென்றால் தலத்தையடையலாம். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. . சற்று குறுகலான பாதை. கோயில்வரை செல்லலாம். துர்வாசருடைய தவத்திற்கு இடையூறுசெய்த   ஒரு கந்தர்வன் சாபத்தால் நாரையாகி வழிபட்ட தலம்.   நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம். இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரின் (பொள்ளாத --  உளியால்        செதுக்காத  --  ஸ்வயம்பு,  தானாக தோன்றியது என்று அர்த்தம்.  அது   யாராலேயோ, '' பொல்லாத ''  பிள்ளையாராகி விட்டது. 

சிவனுக்கு இங்கே  சௌந்தர்யேஸ்வரர்,  சௌந்தரநாதர் என்று பெயர்.  அம்பாள் திருபுர சுந்தரி. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற ஸ்தலம்.  கிழக்கு பார்த்த  ஆலயம்.  உள்ளே நுழைந்ததும். பெரிய இடம். நந்திமண்டபம் கொடி மரமில்லை.   உள் கோபுரம் மூன்று நிலை கொண்டது. 

இங்கே முக்கியமானவர் ''பொல்லாப் பிள்ளையார்''
,சுயம்பிரகாசர் சந்நிதி என்றும் பெயர்  வலம்புரி விநாயகர்.

கோயிலுக்கு எதிரில், நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த இல்லம் அவர் பெயரில் நினைவாலயமாக (14-9-84ல்) ஆக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் வளைவு உள்ளது. நம்பியாண்டார் நம்பிகள், விதானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தில் கையில் அபிஷேகக் கலசத்துடன் காட்சி தருகின்றார். இதன் பின்னிடம் நந்தவனமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. நம்பியாண்டார் நம்பியின் பெற்றோர் - அநந்தேச சிவாசாரியார், கல்யாணி.

 திருநாரையூர்  கும்பகோணத்திற்கு அருகே  உள்ள  ஒரு க்ஷேத்ரம்.  இங்கு  அவதரித்த   மஹா  புண்ய புருஷர்  நம்பியாண்டார் நம்பியால் தான்  சம்பந்தர், அப்பர், சுந்தரர்  இயற்றிய  தேவாரங்கள் நமக்கு  கிடைத்தன  என்றபோது  அவரைப்  பற்றி ஒரு  சில விஷயங்களாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?.  

அறுபத்து மூன்று  நாயன்மார்களைப்  பற்றியும் சுந்தரரின் திருத் தொண்டத்தொகையில் வரும்  63  சிவ பக்த நாயன்மார்களைப் பற்றியும்   மிக அருமையாக  நமக்கு  அளித்தவர்  நம்பியாண்டார் நம்பி .  இந்த குறிப்பை  வைத்துக்கொண்டு தான்   பிற்காலத்தில் சேக்கிழார்  தமது  திருத்தொண்டர் புராணம்   இயற்றினார் என்பார்கள்.   இந்த  புண்ய  புருஷர்  இயற்றிய  பதிகங்கள்  11வது திருமுறையில்  இடம் பெற்றுள்ளன. அந்த   மேதை இளம்  வயதிலேயே  சிவன்  கோவில்களில் சிவாசார்யராக இருந்தவர்.   முறையாக வேதம்  பயின்று, சாஸ்திரங்களில்  தேர்ச்சி பெற்றவர்.  அவர்   பெயர் நம்பியாண்டார்  நம்பி. அந்த கால  பெயர்கள் இப்படித்தான் இருக்கும்

ஒரு  பிள்ளையார்  சதுர்த்தி  அன்று  சிறுவன் நம்பி ஆண்டார் நம்பியின் அப்பா  வேறு ஒரு  ஊருக்கு  அவசர  ஜோலியாக  செல்ல வேண்டியிருந்தது.  அந்த  ஊர் சிவன் கோவிலில்  அப்பா  தினமும் பூஜை நைவேத்தியம் எல்லாம் கவனிப்பவர்.   

''அப்பனே, நம்பி. நான் வெளியூர் போகிறேன்.  இன்று நீ  போய் நம்  பிள்ளையாருக்கு நைவேத்தியம் படைத்து விட்டு வா.' என்று  அப்பா  சொல்லிவிட்டுப்  போய்விட்டார். குழந்தையாக  இருந்த நம்பிக்கு  பிள்ளையார் நைவேத்யம் உண்ண  மாட்டார்  அவருக்கு  படைத்து விட்டு   அதை பிரசாதமாக வீட்டுக்கு  எடுத்துச் செல்லவேண்டும் என்பது தெரியாது.  கொழுக்கட்டையை  (மோதகம்)  தட்டில் வைத்துவிட்டு  பிள்ளையார் உண்பதற்காக  வெகு நேரம்  காத்திருந்தான்   நம்பி.  நேரமாகியும்  பிள்ளையார்  கொழுக்கட்டையை சாப்பிடாததால் தான்  ஏதோ  தப்பு  செய்துவிட்டோமோ, அதால் தான்   பிள்ளையார்  வரவில்லையோ,  கோபமோ,  அதனால்  சாப்பிட வில்லையோ? பயந்து போய்  நம்பி அழுதான்.  கோவில் சுவற்றில்  தனது   தலையை மோதிக்கொண்டு  முடிவோம்  என்று   கூட தீர்மானித்து சுவற்றில் தலையை  மோத துவங்கினான்

 '''நம்பி  நிறுத்து. நீ  உன் தலையை  சுவற்றில் மோத வேண்டாம்.   நீ கொண்டுவந்த  மோதகத்தை நான்  சாப்பிடுகிறேன்''  என்று  பிள்ளையார் வந்து   நம்பியைத் தடுத்தார்.   மோதகம் எல்லாவற்றையும் சந்தோஷமாக  சாப்பிட்ட விநாயகர்  '' நம்பி உனக்கு   என்ன வேண்டும்  சொல்''  என்று  கேட்க,  நம்பி,

 ''பிள்ளையாரே, நான்   இன்று  பாடம் படிக்க போக வாத்யார் வீடு  போக நேரமாகிவிட்டதே.  இன்றைய  பாடம்  போய்விட்டதே உன்னாலே,  ஆசிரியர்  அடிப்பாரே '' என்று அழுது கொண்டே  பிள்ளையாரிடம்சொல்ல   ''சரிடா  நீ கவலைப்படாதே,  நானே  உனக்கு  பாடம்  சொல்லித்தருகிறேன்''.  என்ன பாக்யம் நம்பி ஆண்டார் நம்பிக்கு.   சகல கலை  ஞானமும்  தந்தார் விக்னேஸ்வரர்.

 அப்பா  ஊரிலிருந்து திரும்பி வரும் வரை இது தினமும்  தொடர்ந்தது.  பிரசாதத்தை விநாயகர் உண்டார் என்று எவரும் நம்பவில்லை. நம்பியே சாப்பிட்டு  விட்டு பொய் சொல்வதாக தான் நினைத்தனர்.

 விஷயம்   காற்றில் பரவி  அப்போது  சோழ நாட்டை  ஆண்ட  ராஜ ராஜ  சோழன்  காதுக்கும் எட்டியது.  மந்திரி சேனாபதி,  ராஜாங்க பிரமுகர்கள்  புடை சூழ ஒரு   பெரிய ஊர்வலமாக  நிறைய  மா,  பலா, வாழைப்  பழங்கள், தேன் ,  அவல் பொரி, இனிப்பு வகைகளுடன் பிள்ளையாருக்கு  நைவேத்யம்  பண்ண  சோழ ராஜா  வந்துவிட்டான்.  நேரே  திருநாறையூர்  நம்பியின் காலடியில்  விழுந்து வணங்கினான்.

 ''எங்கள்  தெய்வமே, நம்பியாண்டார் நம்பி,  இந்த  பிரசாதங்களை எல்லாம்  உங்கள்  அருள்   மூலமாக பிள்ளையார் உண்ணும்படியாக தாள் பணிந்து  வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்  என்று  கேட்டான்.

 சிறுவன்  நம்பியும்   ''பிள்ளையாரே,  ராஜா கேட்கிறார்.  வந்து  இதையெல்லாம்  வழக்கம்   போல சாப்பிட  வேண்டும்'' என்று  கேட்க,  விநாயகனும்  அத்தனை  ஆகாராதிகளையும்  தும்பிக்கையின்  ஒரே வீச்சில்  எடுத்து  சுழற்றி வாயில்  போட்டுக்கொண்டான்
கண்களில்   பக்தியும்  ஆச்சரியமும்  நீராக  வழிய  சோழ சக்ரவர்த்தி  ராஜ ராஜன்  சாஷ்டங்கமாக நம்பியின்  காலில் விழுந்தான்.

 ''என்  தெய்வமே,  எனக்கு  ஒரு  நீண்ட  கால ஆசை.   சைவ சமய  குரவர்  மூவர் எழுதிய தேவார  பதிகங்களை  முழுமையாக  பெற வேண்டும்.  இதுவரை  அவை  கிடைக்கவில்லையே   என்கிற குறை.  அதை  நீங்கள்  தான்  நிறைவேற்றி வைக்கவேண்டும். பிள்ளையாரப்பன் மீது  இருந்த  நம்பிக்கையில்  நம்பியும்  அவ்வாறே செய்வதாக  ஒப்புக்கொண்டார்.

''விநாயகா,   நீ  தான்  எனக்கு  ராஜா கேட்ட தேவார பதிகங்களை பெற்று தர  வேண்டும் .  எங்கே  இருக்கின்றன  அந்த  தேவார பதிகங்கள். உதவுகிறாயா,  ராஜா  எவ்வளவு  ஆசையாக  அதெல்லாம்  கேட்கிறான்?''

'' ஆஹா  , உனக்காக செய்கிறேன்  நம்பி.   ராஜாவிடம் சொல்லு,  அவையெல்லாம்   சிதம்பரத்தில்  நடராஜா ஆலயத்தில்  நடராஜாவின்  பின்னால்  ஒரு  இடத்தில்   ஜாக்ரதையாக  வைக்கப் பட்டு இருக்கிறது.   அது எங்கே  என்று  ஒரு  கை  காட்டும்.  அந்த  இடத்தில்  பார்த்தால்  அத்தனை  ஓலைச்சுவடிகளும்  இருப்பது  தெரியும். இந்த விஷயத்தை நீயே போய் ராஜராஜனிடம் சொல் அவன் நல்லவன். அவற்றை என்னசெய்யவேண்டுமோ அதை செய்வான்.''

'' சரி   அப்பர் சுந்தரர் சம்பந்தர்  போன்றவர்கள் எத்தனை  பதிகங்கள்  அவ்வாறு  எழுதியிருக்கிறார்கள் ?

''ஓ  அதை கேட்கிறாயா. சொல்கிறேன்.   ஞான  சம்பந்தன்  எழுதியது  16000,  திருநாவுக்கரசர் எழுதியது அதிகம்.  அவை  49000. அடுத்ததாக  சுந்தரர் இயற்றியது 39000''

நம்பி   இந்த விஷயத்தை  ராஜராஜனிடம்  சொல்ல  ராஜா  நம்பியாண்டார்  நம்பியை  அழைத்துக்  கொண்டு சிதம்பரம் சென்றான்.  பிள்ளையார்   சொன்ன இடத்தில்  தேட,  அங்கு  கரையான்  தின்றது   போக ஒரு  சில  மட்டுமே  காணப்பட்டது. வருத்தத்தோடு  ராஜராஜன் கண்ணீர் விட,  நம்பியாண்டார்  நம்பி,   நடராஜரை பணிந்து  வேண்ட,

 ''நம்பி,  எது வேண்டுமோ  அது  அங்கே  உள்ளது. எடுத்துச் செல்''  என  இறைவன்  அசரீரீயாக  உரைத்தான்.  ஆர்வத்தோடு  அரசன்   உடனே அந்த  ஓலைச்சுவடிகளை  படி எடுக்க  (நகல்  எடுக்க) ஏற்பாடு செய்தான்.  இன்றைய  தமிழ்  கூறும் நல்லுலகம்  இந்த  சீரிய தொண்டு  புரிந்த நம்பியாண்டார்   நம்பிக்கும் சோழன்  ராஜராஜனுக்கும்  என்றும்  தலைவணங்கி  கடன் பட்டிருக்கிறது.  நமக்கு  கிடைத்திருப்பது   மொத்தத்தில் பத்தில்  ஒரு  பங்கு   கூட இல்லை.   நம்பியாண்டார்  நம்பி  இத் தேவார  பதிகங்களோடு, மணி வாசகரின்  திருவாசகம்,  திருமூலரின்  திருமந்திரம், எல்லாமும்  சேர்த்து அளித்திருக்கிறார்.   நீலகண்ட  யாழ்ப்பாணர் வம்சத்தில்  வந்த ஒரு  பெண் உதவியோடு  தேவாரப்  பண் (melody) களை  சீர் படுத்தினார்.   தான்  வணங்கும்  பொல்லாப்பிள்ளையார் அருளால்  சுந்தரரின்  திருத்தொண்டத் திருவந்தாதி மூலம்  63 நாயன்மாரின்  சரிதம்  நமக்கு  கிடைத்திருக்கிறது.  சம்பந்தர்  வாழ்க்கை வரலாறும்  நமக்களித்தவர்  நம்பியாண்டார்  நம்பியே.

நம்பியாண்டார்  நம்பியை  நன்றாக  அனுபவிக்க  படிக்க  வேண்டிய  நூல்களின்  விபரம்  :  

 திருநாரையூர் விநாயகர்   இரட்டை மணி மாலை.
கோயில் திருப் பண் இயல்விருத்தம்
திருத்தொண்டர்  திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார்  திருவந்தாதி.
ஆளுடைய  பிள்ளையார்  திருச்சபை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார்  திருமணிக் கோவை
ஆளுடைய  பிள்ளையார்  திருவுள்ள மாலை
ஆளுடைய பிள்ளையார்  திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார்  திருத் தொகை
திருநாவுக்கரசு தேவர்  திரு ஏகாதச மாலை

2 comments:

  1. Brief, but a nice writeup on Sri Nambiyaandar Nambi. Thanks.
    SIVAAYA NAMAH!

    ReplyDelete
  2. Please tell the exact meaning of nambi

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...