Wednesday, January 16, 2019

KRISHNA KARNAMRUTHAM


கிருஷ்ண கர்ணாம்ருதம்   J.K. SIVAN 
லீலா சுகர் 
                                        
                     2  கிருஷ்ணா  முகுந்தா  முராரே 
                                               
உங்களுக்கு மீண்டும் ஞாபக படுத்த ஒரு சின்ன விஷயம் --- லீலா சுகர் இதை எழுதுமுன் ஒரு சைவர். பில்வமங்கள் என்று பெயர். சமாதி வடக்கே மதுராவில் இருந்த போதிலும் அவர் கேரளக்காரர் தான். எப்படியாம்? அவர் வர்ணிக்கும் குழந்தை கிருஷ்ணன் புலி நகம் தரித்திருக்கிறான். இது மலையாள தேச வழக்கம். ''பால முகுந்தாஷ்டகம்'' எழுதியிருக்கிறார். இதில் ஏதோ ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ தான் சைதன்யர் கையில் எப்போதோ எங்கோ ஆந்திராவில் கிடைத்தது.

சில சமயம் வேற் கடலை மடித்து வரும் காகிதத்தை விரும்பிப் படிப்போம். காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தில் இல்லாத அலாதி விஷயங்கள் கிழிந்த அந்த அரைபக்கத்தில் இருப்பதாக சந்தோஷம் பொங்கும். சைதன்யர் இந்த துண்டு காகிதத்தை படித்து ''அடடா, இது அதி அற்புதமாக அல்லவோ இருக்கிறது. இதை யார் எழுதியது?. முழுபுத்தகமும் எனக்கு வேண்டுமே'' என்று சொல்ல சிஷ்யர்கள் எங்கெங்கோ ஓடி கேரளாவில் முழு ஓலைச் சுவடியும் கிடைத்தது. இந்த புத்தகம் சைதன்ய மகா பிரபு கையில் கிடைத்ததால் நம் அதிர்ஷ்டம் இன்று இதை புத்தகமாக படிக்கிறோம்.

பில்வமங்கள் நிறையவே எழுதியிருக்கிறார். குருவாயூரப்பன் மீது அலாதி பிரேமை.'' உன்னி கிருஷ்ணா நீ வாடா'' என்றால் அவர் முன் வந்து நிற்பான்.

ஞாபகம் இருக்கிறதா?  MK தியாகராஜ பாகவதர்  நடித்த  ஹரிதாஸ் என்ற படம் மூன்று தீபாவளி பார்த்து சக்கை போடு போட்டதே. அதில் பாகவதர்  வேடம் தான் பில்வமங்கள் '' கிருஷ்ணா முகுந்தா முராரே ''  80 வருஷங்களாக  இன்னும் மக்கள்  பாடும் ஒரு அமர பாடல். அப்படிப் பாட இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை. சிந்தாமணி என்னும் வேசியிடம் மனதை பறிகொடுத்து  ஒரு  இரவு எப்படியும் அவளை பார்த்து விட வேண்டும் என்ற வெறியில் பில்வமங்கள் வெளியே மழையில் செல்ல, வழியில் ஒரு ஆறு வெள்ளத்தோடு குறுக்கிட, அதில் ஏதோ மிதந்துவந்ததை பிடித்துக்கொண்டு அக்கரை  சென்று  அவள் வீட்டை அடைந்தபோது கதவு தாளிட்டு அவள் மாடியில் படுத்திருக்க மாடிக்கு போக அருகே இருந்த மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கயிற்றை பிடித்து தாவி மாடிக்குள் குதித்து அவள் யார் இந்த நேரம் என்று கதவை திறந்து வெளிவர மேலே ரத்தக்கரையோடு பில்வமங்கள்.   ''எப்படி ரத்தம் என்று பார்க்கும்போது தான்  ஒரு பெரிய பாம்பை அழுத்தி பிடித்து ஏறி அது ரத்தம் கக்கியதும் அவர் ஆற்றைக் கடந்தது ஒரு பிணத்தை பிடித்துக் கொண்டு என்றும் புரிகிறது.

சிந்தாமணி பில்வமங்களிடம் ''ஏனய்யா அழியப்போகும் என் உடல் மீது இத்தனை தீவிரம் வைத்த தாங்கள் துளியாவது அழியாத பரம்பொருள் பகவானிடம் வைத்தால் போகும் வழிக்காவது புண்ணியம் சேராதா? என்று சாட்டையடி கொடுக்க, பில்வமங்கள் மனம் மாறிவிடுகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரவேண்டும். 

சோமகிரி என்கிற ஞானியிடம் பணிந்து சிஷ்யராகி தீக்ஷை பெற்று தீவிர கிருஷ்ண பக்தர் லீலா சுகர் ஆகிறார்.பிருந்தாவனம், கோகுலம், மதுரா எல்லாம் செல்கிறார். கிருஷ்ணன் தரிசனம் தருகிறான். கிருஷ்ண கர்ணாம்ருதம் நமக்கு கிடைக்கிறது.  முதல் ஸ்லோகத்தில் இதற்கு காரணமான சிந்தாமணியை நன்றியோடு நினைவு கூர்கிறார்.

கிருஷ்ண கர்ணாமிர்தம் தொடர் கதை அல்ல. எந்த ஸ்லோகத்தை வேண்டுமானாலும் எடுத்து படித்து க்ரிஷ்ணானுபவம் பெறலாம்.

அடிக்கடி சொல்வதை மீண்டும் சொல்கிறேன். கிருஷ்ணன் கோபியர், ராதை உறவை வீசப்படுத்த வேண்டாம். நாயக நாயகி பாவ ஸ்லோகங்கள். இப்படி ஒரு பக்திப்பாதை உண்டே.

चिन्तामणिर्जयतु सोमगिरिर्गुरुर्मे
शिक्षागुरुश्च भगवान् शिखिपिञ्छमौलिः।
यत्पादकल्पतरुपल्लवशेखरेषु
लीलास्वयंवररसम् लभते जयश्रीः॥ १-१

சிந்தாமணிர்ஜயதி ஸோமகி³ரிர்கு³ருர்மே
ஶிக்ஷாகு³ருஶ்ச ப⁴க³வாந் ஶிகி²பிஞ்ச²மௌலி: ।
யத்பாத³கல்பதருபல்லவஶேக²ரேஷு
லீலாஸ்வயம்வரரஸம் லப⁴தே ஜயஶ்ரீ: ॥ 1.1॥

ஏற்கனவே ஹரிதாஸ் படம் (MKT பாகவதர் நடித்தது) பற்றி சொல்லியிருக்கிறேன்.'' கிருஷ்ணா முகுந்தா'' பாடல் நாலரை -ஐந்து கட்டையில் இன்றும் எங்கும் 80 வருஷத்துக்கு அப்புறமும் எதிரொலிக்கிறது. அவர் பில்வமங்
களாக நடித்த படம். ஹரிதாஸ் கதையில் பில்வ மங்கள், சிந்தாமணி என்ற வேசி லோலன். அவனை கிருஷ்ணன் பக்கம் சேர்த்தவள் வேசி சிந்தாமணி. அவளைப் பற்றியே முதல் ஸ்லோகம் அமைந்ததை யாராவது எதிர்த்தாலும், யார் ஒருவனை கிருஷ்ணனை மனதால் நாட உபதேசித்தாலும் அவர் உயர்ந்தவர் என்ற தகுதியில் முதல் ஸ்லோகத்தில் அவரை வணங்குவது மிகவும் சரி.

''இந்த சுட்டிப் பயல் கிருஷ்ணன் ஒரு அவதாரம் என்றே வைத்துக்கொண்டாலும் மற்ற பகவானின் அவதாரங்களை விட சிறந்தவன்.எப்படி?

மற்ற அவதாரங்களில் அவர் கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும், நிறைய ஆபரணங்கள், கிரீடம், எல்லாம் இருக்கும். பெரிய ராஜ, பிராமண குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். குதிரை யானை, அரண்மனை .... இப்படி ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால் இந்த கிருஷ்ணன் பயலைப் பாருங்கள். ஏதோ ஒரு மயில் இறகை தலையில் செருகி, அதுவே அவன் கிரீடம். சாதாரண மக்கள் வீட்டில் வளர்ந்து, பழகி, மண்ணில் விளையாடி, நீரில் குதித்து, வெண்ணை திருடி....... சாதாரணமானவனாகவே இருக்கிறான். பாமரர்க்குள் பரமன்.

பில்வமங்கள் ஆசார்யன் சோமகிரி தனக்கு கோபால மந்த்ரம் உபதேசித்ததால் கிருஷ்ணன் பிரத்யக்ஷமாக தோன்றினான் என்கிறார்.
  


अस्ति स्वस्तरुणीकराग्रविगलत्कल्पप्रसूनाप्लुतम्
वस्तु प्रस्तुतवेणुनादलहरीनिर्वाणनिर्व्याकुलम्।
स्रस्त स्रस्त निरुद्धनीवीविलसद्गोपीसहस्रावृतम्
हस्तन्यस्तनतापवर्गमखिलोदारम् किशोराकृति॥ १-२

asti svaḥ taruṇī kara agra vigalat kalpa prasūna āplutam
vastu prastuta veṇu nāda laharī nirvāṇa nirvyākulam
srasta srasta niruddha nīvī vilasat gopī sahasra āvṛtam
hasta nyasta nata apavargam akhila udāraṁ kiśora ākṛti

அஸ்தி ஸ்வஸ்தருணீகராக்³ரவிக³லத்கல்பப்ரஸூநாப்லுதம்
வஸ்துப்ரஸ்துதவேணுநாத³லஹரீநிர்வாணநிர்வ்யாகுலம் ।
ஸ்ரஸ்தஸ்ரஸ்தநிருத்³த⁴நீவிவிலஸத்³கோ³பீஸஹஸ்ராவ்ருʼதம்
ஹஸ்தந்யஸ்தநதாபவர்க³மகி²லோதா³ரம் கிஶோராக்ருʼதி ॥ 1.2॥

இந்த காட்சியை ரசியுங்கள்.
ஒரு சிங்கக் குட்டி அழகாக தனது புல்லாங்குழலை தாமரை இதழ்களில் வைத்து ப்ரணவத்தையே ஜீவனாக கொண்ட மனதை வருடும் மெல்லிய இனிய கீதம் பாடுகிறது. அசையும் எதுவும் அசையாமல் அதில் கட்டுண்டு மயங்கி நிற்கிறது. இடுப்பு துணி அவிழ்ந்தது கூட சரி செய்ய நேரமில்லாமல் எண்ணற்ற கோபியர் நறுமண மலர்களை கைநிறைய ஏந்தி வந்து அவன் மீது விரல் நுனியால் மலர் மாரி பொழிகிறார்கள். அவன் தேவாதி தேவனல்லவா. அவனிடம் முக்தி பெறப் போகிறவர்களாயிற்றே!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...